search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual story"

    • ‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம்.
    • ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது.

    பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.

    கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் "நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

    அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி "பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?" என்றார்.

    "இறைவா. அது என்னுடைய வீடு" என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது.

    கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, "சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    இப்போது கிருபர் பதில் கூறினார். "மாதவா.. அது என்னுடைய வீடு"

    கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, "மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், "அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்" என்றார்.

    அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், "நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், "பரம்பொருளே, அது என்னுடைய வீடு" என்று பதிலளித்தான்.

    கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. "சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    "அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு" என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.

    "என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்" என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.

    'நான்', 'என்னுடையது' என்பதெல்லாம் அகந்தையின் உருவம். 'எல்லாமே இறைவனுடையது' என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

    • சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்.
    • மதுவால் வாழ்வை தடம் புரளும் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

    அந்த நாட்டிற்கு, சக்தி வாய்ந்த குரு ஒருவர் வருகை தந்திருந்தார். வனப் பகுதியோரம் குடில் அமைத்து தங்கியிருந்த அவரை, பலரும் சந்தித்து தங்களின் துயரங்களைச் சொல்லி, தீர்வு கண்டு வந்தனர். குருவைப் பற்றி கேள்விபட்ட, அந்த நாட்டு மன்னனும், தன்னுடைய குடும்ப சகிதமாக, அவரைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

    மன்னனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையை அளித்த குரு, அவர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலையும் வழங்கினார். அதில் மன்னனுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டது. குருவை நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக தன்னுடன் அரண்மனையில் வந்து சில நாட்கள் தங்கியிருந்து, தன்னுடைய ஆட்சிக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று, குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குருவும் சம்மதம் தெரிவித்து, மன்னனுடன் அரண்மனைக்கு புறப்பட்டார்.

    அது 5 குதிரைகள் பூட்டப்பட்ட, மேற்கூரை வேயப்பட்ட பிரமாண்டமான தேர். அந்த தேருடன், மற்றொரு தேரும் இணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக இருந்த இணைப்புத் தேரில் மன்னர் குடும்பத்து பெண்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தனர். முதல் தேரில், மன்னர், அவரது பிரதான உதவியாளர், முதன்மை அமைச்சர்கள் இருவர், படைத் தளபதி மற்றும் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருடன் குருவும் இருந்தார்.

    பயண தூரம் 5 மணி நேரத்தை தாண்டும் என்பதால், அனைவரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டே வந்தனர். அப்போது மன்னரின் ஆணைப்படி, அவரது உதவியாளர் அனைவருக்கும் சோமபானம் ஊற்றிக் கொடுத்தார். அனைவரும் அதைப் பெற்றுக்கொண்டனர். இறுதியாக குருவிற்கும், சோமபானத்தை ஊற்றிக் கொடுத்தார், அந்த உதவியாளர். ஆனால் அதை ஏற்க குரு மறுத்துவிட்டார்.

    இதனைக் கண்ட அரண்மனை முக்கியஸ்தர்கள் அனைவரும், "குருவே.. இது எங்கள் அரச குடும்பத்து மரபு. எங்களின் விருந்தாளிக்கு, உயர்ந்த வகையான சோமபானத்தை அளிப்போம். அப்படித்தான் இதை உங்களுக்கு வழங்குகிறோம். மறுக்காதீர்கள்" என்றனர்.

    ஆனால் குரு, "நான் ஒரு சிந்தனையாளன். நான் மது பருகுவது இல்லை" என்றார்.

    இப்போது மன்னர், "குருவே.. எனக்காக ஒரு துளியாவது பருகுங்கள். அப்படி நீங்கள் பருகிவிட்டால், உங்களாலேயே அதை விட முடியாது" என்று கூறினார்.

    ஆனால் குருவோ, "நீங்கள் என்னை மிகவும் வற்புறுத்துகிறீர்கள். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இருந்தாலும் என்னுடைய சார்பில் இந்த சோமபானத்தை, குதிரைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து தேரை செலுத்திக் கொண்டிருக்கும் தேரோட்டியிடம் கொடுத்துவிடுங்கள்" என்றார்.

    அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். "ஐய்யய்யோ.. தேரை ஓட்டும் பணியில் இருக்கும் பணியாளரிடம், இந்த உயர்ந்த வகை சோமபானத்தை கொடுத்தால், அதைக்குடிக்கும் அவனது புத்தி தடுமாறி, குதிரையின் வேகத்தை அதிகரிக்கிறேன் என்று தேரை தறிகெட்டு ஓட்டிவிட்டால், நம் அனைவருடைய உயிருக்கும் அது ஆபத்தாக அமைந்துவிடும். அதனால் தேரோட்டிக்கு சோமபானத்தை அளிப்பது சாத்தியமில்லை" என்று பதறிப் போய் சொன்னார், மன்னர்.

    இப்போது முகத்தில் மெல்லிய புன்னகையை தவழ விட்ட குரு, "சரியாக சொன்னீர்கள் மன்னா.. நம்முடைய வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்" என்றார்.

    குருவின் உபதேசத்தில் இருந்த உண்மையை உணர்ந்த மன்னன், 'இனிமேல் சோமபானம் அருந்துவதில்லை' என்று முடிவெடுத்தான்.

    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அவல நிலையை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    கயிலாயம் சிவபெருமானின் இருப்பிடம். பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், ரிஷிகள் அனைவரும் இங்கு வந்துதான் ஈசனை வழிபடுவார்கள். அவர்கள் அப்படி ஈசனை வழிபடும்போது, சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு, ‘நம்மைதான் அனைவரும் வழிபடுகிறார்கள்’ என்று நினைத்து அகந்தை கொண்டதாம்.

    ஒருநாள் மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனின் மீது ஏறி, சிவபெருமானை தரிசிக்க வந்திருந்தார். கருடனைப் பார்த்த பாம்பு, “என்ன கருடா.. சவுக்கியமாக இருக்கிறாயா?” என்று அகந்தையோடு கேட்டது.

    கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் தற்போது பாம்பு இருக்கும் இடம், சிவபெருமானின் கழுத்து ஆயிற்றே. கருடனால் என்ன செய்ய முடியும்.. கருடன் அமைதியாக பதில் கூறியது, “அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால், எல்லோரும் சவுக்கியம்தான்.”

    பாம்பின் அகந்தையை சிவபெருமான் அறிந்தார். இறைவன் இருக்கும் இடத்தில் அகந்தைக்கு இடம் கிடையாது. அப்படியிருக்க அகந்தை கொண்ட பாம்பு மட்டும் இறைவனுடன் இருக்க முடியுமா என்ன?

    சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் இருந்த பாம்பை எடுத்து, வேகமாக சுழற்றி தொலைவில் வீசி எறிந்தார். விழுந்த வேகத்தில் அதன் உடலில் பெருத்த காயங்கள் உண்டானது. அதன் தலை ஆயிரம் சுக்கலாக நொறுங்கியது. ஆனாலும் இதுவரை ஈசனின் கழுத்தில் இருந்த காரணத்தால் அது இறக்கவில்லை. துன்பத்தில் உழன்று கொண்டிருந்தது.

    ‘நான் என்ன தவறு செய்தேன்’ என்று நினைக்கும்போதுதான், பாம்புக்கு தான் கொண்ட அகந்தை நினைவுக்கு வந்தது. அதனால் மிகவும் வருந்தியது.

    ஒருநாள் அந்த வழியாக வந்த நாரத முனிவர், அந்தப் பாம்பை கவனித்து விட்டார். “என்னாயிற்று உனக்கு.. சிவனின் கழுத்தில் இருக்க வேண்டிய நீ.. எதற்காக இப்படி காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாய்? உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.

    பாம்பு தனக்கு ஏற்பட்ட கதியை, நாரதரிடம் கூறி வருந்தியது. “எனது பிழையை நான் உணர்ந்துவிட்டேன். இழந்த சிறப்பை நான் மீண்டும் பெற்று, சிவபெருமானை அடைய தாங்கள்தான் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும்” என்று நாதரரைப் பணிந்து பிரார்த்தித்தது.

