search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual story"

    • கயிலையில் சிவபெருமானின் மெய்க்காப்பாளர் அதிகார நந்தி.
    • வலைவீசி அருளிய திருவிளையாடல் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.

    வலைவீசி தெப்பம் குறித்த திருவிளையாடல் புராணம் வருமாறு:-

    முன்பொரு காலத்தில் கயிலையில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதங்களை உபதேசித்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதை கவனிக்காமல் அவரது சிந்தனை வேறு பக்கம் இருந்தது. அதை அறிந்த சிவபெருமான் பார்வதி தேவி மீது கோபம் அடைந்தார். நீ மீனவ பெண்ணாக பூலோகத்தில் பிறக்க வேண்டும் என பணிக்கிறார். இதை அறிந்த விநாயகர், முருகப்பெருமான் கோபம் அடைந்து சிவபெருமானிடம் வந்தனர். தாய்க்கு அளித்த சாபத்தை திரும்ப பெறுமாறு கூறினார்கள். ஆனால் அவர் மறுத்ததால் விநாயகர் அங்கிருந்த தேவ புத்தகங்களை எடுத்து கடலில் எறிந்தார். ஆனால் முருகன், ஒருபடி மேலே சென்று சிவபெருமான் கையில் இருந்த தேவபுத்தகத்தையும் பிடுங்கி வீசி, அதே கடலில் தூக்கி எறிந்தார். அதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான் முருகனையும் சபித்தார்.

    கயிலையில் சிவபெருமானின் மெய்க்காப்பாளர் அதிகார நந்தி. எனவே சிவபெருமான் அதிகார நந்தியை அழைத்து உன்னை கேட்காமல் விநாயகர், முருகன் எப்படி உள்ளே வந்தனர் என்று கேட்டார். பின்னர் நந்தி மீது கோபம் அடைந்து, "நீ கடலில் சுறா மீனாக சென்று உலகில் அனைவரையும் துன்புறுத்துவாய்" என்றார். பின்னர் அதிகார நந்தியும் பூமிக்கு வந்து, சுறாவாக மாறி கடலில் விழுந்த தேவ புத்தகங்களை எல்லாம் எடுத்து தனது தலைமீது வைத்து பாதுகாத்தார்.

    இதற்கிடையில் கடலில் ஒரு சுறா மீன் மிகவும் அட்டகாசம் செய்வதாக மீனவர்கள் தங்கள் நாட்டு மன்னரிடம் தெரிவிக்கின்றனர். உடனே அவர் முரசு அறிவித்து அந்த மீனை பிடிப்பவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்கிறார். உடனே சிவபெருமான் மீனவர் உருவத்தில் மன்னனிடம் வந்து, மீனை பிடிப்பதாக தெரிவித்தார். அவரை பார்த்த மன்னன், "உங்களை பார்த்தால் மீனவர் போன்று தெரியவில்லை. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் போன்று உள்ளது. நீங்கள் எப்படி இந்த வேலையை செய்து முடிப்பீர்கள்" என்று கேட்டுள்ளார்.

    சிவபெருமான் என்னை தவிர வேறு யாரும் அந்த மீனை பிடிக்க முடியாது என்று கூறி, தான் வைத்திருந்த வலையை வீசுகிறார். அனைவரின் வலையையும் கிழித்து எறிந்த அந்த சுறா மீன் சிவபெருமானின் வலையில் சிக்கி அதில் இருந்து தப்ப முடியவில்லை, அதை தொடர்ந்து மன்னரும் தனது மகளான பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அதை மச்சகந்திவிவாகம் என்பர். அதை தொடர்ந்து சிவபெருமான், சுறா மீன் வடிவில் இருந்த நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து, மக்களை காத்து தனது திருவிளையாடலை நிறைவு செய்கிறார். இதுவே வலைவீசி அருளிய திருவிளையாடல் புராணம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    • மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தார் முருகன்.
    • இந்த கதை மனித வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    நாரதரின் வீணை இசைக்கண்டு இந்திரன் கனியை பரிசாக அளித்தான். அந்த ஞானப்பழத்தை பெற்ற நாரதர் உலகம் ஆளும் கைலாயத்துக்கு சென்று சிவபெருமான்-பார்வதியிடம் கொடுத்தார். அதை சிவனின் புதல்வர்களான விநாயகர், முருகப் பெருமான் இருவரும் பெற விரும்பினர். அப்போது ஏற்பட்ட போட்டியில் உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என முடிவாகியது. அதையடுத்து தன் மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தார் முருகன்.

