search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம்"

    • அறைகுறை ஆடையுடன் வீடு வீடாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை
    • பேச்சிலிருந்து அச்சிறுமி உ.பி.யை சேர்ந்தவளாக இருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்தார்

    இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பெரிய மாநிலம், மத்திய பிரதேசம். இதன் தலைநகரம் போபால்.

    அம்மாநிலத்தின் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள பண்டைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரம் உஜ்ஜைன். இந்நகரில் உள்ளது புகழ் பெற்ற தண்டி ஆசிரமம்.

    அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை சிலர் கற்பழித்தனர். பின்பு அவளை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். இதில் அச்சிறுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது. குறைந்த அளவே ஆடைகள் உள்ள நிலையில் அவள் நிராதரவாக விடப்பட்டு, தானாக எழுந்து நகருக்குள் வீடுகள் உள்ள பகுதியில் வீடு வீடாக உதவி கேட்டாள். ஆனால் யாருமே குறைந்த ஆடைகளுடனும் ரத்த போக்குடன் அவளை கண்டாலும் உதவி செய்ய முன் வரவில்லை; மாறாக அவளை விரட்டி விட்டனர்.

    பிறகு வேறு சிலர் அவளின் பரிதாப நிலையை கண்டு அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அம்மாநிலத்தின் இந்தோர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    "அச்சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பேச்சிலிருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள் போல் தெரிகிறது." என இது குறித்து காவல்துறை உயரதிகாரி சச்சின் ஷர்மா தெரிவித்தார்.

    அச்சிறுமி யார் என்பதும், என்ன நடந்தது என்பதும் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறார் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ம.பி. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே அந்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளான பிறகு பரிதாபமாக வீடு வீடாக உதவி கேட்டு சென்றதும் அவளுக்கு உதவ மறுத்து குடியிருப்புவாசிகள் விரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    • இந்து மதத்தில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஷண்மத மார்க்கங்களை நிறுவியவர்
    • ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஆரம்ப வேதக்கல்வி பயின்றார்

    இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர்.

    இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார்.

    இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

    அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:

    கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.


    • டாடியா மாநில உள்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்டது
    • பலியானவர்களில் 4 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்

    மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அடங்கும்.

    அங்குள்ள நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு.

    நேற்று இரு பிரிவை சேர்ந்தவர்களும் இது சம்பந்தமான ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க ஒன்று கூடி பேசி வந்தனர். அப்போது அவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் அவர்கள் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.

    இதில் 30 வயதுகளில் உள்ள 4 பேர்களும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பலியான 5 பேரில், 3 பேர் (பிரகாஷ், ராம்நரேஷ், சுரேந்திரா) டாங்கி வகுப்பையும், 2 பேர் (ராஜேந்திரா, ராகவேந்திரா) பால் வகுப்பையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள்.

    மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 6 பேரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு ஊரிலும் வினோத சடங்குகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
    • கழுதைக்கு கிராம மக்கள் குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ வைரல்.

    மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.

    கிராம மக்கள் மழைக்காக வினோத சடங்கு செய்த சம்பவம், பலருக்கும் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர்களை பொருத்தவரையில், கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட சடங்கு "மிஷன்" அமோக வெற்றி தான். குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட இரண்டே நாட்களில் அந்த மாவட்டத்தில் மழை பொழிந்து, கிராம மக்கள் வேண்டுதல் பலித்து விட்டது.

     

    மழை பெய்ததை அடுத்து ஊரில் உள்ள பூசாரி கழுதையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று விவாசய பணிகளை துவங்கி வைத்தார். வினோத சடங்கின் அங்கமாக, கழுதை ஒரு பிளேட் முழுக்க குலாப் ஜாமுன் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி, பலதரப்பட்ட கமென்ட்களை குவித்து வருகிறது.

    வினோத சடங்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பெய்யத் துவங்கிய மழை, 24 மணி நேரத்திற்கு நீடித்தது. மழை பெய்ததால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மீண்டும் கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்டனர். 

    • உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

    • சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில்.
    • 78,000 எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை அல்லது அவர்களுக்கு ஏற்ற உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உடல்நலம் குன்றியவர்களாகவும் இருப்பார்கள். இது குழந்தைகளில் வளர்ச்சி குன்றியதையும், உடல் எடை குறைவதையும் உண்டாக்கும்.

    பிந்த் மாவட்டத்தில் உள்ள லஹார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிங், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 78,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய முயன்றார்.

    இதில், அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, "இந்த எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்" என தெரிவித்தார்.

    அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்தூர் பிரிவு மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 22,721 ஆக உள்ளது. இந்த பிரிவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா மாவட்டங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.
    • இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பிய 60 வயது நபர் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டின் கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி துவங்கிய பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. யாத்திரையின் அங்கமாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.

     

    இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரயில் மூலம் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    இவர் எதற்காக அந்த மாதிரியான கடிதத்தை அனுப்பினார் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று ஜஷிலால் ஜாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    • மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் கோதுமை வந்தது.
    • கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் வரும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட உள்ளது.

    • சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

    சென்னை:

    கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

    அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

    • சிறுமியின் உடலை தோளில் தூக்கிக்கொண்டு பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார்
    • அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால் அந்த சிறுமி உடலை உறவினர்கள் தோளில் சுமந்து எடுத்து சென்றனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல அங்கு மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பதான் என்ற கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர் அந்த குழந்தையை சட்டார்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. இதையடுத்த குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆம்புலன்சு மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உறவினர் முடிவு செய்தார். ஆனால் ஆம்புலன்சு எதுவும் கிடைக்கவில்லை.

    தனியார் வாகனத்தில் எடுத்து செல்ல அவரிடம் பணவசதி இல்லை. இதனால் அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு பஸ்சில் செல்லலாம் என நினைத்தார். சிறுமியின் உடலை துணியால் மூடி தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள ரோட்டில் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார். தன் ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

    ஆனால் பஸ்சில் டிக்கெட் எடுக்க கூட அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. தனது நிலையை பஸ்சில் இருந்த பயணிகளிடம் கூறினார். அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அவர் குழந்தை உடலை தோளில் சுமந்தவாறு பஸ்சில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றார்.

    இந்த காட்சிகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • சம்பவத்தன்று சிறுமியை வேனில் இருந்து இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது.
    • பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பது தெரியவந்தது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் எல்கேஜி படிக்கும் சிறுமியிடம் வேன் டிரைவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளர். தலைநகர் போபாலில் உள்ள தனியார் கிண்டர் கார்டன் பள்ளியில் எல்கேஜி படிக்கும் அந்த மாணவி, கடந்த வாரம் பள்ளியில் இருந்து பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளார். ஆனால் சிறுமியை இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது. சிறுமியின் உடைகளும் மாற்றப்பட்டிருந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், விசாரித்ததில் அந்த சிறுமி வேன் டிரைவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பள்ளி வேனுக்குள் அதுவும் பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

    இது தொடர்பான புகாரின்பேரில் வேன் டிரைவர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×