search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் கோவில்"

    • இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • இந்த ஆலயம் திருப்பனந்தாள் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    உலககெங்கும் வியாபித்து நிற்கும் சிவபரம்பொருள் ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்வுபெறவேண்டும் என்ற கருணையுடன் எழுந்தருள்பாலிக்கும் அருள்நிலையங்களே திருக்கோவில்களாகும். அத்தகைய திருக்கோவில்களில் தேவாரப்பதிகங்கள் பெற்றவை மிக சிறப்புடையவை. அவைகளில் ஒன்றாக வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் மற்றும் மண்ணியாற்றிற்கு இடையே அமைந்துள்ள தலமே திருப்பனந்தாள். இங்குள்ள பெரியநாயகி உடனுறை அருணஜடேசுவரர் ஆலயம், தருமை ஆதீனத்திற்குட்பட்ட 27 கோவில்களில் ஒன்று.

    முற்காலத்தில் மட்டுமல்ல தற்காலத்திலும் 'தண்பொழில் சூழ் பனந்தாள்' என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப, பனை மரங்கள் நிறைந்திருக்கும் இடம் என்பதால் இவ்வாலயம் உள்ள ஊர், 'திருப்பனந்தாள்' என்று பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாலய இறைவன், பனை மரத்தின் கீழ் எழுந்தருளிய சுயம்பு மூர்த்தியாவார். பிரணவ மந்திர உபதேசம் பெற விரும்பிய அம்பிகை, இத்தலத்திற்கு வந்து அருந்தவம் இயற்றி ஞானோபதேசம் பெற்றதால் இது 'உபதேசத் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் யோக குரு வடிவமே, தட்சிணாமூர்த்தி. இவர் எல்லா சிவாலயங்களிலும் தென்முகமாக அமர்ந்திருப்பார். ஆனால் சில ஆலயங்களில் மூலவரே குருவாக (சிவ குரு) இருந்து அருள்பாலிப்பதும் உண்டு. அத்தகைய விசேஷமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. நவக்கிரக குருவின் தோஷத்தால் திருமணத்தில் தடை ஏற்பட்டு வருந்துவோர், இதுபோன்ற சிவ குரு தலங்களை தரிசித்தால் நவக்கிரகங்களின் தோஷம் அகன்று உடனடியாக திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். மூலவரே சிவ குருவாக அருள்பாலிக்கும் இத்தலத்தை, அட்டநாகங்களில் ஒன்றான வாசுகியின் மகள் சுமதி வழிபட்டு திருமண வரம் பெற்று, அரித்துவசன் என்ற மன்னனை மணந்ததாக செஞ்சடைவேதியர் எழுதிய 'திருப்பனந்தாள் தல புராணம்' கூறுகிறது.

    இத்தல இறைவனுக்கு அனுதினமும் மாலை சூட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், தாடகை என்ற பெண். ஒரு நாள் மாலை சாத்தும்போது அவளது மேலாடை சரிந்தது. உடல் அவயங்கள் தெரிய மாலை சாத்துவது தவறு என்று கருதியவள், தன்னுடைய மேலாடையை ஒரு கையால் பிடித்தவாறு மாலை சாத்த முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. இதைக் கண்ட பெருமான், அவளது பக்திக்கு இரங்கி, தன்னுடைய பாணத்தை சற்றே முன்னோக்கி வளைத்து மாலையை பெற்றுக்கொண்டார். அப்படி சாய்ந்த பெருமான், அதன்பிறகு நிமிரவில்லை. லிங்கத்தை நிமிர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டும் அது நடக்கவில்லை.

    திருக்கடவூரில் இறைவனுக்கு அனுதினமும் குங்கிலிய புகை போடுவதை திருப்பணியாக செய்துக் கொண்டிருந்த குங்கிலியக்கலய நாயனார், சிவலிங்கம் வளைந்திருக்கும் செய்தி கேட்டு திருப்பனந்தாள் வந்தார். சிவலிங்கத்திற்கு ஒரு மாலை சூட்டி, அந்த மாலையுடன் லிங்கத்தை ஒரு பெருங்கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு 'அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று மனமுருகி வழிபட்டு சிவலிங்கத்தை இழுத்தார். யானைகளாலே நிமிர்த்த முடியாத சிவலிங்கம், மனிதன் முயன்றால் உயிர் அல்லவா போய்விடும். ஒரு பக்தைக்காக தலை சாய்ந்த ஈசன், இன்னொரு பக்தருக்காக நிமிர்ந்து நின்று அருள்பாலித்தார்.

