search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்து பிறப்பு"

    • கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும்.
    • கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக இயேசுவை பிரசங்கிக்க வேண்டும்.

    கிறிஸ்துவானவர் பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்தின் மன்னனாக பார்வோன் இருந்தான். இவன் யோசேப்பிடம், 'எகிப்து தேசத்தின் நன்மையை தருவேன், எகிப்து தேசம் எங்கும் உள்ள நன்மை உங்களுடையது. எனவே தகப்பனையும், சகோதரர்களையும் குடும்பத்தோடு எகிப்தில் குடியேற வரச்சொல்' என்று சொன்னான்.

    இஸ்ரவேலையும், அவன் மக்களையும் (66 பேர் மற்றும் அவரின் குடும்பம்) கானான் தேசத்தில் இருந்து அழைத்துவர எகிப்தில் இருந்து வண்டிகளை அனுப்ப ஏற்பாடு செய்தான் (ஆதி:45:16-28). அந்நாட்களில் இஸ்ரவேலருடைய வாகனங்கள் கழுதைகள் தான்.

    மகன் யோசேப்பு தனக்காக சொல்லி அனுப்பிய வார்த்தைகளை கேட்டு, அவன் அனுப்பின வண்டிகளையும் பார்த்ததும் இஸ்ரவேல் மகிழ்ந்தான். பெயர்சபாவுக்கு போய் கர்த்தரை தொழுது கொண்டு கர்த்தரிடம் தரிசனம் பெற்று, தன்னை திடப்படுத்திக் கொண்டபின் எகிப்துக்கு புறப்பட்டான் (ஆதியாகமம் 46:1-27).

    350 வருடங்கள் எகிப்தில் வசித்த பின், அவனுடைய குமாரரில் லேவி குடும்பத்தில் பிறந்தவன் தான் மோசே. தன்னுடைய எண்பதாவது வயதில், மோசே 6 லட்சம் புருஷர் மற்றும் குடும்பங்களை கானான் தேசத்திற்கு 40 வருடங்களாக கர்த்தரின் கிருபையால் வழிநடத்திச்சென்றான் (யாத்திராகமம் 2:1-10).

    கி.மு. 1800-ம் ஆண்டு யோசேப்பை சந்தித்த இஸ்ரவேலின் மகிழ்ச்சிக்கு எல்லை தான் உண்டோ. மரித்துப்போன மகன் என்று எண்ணின யோசேப்பை உயிரோடு எகிப்தின் அதிகாரியாக பார்க்கும்போது, எப்படி மகிழ்ந்து இருப்பான். பாவத்திற்கு மரித்து விடாமல், நாம் கிறிஸ்துவின் நெருக்கம் கிடைத்து சேரும்போது, தகப்பனாகிய அவர் அடையும் மகிழ்ச்சி பெரிது தானே. (ஆதியாகமம் 46:29,30).

    கிறிஸ்துவுக்கு முன் 1450-ம் ஆண்டில் எகிப்து நாட்டில் நதியின் ஓரத்திலே நாணல் பெட்டிக்குள் இருந்த 3 மாத குழந்தையான மோசேயை கண்ட பார்வோனுடைய மகள், மோசேயை தன்னுடைய மகனாகவே எடுத்துக்கொண்டாள். எபிரேய பிள்ளை என தெரிந்தும் தைரியமாக இந்த செயலை செய்தாள்.

    கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க சித்தம் கொண்டு, அவனை தேர்ந்தெடுத்து பக்குவப்படுத்தி ஆயத்தப்படுத்தினார். பார்வோனிடம் செல்லவேண்டிய வழிமுறைகளை கர்த்தர் அவனுக்கு கற்றுக்கொடுத்தார். அவனை சிறு குழந்தையாக இருக்கும்போதே பிரித்தெடுக்க பார்வோனுடைய குமாரத்தியின் இரக்க குணம் வழி வகுத்தது (யாத்திராகமம் 2:6).

    'நீங்கள் போகும் வழியில் சண்டை பண்ணிக் கொள்ளாதீர்கள்", என்று யோசேப்பு தன் சகோதரருக்கு சொல்லி அனுப்பினான். சமாதானமாக வாழ நாமும் நம் சகோதரரிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 45:24).

    கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் வருடத்தில் சகரியாவின் வீட்டில் மரியாள் எலிசபெத்தை வாழ்த்தும் போது பரிசுத்த ஆவியானவர், எலிசபெத்தை அபிஷேகம் பண்ணினார். அச்சமயம் வாழ்த்துதல் சத்தம் கேட்டு எலிசபெத்தின் வயிற்றிலிருந்த (யோவான்ஸ்நானன்) குழந்தை களிப்பாய் துள்ளிற்று. பரிசுத்த ஆவியானவரை நாம் நம்மில் வாசம் செய்ய அனுமதித்தால் நமக்கு களிப்பு உண்டாகும் (லூக்கா 1:42-44).