    இதற்கிடையே அம்மை-அப்பனே உலகம் என்ற தத்துவ நெறியை மையமாக வைத்து விநாயக பெருமான் சிவன்-பார்வதியை சுற்றி வந்து கனியை பெற்றுக்கொண்டார். இதனால் கோபமுற்ற முருகப்பெருமான் கைலாயத்தில் இருந்து கோபித்து கொண்டு பழனியம்பதியை வந்து குன்றில் குடியமர்ந்தார் என்பது புராண கதை. ஆனால் இந்த கதை மனித வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    அதாவது இயற்கையின் பெரும்பகுதி உயிர் குலத்திற்கு மகிழ்வை தரக்கூடியது. இதில் கனியும் ஒன்று. இந்த கனியானது மரத்தில் உள்ளபோது அரும்பாகி, மலராகி, காயாகி முடிவில் கனியாகிறது. இந்த படிநிலை முழுமை நிலை எய்தவில்லை எனில் கனி கிடைக்காது. அதாவது மலர் நிலையில் பாழாகி போதல் உண்டு. மலரில் இருந்து பிஞ்சு பிடித்தாலும் உதிர்வதும், காயாகி போவதும் உண்டு. அவ்வாறு காய் ஆனாலும் வெம்பி விழுவதும் உண்டு.

    எனவே ஒரு மலர் பிஞ்சாமி, காயாகி, கனியாகி வருவது என்பது பல்வேறு ஆபத்து நிலைகளை தாண்டி வர வேண்டும். அதுபோலத்தான் மனிதனின் நிலையும். அவனுடைய வாழ்க்கை படிமுறையில் வளர்ந்த பிறகே குணம் என்ற குன்றில் ஏற முடியும். இல்லையேல் அழுக்காற்றல் பெற்று அழிந்துதான் போக முடியும். உனது, எனது என்ற நச்சு மரங்கள் ஈன்ற கனிகளே நான், அதிகாரம், காவல், அரசு ஆகியன ஆகியது. மனித அறிவு, அன்பு, இணக்கம், உறவு, என்று வளர்ந்து சொர்க்கத்தை பெறுவதற்கு பதிலாக சண்டை, சிறை என்ற தீயவட்டத்தை மையமாக கொண்டு சுழல தொடங்கியது. இது தவறான பாதை என்று மனித சமுதாயத்துக்கு உணர்த்த தோன்றியது தான் முருகப்பெருமான் ஞானப்பழக்கதை.

    • கிருஷ்ண பகவான் பல்வேறு லீலைகளை நடத்தியுள்ளார்.
    • கிருஷ்ணர் நடத்திய லீலைகள் இதோ...

    கண்ணனுக்கு ஆடை கொடுத்த திரவுபதி

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!" என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் பொய்விட்டான். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, "கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!" என நின்று யோசித்தாள். "அவன் கட்டியிருந்த உடை நீச் சலடிக்கும் பொது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்" என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபொது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    உதவியவர்களை மறக்காதீர்

    நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி. யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

    கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு, கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான். அவன் கண்ணனிடம், 'கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன்' எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.

    கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான். ததிபாண்டன் அப்போதும் 'கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு!' என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

    நண்பனுக்கு சேவை

    எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர். இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர்.

    ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன். குசேலரின் திருவடியை வணங்கினான். 'கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா?' எனக்கேட்டு, 'உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே!' என்று சொல்லி அவற்றை வருடினான் கண்ணணின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போனார்.

    இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.

    பாமா ருக்மணி போட்டி

    பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள். ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

    அப்படி நடந்த நிகழ்ச்சிகளில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகாரமும் ஒன்றாகும். ஒருமுறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத்திற்கு சத்யபாமாவுடன் செல்ல இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான். ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத்தவில்லை.

    அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான். நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, "நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய். அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான். நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார். ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு மேலும் கோபம் பொங்கியது.

    கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள். கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேணடும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்ப, அவன் முடியாது என்று மறுத்து விட்டான். அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.

    சகாதேவன் பக்தி

    பாண்டவர் ஐவருள் யார் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள். ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன். பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண் டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை. குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார். அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார். அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டை யா, சமாதானமா என்று கேட்கிறார்.

    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர். ஆனால் சகாதேவன் மட்டும் "எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது. அதைச் செய்யுங்கள்" என்கிறான். சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்.

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த பரமாத்மா "பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்" என்று கேட்கிறார். "உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்" என்கிறான் சகாதேவன். "எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!" என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார். ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டுகிறான்.

    அதற்கு மகிழ்ந்து கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிகிறார் கண்ணன். "பசையற்ற உடல்வற்ற" என்ற இந்தப் பாடலில் பாண்டவர் மீது குற்றமற்ற, முடிவில்லாமல் வளர்ந்த பற்று வைத்திருந்த கண்ணன், சகாதேவனுக்கு அளவற்ற தனது வடிவங்களைக் காட்டினார்.

    கிருஷ்ணர் உபதேசங்கள்

    ஸ்ரீகிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.  உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக் கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாக கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளில் இருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு.

    உரலில் கட்டுண்டது

    குழந்தை கிருஷ்ணன் வளர வளர அவனுடைய விஷமங்களும் வளர்ந்து வந்தன. பாத்திரங்களில் உள்ள தயிர், பால் முதலியவற்றைக் கவிழ்த்து விடுவான். அவனுக்கு வெண்யிணையில் பிரியம் அதிகம். தயிர் பானையில் கையைவிட்டு அளைவான். மேலெல்லாம் பூசிக்கொள்வான். அவனுக்கு வெண்ணையை கொடுத்து மகிழ்வார்கள். அவனும் விருப்பமாய் வாங்கி உண்பான். கண்ணனுடைய வருகைக்குப் பின்னர் கோகுலத்தில் பால்வளம் பெருகிற்று.

    ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கிருஷ்ணன் தயிர்ப் பானையில் கையை விட்டு வெண்ணையை வாரினான். தயிர் கடைய ஒட்டாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது. ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள். கயிற்றின் மறு முனையை ஓர் உரலுடன் சேர்த்துக் கட்டினாள்.

    யசோதை உள்ளே சென்றதும் குழந்தை உரலை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனான். குபேரனுடைய மக்களாகிய நளகூபரனும் மணிக்கிரீவனும் நாரதர் சாபத்தால் மருதமரமாகி, தோட்டத்தில் இருந்தனர். பகவானுடைய அனுக்கிரகத்தால் அவர்கள் பழைய உருவைப் பெறுவார்கள் என்று முனிவர் சாப விமோசனமும் அளித்திருந்தார். அந்த நாளை எதிர்நோக்கியிருந்தார்கள் அவர்கள்.

    குழந்தை மெதுவாக அந்த மருத மரங்களை நோக்கிச் சென்றான். அவற்றின் இடையே நுழைந்து அப்பால் சென்றபோது உரல் மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. கிருஷ்ணன் முயன்று இழுத்த போது மரங்கள் இரண்டும் வேரோடு சாய்ந்து போயின. சாபம் நீங்கபெற்ற நளகூபரனும் மணிக்கிரீவனும் தேஜோ மயமாய் வெளிப்பட்டனர். பகவானைப் பணிந்து விடைபெற்று வாண்வெளியில் மறைந்தனர்.

    கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை

    கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது. வெண்ணெய் உண்டது, தயிரைத் திருடியது, பூதனையைக் கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார். இதனை கண்ணன் பாட்டில், ''தீராத விளையாட்டுப் பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!'' என்று பாரதியார் நகைச்சுவை உணர்வோடு பாடியிருக்கிறார். ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார். வேதமும் இறைவனை, ''ரஹோவைசா'' என்று வர்ணிக்கிறது. 'பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை' என்பது இதன் பொருள்.

