search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் கோவில்"

    • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

    இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    அன்னதோஷம் தீர ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவ தரிசனம் கோடி லிங்கங்கள் பார்த்த பலனை பெற்றுத் தரும் என்ற ஐதீகத்தின் படி ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி செங்கோட்டை பகுதி சிவன்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த உலகிய நல்லூர்கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது.இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து, சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 150 வருடங்களுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றதால் உலகிய நல்லூர் சுற்றியுள்ள கிராமங்களான ஈசாந்தை, நாட்டார்மங்கலம், அமகளத்தூர், கருங்குழி ,நயினார் பாளையம், மாங்குளம், அனுமந்தல் குப்பம், செம்பாக்குறிச்சி, ராயர் பாளையம், பெத்தானூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை வாங்கிச் சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர், அத்தியூர், பெரியகொள்ளியூர், இளையனார் குப்பம், எடுத்துனுர், வானபுரம், அவிரியூர், ரிஷிவந்தியம், தொழுவந்தாங்கள் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • இந்த திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது.
    • இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன.

    மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்

    தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை

    தல விருட்சம்:வில்வம்

    தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல்களில் 120 பாடல்கள் அதிபலன் கூடியவை. அவற்றில் முக்கியமானது திருஞானசம்பந்தர் பாடிய திரு வாடானை திருப்பதிகம். திருஞான சம்பந்தர், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார் என அத்தனை பேராலும் பாடல்பெற்ற திருத்தலம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம். பிரம்மாவின் வழிகாட்டுதல்படி நீலரத்தின மணியால் சூரியன் ஆதிரெத்தினேஸ்வரருக்குப் பூஜை செய்ததால் இதை ஆதிரெத்தினபுரம் என்றும் சொல்கிறது புராணம்.

    இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன. மணிமுத்தாறு, சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், வாருணி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் உள்ளன. பெரும்பாலும் திருக்கோயில்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும். ஆனால், ஆதிரெத்தினேஸ்வரருக்கு பாரிஜாதம், குருக்கத்தி, கடம்பம், வில்வம் ஆகிய நான்கு தல விருட்சங்கள்.

    இறைவன், இறைவி

    இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரிணி(நீராவி தீர்தம்) தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயும், கோவிலுக்கு முன்பு வருணன் தீர்த்தமும் (தெப்பகுளம்), கோவிலுக்கு மேற்கே வாருணி தீர்த்தமும் (மங்கல நாதன் குளம்), கோவிலுக்கு தெற்கே அகத்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மற்றும் மணிமுத்தாறு(மணிமுத்தா நதி) என்று ஆறு தீர்த்தங்கள் உள்ளன.

    வருண பகவானின் மகன் வாருணி சாப விமோசனம் பெற்று முனிவராக பிறப்பெடுத்து உருவான இடம். வாருணியின் மகனே நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன்.இங்குள்ள ஆதி ரத்தின லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர் சூரியபகவான், மகாபாரத காலத்திற்கு முன்பு கிருஷ்ணர் ராமராக அவதாரம் எடுத்த பொழுது ராமர் ராவணனுடன் போர் செய்ய போவதற்கு முன்பு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் அதற்கான உபதேசத்தை பெற்றார்.

    ராமாவதார காலத்தில் இறைவனிடமிருந்து தான் கற்ற இந்த உபதேசத்தை தனது கிருஷ்ண அவதாரத்தின் போது கீதையாக, கிருஷ்ணன் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மார்க்கண்டேயர், காமதேனு, சூரியன், அகத்தியர், திருஞானசம்பந்தர் ஆகியோர் அவரவர் வாழ்ந்த காலங்களில் பல யுகங்களில் தொடர்ந்து இங்குள்ள இறைவனை பலர் வழிபட்டு வந்துள்ளனர்.

    நீலரத்தினக்கல் லிங்கம்

    என்றும் பதினாறாய் வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயன் தனது பெற்றோருடன் வந்து இங்கு தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஆதிரெத் தினேஸ்வரர் லிங்கம் நீலரத்தினக் கல்லால் வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. தேவி, இங்கே சிநேக வல்லி அம்மையாக வீற்றிருக்கிறாள்.