    கிறிஸ்துவுக்குப் பின் முப்பத்து ஏழாம் வருடத்தில் தமஸ்குவில் உள்ள ஜெப ஆலயங்களில் கர்த்தராகிய இயேசுவை பின்பற்றின சீடர்களை கொலை செய்ய புறப்பட்டு (அப்போஸ்தலர் 8:3,9:1,2) வழியிலே, கர்த்தரால் சந்திக்கப்பட்டான் சவுல். பின்னர் பார்வை இழந்து (அப்போஸ்தலர் 9:3-9), மூன்று நாட்கள் கழித்து கர்த்தரின் கட்டளையின் பெயரில் அனனியா போய் ஜெபிக்க, பார்வை அடைந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டான்.

    ஞானஸ்நானம் பெற்ற பின் சவுல், பவுலாக மாறினான். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நம்மில் எத்தனை பேர் விசுவாச வீரர்களாக நம் இறுதி மூச்சு வரை கர்த்தருக்காக வாழப்போகிறோம்? (அப்போஸ்தலர் 9:10-18).

    கிறிஸ்துவின் வருகை என்பதே நம்பிக்கை விசுவாசம், மகிழ்ச்சி, இரக்கம், சமாதானம் இவைகளை முழு உலகத்திற்கும் கொண்டு செல்வதுதான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.

    கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும். சுவிசேஷம் நம்மிடம் கேட்பவர்கள் விசுவாசித்து கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக கர்த்தராகிய இயேசுவை பிரசங்கிக்க வேண்டும். கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்து இருக்கும் படி எல்லாருக்கும் புத்தி சொல்ல வேண்டும். திருச்சபையில் இருந்து ஊழியர்களை சுவிசேஷம் அறிவிக்க அனுப்ப வேண்டும்.

    அப்போதுதான், `என் ஆவி என் ரட்சகராகிய தேவனில் களிகூறுகிறது', என்று மரியாள் பாடினது போல நாமும் நற்செய்தியை கொண்டாட முடியும்.

    • சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா.
    • கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா.

    உலகம் முழுவதும் சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா, கிறிஸ்துமஸ் பெருவிழா. கிறிஸ்துமஸ் என்றால் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் என்றால், இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா. லூக்கா நற்செய்தி (2 :10–11)

    கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி பல விதமான யுகங்கள் இருந்தாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது சரித்திர சான்று, அதை யாராலும் மறைக்க இயலாது. `உரோமயர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூல், அகஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ந்தேதி, அதாவது அமாவாசையில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ந்தேதி கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது.

    கான்ஸ்டன்டைன் உரோமை அரசரான பிறகு கிறிஸ்துவம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் கிபி 336-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல வண்ணங்களோடு அலங்கரிக்கப்படும் இம்மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சம். கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் மூன்று பரிமாணங்களைக் குறிக்கிறது. முதன் முதலாக 1605-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஸ்டிராஸ் பர்க் என்னுமிடத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம்பெற்றது.

    கிறிஸ்து பிறப்பு விழாக்காலத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் விண்மீன் தொங்கவிடப்படுகிறது. இயேசு பிறந்திருந்த இடத்திற்கு விண்மீன் ஞானிகளுக்கு வழிகாட்டியாக அழைத்துச் சென்றதை நினைவு படுத்துகிறது. `யாக்கோபில் இருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலில் இருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" (எண்ணிக்கை 24:17) என்று வாசிக்கிறோம்.

    கிறிஸ்துவை நோக்கி ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் போல, நாமும் பிறரைக் கிறிஸ்துவை நோக்கி அழைத்துவரும் உயிருள்ள விண்மீன்களாய் மாற இது நம்மை அழைக்கிறது.

    புனித பிரான்சிஸ் அசிசி 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள கிரேச்சியா என்ற இடத்தில் திருதந்தை மூன்றாம் ஓனொரியனிடம் அனுமதி பெற்று, குழந்தை இயேசுவை மெழுகால் செய்து, உண்மையான மனிதர்களை அன்னை மரியாகவும் சூசையாகவும் நிறுத்தி இயேசுவின் பிறப்பு காட்சியை அமைத்தார். மேலும் அவர் 1293-ம் ஆண்டு கிரேச்சியா மலையில் ஜான் என்ற நண்பர் வழியாக முதல் குடிலை அமைத்தார்.