    கிருஷ்ணர் செய்த பித்ரு பூஜை

    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்று உள்ளது. 108 திவ்ய தேசங்களில் அந்த தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்ெபருமானுக்கு ''நாவாய் முகுந்தன்'' என்று பெயர். இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைத்து பித்ரு கடமைகள் செய்ய வசதி செய்துள்ளனர். எனவே ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று திருநாவாய் சென்று கிருஷ்ண பரமாத்மா செய்தது போல பித்ரு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.

    • உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு கர்மவினை முழுவதுமே வந்தடையும்.
    • மற்றவர்களைப் பற்றி பேசும்போது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

    ஒரு அரசன், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தான். அப்போது வானத்தில் கழுகு ஒன்று, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன்னுடைய கால்களில் பற்றிக்கொண்டு பறந்து சென்றது. அந்த கழுகின் இறுக்கமாக பிடியில் இருந்த பாம்பு, தன்னுடைய வாயில் இருந்து சில துளி விஷத்தைக் கக்கியது. அந்த விஷமானது, அரசன் வைத்திருந்த உணவு பாத்திரத்திற்குள் விழுந்தது. விஷம் விழுந்த உணவை, அறியாது ஒரு அந்தணருக்கு அளித்தான் அரசன். அந்த உணவை வாங்கி சாப்பிட்ட அந்தணர், மறுகணமே இறந்துபோனார். இதைக்கண்ட அரசன் மிகவும் வருத்தம் கொண்டான்.

    கர்ம வினைகளுக்கான பலன்களை எழுதும் சித்திரகுப்தனுக்கு, இந்த கர்ம நிகழ்வின் வினையை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த கர்மவினையை கழுகுக்கு அளிப்பதா? அல்லது பாம்பிற்கு அளிப்பதா? அல்லது அரசனுக்கு அளிப்பதா? என்று அவர் பரிதவித்தார். கழுகு அதற்கான இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது. அது அந்தக் கழுகின் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் வாயில் இருந்து விஷம் வழிந்தது. சாவின் பிடியில் இருந்த போது, எதேச்சையாக நடந்த அந்த நிகழ்வு பாம்பின் தவறும் அல்ல. அரசனுக்கு உணவில் பாம்பின் விஷம் கலந்திருப்பது தெரியாது. அவன் அறியாமல் நடந்த நிகழ்வுக்கு அவன் மீதும் குற்றம் சுமத்துவது சரியல்ல. எனவே இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியாமல் சித்திரகுப்தன் குழம்பினார்.

    இதுபற்றி எமதர்மனிடமும் சென்று கேட்டார். சற்றுநேரம் யோசித்த எமதர்மர், "சித்திரகுப்தா, இதற்கான பதில் விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இரு" என்று அறிவுறுத்தினார்.

    சில நாட்கள் கழித்து அரசனின் உதவியைப் பெறுவதற்காக சில அந்தணர்கள், அவரது அரண்மனைக்குச் சென்றனர். வழி தெரியாததால் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் அவர்கள் வழிகேட்டனர்.

    அப்போது அந்த பெண்மணி, அவர்களுக்கு சரியாத பாதையைக் கூறியதோடு, "இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன். சற்று எச்சரிக்கையாக இருங்கள்" என்றும் கூறினாள்.

    அந்த வார்த்தையைக் கேட்டதும், சித்திரகுப்தன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணியையே சேரும் என்று அவர் முடிவு செய்து, அதையே பாவ- புண்ணிய புத்தகத்தில் எழுதவும் செய்தார்.

    ஆம்.. மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும், அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்து விடும். அதே நேரம் உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதுமே வந்தடையும். ஆகையால் மற்றவர்களைப் பற்றி பேசும்போது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

    • சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் குறிப்பிடத்தக்கவை..
    • பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன் கதையை அறிந்து கொள்ளலாம்.

    சுந்தரேசுவரர் பெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை பற்றி புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்பொரு காலத்தில் மன்னர் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். அப்போது மணிவாசகர் அழைத்து வந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறியது. எனவே கோபம் அடைந்த மன்னன் வைகை ஆற்றில் கொதிக்கும் மணலில் நிற்க வைத்தான். அப்போது இறைவனின் திருவருளால், வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் மதுரை அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே 'வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்த வேண்டும்' என்று மன்னன் ஆணையிட்டான்.