    சாபம் நீங்கிய தலம்

    துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட தனது மைந்தன் வாருணிக்கு சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்கிறார் வருணன். 48 நாட்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி ஆதிரெத்தினேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று உபாயம் சொன்னார் சிவபெருமான். அதுபடியே வாருணிக்கு சாபம் நீங்கியதால் இத்திருத்தலத்தை நோய்நொடி தீர்க்கும் திருத்தலம் இன்றைக்கும் துதிக்கப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சங்களின் வேரிலிருந்து திருமண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டாலும் தண்ணீரில் கலந்து பருகினாலும் நோய் நொடிகள் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    விழாக்கள்

    இக்கோவிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன

    • இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.
    • தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற் கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.

    இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.

    பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு 'கங்காதேஸ்வரர்' என்று பெயர்.

    கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    அதில் அவர், "இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.

    கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது" என்கிறார்.

    • இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.
    • சுக்கிரதிசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199-வது தலமாகும். பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் 9-வது தலம்.

    மூலவர்: ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானைநாதர்

    அம்மன்: சிநேகவல்லி, அன்பாயிரவல்லி

    தல விருட்சம்: வில்வம்

    தீர்த்தம்: சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், காமதேனு தீர்த்தம்.

    வருண பகவானின் மகனான வாருணி, துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தான். அதனால் அவனை ஆட்டின் தலையும், யானை உடலுமாக மாறும்படி துர்வாசர் சாபமிட்டார். அந்த சாபம் நீங்குவதற்காக திருவாடானை வந்த வாருணி, இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றான். ஆடு + ஆனை என்பதே 'திருவாடானை' என்றானது.

    இங்குள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஈசனை வேண்டி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ச்சுனன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவன் அறியவில்லை. அதை அறிவதற்காக இத்தலம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் கற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றியாகவே சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவினான்.

    சூரியனுக்கு தன்னுடைய பிரகாசமான ஔியால் கர்வம் உண்டானது. அந்த ஆணவத்தால் தன்னுடைய ஒளியை, சிவபெருமானின் முகத்தில் பாய்ச்சினான். அப்போது அந்த ஒளியை நந்தி உள்ளிழுத்துக்கொண்டார். இதனால் ஒளியை இழந்த சூரியன், நந்தியை வேண்டினாா். நந்திேயா, திருவாடானை இறைவனை வேண்டும்படி சொல்ல, நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டு, தன் ஒளியை மீண்டும் பெற்றார், சூரிய பகவான்.

    இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

    ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேஸ்வரர்' என்று பெயர். இவர் உச்சிகாலத்தில் நடைபெறும் அபிஷேகத்தின் போது, நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

    திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள், தங்களுக்கான பரிகாரத்தை இந்த ஆலயத்திற்கு வந்து செய்து கொள்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் அமைந்த 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், 130 அடி உயரம் கொண்டது.

    இத்தல இறைவனை சூரியன், அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

    இந்த ஆலயத்தில் வைகாசி வசந்த விழா 10 நாட்களும், ஆடிப்பூரத் திருவிழா 15 நாட்களும் விமரிசையாக நடைபெறும். அதே போல் நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி வழிபாடுகளும் சிறப்பாக நடத்தப்படும்.

    இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், முன்வினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்கிரதிசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.

    மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம்.

    • இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
    • மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது, கஜூராஹோ என்ற பகுதி. இந்தப் பகுதியானது, கி.பி. 500 முதல் கி.பி. 1300 வரை வட இந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்த சந்தேல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது கி.பி.950 முதல் கி.பி.1150-க்கு உட்பட்ட 200 ஆண்டு காலத்திற்குள், கஜூராஹோ நினைவுச்சின்னங்கள் கட்டமைக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவு சொல்கிறது.

    இங்கு இந்து மற்றும் சமணம் சார்ந்த கோவில்கள் பல இருக்கின்றன. இங்குள்ள சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. கஜூராஹோ பகுதியில் உள்ள நினைவுச்சின்னங்கள் அனைத்தும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இங்கு அமைந்த கோவில்களில் ஒன்றுதான் கந்தாரிய மகாதேவர் ஆலயம்.