    தன்னை சரணடைந்த பாம்பின் மீது, நாரதருக்கு இரக்கம் உண்டானது. அவர் “நான் உனக்கு விநாயகர் மந்திரம் உபதேசிக்கிறேன். அதைச் சிரத்தையுடன் சொல்லிக்கொண்டே இரு. விநாயகரின் திருவருளால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    நாரதர் உபதேசித்த விநாயகர் மந்திரத்தை, அந்த பாம்பு சிரத்தையுடன் சொல்லி வந்தது. அந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்து போன விநாயகர் அங்கு தோன்றினார். விநாயகரிடம் தன்னுடைய நிலையை எடுத்துரைத்த பாம்பு, மீண்டும் தான் சிவபெருமானை அடைய அருளும்படி கேட்டுக்கொண்டது.

    அதற்கு விநாயகர், “எனது அருளால் உனக்கு பழைய உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மீண்டும் சிவபெருமானின் கழுத்தில் நீ ஆபரணமாக இருக்கும் உயர்ந்த நிலையை அடை வாய். ஆயிரம் சுக்கல்களாக சிதறிய உன் தலை, ஆயிரம் தலைகளாக மாறி, விஷ்ணுவின் பாம்பணையாக இருக்கும் பாக்கியமும் உனக்கு கிடைக்கும். அதோடு எனது இடுப்பிலும் நாகாபரணமாக இருக்கும் பேறும் உனக்கு அருளினோம்” என்று கூறி மறைந்தார்.

    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அந்த பாம்பு போன்றே, அவல நிலையை சந்திக்க நேரிடும். பதவியில் இருக்கும் ஒருவர் நேர்மையுடன் நடந்தால், அந்த நேர்மையே அவரைக் காக்கும். பதவியும், பணமும் வரும் போது அதோடு அகந்தையும் வந்துவிடுகிறது. அந்த அகந்தை உங்களை தொடராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அழிவே மிஞ்சும்.
    மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும்.
    இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும். இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக பல விஷயங்கள் அதில் இருப்பதை படிப்பவர்கள் உணரலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச காலம் முடிவடைந்து, ஓராண்டு காலம் அஞ்சாத வாசம் செய்ய வேண்டியதிருந்தது. அடர்ந்த வனத்தில் வசித்த அவர்களுக்கு ஒரு முறை தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அதனால் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் கொண்டு வரும்படி தருமர், நகுலனை அனுப்பினார்.

    அண்ணனது வார்த்தையை சிரமேற்கொண்டு சென்ற நகுலன், சற்று தொலைவில் தண்ணீர் நிறைந்த குளம் இருப்பதை பார்க்கிறான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு, சகோதரர்களுக்கு நீர் எடுக்கலாம் என்று குளத்தில் இறங்கச் சென்றான்.

    அப்போது, “எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் தண்ணீரை அருந்து..” என்று ஒரு அசரீரி கேட்டது. அதை பெரிதாக எண்ணாமல் தண்ணீரை அருந்திய நகுலன் நினைவு இழந்து கரையில் விழுகிறான்.

    வெகு நேரமாகியும் நகுலன் வராததால் சகாதேவனை தருமர் அனுப்புகிறார். அவனுக்கும் அதே நிலை ஏற்படுகிறது. பின்னர், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் குளத்திற்கு வந்து நீர் பருக முயன்று மயக்கம் அடைகின்றனர்.

    என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழப்பமடைந்த தருமர், தானே குளத்தை நோக்கி வந்தார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. அதை கவனமாக கேட்டு, அதன் கேள்விகளுக்கு தருமர் பதிலளித்தார். அந்த அசரீரியை கவனமாக கேட்டு, யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலின் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

    யட்சன்: மனிதனுக்கு சரியான துணை எது?

    தருமர்: துணிச்சல்.

    யட்சன்: ஒருவன் எப்போது புத்திமான் ஆகிறான்?

    தருமர்: பெரியோர்கள் அறிவுரைப்படி செயல்படும்போது.