    தேவார பதிகங்கள் பாடல் பெற்ற ஆலயங்களில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்த 39-வது திருத்தலம் இது. ஆலயத்தின் பெயர் 'தாலவனம்'. தமிழில் தாடகைஈச்வரம். இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இனிய தமிழில் 'செஞ்சடையப்பர்' என்பது அவரது பெயர். இறைவியை தமிழில் பெரியநாயகி என்றும், வடமொழியில் பிரகன்நாயகி என்றும் சொல்கின்றனர். தேவலோக கற்பகத் தருவிற்கு இணையானது, பூலோகத்தில் உள்ள பனை மரம். அதுவே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூப தீர்த்தம், மண்ணியாறு முதலாகிய தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

    இவ்வாலய இறைவனை அம்பிகை, பிரம்மன், திருமால், சூரியன், ஆதிசேஷன், நாகக்கன்னி, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, குங்கிலியக்கலய நாயனார், கவிகாளமேகப் புலவர், தாடகை, வேடுவர் தலைவனான சங்குகண்ணன், அந்தணர் குலத்தில் உதித்து வழிப்பறி செய்து கொண்டிருந்த நாகுன்னன் உள்ளிட்ட பலர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சிவ - பார்வதி திருமணத்தைக் காண அனைவரும் கயிலாயத்தில் குவிந்ததால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. இதை சரி செய்வதற்காக அகத்தியரை சிவபெருமான் தெற்கு நோக்கி அனுப்பிவைத்தார். அப்படி வந்த அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தரால் இவ்வாலயத்தில் ஒரு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இவ்வாலய முருகப்பெருமானை அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

    ஆலய அமைப்பு

    ஏழு நிலைகளுடன் மேற்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்ல 16 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தாடகையால் சாத்தப்பட்ட மாலையை ஏற்றுக்கொள்ள பெருமான், தலை குனிந்தது, சாய்ந்த சிவலிங்கத்தை மன்னன் யானைகளை கட்டி இழுத்து நிமிர்த்த முயன்றது, குங்கிலியக்கலய நாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்தியது போன்ற காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வடக்கே அலங்கார மண்டபம் உள்ளது. வெளிப்பிரகார சுற்றில் அலங்கார மண்டபத்தை ஒட்டி, நாகக்கன்னி உருவாக்கிய நாககன்னி தீர்த்தம் உள்ளது. வடமேற்கில் யாகசாலையும், கிழக்கில் அம்பாள் கோபுரமும், மேற்கிலுள்ள இரண்டாவது கோபுரத்தை அடுத்த உட்பிரகாரசுற்றில் வவ்வால் நெற்றி மண்டபமும் இருக்கிறது. இதில் குங்கிலியகலய நாயனார் மற்றும் சொக்கநாதர் சன்னிதிகள் உள்ளன.

    உட்பிரகாரச்சுற்றில் அம்பாளின் தனிச் சன்னிதி உபதேச அமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தச் சன்னிதிக்காகவே கிழக்கு கோபுரம் ஏற்படுத்தப்பட்டது. அம்பாள் சன்னிதிக்கு முன்பு பலிபீடம், நந்தி உள்ளன. இச்சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதி முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். கிழக்கில் நவக்கிரகங்கள், கோவிலின் தல விருட்சமான ஆண் மற்றும் பெண் பனை மரங்கள் உள்ளன. தல விருட்சத்திற்கு அருகில் கிணறு உள்ளது, இந்த கிணற்றின் வழியாகவே நாக கன்னிகை இறைவனை வழிபட வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாலய இறைவனை 12 வாரங்கள் வழிபட்டு வந்தால் ஞானமும், அறிவும் சித்திக்கும். நாகதோஷம் காலசர்ப்ப தோஷம் உள்ளோர் நாக கன்னிகைக்கு வேண்டிக்கொண்டு நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபட வேண்டும். ராகு காலங்களில் பாலாபிஷேகம் செய்வதும் பலன் தரும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில், ஆறு கால பூஜை நடைபெறுகின்றன.

    கடந்த 2003-ம் ஆண்டு இவ்வாலயத்தில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப்பின் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்துடன் இணைத்து, திரிபுரசுந்தரி உடனுறை ஊருடையப்பர் திருக்கோவில், காசிமடத்தைச் சேர்ந்த விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் திருக்கோவில் மற்றும் சிற்றாலயங்கள் சிலவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது, திருப்பனந்தாள் திருத்தலம்.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
    • இக்கோவில் அம்மன் பரிமளநாயகி.

    மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் புண்ணியங்கள் மற்றும் பாவங்களுக்கு ஏற்ப அவர்களின் வாழ்நாளில் நற்பலன்கள் மற்றும் தண்டனைகளை ஈசன் வழங்குகிறார். அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் தன்னை அறியாமல் தனது பக்தர்கள் செய்யும் பாவங்களை அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டி மீண்டும் அந்த பாவத்தை அவர்கள் செய்யாமல் தடுக்கிறார். இதன் மூலம் தீய வினைகளில் இருந்து தனது பக்தர்களை காக்கும் ஈசன் வினை தீர்க்கும் ஈசன் என்று அழைக்கப்படுகிறாா்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் பக்தர்கள் தீய வினைகளை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.

    சுயம்பு லிங்கம்

    விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவர் வீரட்டானேஸ்வரர். தாயார் ஏலவார்குழலி, பரிமள நாயகி. தல விருட்சம் துளசி ஆகும். கோவில் தீர்த்தமாக சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவில் அமைந்துள்ள ஊர் திருவிற்குடி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விற்குடி என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இதன் எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. இது படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம்.

    நாகலிங்க சிற்பம்

    இக்குளத்தில் தீர்த்தக்கரையில் விநாயகர் கோவில் உள்ளது. கோபுர வாசலை கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலது புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிரகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோவில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

    இக்கோவிலில் சலந்தரனைச் சம்ஹாரித்த மூர்த்தி ஜலந்த்தரவதமூர்த்தி என அழைக்கப்படுகிறாா். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது. தினமும் 4 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

    சொந்த வீடு

    மேலும் இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால்

    தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இக்கோவில் அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்ற சொல்லுக்கு துளசி என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இந்த கோவில் வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

    ஜலந்தராசூரன்

    ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்துக்கு வந்தார். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவம் எடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தார். அப்போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினார்.

    அப்போது கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரன் என்பதால் இந்த குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

    வரம் வாங்கினான்

    அவன் பெரியவன் ஆனதும் 3 உலகும் ் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், தனக்கு சாகாவரமும் வேண்டும் என பிரம்மனிடம் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அப்போது ஜலந்தராசூரன், தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும், என பிரம்மனிடம் வரம் வாங்கினான். இதனால் இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன்பு வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான்.

    ராமாவதாரம்

    இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், திருமாலே தாங்கள் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். சிவன் கூறியபடி திருமால் செய்ய தனது கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என பிருந்தை நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்தநேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீங்களும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும், என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.

    சக்கரத்தை பெற்றார்

    பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதை பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால் சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் 2 பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் குடமுழுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடந்தது. விற்குடி வீராட்டானேஸ்வரர் ேகாவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    பிருந்தையின் சாபத்தால் சீதையை பிரிந்த ராமா்

    கற்பிற்சிறந்த பிருந்தையை ராமர் ஏமாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிருந்தையின் கணவர் ஜலந்தராசூரனை சிவன் வதம் செய்தாா். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த பிருந்தை தான் தனது கணவனை இழந்து தவிப்பது போல நீங்களும்(திருமால்) உங்கள் மனைவியை இழந்து தவிப்பீர்கள் என சாபம் அளித்து விட்டு தீக்குளித்து உயிர் துறந்தாள். இதனால் ராமாவதாரம் எடுத்த விஷ்னு தனது மனைவி சீதையை பிரிந்து தவித்தார் என புராண வரலாறு கூறுகிறது. இதன்மூலம் கற்பிற்சிறந்த பெண்ணின் சாபம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள விற்குடியில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை- கங்களாஞ்சேரி- திருவாரூர் சாலையில் உள்ள விற்குடி பிரிவு சாலைக்கு சென்று அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலையில் உள்ள இக்கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது.
    • நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

    நெல்லையில் உள்ள டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்துக்கு மேலாக ஒரு வெள்ளைநிற நந்தி படுத்திருக்கிறது. அடுத்து உள்ளே சென்றால் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. கோவிந்தபெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

    2-வது பிரகாரம் சற்று பெரியது. இங்கு ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. அவற்றை தட்டிப்பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிரசபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீ்ஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    3-வது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், அய்யப்பன், வடிவு அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது.

    இந்த 3-வது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய் வள்ளி, தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள்புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சி அளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோவில் இரு மூலவரை கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவில் ஆகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிமான 5 சிவசபைகளில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி கோவில் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பு.

    வியப்பை ஏற்படுத்தும் கோபுரங்கள்

    நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பிரகாரத்துக்கு நடுவே தட்சணாமூர்த்தி சன்னதிக்கு முன்னதாக சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலை நுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்துள்ளது. அதை ஒட்டி நடுகோபுரமும் கொள்ளை அழகு. பிரகார மண்டபத்தில் உயரமாக பெரிய கல்தூண்கள் அந்த இடத்தையே அழகூட்டி காட்டுகின்றன.

    கோவிலில் உள்ள தெற்கு பிரகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு திருப்பணி செய்தவர்களும், மன்னர் பெருமக்களும் சிலையாக காட்சி தருகின்றனர்.

    இதைபோல் மேற்கு பிரகாரமும் பிரமிக்கத்தக்கது. இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதன் நடுவே மேலகோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார் நம்மை கொள்ளை கொள்கிறார். சுமார் 387 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்கு பிரகாரம். இந்த பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்துள்ளது. மேலும் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு எடுக்கப்படும் ஆறுகால தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது.

    அடுத்து ஈசான மூலையில் யானை கூடம் அமைந்துள்ளது. கிழக்கு பிரகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு பக்கம் 78 தூண்களுடன் சோமவாரம் மண்டபம் அமைந்துள்ளது.

    நெல்லையப்பர் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும், அதேபோல் காந்திமதி அம்பாள் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க 2 கோபுரங்களும் பார்க்கவே அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு

    இந்த கோவிலில் கிழக்கு நோக்கிய சன்னிதி வாயிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத்திருமேனியாய் காட்சி அளிக்கிறார் நெல்லையப்பர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வேறு எங்கும் காண முடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்று உறைந்து கிடக்கிறது. அது கம்பி வேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாளலயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    சீர் கொண்டு செல்லும் அம்பாள்

    பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது போல் காந்திமதி அம்பாளும் தனது திருக்கல்யாணத்தின் போது சீர் கொண்டு செல்கிறாள்.

    ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் 10 நாட்கள் அம்பாள் சிவனை மணக்க வேண்டி தவமிருபார். 10-ம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வார். 11-ம் நாள் மகாவிஷ்ணு தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று அம்பாளை மனம் செய்வார். திருக்கல்யாணத்தின்போது அம்மன் சீர் கொண்டு செல்கிறார். அப்போது பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

    பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    • இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

    சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.

    கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது.

    இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, 'இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்' எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது.

    அன்று முதல் இந்தப் பகுதி 'கருந்தட்டான்குடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'கரந்தை' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.

    ஆரூண், பிள்ளையார்பட்டி.

    • இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.
    • நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ளது, நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில். இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இருப்பினும் இங்குள்ள நந்தியே சிறப்புக்குரியது என்பதால், நந்தியின் பெயரிலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    தல வரலாறு

    இந்த ஆலயம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பகுதிக்குச் சென்ற பாண்டியர்கள், தங்களின் இஷ்ட தெய்வமான மீனாட்சி - சொக்கநாதரை, பிரதோஷ வேளையில் வழிபடுவதற்காக இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் வரலாறு சரியாக கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.

    சோழர்களும் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

    இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது இவ்வூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பக்தர் ஒருவர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியை புனிதம் என்று கருதிய அந்த பக்தர், அதனை தீர்த்தக் குளத்திற்குள் வைத்துவிட்டார். ஒரு முறை அந்த பக்தருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. நோய் குணமாக மானசீகமாக சிவபெருமானை பிரார்த்தித்தார். ஒரு நாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு வந்தது. சிவாலயத்தில் நந்தியை பிரதிஷ்டை செய்யாததுதான் அனைத்திற்கும் காரணம் என்று கருதிய அந்த பக்தர், உடனடியாக நந்தி ஒன்றை ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்தார். அதற்கு நெய் அபிஷேகமும் செய்தார். அவரின் வயிற்றுவலி நீங்கியது. இதையடுத்து இத்தல நந்திக்கு, நெய் அபிஷேகத்தை பிரதான அபிஷேகமாக செய்யும் வழக்கம் உருவானது.