    இதனை சந்தேல மன்னர்களில் ஒருவரான வித்தியாதரன் என்பவர், தன்னுடைய ஆட்சி காலத்தில் (1003-1035) கட்டியிருக்கிறார். கஜூராஹோ மேற்கு பகுதி நினைவுச்சின்ன தொகுப்பில் உள்ள கோவில்களில், இதுவே மிகப்பெரியது. இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

    இந்தக் கோவில் கோபுரமானது, 84 சுருள் வடிவிலான விமானங் களைக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலின் மொத்த நீளம் 102 அடி, அகலம் 67 அடி, உயரம் 102 அடியாகும். இங்கு அருள்பாலிக்கும் மூலவரான கந்தாரிய மகாதேவர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரக மேடையானது, 4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஆலயம், குகை போன்று சிறிய வாசலைக் கொண்டிருக்கிறது. எனவே சூரிய ஒளி புகும் வகையில், கோவில் சுவர்களில் சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    • இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு.
    • இறைவியின் பெயர் மரகதாம்பிகை.

    எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.

    இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.

    கோவில் அமைப்பு

    நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிலின் சிறப்பு

    திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    அம்மனை வழிபடும் சூாியன்

    மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.

    முக்கிய திருவிழாக்கள்

    சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.

    • அம்பாளுக்கு ஸ்ரீகற்பகவல்லி எனும் திருநாமம்.
    • சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

    திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பூவனூர் திருத்தலம். நீடாமங்கலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். அற்புதமான இந்த ஊரில்தான், தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

    திருப்பூவனூர் என்றும் பூவனூர் என்றும் அழைக்கப்படுகிற இந்தத் தலத்தில் சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீபுஷ்பவன நாதர். இவருக்கு ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளுக்கு ஸ்ரீகற்பகவல்லி எனும் திருநாமம். ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறாள் அம்பாள்.

    அதென்ன சதுரங்க வல்லபநாதர் என்ற பெயர்?

    தெற்கே பாண்டிய நாட்டு மன்னன் வசுசேனன், மிகுந்த சிவபக்தி கொண்டவன். இவரின் மனைவி காந்திமதி. இவர்களின் ஒரே வருத்தம்... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே... என்பதுதான்! வேண்டாத தெய்வங்களில்லை... செய்யாத தர்மங்களில்லை. சதாசர்வ காலமும் சிவத்தையே நினைத்து மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தார்கள். அந்த ராஜதம்பதிக்கு அருளுவதற்கு திருவுளம் கொண்டார் சிவபெருமான்.

    நீராடுவதற்காக குளத்துக்கு வந்தார் மன்னர். அங்கே தாமரை மலரில் சங்கு ஒன்றைக் கண்டார். அந்தச் சங்கினை கையில் எடுத்த போது, அந்தச் சங்கு பெண் குழந்தையாக உருவெடுத்தது. மனம் பூரித்து நெகிழ்ந்து போனார். 'எம் சிவமே எம் சிவமே' என்று நெக்குருகிப் போனார். அந்தக் குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி எனப் பெயரிட்டு வளர்த்தார்.

    சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழும் சாமுண்டிதேவியானவள், ராஜராஜேஸ்வரிக்கு வளர்ப்புத்தாயாக இருந்து அரவணைத்து வளர்த்து வந்தாள். சகல கலைகளையும் கற்றுக் கொடுத்தாள்.

    ராஜராஜேஸ்வரி, சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். முக்கியமாக, சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரி வெல்லவே முடியாதவள் என்று போற்றப்பட்டாள்.

    ராஜராஜேஸ்வரிக்கு உரிய வயது வந்தது. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மன்னர். மகளைப் போலவே, சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்குபவரையே திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தார்.

    மன்னரின் அறிவுப்புக்குப் பின்னர் ஒருநாள், சதுரங்கப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு தேசத்தின் ராஜகுமாரர்களும் வந்திருந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியிடம் தோற்றுப் போனார்கள். மகளுக்கு ஏற்ற ஒரு வரனும் அமையவில்லையே என்பதுதான் பெருங்கவலையாக இருந்தது மன்னனுக்கு.