    யட்சன்: பயிர் செய்பவருக்கு எது சிறந்தது?

    பதில்: மழைதான் சிறந்தது.

    யட்சன்: செல்வம், அறிவு இருந்தும் ஒருவன் இறந்தவன் ஆவது எப்போது?

    தருமர்: விருந்தினர், முன்னோர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதபோது.

    யட்சன்: பூமியை விட தாங்கும் சக்தி பெற்றது எது?

    தருமர்: ஒரு தாயின் மனம்.

    யட்சன்: ஒருவனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

    தருமர்: அவனது தந்தை.

    யட்சன்: காற்றை விட வேகமானது எது?

    தருமர்: மனிதனின் மனம்.

    யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கவனிக்கத்தக்கது எது?

    தருமர்: கவலை.

    யட்சன்: தனது வேகம் காரணமாக வளரு வது எது?

    தருமர்: நதி.

    யட்சன்: தனது ஊரை விட்டு செல்ப வனுக்கு நண்பன் யார்?

    தருமர்: அவன் பெற்ற கல்வி.

    யட்சன்: திருமணம் ஆனவனுக்கு நல்ல தோழமை தருவது யார்?

    தருமர்: அவன் மனைவி

    யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

    தருமர்: நல்ல வைத்தியன்.

    யட்சன்: சாகப்போகிற நிலையில் உள்ளவ னுக்கு உற்ற தோழன் யார்?

    தருமர்: அவன் செய்த தர்மங்கள்.

    யட்சன்: புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

    தருமர்: ஒருவன் செய்யும் தானம் மூலமாக.

    யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலை பெறுகிறது?

    பதில்: நல்லொழுக்கத்தின் மூலம்.

    யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங் களில் உயர்ந்தது எது?

    தருமர்: மன திருப்தி.

    யட்சன்: சிறந்த தருமம் எது?

    தருமர்: ஜீவ காருண்யம்.

    யட்சன்: மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறவன் யார்?

    தருமர்: கர்வம் இல்லாதவன்.

    யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

    தருமர்: கோபத்தை.

    யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

    தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுபவன்.

    யட்சன்: செல்வம் மிகுந்தவன் யார்?

    தருமர்: அமைதி மற்றும் தெளிவுடன் பொருள்களை சமமாக நோக்குப வன்.

    யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகை வன் யார்?

    தருமர்: கோபம்

    யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

    தருமர்: பேராசை.

    யட்சன்: யார் சாது?

    தருமர்: எல்லா உயிர்களிடத்திலும் அன்போடு இருப்பவன்.

    யட்சன்: எது தைரியம்?

    தருமர்: ஐம்புலன்களை அடக்குவது.

    யட்சன்: எந்த மனிதன் பண்டிதன் ஆகிறான்?

    தருமர்: தர்மத்தை கடைப்பிடிப்பவன்.

    யட்சன்: அறம், பொருள், இன்பம் ஆகி யவை ஒன்றாக சேருவது எப்படி?

    தருமர்: கணவனும், மனைவியும் இணைந்து செயல்படும்போது.

    யட்சன்: யார் அழிவற்ற நரகத்தை அடை வார்?

    தருமர்: தானம் கொடுப்பதாக கூறிவிட்டு இல்லை என்று சொல்பவன், தர்ம வழி செயல்கள், முன்னோர் சடங்குகளில் பொய் கூறுபவன், செல்வம் இருந்தும் பிறருக்கு தராத வன்.

    யட்சன்: இனிமையாக பேசுகிறவன் எதை பெறுகிறான்?

    தருமர்: மற்றவர்களின் அன்பை.

    யட்சன்: ஆலோசனை செய்து காரியம் செய்பவன் எதை அடைகிறான்?

    தருமர்: வெற்றி.

    யட்சன்: தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி எது?

    தருமர்: உயிரினங்கள் மரணமடைவது.

    யட்சன்: எது ஆச்சரியம்?

    தருமர்: இறந்தவர்களை பார்த்தும்கூட, மனி தர்கள் தங்களுக்கு மரணமில்லா தது போல் நினைத்து வாழ்நாளை கழிப்பது.

    தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் தருமர் பதலளித்ததைக் கேட்டு, யட்சன் மகிழ்ந்தான். இதையடுத்து மயங்கி கிடந்த தருமரின் தம்பிகள் அனைவரும் எழுந்து அண்ணனுடன் சென்றனர்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியும் வரை யட்சனாக இருக்கும்படி சாபம் பெற்றிருந்த யட்சன், தேவனாக மாறி தனது உலகத்திற்குச் சென்றான்.
    தூய பக்தியின் முன் தவவலிமை ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    முன்னொரு காலத்தில் சூரியவம்சத்தை சேர்ந்த அம்பரீஷர் எனும் சக்கரவர்த்தி, தனது நாட்டை சத்தியம் தவறாது ஆண்டு வந்தார். மக்களின் உயர்வுக்காக அரும்பாடுபட்டார். அதோடு தான் அரசராக இருந்தாலும், இவை யாவும் மாயை என்பதையும் உணர்ந்து, ஆத்ம சுகம் தரும் தெய்வங்களின் ஆராதனையிலும், தியானத்திலும் மட்டுமே மனதை செலுத்தி வந்தார். அதிலும் அவரின் மனதில் மகாவிஷ்ணு மட்டுமே ஆட்சி செலுத்தி வந்ததால், பெருமாளின் பக்தனாக திகழ்ந்தார்.

    பெருமாளுக்கு உண்டான விரதங்களையும் நியமப்படி கடைப்பிடித்து வந்தார். இந்த அரசர் ஒவ்வொரு துவாதசி விரதத்தின் போதும், பெருமாளை பூஜித்து தன்னை நாடி வரும் அதிதிகள் எனப்படும் இறை அடியார்களுக்கு, அன்னம் அளித்து அவர்களின் பசியைப் போக்கிய பின்பே உணவு உண்டு விரதம் முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அப்படி ஒரு துவாதசியன்று வழிபாடு மற்றும் தானங்களை முடித்து, அவர் உணவு உண்ணப்போகும் சமயம் முனிவர்களில் அதிக தவவலிமை கொண்டவரும், கோபத்திற்கும் சாபத்திற்கும் பெயர் பெற்றவருமான துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவர் வருகை தந்த செய்தியை அறிந்ததும், அம்பரீஷர் தன் பசி மறந்து உண்பதை விடுத்து முனிவரை வரவேற்றார். அவரையும் தன்னுடன் உணவருந்த வரும்படி அன்புடன் அழைத்தார்.

    அரசர் உணவுக்கு அழைத்ததும் ‘கொஞ்சம் பொறு மன்னா. நான் சென்று யமுனை நதியில் நீராடிவிட்டுத் தூய்மையுடன் வந்து உன் உணவை ஏற்கிறேன்’ எனக் கூறிச்சென்றவர், வெகுநேரம் கழிந்தும் வரவில்லை.

    மன்னருக்கோ விரத நேரம் முடியும் தருணம் வந்துவிட்டது. அந்த நேரம் தாண்டி விட்டால், இத்தனை நாள் இருந்த விரதம் பலனளிக்காமல் போய்விடுமே என்ற கவலையில் ஆழ்ந்தார். அதே நேரம் அடியார்களுக்கு முன்பாக தான் உண்டால், அந்த பாவமும் வந்து சேருமே என்று வருந்தினார்.

    அப்போது அவையில் இருந்து ஆன்றோர்கள், அம்பரீஷரிடம் ‘மன்னா! இறைவனுக்கு செய்த அபிஷேக நீரை எடுத்து அருந்தினால், துவாதசியில் விரதம் இருந்து பாராணை செய்த பலன் கிடைத்துவிடும். அதே நேரம் அடியவருக்கு முன் உணவருந்திய பாவமும் வராது. இவ்வாறு செய்வதே நலம்’ என்று தர்மத்தின் நியதியை அவருக்கு எடுத்துரைத்தனர். அரசனும் அவர்கள் கூறியபடியே உரிய காலத்தில் தீர்த்தம் அருந்தி விரதத்தை முடித்தார்.

