search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவானைக்காவல் கோவிலில் தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு, அண்ணன் ரெங்கநாதர் சீர்வரிசை
    X

    சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

    திருவானைக்காவல் கோவிலில் தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு, அண்ணன் ரெங்கநாதர் சீர்வரிசை

    • 150 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    • அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இதேபோல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப் பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இந்த வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

    இதையடுத்து இன்று (16-ந்தேதி) மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

    திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெற்றது.

    முதல் நாள் பூஜையின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

    Next Story
    ×