search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவானைக்காவல்"

    • ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாகும்.
    • வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.

    நான்கு அடி உயரமுள்ள வாயுலிங்கத்தின் கீழே சிலந்தி பாம்பு, யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. காளான் என்ற பாம்பு மட்டுமன்று ராகு, கேது போன்ற பாம்புகளும் காளத்தீஸ்வரரை பூஜை செய்து நலம் பெற்றுள்ளன. இதனால் இத்திருத்தலம் நாகதோஷங்களையும் ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாக உள்ளது.

    சனிதோஷம் போக்கும் திருநள்ளாற்றுப் தர்பாரண்யேஸ்வரர் போன்று காளத்தீஸ்வரர் ராகு, கேதுதோஷங்களை நீக்குகின்றனர். ராகு, கேது, மட்டுமின்று சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் வாயுநாதனை வழிபட்டு நலமடைந்துள்ளன. வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.

    உச்சியில் ஐந்து தலை நாகம் உள்ளது. நவக்கிரகங்களும் சிவபூஜை செய்து வழிபட்ட காரணத்தால் திருக்காளத்தியும் சப்த விடங்கத் தலங்கள் போன்று நவக்கிரக தோஷங்களை நீக்கும் திருத்தலமாக உள்ளது.

    எந்த கிரக தோஷத்திற்கு எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகரம் செய்வது என்ற குழப்பம் இல்லாமல் அனைத்து கிரக தோஷங்களையும் நீக்குகின்ற திருவாரூர், திருக்காறைவாசல் (திருக்காறாயில்), திருக்குவளை (திருக்கோளிலி), திருநாகைக் காரோணம், திருநள்ளாறு வேதாரண்யம் (திருமறைக்காடு), திருவாய்மூர் ஆகிய சப்த இடங்கலங்களுக்கும் திருக்காளஸ்திக்கும் சென்று தர்வேஸ்வனையும், விடங்கப் பெருமானையும் வழிபடலாம்.

    பொருள் உடல் வசதியில்லாதவர்கள் அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று தியாகராஜர் எனப்படும் விடங்கப் பெருமானையும், ஈஸ்வரனையும் வழிபடலாம்.

    காஞ்சி ஏகாம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை போன்று திருக்காளத்தியும், பராசக்தி சிவபூஜை புரிந்து சுகமடைந்த திருத்தலமாகும்.

    சித்தம் சிவமாக்கிக் தவமும் பூஜைய-ம் புரிந்ததால் உப்பு நீரோடு கலந்து நீராவது போன்று சிவத்துடன் கலந்து சிவமான பராசக்தி என்னும் பெண் தெய்வம் அவ்வப்போது நான் எனது என்ற ஆணவ மலத்தால் போற்றப்படுவதால் தூய்மையான சிவத்துடன் கலந்திருக்க முடியாமல் செம்பொருளைப் பிரிந்து பூவுலகில் வாசம் செய்ய நேரிடுகின்றது.

    • வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.
    • சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும், அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    • இன்று அகிலாண்டேஸ்வரி பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
    • ஆடிப்பூர தெப்ப உற்சவம் 24-ந்தேதி நடைபெறுகிறது.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அம்மன் மரக்கேடயம், கிளிவாகனம், காமதேனு வாகனம், சந்திரபிறை வாகனம், ரிஷபவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் உற்சவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோரதத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தார். 10-ம் நாளான இன்று (சனிக்கிழமை) பல்லக்கில் வீதி உலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான வருகிற 24-ந் தேதி இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடித்தெப்பகுளத்தில் நடைபெறுகிறது. உற்சவத்தின் போது சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவ விழா ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சுவாமி, அம்மனுக்கு 16 விதமான தூப தீபாராதனைகள் நடைபெற்றது.

    பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கி வரும் ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று சுவாமி, அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தண்ணீரால் சூழப்பட்ட மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுந்தருளினர்.

    அங்கு சுவாமி, அம்மனுக்கு 16 விதமான தூப தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்மனும் புறப்பட்டு உற்சவ மண்டபத்தை சென்றடைந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும்.
    • சிவபக்தர்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

    திருச்சி திருவானைக்காவலில் பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. படைப்பு கடவுளான பிரம்மா, சிறிது நேர மனசஞ்சலத்தால் கடும் சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்டார். இவர் சாபநிவர்த்தி வேண்டி சிவனை வேண்டினார். உரிய காலம் வரும்போது திருவானைக்காவலில் சாப விமோசனம் தருவதாக இறைவன் கூறியதையடுத்து, பிரம்மா திருவானைக்காவலில் ஒரு குளம் ஏற்படுத்தி அக்குளக்கரையில் தங்கி கடும் தவம் செய்து வந்தார்.

    இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், சாபவிமோசனம் அளிப்பதற்காக கைலாயத்திலிருந்து புறப்பட்டபோது, பார்வதி தேவி தானும் வருவதாகக்கூறவே, இருவரும் சேர்ந்து திருவானைக்காவலுக்கு வந்தனர். ஏற்கனவே பெண்ணாசையினால்தான் பிரம்மனுக்கு சாபம் கிட்டியது, எனவே தற்போது பெண்ணாகிய நீ வரவேண்டாம் என்று ஈசன் கூறினார். அதற்கு தேவி மறுத்து அப்படி ஏதும் நடக்காது, எனினும் பாதுகாப்பிற்காக நான் ஆண்போல் வேடமிட்டு வருகிறேன். நீங்கள் பெண்போல் வாருங்கள் என்று கூறினாள்.