    மதுரை நகரின் கீழ்த் திசையில் வசித்து வந்த பிட்டு விற்கும் மூதாட்டி 'வந்திக்கு குழந்தைகள் இல்லை. எனவே வைகை கரையை வலுப்படுத்த யாரை அனுப்புவது? என்று மூதாட்டி யோசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அடியவருக்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய எண்ணினார். அதன்படி அவர் கூலி ஆளாக வந்தியிடம் வந்து சேர்ந்தார். மூதாட்டியிடம் கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு சென்றார்.

    அங்கு அவர் நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்ததால் காவலர்கள் இறைவனின் முதுகில் தங்கப் பிரம்பால் ஓங்கி அடித்தார்கள். அப்போது இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவர் மீதும் விழுந்தது. அதன் பிறகு மாயமான இறைவன், வானத்தில் மீண்டும் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளை வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலைக் கண்ட மன்னன், மணிவாசகப் பெருமானை சிறையிலிருந்து விடுவித்தான்.

    • ராமபிரான் புன்னகைத்தபடி, தன்னுடைய கோதண்டத்தில் அம்பை பூட்டி எய்தார்.
    • அது வரிசையாக ஏழு சால மரங்களை துளைத்துக் கொண்டு சென்றது.

    பதினான்கு ஆண்டுகள் வனவாசம் வந்த இடத்தில், ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள். இலங்கை சென்று, சீதையை மீட்டுவர ராமனுக்கு படைபலம் தேவைப்பட்டது. அப்போது அனுமனால் பரிந்துரைக்கப்பட்டவன்தான் சுக்ரீவன். வானர குலத்தைச் சேர்ந்த அவனிடம், ஏராளமான வானர சேனைகள் இருந்தன. மேலும் அவனது சகோதரன் வாலியை வதம் செய்து, கிஷ்கிந்தையின் ஆட்சியையும் சுக்ரீவனிடம் ஒப்படைத்து விட்டால், அவனிடம் மேலும் பல மடங்கு வானர சேனை இருக்கும். அதைக் கொண்டு இலங்கையைக் கைப்பற்றலாம் என்பது அனுமன் கொடுத்த யோசனை.

    அதன்படி அனுமன், ராமபிரானை அழைத்துக் கொண்டு சுக்ரீவனிடம் சென்றார். ஆனால் ராமபிரானைப் பார்த்தும், `இவரால் வாலியை கொல்ல முடியுமா' என்ற சந்தேகம் சுக்ரீவனுக்கு எழுந்தது. எனவே `வாலியை வீழ்த்தும் அளவுக்கான வலிமை, ராமனுக்கு உள்ளதா' என சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.

    துந்துபி என்ற அரக்கன், முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான். உருவத்திலும், உடல் எடையிலும் பெரியவனான அந்த அரக்கனைக் கொன்று, அவனது சடலத்தை தூக்கி வீசினான் வாலி, அந்த உடல் பல மைல்களைக் கடந்து ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்றான் சுக்ரீவன். அங்கே துந்துபி அரக்கனின் உடல் இயற்கையால் சிதைந்து, எலும்பு கூடு மட்டும் இருந்தது. அதுவே பல கிலோ எடை கொண்டதாக இருந்தது.

    "ராமா.. இது அன்று வாலியால் கொன்று வீசப்பட்ட துந்துபி அரக்கனின் எலும்புக் கூடு. இப்போது நீ இதை எடுத்து வீசு, அது எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைப் பார்த்து, உன்னுடைய பலத்தை வாலியோடு நான் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறேன்" என்றான், சுக்ரீவன்.

    அப்போது லட்சுமணன், "அண்ணா! உங்கள் இடது கால் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன்" என்றான். ராமனும் அப்படியே தன் இடது கால் கட்டை விரலால் நெம்பி விட்டார். அது வாலி வீசிய தூரத்தை விட பல மடங்கு அதிக தூரத்தில் போய் விழுந்தது.

    இப்போதும் சுக்ரீவனுக்கு ராமன் மேல் நம்பிக்கை வரவில்லை. "ராமா.. என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய். வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான். எனவே இந்த ஒரு செயலைக் கொண்டு உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை. ஆகையால் உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கிறேன்" என்றபடி அங்கிருந்த அடர்ந்த வனத்திற்குள் அழைத்துச் சென்றான்.