    துர்வாசர் யமுனையில் நீராடி விட்டு வந்ததும், அவருக்கு மன்னன் தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தது தெரிந்து விட்டது. அவர் மன்னனின் மேல் கடுங்கோபம் கொண்டு, தன்னுடைய சடைமுடியில் இருந்து சில ரோமங்களை எடுத்து அவற்றை பெரிய பூதமாக்கி, அரசனின் உயிரை எடுக்க உத்தரவிட்டார்.

    அம்பரீஷரோ சிறிதும் பயப்படவில்லை. பெருமாளின் பக்தனான தான் செய்தது சரியே என்று பெருமாளின் நினைவுடன், தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றார். தான் வழிபடும் திருமாலிடமே தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, விஷ்ணுவின் நினைவிலேயே ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

    ஆபத்தில் இருக்கும் தன்னுடைய பக்தனைக் காக்க சித்தம் கொண்டார் மகாவிஷ்ணு. அடுத்த நொடி அவரது கையில் இருந்த சுதர்சன சக்கரம் பாய்ந்து சென்று, அம்பரீஷரை நெருங்கிய பூதத்தை கொன்றது. பின்னர் அந்த பூதத்தை ஏவிய துர்வாச முனிவரிடம் சென்றது சுதர்சன சக்கரம். இதை சற்றும் எதிர்பாராத துர்வாச முனிவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் சுதர்சன சக்கரம் அவரை விடுவதாக இல்லை.

    தேவலோகம் சென்ற துர்வாச முனிவர், தன்னைக் காக்கும்படி தேவலோக தலைவரான இந்திரனிடம் வேண்டினார். அவரோ, ‘விஷ்ணுவின் சக்கரத்தை எதிர்க்க எவராலும் முடியாது. உங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால், விஷ்ணுவிடமே தாங்கள் சென்று சரண் அடையுங்கள்’ என்று விலகி விட்டார்.

    துர்வாசருக்கு வேறு வழியில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பெருமாளிடம் சென்று சரணடைந்தார்.

    பகவானோ ‘நான் என் அடியார்களுக்கு மட்டுமே அடங்கியவன். பக்த சிரோமணியான அம்பரீஷனைக் காக்க இச்சக்கரம் புறப்பட்டது. இதை என்னால் தடுக்க முடியாது. அம்பரீஷன் மனது வைத்தால் மட்டுமே உம்மைக் காப்பாற்ற இயலும். அவனைச் சரணடையும்’ என்றார்.

    துர்வாச முனிவருக்கு வேறு மார்க்கம் இல்லை. ஒரு சிறந்த பக்தனிடம் தான் தோல்வியுற்றதை அவர் மனம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    இப்போது துர்வாச முனிவர், அம்பரீஷரின் அரண்மனை நோக்கி புறப்பட்டார். சுதர்சன சக்கரம் அவரை துரத்துவதை நிறுத்தவே இல்லை. துர்வாச முனிவர், அம்பரீஷரை சரணடைந்தார். அவர் முனிவருக்கு பெருந்தன்மையுடன் அபயம் அளித்ததுடன், சுதர்சன சக்கரத்திற்கு வழிபாடுகள் செய்து, அதைச் சாந்தப்படுத்தினார். மேலும் துர்வாச முனிவரை மன்னித்து அருளும்படியும் வேண்டினார்.

    சுதர்சன சக்கரமும், பக்தனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து மீண்டும் திருமாலின் கரத்தில் போய் புகுந்து கொண்டது.

    துர்வாசரும் அரசரிடம் மன்னிப்பு கோரி தன் உயிரைக் காப்பற்றியதற்கு நன்றி தெரிவித்தார். நிலையறியாத தன் கடுங்கோபம் ஏற்படுத்திய ஆபத்தில் இருந்து தப்பிய துர்வாசர், தூய பக்தியின் முன் தன் தவவலிமை ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்தார். 
    ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும்.
    கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்பவர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையைக் கேட்க கிளம்பிவிடுவார்.

    தனது நூறாண்டு கால வாழ்க்கையில், ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு, தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது முக்கியப் பணிகளாக இருந்தன. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும், ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.

    அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை. ஒரு முறை வெகு தொலைவில் இருந்து இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணியதாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.

    அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.

    அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையைக் கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார்.

    ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு அருகில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.

    அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணியதாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர். கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. ‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று இருவரும் புலம்பத் தொடங்கி விட்டனர்.

    பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.

    அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள், புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்றது அந்தக் குரல்.

    தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.

    அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர். கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது. ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான். ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். 
    எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    சிவ பக்தனான அந்த குடியானவனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. தன்னுடைய வேலையை முடிக்கும் குடியானவன், அதன் பிறகு தினமும் கோவிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் திருவாசகத்தின் சொற்பொழிவைக் கேட்பான். அதன்பிறகே வீட்டிற்குத் திரும்புவான். இதனால் அவன் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வருவதற்கு இரவு வெகுநேரமாகிவிடும்.

    ஆரம்பத்தில் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த மனைவி, பின்னர் செல்லச் செல்ல நயமாகச் சொல்லிப் பார்த்தாள். ‘என்னங்க.. வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுங்கள்’ என்பாள். ஆனாலும் அந்த குடியானவன், திருவாசக சொற்பொழிவைக் கேட்டு விட்டுத்தான் வீடு திரும்புவான். அவனுக்கு திருவாசகத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு.

    பொறுமையாக இருந்து வெறுப்பாகிப் போன அவனது மனைவி, ஒருநாள் வீட்டிற்குள் நுழைந்த கணவனை தடுத்து நிறுத்தி, ‘அப்படி என்னதான் அந்த திருவாசகத்துல கொட்டிக் கிடக்கு?. ஒரு நாளாவது நேரத்தோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? சரி.. தினமும் அங்கப் போய் திருவாசகம் கேட்டு விட்டு வருகிறேன் என்கிறீர்களே? அதில் உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க?’ என்று ஒரு பிடிபிடித்து உலுக்கினாள்.

    அதற்கு அந்தக் குடியானவன், ‘எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் போய் கேட்டு விட்டு வருவது நன்றாக இருக்கு’ என்றான்.

    அவனது பதிலைக் கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த குடியானவன் மனைவி, ‘முதல்ல வீட்டில் இருக்கும் சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க’ என்றாள்.

    குடியானவனும் மனைவி எதற்காகவோ சொல்கிறாள் என்று நினைத்து சல்லடையில் தண்ணீர் எடுத்து வந்தான். அதைக் கொண்டு வரும்போது வீடு முழுவதும் சிந்தியது. மனைவியிடம் வந்தபோது சல்லடையில் தண்ணீர் இல்லாமல் போயிருந்தது.

    அதைப் பார்த்த மனைவி, ‘தினமும் வீட்டிற்கு தாமதமாக வருகிறீர்கள். ஏனென்று கேட்டால், திருவாசகம் கேட்கப் போனேன் என்கிறீர்கள். என்ன சொன்னாங்கன்னு கேட்டாலும், ஒன்றும் தெரியலைன்னு சொல்றீங்க. நீங்க திருவாசகம் கேட்கிற லட்சணம், இதோ இந்த சல்லடையில் ஊத்திக் கொண்டு வந்த தண்ணீர் மாதிரிதான். எதுக்கும் பயன்படாமல் வீணாகத்தான் போகிறது’ என்றாள்.

    அதைக் கேட்டு அமைதியாக இருந்த அந்த குடியானவன், மனைவியைப் பார்த்துச் சொன்னான். ‘நீ சொல்வது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேண்டுமானால் நிரப்ப முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மிகவும் அழுக்காக இருந்த சல்லடை இப்போது எப்படி நல்லா சுத்தமாகியிருக்கு பாரு!. அதுபோலத்தான் என்னோட மனசுல இருக்கிற அழுக்கை எல்லாம் படிப்படியாக, திருவாசகம் அகற்றுவதை என்னால் நன்றாக உணர முடிகிறது’ என்றான்.

    ஆம்.. எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் ஆகும். 
    ×