    இந்த யோசனைப்படி பிரம்மனுக்கு சாபவிமோசனமளிக்க அவர்கள் மாறுவேடத்தில், அதாவது சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் வேடமணிந்து வந்தனர். ஏற்கனவே தனது செயலால் மனக்கவலையிலிருந்த பிரம்மன், ஈசன், ஈஸ்வரி இவ்வாறு வந்தது குறித்து மிகவும் வருந்தி ஈஸ்வரனை வணங்கினார். இதையடுத்து சிவனும், பார்வதியும் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தனர். இந்த புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பஞ்சப்பிரகார விழா நிகழ்ச்சிகள் இக்கோவிலில் நடைபெறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்சப்பிரகாரவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. பஞ்சப்பிரகார புறப்பாட்டின்போது உற்சவ மூர்த்திகள் தங்களது பரிவாரங்களுடன் மேளதாளம் போன்ற ஆரவாரங்களின்றி, நான்கு வேதங்கள், திருமுறைகள் மற்றும் பஞ்சாட்சர ஜபம் ஆகியவற்றை மட்டும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நான்கு பிரகாரங்களில் வலம் வருவார்கள், இதற்கு மவுனோற்சவம் என்று பெயர். தெற்கு நான்காம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தபின் வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளத்துடன், நாதஸ்வர இன்னிசையுடன் வர பஞ்சமூர்த்திகள் தங்களின் மீதி பிரகார உலாவைத் தொடருவார்கள்.

    இதை முன்னிட்டு நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். இரவு 8 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்படுவர். திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த தீட்சை பெற்ற சினவடியார்கள் மற்றும் சிவபக்தர்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

    பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சிறப்பு திருமுறை பாராயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னணி ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்டு இரவு முழுவதும் பன்னிரு திருமுறைகளை ஊர்வலப்பாதையிலும், கோவில் அரங்கிலும் பக்கவாத்தியங்களோடு இசைப்பர்.

    • விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் காலை 5.30 மணிக்கு நடக்கிறது.
    • காலை 8 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுப்பார்கள்.

    பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    விழாவின் 4-ம் நாளான நேற்று மாலை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் கைலாச வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி கிளி வாகனத்திலும் வீதி உலா வந்தனர். 5-ம் நாளான இன்று மாலை சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இரவில் தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதற்கென நாளை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மகரலக்னத்தில் அதிகாலை 3.45 மணிக்குள் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளுகின்றனர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர் காலை 5.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடையும். பின்னர் காலை 8 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுப்பார்கள்.

    மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய தேரோடும் நான்கு பிரகாரங்களில் சுற்றிவரும் தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்த பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலிப்பார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.25 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை சுவாமி, அம்மன் கேடயத்தில் புறப்பட்டு 4-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 20-ந்தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந்தேதி நடைபெறுகிறது.

    விழாவின் 7-ம் நாளான 24-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 27-ந்தேதி வெள்ளை சாற்றி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 8-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 23-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.
    • ஏப்ரல் 6-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இவ்விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் எட்டுத் திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நாளை காலை புறப்பட்டு கொடிமரம் அருகே வருவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவர்.

    அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் காலை 6.25 மணிக்கு மேல் காலை 7.50 மணிக்குள் மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். மாலை சுவாமி, அம்மன் கேடயத்தில் புறப்பட்டு 4-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    விழாவின் 2-ம் நாளான நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 20-ந்தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 24-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 27-ந்தேதி வெள்ளை சாற்றி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 8-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
    • 5-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வீதி உலா வருகின்றனர்.

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தைத்தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    தெப்பத்திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை நடராஜர் ஊடல் நிகழ்ச்சியும், மாலை ஜம்புகேஸ்வரர் யாழி வாகனத்திலும், அம்மன் புலி வாகனத்திலும் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (3-ந் தேதி) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வருகின்றனர்.

    அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து மாலை 6.30 மணிக்குள் தெப்ப உற்சவம் கண்டருளுவார்கள். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைவார்கள்.

    தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வீதி உலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தைத்தெப்பம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இந்த கோவிலில் தை தெப்பத்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோவிலை அடைந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி வெள்ளிமஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில், 26-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்தில், 27-ந்தேதி இரவு சுவாமி கைலாசபர்வதம் வாகனத்தில், அம்மன் அன்னபட்சி வாகனத்தில், 28-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், 29-ந் தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில், அம்மன் பல்லக்கில், 30-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்தில், 31-ந் தேதி இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் பல்லக்கில் 4ம் பிராகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.

    தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 3- ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல் மாலை 6.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். 5-ந்தேதி காலை கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு, மாலை ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    • 150 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    • அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இதேபோல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப் பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இந்த வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

    இதையடுத்து இன்று (16-ந்தேதி) மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

    திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெற்றது.

    முதல் நாள் பூஜையின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

    ×