search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அன்பை பிரதிபலிக்கும் விழா கிறிஸ்துமஸ் விழா
    X

    அன்பை பிரதிபலிக்கும் விழா கிறிஸ்துமஸ் விழா

    • சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா.
    • கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா.

    உலகம் முழுவதும் சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா, கிறிஸ்துமஸ் பெருவிழா. கிறிஸ்துமஸ் என்றால் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் என்றால், இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா. லூக்கா நற்செய்தி (2 :10–11)

    கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி பல விதமான யுகங்கள் இருந்தாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது சரித்திர சான்று, அதை யாராலும் மறைக்க இயலாது. `உரோமயர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூல், அகஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ந்தேதி, அதாவது அமாவாசையில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ந்தேதி கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது.

    கான்ஸ்டன்டைன் உரோமை அரசரான பிறகு கிறிஸ்துவம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் கிபி 336-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல வண்ணங்களோடு அலங்கரிக்கப்படும் இம்மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சம். கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் மூன்று பரிமாணங்களைக் குறிக்கிறது. முதன் முதலாக 1605-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஸ்டிராஸ் பர்க் என்னுமிடத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம்பெற்றது.

    கிறிஸ்து பிறப்பு விழாக்காலத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் விண்மீன் தொங்கவிடப்படுகிறது. இயேசு பிறந்திருந்த இடத்திற்கு விண்மீன் ஞானிகளுக்கு வழிகாட்டியாக அழைத்துச் சென்றதை நினைவு படுத்துகிறது. `யாக்கோபில் இருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலில் இருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" (எண்ணிக்கை 24:17) என்று வாசிக்கிறோம்.

    கிறிஸ்துவை நோக்கி ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் போல, நாமும் பிறரைக் கிறிஸ்துவை நோக்கி அழைத்துவரும் உயிருள்ள விண்மீன்களாய் மாற இது நம்மை அழைக்கிறது.

    புனித பிரான்சிஸ் அசிசி 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள கிரேச்சியா என்ற இடத்தில் திருதந்தை மூன்றாம் ஓனொரியனிடம் அனுமதி பெற்று, குழந்தை இயேசுவை மெழுகால் செய்து, உண்மையான மனிதர்களை அன்னை மரியாகவும் சூசையாகவும் நிறுத்தி இயேசுவின் பிறப்பு காட்சியை அமைத்தார். மேலும் அவர் 1293-ம் ஆண்டு கிரேச்சியா மலையில் ஜான் என்ற நண்பர் வழியாக முதல் குடிலை அமைத்தார்.

    விண்ணில் இருந்த கடவுளின் சின்ன சின்ன ஆசைகள் மண்ணிலே முத்தமிட்ட இனிய நாள்தான் கிறிஸ்துமஸ். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் நாள் இந்நாள். பனிவிழும் இரவிலும் ஆனந்தம், குதூகலம், புதிய ஆடைகளின் அணிவகுப்பு, பளிச்சிடும் ஆலயத்தோற்றம், பளபளக்கும் பட்டாடைகள், அற்புதமாய் ஜொலிக்கும் குடில் என்று இவற்றிக்கு தான் நாம் முக்கியத்துவம் தருகிறோம்.

    ஆனால் அவர் மாட மாளிகையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக மாட்டுக்குடிலைத் தேர்ந்தெடுத்தார். அவர் பிறந்த செய்தி அரசர்களுக்கோ செல்வந்தோருக்கோ முதலில் அறிவிக்கப்படவில்லை. ஏழ்மையின் சின்னமாமய் விளங்கும் இடையர்களுக்குதான் அறிவிக்கப்பட்டது. இறைவனின் பரம ரகசியம் எவ்வளவு எளிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா. பகிர்வை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழா. அன்பை இழந்த உள்ளங்களுக்கு இதயத்தை கொடுப்போம். பாசம் இழந்த இல்லங்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். பரிதவிக்கும் இதயங்களுக்கு பகிர்வாக இருப்போம்.

    வாழ்க்கையைத் தொடாத விழாக்களும், வாழ்வை மாற்றாதக் கொண்டாட்டங்களும் வெறும் சடங்காக மட்டுமே அமையும்.

    Next Story
    ×