    இங்கு வரும் பக்தர்கள் தங்களின் எந்த வேண்டுதலாக இருந்தாலும், அது நிறைவேறியதும் நந்தி பகவானுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நாளைக்கு பல லிட்டர் கணக்கில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வீட்டில் சிறிதளவு நெய் கீழே கொட்டினாலும், ஈக்களும், எறும்புகளும் மொய்க்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆலயத்தில் அவ்வளவு நெய் கொண்டு அபிஷேகம் செய்த போதிலும் ஒரு ஈயோ, எறும்போ வருவதில்லை. ஆரம்ப காலத்தில் அபிஷேக நெய்யை கோவிலில் தீபம் ஏற்ற பயன்படுத்தியுள்ளனர். அப்படி பயன்படுத்தப்பட்ட நெய், ரத்தம் போல சிவப்பமாக மாறியதாம். எனவே அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக பயன்படுத்தாமல், ஆலயத்திற்குள் அமைக்கப்பட்ட கிணற்றுக்குள் கொட்டி விடுகின்றனர். இந்த கிணற்றிலும் ஈக்கள், எறும்புகள் மொய்ப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது.

    நந்தியம்பெருமானுக்கு ரிஷபம் என்ற பெயரும் உண்டு. ஆகையால் இது ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. ஜாதகத்திலோ, அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளிலோ பாதிக்கப்படும் ரிஷப ராசிக்காரர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் என்பதால், சுவாமி-அம்பாள் தவிர நந்திக்கும் தனியாக அர்ச்சனை செய்யும் நடைமுறை இங்கு காணப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பெற்றுச் சென்று கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எடுத்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு பிரதோஷ நாயகர் தன்னுடைய சன்னிதிக்கு எழுந்தருள்வார். வைகாசி விசாகத்தை ஒட்டி மூன்று நாள் விழா இவ்வாலயத்தில் நடக்கிறது. அப்போது காவடி தூக்கியும், பூக்குழியில் இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    மூலவரான சொக்கலிங்கேஸ்வரருக்கு இடதுபுறம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அன்னையை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். இத்தல அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாலய பிரகாரத்தில் விநாயகர், சூரியன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

    இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம், சித்ரா பவுணர்மி வழிபாடு, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும் என்றாலும், நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம். அதுவும் சனிக்கிழமை வரும் மகா பிரதோஷம் என்றால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், திருமயத்தில் இருந்து 34 கிலோமீட்டரிலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, வேந்தன்பட்டி திருத்தலம்.

    • கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
    • கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    ஆலயம் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குாியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் படிக்கும் போதும், கேட்கும்போதும், கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தால் நாம் ஈர்க்கப்படுவோம். சில விஷயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அப்படி நம்மை அதிசயிக்க வைக்கும் ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் திருக்கோவில்.

    நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திரிம்பக் என்ற இடம். இங்குதான் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனைப் போற்றுகின்றனர். இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளது தனித்துவமான அம்சமாகும்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த கவுதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக, இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது.

    திரிம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான், சிம்ம ராசியில் வரும் போது, இத்தலத்தில் கும்பமேளா பெருவிழா கொண்டாடப்படுகின்றது.

    இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை.

    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.

    நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    வரலாற்றில் நீங்கா இடம்

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.

    சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.

    பல பெயர்கள்

    நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

    தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.

    சிதிலமடைந்த கோவில்

    காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.

    மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    திருப்பணி

    மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.

    சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது.
    • அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

    இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தெரிகின்றது. அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியினை தரிசனம் செய்யலாம். சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷ சமயத்தின் போது இந்த கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும். எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகவே இது அமைந்திருக்கிறது.

    இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது. அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.

    பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.

    இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது .

    தல வரலாறு

    பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது. தினந்தோறும் நடந்தால்! இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோவிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.

    சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.

    செல்லும் வழி பேருந்து மூலமாக செல்ல சென்னையிலிருந்து சுமார் 10 மணி நேரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். மதுரையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது.

    முகவரி:

    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,

    திருநெல்வேலி 627 001.

    திருநெல்வேலி மாவட்டம்.

    தொலைபேசி: +91-462-233 9910.

    • இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது.

    செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது. திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

    இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..' என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான 'வேண்ட வளர்ந்த நாதர்' சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    • அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஜீவநதியாய் விளங்கும் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றனா்.

    கொடியேற்றம்

    நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது. மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகி யோர்க ளுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்புடையது ஆகும்.

    இங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிபட்டம் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராத னைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 22-ந் தேதி (வியாழன்) ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடைபெறுகின்றது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனையும், சுவாமி வீதி உலாவும் நடை பெறுகிறது. கொடியேற்ற விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவற்றை கொண்டு் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம் :

    சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சி வபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை விநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    ×