    பல தலங்களுக்குச் சென்று வழிபட்டார் மன்னர். அப்படி தலங்களுக்கு வந்து மகளுடன் வணங்கி வந்தவர், திருப்பூவனூர் திருத்தலத்துக்கும் வந்தார். புஷ்பவனநாதரைத் தரிசித்தார். மனமுருக வேண்டினார்.

    மறுநாள்... திருப்பூவனூருக்கு அருகே மன்னர் தங்கியிருந்த இடத்துக்கு வயதான பெரியவர் ஒருவர் வந்தார். அங்கே மன்னரின் மகளான ராஜராஜேஸ்வரியிடம், 'என்னுடன் சதுரங்கம் விளையாடி ஜெயிக்க முடியுமா உன்னால்?' என்று கேட்டார். இதைக் கண்டு மன்னர் கலங்கிப் பதறினார். ஆனால் மகளோ இதை ஓர் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விளையாட்டுக்கும் போட்டிக்கும் சம்மதித்தார்.

    முதியவருக்கும் ராஜராஜேஸ்வரிக்கும் ஆட்டம் ஆரம்பமானது. சதுரங்க விளையாட்டில் முதியவர் வென்றார். மன்னர் வேதனை அடைந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி, மகளை திருமணம் செய்துவைக்க வேண்டுமே... அதுவும் கிழவருக்கா திருமணம் செய்துவைப்பது என்று கண்ணீருடன் சிவபெருமானை வேண்டினார். அப்போது, முதியவர் மறைந்தார். சிவபெருமான் தோன்றினார். நெடுஞ்சாணாக விழுந்து நமஸ்கரித்தார். ராஜராஜேஸ்வரியும் நமஸ்கரித்தார். சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரியை வென்றதால், புஷ்பவனநாதருக்கு சதுரங்கவல்லப நாதர் என்றும் மன்னருக்கு மகளாகப் பிறந்த உமையவளுக்கு, தலத்தின் கற்பகவல்லியுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமமும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். மேலும் பிராகாரத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.

    பூவனூர் திருத்தலத்துக்கு வந்து சதுரங்க வல்லபநாதரையும் ஸ்ரீராஜராஜேஸ்வரியையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரரையும் மனதார வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளெல்லாம் தகர்த்து அருளுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

    • இங்கு உள்ள துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தது.
    • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன.

    சுவாமி : அருள்மிகு தேனுபுரீசுவரர்.

    அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

    மூர்த்தி : முருகன், இராமர், மதவாரணப்பிள்ளையார், சப்த கன்னியர், துர்க்கை, மகாலிங்கம், சம்பந்தர், பைரவர்.

    தீர்த்தம் : ஞான தீர்த்தம்.

    தலவிருட்சம் : வன்னி மரம்.

    கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    தலச்சிறப்பு : இங்கு உள்ள துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தது ஆகும். பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம். விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.

    வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடி தீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.

    இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியில் இருந்து விலகியே உள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களில் உள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும் போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்பு உடையது. வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    தலவரலாறு :

    சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டு வந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.

    துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி அமைந்து உள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை.

    திருவிழாக்கள் :

    ஆனி – முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப் பந்தல் பெற்ற திருவிழா,

    ஆடி – வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு,

    மார்கழி – அமாவாசை.

    கோயில் முகவரி :

    அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில்,

    பட்டீஸ்வரம் அஞ்சல் - 612 703,

    கும்பகோணம் வட்டம்,

    தஞ்சை மாவட்டம்.

    • இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • இந்த ஆலயம் திருப்பனந்தாள் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    உலககெங்கும் வியாபித்து நிற்கும் சிவபரம்பொருள் ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்வுபெறவேண்டும் என்ற கருணையுடன் எழுந்தருள்பாலிக்கும் அருள்நிலையங்களே திருக்கோவில்களாகும். அத்தகைய திருக்கோவில்களில் தேவாரப்பதிகங்கள் பெற்றவை மிக சிறப்புடையவை. அவைகளில் ஒன்றாக வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் மற்றும் மண்ணியாற்றிற்கு இடையே அமைந்துள்ள தலமே திருப்பனந்தாள். இங்குள்ள பெரியநாயகி உடனுறை அருணஜடேசுவரர் ஆலயம், தருமை ஆதீனத்திற்குட்பட்ட 27 கோவில்களில் ஒன்று.

