search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student suicide"

    • நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுகந்தகுமார்(42). இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நிகிலேஷ்(17) , பாலையா(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் கதவை திறந்து பார்த்தபோது தனது மகன் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார்.
    • கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 22).

    இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4-வது ஆண்டு பயின்று வந்தார். மேலும் அதே மருத்துவமனையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் மகேஸ்வரி நேற்று இரவு 7 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என கூறி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அங்கு வந்த மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவனின் தற்கொலை குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன், பனியன் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் தந்தை ஜெயராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென பலியானார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது மணிகண்டன், வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா உயிரோடு இருக்கும் போது அவரது அருமை எனக்கு தெரியவில்லை. அவரின் சொல் பேச்சு கேட்காமல் எனது இஷ்டம் போல் இருந்தேன்.

    எனவே நான் எனது தந்தையிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்க செல்கிறேன். எனது நண்பர்கள் உள்ளிட்ட யாரிடமும் விசாரிக்க வேண்டாம். தந்தை சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மகன் நகுல் (14). இவர் வெள்ளாளங்கோயில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நகுலை சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என ரமேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நகுல் வீட்டில் தோட்டத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரமேஷ் திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. தம்பதிக்கு 2 மகன்கள் இவர்களது மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14).

    இவர் ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகன்கள் இருவரும் ஐதராபாத்தில் படித்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள மை ஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர படிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 8-30 மணி அளவில் ராயந்த் ரெட்டி தனது தாயாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். அதில் படிப்பில் இஷ்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது.

    இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினர். தகனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து ராயதுர்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். நேற்று காலை அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
    • மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இதில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

    இதற்கிடையே மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் தொடர்ந்து தலைமுடியை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளியில் நடைபெறும் தேர்வுக்கு சென்றார்.

    பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமுடியை ஏன் வெட்டவில்லை. தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்குள் வா என்று கூறி வருகை பதிவேட்டில் மாணவன் பள்ளிக்கு வந்துள்ளான் என்று குறித்து விட்டு மாதேஸ்வரனை காலை 11 மணிக்கு பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    மேலும் மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாலை வரை மாணவன் மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவர் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் காலை 11 மணிக்கு முடியையும் தாடியையும் எடுத்துவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்கு பள்ளிக்கு வா என்று கூறி அவரை அனுப்பி விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர் பின்னர் இரவில் மாதேஸ்வரன் தான் படிக்கும் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

    இதனைப் பார்த்த மாதேஸ்வரனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது உடலை மரத்திலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு மாணவனின் உடலை கட்டி அணைத்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ் நகர் காவல்துறையினர் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அப்போது உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் தான் காரணம். தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

    மேலும் மாணவனின் பெற்றோருக்கு எந்தவித தகவலையும் ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை, இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளான் என்றும் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை அங்கிருந்து எடுக்கவிடமாட்டோம் என்று கூறியதோடு மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை தூக்கி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

    அப்போது தடுத்து நிறுத்திய நகரத் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் மாணவன் மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரேத பரிசோதனை செய்து முடிவு வந்ததற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மாணவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அரசு அமரர் ஊர்தி மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.

    மேலும் நள்ளிரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை காவல்துறையினரை எடுக்க விடாமல் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

    • கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் யு.கே.வி. நகரை சேர்ந்தவர் சிம்காசலம். இவரது மகள் மிசெல்லா மவுனிகா (வயது 22). பெற்றோரை இழந்த இவர் தனது மாமா கோட்டா தருமூர்த்திலு வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    மிசெல்லா மவுனிகா குருசாம்பேட்டையை சேர்ந்த சின்னா என்பவரை காதலித்து வந்தார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மவுனிகா வேதனையில் இருந்து வந்தார். காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெதின் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ரெதினுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு ஒடையன் விளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ்குமார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரெதின் ரெதீஷ் ஜெயந்திரோஜர் (வயது 22).

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு சென்று உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரெதின் வீட்டிலிருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தேடினார்கள்.

    இந்த நிலையில் குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் பகுதியில் ரெதின் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த ரெதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த செவல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சோமுதுரை. விவசாயி. இவருக்கு திவ்யா(வயது 17) என்ற மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

    திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சில மாதங்களாக அங்கு தினமும் சென்று அவர் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் திவ்யாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவன் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • மாணவன் தற்கொலை குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீரபாப்பம் பாடி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் கோகுல்காந்தி (14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோகுல் காந்தி தனது தாய் வனிதா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.

    மாணவர் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று கோகுல்காந்தியின் தாய் வனிதாவுக்கு பிறந்த நாள் ஆகும்.

    இதையடுத்து கோகுல்காந்தி தனது தாய்க்கு சேலை வாங்கி கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் கோகுல் காந்தி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது தனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதை நினைத்து மாணவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    அப்போது கழுத்தில் இருந்த துண்டு அறுந்து விழுந்தார். அப்போது சத்தம் கேட்டு அவரது தாய் வனிதா சென்று பார்த்தார். அப்போது தூக்கில் இருந்து கோகுல்காந்தி கீழே விழுந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனிதா தனது மகன் கோகுல்காந்தியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கோகுல்காந்தி இறந்து விட்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.
    • நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர தாய் மறுத்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஜெகத்யாளா மண்டலம், திப்பண்ணா பேட்டையை சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜலா. மகன் சாய் சரண் (வயது 12). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நரேஷ் துபாயில் வேலைக்கு சென்றார்.

    சாய் சரண் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தனது தாயின் செல்போனை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் கேம் விளையாடி வந்தார்.

    நேற்று சுதந்திர தின விழாவுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.

    நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர மறுத்தார்.

    இதனால் விரக்தி அடைந்த சாய்சரண் வீட்டில் இருந்த தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது தாய் கதறி அழுதார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய் சரண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×