search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை இலை சின்னம்"

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.
    • பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம்  இன்றுமுறையீடு செய்யப்பட்டது.

    அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    • ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
    • எப்போது பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வை மீண்டும் தனித்தன்மையோடு கொண்டு வர முடியும் என்று உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஏன் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் ஒன்றிணையும்.

    என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

    ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதனை நான் எப்படி சொல்ல முடியும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.

    நான் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம். ஏனென்றால் திரும்பவும் மக்களை நாங்கள் சந்திக்கும் போது அவர்கள் எங்களிடம் பேச வேண்டுமே தவிர, ஏன் சொன்னதை செய்யவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன செய்ய போகிறோமோ அதனை மட்டும் தான் சொல்வோம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் சமயத்தில் பெரிய பெட்டி வைத்து பூட்டு போட்டு, அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக போடுங்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும்.

    ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டிகளை எல்லாம் திறந்து அந்த கோரிக்கை கடிதங்களை மாவட்டம் வாரியாக பிரித்து, அதில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக மீண்டும் பிரித்து மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னது ஊடகங்களிடம் இருக்கும்.

    அது போன்று சொல்லி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த சாவி இருந்திருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.

    ஊடகங்கள் முன்பு வைத்து தான் அந்த பெட்டிகளை பூட்டு போட்டு பூட்டினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.

    அதனால் எப்போது அந்த பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் சரியாக இருந்தால் நம்மை யார் என்ன செய்து விட முடியும். பா.ஜனதா மட்டுமல்ல, எல்லா கட்சியையும் சொல்கின்றேன் அடுத்த கட்சியை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது.

    அவரிடம் கொடு, இவரிடம் கொடு என்று மற்ற கட்சிகள் ஏமாற்றுவதற்கு நாம் என்ன ஒரு மாத குழந்தையா? நாம் சரியாக இருந்தால், சரியாக செயல்பட முடியும். என்னையெல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.

    நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விடமாட்டேன்.

    இவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்க்கும் போது அது தி.மு.க.வுக்கு தான் நல்லதாக இருக்கிறது. அதனால் ஒருவருக்கொருவர் திட்டுவதை விட்டு விட்டு ஒழுங்காக ஒருங்கிணைந்து தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கைகோர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
    • 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழுஅமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இ.பி.எஸ். அணியுடன் பேச தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் கூறியதற்கு அவர் மீண்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார்.
    • டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது.

    இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ,பன்னீர்செல்வம் அதிரடி காட்டி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் நாங்களே போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்திடும் உரிமை எனக்கே உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோம் என்கிற நல்ல செய்தியை தற்போது உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தற்போது நானே தொடர்கிறேன்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுக்கு உள்ளன. இந்த அங்கீகாரத்தை 1½ கோடி தொண்டர்கள் எனக்கு வழங்கி உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு உரிமையும் எங்களுக்கு உள்ளது.

    கே:- தேர்தலில் போட்டியிட ஏ, பி, பார்மில் நீங்களும் கையெழுத்து போட வேண்டும். அவரும் (ஈ.பி.எஸ்.) கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலை தானே உள்ளது?

    ப:- இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஏ மற்றும் பி பார்மில் நான் கையெழுத்திடுவேன். அவர் கையெழுத்திடுவாரா? மாட்டாரா? என்பது அவருடைய விருப்பம்.

    கே:- அவர்களும் போட்டியிட்டால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே?

    ப:- உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக இருந்துகொண்டு இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வராத சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நாங்கள் தான் கலந்துகொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே:-உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டு சுயேட்சையாக போட்டியிடக்கூடிய நிலை உருவானதே?

    ப:- உள்ளாட்சி தேர்தலின் போது தான் ஒருங்கிணைப்பாளராகவும், அவர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தோம். அந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகி ஏ, பி, பார்மில் கையெழுத்திடுவதற்காக என்னிடம் வந்து கேட்டார். நான் அதில் கையெழுத்து போட்டு கொடுத்து அவரிடம் அனுப்பினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதில் கையெழுத்திடவில்லை.

    அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் கழக தொண்டர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இப்படி இரட்டை இலை சின்னம் முடங்கி இருந்ததற்கு நான் காரணம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் (சுயேட்சையாக) போட்டியிடவும் தயாராக உள்ளோம்.

    கே:- இப்போது அது தானே நடக்க வாய்ப்பு உள்ளது?