    முற்காலத்தில் மட்டுமல்ல தற்காலத்திலும் 'தண்பொழில் சூழ் பனந்தாள்' என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப, பனை மரங்கள் நிறைந்திருக்கும் இடம் என்பதால் இவ்வாலயம் உள்ள ஊர், 'திருப்பனந்தாள்' என்று பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாலய இறைவன், பனை மரத்தின் கீழ் எழுந்தருளிய சுயம்பு மூர்த்தியாவார். பிரணவ மந்திர உபதேசம் பெற விரும்பிய அம்பிகை, இத்தலத்திற்கு வந்து அருந்தவம் இயற்றி ஞானோபதேசம் பெற்றதால் இது 'உபதேசத் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் யோக குரு வடிவமே, தட்சிணாமூர்த்தி. இவர் எல்லா சிவாலயங்களிலும் தென்முகமாக அமர்ந்திருப்பார். ஆனால் சில ஆலயங்களில் மூலவரே குருவாக (சிவ குரு) இருந்து அருள்பாலிப்பதும் உண்டு. அத்தகைய விசேஷமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. நவக்கிரக குருவின் தோஷத்தால் திருமணத்தில் தடை ஏற்பட்டு வருந்துவோர், இதுபோன்ற சிவ குரு தலங்களை தரிசித்தால் நவக்கிரகங்களின் தோஷம் அகன்று உடனடியாக திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். மூலவரே சிவ குருவாக அருள்பாலிக்கும் இத்தலத்தை, அட்டநாகங்களில் ஒன்றான வாசுகியின் மகள் சுமதி வழிபட்டு திருமண வரம் பெற்று, அரித்துவசன் என்ற மன்னனை மணந்ததாக செஞ்சடைவேதியர் எழுதிய 'திருப்பனந்தாள் தல புராணம்' கூறுகிறது.

    இத்தல இறைவனுக்கு அனுதினமும் மாலை சூட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், தாடகை என்ற பெண். ஒரு நாள் மாலை சாத்தும்போது அவளது மேலாடை சரிந்தது. உடல் அவயங்கள் தெரிய மாலை சாத்துவது தவறு என்று கருதியவள், தன்னுடைய மேலாடையை ஒரு கையால் பிடித்தவாறு மாலை சாத்த முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. இதைக் கண்ட பெருமான், அவளது பக்திக்கு இரங்கி, தன்னுடைய பாணத்தை சற்றே முன்னோக்கி வளைத்து மாலையை பெற்றுக்கொண்டார். அப்படி சாய்ந்த பெருமான், அதன்பிறகு நிமிரவில்லை. லிங்கத்தை நிமிர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டும் அது நடக்கவில்லை.

    திருக்கடவூரில் இறைவனுக்கு அனுதினமும் குங்கிலிய புகை போடுவதை திருப்பணியாக செய்துக் கொண்டிருந்த குங்கிலியக்கலய நாயனார், சிவலிங்கம் வளைந்திருக்கும் செய்தி கேட்டு திருப்பனந்தாள் வந்தார். சிவலிங்கத்திற்கு ஒரு மாலை சூட்டி, அந்த மாலையுடன் லிங்கத்தை ஒரு பெருங்கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு 'அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று மனமுருகி வழிபட்டு சிவலிங்கத்தை இழுத்தார். யானைகளாலே நிமிர்த்த முடியாத சிவலிங்கம், மனிதன் முயன்றால் உயிர் அல்லவா போய்விடும். ஒரு பக்தைக்காக தலை சாய்ந்த ஈசன், இன்னொரு பக்தருக்காக நிமிர்ந்து நின்று அருள்பாலித்தார்.

