search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு நெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி திருக்கோவில்- திருநெல்வேலி
    X

    அருள்மிகு நெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி திருக்கோவில்- திருநெல்வேலி

    • இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது.
    • அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

    இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தெரிகின்றது. அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியினை தரிசனம் செய்யலாம். சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷ சமயத்தின் போது இந்த கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும். எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகவே இது அமைந்திருக்கிறது.

    இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது. அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.

    பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.

    இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது .

    தல வரலாறு

    பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது. தினந்தோறும் நடந்தால்! இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோவிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.

    சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.

    செல்லும் வழி பேருந்து மூலமாக செல்ல சென்னையிலிருந்து சுமார் 10 மணி நேரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். மதுரையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது.

    முகவரி:

    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,

    திருநெல்வேலி 627 001.

    திருநெல்வேலி மாவட்டம்.

    தொலைபேசி: +91-462-233 9910.

    Next Story
    ×