search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமுடி, தாடி வளர்த்ததை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை
    X

    தலைமுடி, தாடி வளர்த்ததை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை

    • தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
    • மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இதில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

    இதற்கிடையே மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் தொடர்ந்து தலைமுடியை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளியில் நடைபெறும் தேர்வுக்கு சென்றார்.

    பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமுடியை ஏன் வெட்டவில்லை. தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்குள் வா என்று கூறி வருகை பதிவேட்டில் மாணவன் பள்ளிக்கு வந்துள்ளான் என்று குறித்து விட்டு மாதேஸ்வரனை காலை 11 மணிக்கு பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    மேலும் மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாலை வரை மாணவன் மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவர் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் காலை 11 மணிக்கு முடியையும் தாடியையும் எடுத்துவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்கு பள்ளிக்கு வா என்று கூறி அவரை அனுப்பி விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர் பின்னர் இரவில் மாதேஸ்வரன் தான் படிக்கும் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

    இதனைப் பார்த்த மாதேஸ்வரனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது உடலை மரத்திலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு மாணவனின் உடலை கட்டி அணைத்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ் நகர் காவல்துறையினர் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அப்போது உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் தான் காரணம். தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

    மேலும் மாணவனின் பெற்றோருக்கு எந்தவித தகவலையும் ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை, இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளான் என்றும் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை அங்கிருந்து எடுக்கவிடமாட்டோம் என்று கூறியதோடு மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை தூக்கி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

    அப்போது தடுத்து நிறுத்திய நகரத் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் மாணவன் மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரேத பரிசோதனை செய்து முடிவு வந்ததற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மாணவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அரசு அமரர் ஊர்தி மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.

    மேலும் நள்ளிரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை காவல்துறையினரை எடுக்க விடாமல் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×