    தேவார பதிகங்கள் பாடல் பெற்ற ஆலயங்களில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்த 39-வது திருத்தலம் இது. ஆலயத்தின் பெயர் 'தாலவனம்'. தமிழில் தாடகைஈச்வரம். இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இனிய தமிழில் 'செஞ்சடையப்பர்' என்பது அவரது பெயர். இறைவியை தமிழில் பெரியநாயகி என்றும், வடமொழியில் பிரகன்நாயகி என்றும் சொல்கின்றனர். தேவலோக கற்பகத் தருவிற்கு இணையானது, பூலோகத்தில் உள்ள பனை மரம். அதுவே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூப தீர்த்தம், மண்ணியாறு முதலாகிய தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

    இவ்வாலய இறைவனை அம்பிகை, பிரம்மன், திருமால், சூரியன், ஆதிசேஷன், நாகக்கன்னி, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, குங்கிலியக்கலய நாயனார், கவிகாளமேகப் புலவர், தாடகை, வேடுவர் தலைவனான சங்குகண்ணன், அந்தணர் குலத்தில் உதித்து வழிப்பறி செய்து கொண்டிருந்த நாகுன்னன் உள்ளிட்ட பலர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சிவ - பார்வதி திருமணத்தைக் காண அனைவரும் கயிலாயத்தில் குவிந்ததால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. இதை சரி செய்வதற்காக அகத்தியரை சிவபெருமான் தெற்கு நோக்கி அனுப்பிவைத்தார். அப்படி வந்த அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தரால் இவ்வாலயத்தில் ஒரு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இவ்வாலய முருகப்பெருமானை அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

    ஆலய அமைப்பு

    ஏழு நிலைகளுடன் மேற்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்ல 16 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தாடகையால் சாத்தப்பட்ட மாலையை ஏற்றுக்கொள்ள பெருமான், தலை குனிந்தது, சாய்ந்த சிவலிங்கத்தை மன்னன் யானைகளை கட்டி இழுத்து நிமிர்த்த முயன்றது, குங்கிலியக்கலய நாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்தியது போன்ற காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வடக்கே அலங்கார மண்டபம் உள்ளது. வெளிப்பிரகார சுற்றில் அலங்கார மண்டபத்தை ஒட்டி, நாகக்கன்னி உருவாக்கிய நாககன்னி தீர்த்தம் உள்ளது. வடமேற்கில் யாகசாலையும், கிழக்கில் அம்பாள் கோபுரமும், மேற்கிலுள்ள இரண்டாவது கோபுரத்தை அடுத்த உட்பிரகாரசுற்றில் வவ்வால் நெற்றி மண்டபமும் இருக்கிறது. இதில் குங்கிலியகலய நாயனார் மற்றும் சொக்கநாதர் சன்னிதிகள் உள்ளன.

    உட்பிரகாரச்சுற்றில் அம்பாளின் தனிச் சன்னிதி உபதேச அமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தச் சன்னிதிக்காகவே கிழக்கு கோபுரம் ஏற்படுத்தப்பட்டது. அம்பாள் சன்னிதிக்கு முன்பு பலிபீடம், நந்தி உள்ளன. இச்சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதி முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். கிழக்கில் நவக்கிரகங்கள், கோவிலின் தல விருட்சமான ஆண் மற்றும் பெண் பனை மரங்கள் உள்ளன. தல விருட்சத்திற்கு அருகில் கிணறு உள்ளது, இந்த கிணற்றின் வழியாகவே நாக கன்னிகை இறைவனை வழிபட வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாலய இறைவனை 12 வாரங்கள் வழிபட்டு வந்தால் ஞானமும், அறிவும் சித்திக்கும். நாகதோஷம் காலசர்ப்ப தோஷம் உள்ளோர் நாக கன்னிகைக்கு வேண்டிக்கொண்டு நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபட வேண்டும். ராகு காலங்களில் பாலாபிஷேகம் செய்வதும் பலன் தரும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில், ஆறு கால பூஜை நடைபெறுகின்றன.

    கடந்த 2003-ம் ஆண்டு இவ்வாலயத்தில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப்பின் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்துடன் இணைத்து, திரிபுரசுந்தரி உடனுறை ஊருடையப்பர் திருக்கோவில், காசிமடத்தைச் சேர்ந்த விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் திருக்கோவில் மற்றும் சிற்றாலயங்கள் சிலவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது, திருப்பனந்தாள் திருத்தலம்.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    ×