    விண்ணில் இருந்த கடவுளின் சின்ன சின்ன ஆசைகள் மண்ணிலே முத்தமிட்ட இனிய நாள்தான் கிறிஸ்துமஸ். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் நாள் இந்நாள். பனிவிழும் இரவிலும் ஆனந்தம், குதூகலம், புதிய ஆடைகளின் அணிவகுப்பு, பளிச்சிடும் ஆலயத்தோற்றம், பளபளக்கும் பட்டாடைகள், அற்புதமாய் ஜொலிக்கும் குடில் என்று இவற்றிக்கு தான் நாம் முக்கியத்துவம் தருகிறோம்.

    ஆனால் அவர் மாட மாளிகையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக மாட்டுக்குடிலைத் தேர்ந்தெடுத்தார். அவர் பிறந்த செய்தி அரசர்களுக்கோ செல்வந்தோருக்கோ முதலில் அறிவிக்கப்படவில்லை. ஏழ்மையின் சின்னமாமய் விளங்கும் இடையர்களுக்குதான் அறிவிக்கப்பட்டது. இறைவனின் பரம ரகசியம் எவ்வளவு எளிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா. பகிர்வை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழா. அன்பை இழந்த உள்ளங்களுக்கு இதயத்தை கொடுப்போம். பாசம் இழந்த இல்லங்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். பரிதவிக்கும் இதயங்களுக்கு பகிர்வாக இருப்போம்.

    வாழ்க்கையைத் தொடாத விழாக்களும், வாழ்வை மாற்றாதக் கொண்டாட்டங்களும் வெறும் சடங்காக மட்டுமே அமையும்.

    • அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்.
    • உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா.

    "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக

    உலகில் அவருக்கு உகந்தோருக்கு

    அமைதி உண்டாகுக (லூக்கா 2:14)

    அகிலத்தின் விடுதலைக்காய், அவனியில் அவதரித்து, அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். மனித நேயமிக்க மாபரன், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள் தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. சாதி மத வேற்றுமைகளை தாண்டி, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் விழா இது.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. நடுங்கும் குளிரில், எங்கும் தங்க இடம் கிடைக்காமல், ஆடு மாடு அடைக்கும் கொட்டகையே அவரது பிறந்த வீடாக அமைந்தது. இயேசு பாலன் உவக இரட்சகர் என்ற நிலையில் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் தெரிந்து கொள்ளவில்லை.

    எளிமையையும், ஏழ்மையையும் விரும்பி ஏற்றார். எளியோரின் பங்காளரானார். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி முதன்முதலாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமரர்களாகிய இடையர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

    ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவமாய்இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் தாழ்மை, இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்வி லிருந்து மாற்றம் பெற்று, அனைத்து ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அறைகூவல் விடுக்கிறது.

    "பூவுலகில் நன்மத்தோர்க்கு அமைதி உண்டாகுக" என்ற அமைதியின் நாயகன், நம்மில் தேடும் சமாதானம், அமைதி எங்கே?

    எத்தனை ஏற்ற தாழ்வுகள்! எத்தனை வன்முறைகள்!!

    இஸ்ரேயேல், பாலஸ்தீனப்போர்,

    ரஷ்ய, உக்ரேன் போர்,

    பனிப்போர், பகிரங்கப் போர்,

    வல்லரசு நாடுகளின் ஆதிக்க வெறி...

    பெத்லேகேமின் மகிழ்ச்சி நாட்கள் மறைந்துவிட்டனவோ என்ற எண்ணம் தோன்றுகிறதே... இறைவன் ஒற்றுமையுடன், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிரிந்து வாழ வேண்டுமென விரும்புகிறார். கள்ளம் கபடமற்ற குழந்தையின் இயல்புகள் நம்மில் மிளிர வேண்டுமெனவே, இயேசு மழலை அடையாளத்துடன் பாலகனாக, கிறிஸ்து பிறப்பு விழாவில் நம்மோடு உறவாடுகிறார்.

    நம் வாழ்வு சிறக்க, நாமும் பாலகனாக மாறுவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது பகிர்வின் அடையாளம். அன்பின், மகிழ்ச்சியின், நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு. இவையே இயேசுவின் கொடைகளாக நம் உள்ளங்களை நிறைக்கட்டும். இயேசு மண்ணில் பிறந்து, உலகிற்கு தந்த அமைதி நமது மனங்களில், குடும்பங்களில், உலக நாடுகளில் குடி கொள்ள வேண்டுமென ஜெபிப்போம்.

    பேராசை, பகைமை என்ற இருளை அகற்றி, அன்பெனும் பேரொளியை ஏற்றுவோம். நேர்மறையான எண்ணங்களுடன், நம்பிக்கையை விதை்து புத்தாண்டில் புதிய பயணத்தை தொடங்குவோம். உறவுகளை அன்பால் நனைத்திடுவோம். அன்பால் உலகை ஆள்வோம். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ×