search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா தரிசனம்"

    • 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
    • பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. வருகிற 27-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந் தேதி (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவ சங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

    • பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி அண்ணாமலைகார்டன், திருமலை கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இடுவாய் அழகிய பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3மணிக்கு ஸ்ரீஅண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர்- சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வேதிகா பூஜை, மாங்கல்யதாரணம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் , காலை 9 மணிக்கு சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சன்ஸ்டார் , ஸ்ரீ எட்டுக்கையம்மன் குழுமம் மற்றும் சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    • பெரம்பலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது
    • சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜபெருமான்- சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. ஊர்வலம் மேளதாளத்துடன் சன்னதி தெரு, கடைவீதி, மேற்கு தெரு, வடக்குத் தெரு வழியாக சென்று மீண்டும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதே போல் பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா தொடங்கி 2 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன உற்சவமும், மகாதீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக ஆருத்ரா தரிசன காட்சி, சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாதிரை விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


    • பல்வேறு அபிஷேகங்களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
    • மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

    ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.

    ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

    இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    செய்யாறு :

    செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று காலை ஆருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் பெருமளவில் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தைக்கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி உடனாய தண்டல புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியொட்டி நடராஜர் உற்சவர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து சென்றனர்.

    • குடியாத்தம், அணைக்கட்டில் உள்ள கோவில்களில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.

    இதனையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவர் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகள் வீதிஉலா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், கே.எம்.ஜி கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, விழா குழுவைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, பி.ஈஸ்வரவேல், டி சங்கரலிங்கம், வி. பிச்சாண்டி, எம்.கே.கணபதி, ஆடிட்டர் கிருபானந்தம் உள்பட குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் சிவவிடை கைங்கரிய சங்கத்தின் சார்பில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கைலாசநாதர் கோவில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் கோவில், ஒடுகத்தூர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைப்பெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது. தொடர்ந்து சிவன் சன்னதியில் நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். முடிவில் பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • திருவாதவூரில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மையாருடன் மாணிக்கவாசகர் தரிசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை மாணிக்கவாசகர் சட்டத்தேரில் வீதி உலா வந்தார்.

    • நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர்.

    உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு நேற்றிரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இன்று காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். முன்னதாக சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையடுத்து மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது.
    • கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தானத்தில் சத்யகிரீஸ்வரர் அருள் பாலிகிறார். இதேபோல கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நிறைவு நாளான இன்று காலையில் மூலவர் நடராஜருக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படி ஆனது.

    தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூச்சப்பரத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கிய வீதிகள் கிரிவலப் பாதையை வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • இளையத்தங்குடியில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடந்தது.
    • விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழசேவல்பட்டி அருகே உள்ள இளையத்தகுடியில் கைலாசநாதர் நித்திய கல்யாணி சமேத கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா இன்று நடந்தது.

    முன்னதாக கைலாச நாதர் நாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கினர். இளையத் தங்குடியில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது.

    தேர் திருவிழாவை காண இளையதங்குடி மற்றும் அதனை சுற்றிஉள்ள 28 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு தேரை வலம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையாத் தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    கடந்த எட்டாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×