    ப:- உங்களுக்கு நன்றாகவே தெரியும். 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமாக ஒருமுகமாகவே நடத்தப்பட்டது. அதில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டோம். இதனை அனைத்து மக்களும் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் நன்கு அறிவார்கள்.

    பொதுக்குழுவை கூட்டுவதற்கு எனது இசைவு தேவை. எனது இசைவு இல்லாமலேயே 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அது சட்டவிரோதமான பொதுக்குழு என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்காகத்தான் தர்மயுத்தத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்.

    கே:- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? தற்போது தனித்தனியாக அறிவிப்பு கொடுப்பதன் மூலமாக கட்சியில் மேலும் பிளவு போன்ற நிலைதானே தொடரும்?

    ப:- எங்களை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவும் 50 ஆண்டு காலம் தொண்டர்களின் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கி உள்ளார்கள்.

    இந்த இயக்கம் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்த இயக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் எப்போதும் நினைக்கிறோம் என்றைக்கும் இப்படித்தான் இருப்போம்.

    இந்த நிமிடம் வரையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை 1½ கோடி தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான்.

    கே:- அ.தி.மு.க.வில் நீடிக்கும் இப்பிரச்சினை இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்தாதா?

    ப:- ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. ஒன்றே முக்கால் வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலிலேயே உள்ளது. எனவே உறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- தற்போதைய சூழலில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான நிலை ஏற்பட்டுவிடாதா?

    ப:- இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர் செல்வம் காரணமாக இருக்க மாட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- 23-ந்தேதி கூட்டப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

    ப:- அந்த கூட்டம் திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும். அதிலும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நல்லதொரு முடிவை எடுப்போம்.

    கே:- நீங்களும் போட்டியிட போவதாக கூறுகிறீர்கள்? பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்கிறீர்கள்? உங்கள் முடிவே குழப்பமாக உள்ளதே?

    ப:-இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கியது யார்? "நாங்கள் அல்ல. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும்.

    இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார்களோ அதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா?

    ப:- நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    கே:- ஆனால் அவர்கள் உங்களை சேர்க்க தயாராக இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்களே?

    ப:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதுதான் இப்போதும் எனது பதிவாகும்.

    கே:- தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் அவர்களிடம் ஏதும் பேசினீர்களா? இல்லை, அவர்கள் ஏதேனும் பேசினார்களா?

    ப:- இதுவரை யாரும் பேசவில்லை.

    கே:- வேட்பாளரை எப்போது எப்படி முடிவு செய்வீர்கள்?

    ப:- அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து மாவட்ட செயலாளர்கள், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்போம்.

    கே:- இடைத்தேர்தலை காரணமாக வைத்து பிரிந்துள்ள அணிகளை ஒன்றிணைக்க சூழல் உள்ளதா?

    ப:- அதுபோன்ற சூழல் இருந்தால் நாங்கள் வரவேற்போம்.

    கே:- அதற்கான முன்னெடுப்பை நீங்கள் எடுப்பீர்களா?

    ப:- அனைவரும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக அது முடியும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    கே:- அவர்கள் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தரப்பில் அதுபோன்று வேட்பாளரை நிறுத்தினால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

    ப:- நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.

    கே:- உச்சநீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறீர்களா?

    ப:- நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

    கே:- சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?

    ப:- இதற்கு சட்டப் பேரவைத் தலைவர் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின் படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இல்லை என்று அவரே தெளிவுபடுத்திக்கொள்ள சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டுமே உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

    சட்டப்பேரவை தலைவரின் சுய உரிமை ஆகும்.

    கே:- தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை எந்த ரெக்கார்டு உள்ளது?

    ப:- தற்போது வரையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்கிற ரெக்கார்டு தான் உள்ளது.

    கே:- எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதே?

    ப:- தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார். டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். அதில் தான் வாதங்கள், பிரதிவாதங்கள் எல்லாம் முடிவடைந்து தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளோம்.

    கே:- நீங்கள் இப்படி தனித்தனியாக போட்டியிடுவது ஆளும் கட்சிக்குத் தானே சாதகமாக அமையும்?

    ப:- இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய இடம் இதுவல்ல. நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்களிடம் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும்.

    கே:- இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்கிற பார்முலா உள்ளதே?

    ப:- இந்த தேர்தலில் அந்த பார்முலாவை முறியடித்து காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வழக்கை விரைந்து முடிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கோரியுள்ளது. #OPS
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தற்போது நடந்து வருகிறது.

    இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை  விரைந்து முடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து, வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×