search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதிய திட்டம்"

    • 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
    • விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்கத்தின் மாணிக்க (40 வது ஆண்டு) விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர்களுக்கு பாராட்டு விழா, 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். வட்டார மகளிர் அணி செயலாளர் சுசீலா உறுதிமொழி ஏற்புரை ஆற்றினார். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கோரிக்கைகள் ஏதாவது நிறைவேற்றி இருக்கிறதா? என்றால் இல்லை. உதாரணத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறினார். நான்கு சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லாமலே பார்த்து கொள்கிறார். இது மிகவும் மனவேதனையாக உள்ளது. அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையை மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பணிகளை செய்வதற்கு கூட முடியாமல் இணையதளத்திலிருந்து அனைத்து பதிவுகளையும் ஆசிரியர்களே பதிவு செய்ய வேண்டி உள்ளது. பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு நேரம் ஒதுக்காமல் இயந்திரமாக ஆக்கி வருகிறார்கள்.

    எனவே இணையதள பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை செய்ய வேண்டும். 6.25 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை சுயமாக அமல்படுத்துவோம் என அரசு உறுதி தர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி பேட்டி
    • உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.

    கன்னியாகுமரி :

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்தியாவின் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி உள்பட 4 இடங்களில் தொடங்கி உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.

    இந்த 4 குழுக்களையும் ஒருங்கிணைத்து டெல்லியில் அக்டோபர் 5-ந் தேதி மாபெரும் மாநாடு நடக்கிறது. அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு, 7-து ஊதியகுழு பரிந்துரையின்படி ஒரே ஊதிய முறையை அமுல் படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை வந்தால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது என முதல்வர் பேச்சு
    • நம் அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் "அயலகத் தமிழர் நாள்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது வெறும் அறிவிப்பல்ல என்பதைத்தான் இங்கே திரண்டிருக்கின்ற நீங்களும் உங்களோடு கலந்து நானும் சேர்ந்து இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

    அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்திட முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டோடு தமிழ் பரப்புரை கழகத்தைத் தொடங்கி வைத்தேன்.

    தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் உருவாக்கப்பட்டு கார்த்திகேய சிவசேனாபதி அதன் தலைவராகவும், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் அரசுசாரா உறுப்பினர்களாகவும், அரசு உயர் அலுவலர்களை உள்ளடக்கியதாகவும் இந்த வாரியம் செயல்பட உள்ளது. ஆம்.. சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது.

    அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்துறையில், கடந்த ஓராண்டில் மட்டும், வெளிநாடுகளில் இறந்து போன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல், அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல்,

    மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.

    அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    ஏற்கனவே நம் அரசு, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்குத் தேவையான 174 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பால்பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலைப் போக்கிட உதவிக்கரம் நீட்டியது.

    தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன்.

    முதலாவதாக, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

    2-வதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.

    3-வதாக அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டி னுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாக, உங்களுடைய ஒரு சகோதரனாக, உங்களில் பலருக்கு அண்ணனாக, சிலருக்கு தம்பியாக, ஏன், அனைவருக்கும் உடன்பிறப்பாக நான் இருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களால் ஆன ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள், இணைந்து நாம் பயணிப்போம். நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு தழைக்கும்.

    அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் 30.6.2012 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்துள்ளார்.

    தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார்.

    ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க அரசு மறுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

    மேலும், கண்ணனுக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அடிப்படையே இல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, ஒரு துப்புரவு தொழிலாளர் தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார்.

    தேவையில்லாமல் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தையும் அந்த துப்புரவு பணியாளரையும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

    இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  

    • மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் கரத் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
    • பஞ்சாப் அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி :

    நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் கரத் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கூறி உள்ளார்.

    மேலும் அவர் கூறி இருப்பதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடிந்தது. இந்தத் தொகை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தது.

    ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வரும் முடிவினைத் தெரிவித்துள்ளன. பஞ்சாப் அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ஆனால் ஓய்வூதியத் தொகை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ), சட்டப்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்.பி.எஸ்.) மாநில அரசுகளும், ஊழியர்களும் அளித்த பங்களிப்பை மாநில அரசுகளிடம் திரும்பத்தர சட்டப்படி இயலாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?
    • இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

    ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்குவங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

    இமாச்சல சட்டப் பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

    இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை

    அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பரமேஸ்வரன், தினகர்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஜுலை 1-ம் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், குறைபாடு இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65-70 வயது எட்டிய பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×