    "ராமா! வாலி தன் வில்லில் இருந்து அம்பை செலுத்தினால், அது பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் அம்பை செலுத்த முடியுமா?" என்று கேட்டான் சுக்ரீவன்.

    ராமபிரான் புன்னகைத்தபடி, தன்னுடைய கோதண்டத்தில் அம்பை பூட்டி எய்தார். அது வரிசையாக ஏழு சால மரங்களை துளைத்துக் கொண்டு சென்றது. அதைக் கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராக மகாவிஷ்ணு திகழ்கிறார். அதனால்தான் அவருக்கு 'ப்ரத்யய:' என்ற பெயர் வந்தது. இது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் 94-வது திருநாமம் ஆகும்.

    ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கும் போதெல்லாம் 'ப்ரத்யயாய நம' என்று சொல்லி வந்தால், தன்னம்பிகையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

    • நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது.
    • கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான்.

    நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.

    யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

    கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு, கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.

    அவன் கண்ணனிடம், 'கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன்' எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.

    கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான்.

    ததிபாண்டன் அப்போதும் விடவில்லை.

    'கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு!' என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

    • ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு
    • கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தி கதையை அறிந்து கொள்ளலாம்.

    ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு, ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. நான்காவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார்.

    அந்த பிரசவத்திலும் பெண் குழந்தையே, பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். 5-வது முறையாக மனைவி கருவுற்றிருந்தார். இப்போதும் பெண் குழந்தையே பிறந்தது. பனை மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த தந்தையிடம், அவரது மூத்த மகள் இந்த விஷயத்தையும் சொன்னாள். அவரது மனம் இப்போது 'அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக, தன் மகள் வந்து என்னிடம் சொன்னால், மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்தார்.

    6-வது முறையும், அந்த தொழிலாளியின் மனைவிக்கு பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது, அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்த போதும், அவரது மூத்த மகள் தன்னுடைய தந்தை மரத்தை விட்டு கீழே இறங்கியதும்தான் சொன்னாள்.

    வாழ்க்கையே வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். 'புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால், இறந்து போய்விடலாம்' என்பது அவரது எண்ணம். தெய்வம் நினைத்தால் தானே எதுவும் நடக்கும். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளி, ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார்.

    சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு வந்தது, அந்த மாணிக்கக் கல். அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார், அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன், அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ, அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதிவைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி. இல்லை... இல்லை.. பல ஏக்கம் நிலத்திற்கு சொந்தக்காரர்.

    அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண், "இன்று காலை ஒரு பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே.. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா?" என்று கேட்டாள். காலையில் எழுந்ததும், நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். அப்படி பிரசன்னம் பார்த்ததில், கனவில் தோன்றிய சிறுமி, கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது.

    மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான், இன்றளவும் பகவதி அன்னை அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால், அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு, தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.

    • ஒரு ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர், தன்னுடைய குடும்ப நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார்.
    • சூரிய பகவானை பிரார்த்தித்து தலைமை வேதியரின் உடல் வெப்பத்தை தணிக்கும்படி வேண்டினார்.

    ஒரு ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர், தன்னுடைய குடும்ப நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தை நடத்த அந்தப் பகுதியில் இருந்த வேதியர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். யாகத்தை தலைமையேற்று நடத்தவும் ஒரு வேதியர் நியமிக்கப்பட்டிருந்தார். யாகம் தொடங்கும் நாள் அன்று, அந்த தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க ராஜ தோரணையோடு யாக குண்டம் முன்பாக வந்து அமர்ந்தார்.

    அங்கு வந்திருந்த மற்ற வேதியர்களும் கூட அவர்களின் வசதிக்கேற்ப ஒரு தரமான நல்ல துணியை உடுத்தி வந்திருந்தனர். அவர்களில் ஒரு வேதியர் மட்டும், கந்தலான கீழாடையை அணிந்து வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், முகம் சுழித்தார் தலைமை வேதியர். யாக குண்டத்தின் முன்பாக வந்து அமர்ந்த அந்த ஏழ்மையான வேதியரை, "நீயெல்லாம் இங்கே அமர வேண்டாம். ஒரு ஓரமாக அமர்ந்து சந்தனம் அரைத்துக் கொடுத்தால் போதும்" என்று கடிந்து கொண்டார், தலைமை வேதியர்.

    அவரது சொல்லை தட்ட விரும்பாக ஏழை வேதியர், ஒரு ஓரமாக அமர்ந்து கல்லில் சந்தனத்தை அரைக்கத் தொடங்கினார். அப்போது அவரது வாய் சூரிய தேவனுக்குரிய மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தது. யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அந்த ஏழை வேதியரை பார்த்த தலைமை வேதியருக்கு எரிச்சல் உண்டானது.

    'நாம் வேதம் ஓத வேண்டாம். சந்தனம் அரைத்தால் போதும் என்று சொன்னதால், இந்த வேதியன் நம்மை திட்டிக்கொண்டே இருக்கிறானே' என்று தலைமை வேதியர் நினைத்தார். யாகம் நிறைவடைந்ததும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தனம் வழங்குவார்கள். அதனை ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் பூசிக்கொள்ள வேண்டும். அந்த சந்தனத்தை முதலில் வாங்க வேண்டியவர், தலைமை வேதியர்தான்.

    அதன்படி சந்தனத்தை வாங்கிய தலைமை வேதியர், அதனை தன்னுடைய உடல் முழுவதும் பூசினார். மறுநொடியே, "ஐயோ.. அம்மா.. எரிகிறதே.. எரிகிறதே.." என்று சத்தம் போட்டார். அங்கும் இங்கும் ஓடினார். உடலை குளிரச் செய்யும் சந்தனத்தைப் பூசியதும் தலைமை வேதியர் இப்படி சொன்னது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தலைமை வேதியரும் கூட அதிர்ச்சியாகிப் போனார்.

    'ஏழை வேதியன்தான் ஏதோ செய்து விட்டான் போல' என்று நினைத்த தலைமை வேதியர், "சந்தனம் ஏன் சுடுகிறது?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த ஏழை வேதியர், "நான் சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரித்தபடியே சந்தனம் அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டி விட்டார் போலும்" என்றார்.

    பின்னர் சூரிய பகவானை பிரார்த்தித்து தலைமை வேதியரின் உடல் வெப்பத்தை தணிக்கும்படி வேண்டினார். அடுத்த நொடியே, தீப்பற்றி எரிவதுபோல் இருந்த உடல், குளிர்ச்சியாக மாறியது. அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த தலைமை வேதியர், "நீர் எல்லோரை விடவும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே" என்று வருந்தினார். சூரியனே கட்டுப்பட்டு போய் இருந்த அந்த சக்தி வாய்ந்த ஏழை வேதியர் வேறு யாருமல்ல. பின்காலத்தில் மிகப்பெரிய மகானாக உருவெடுத்து, தற்போது பலராலும் வணங்கப்படும் ஸ்ரீராகவேந்திரர்.

    • ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை
    • அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

    ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும். ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை. அது மனிதர்களின்றி, தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியைப் பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி.. பாடம் புகட்டப்பட்டே தீரும். அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

    கயிலாயத்தின் வாசல் காப்போனாக இருந்தாலும், சிவபெருமானை சுமக்கும் பெரும் பேறு பெற்றவர், நந்தியம்பெருமான். சிவபெருமான் தான் இந்த உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு முறை உலக உயிர் களுக்கு படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார். நந்தி அவரை சுமந்து சென்றார்.

    செல்லும் வழியில் நந்திக்கு ஒரு சிந்தனை உருவானது. 'உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் சிவபெருமானையே நாம் சுமக்கிறோம் என்றால், நம்முடைய சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்' என்று அவர் நினைத்தார். சிவனே ஜீவனாக இருக்கிறார் என்பது சிவனடியார்களின் கூற்று. அனைத்து உயிர்களின் ஆன்மாவாக, சிவபெருமானே இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அப்படி இருக்கையில் நந்தியம்பெருமான் நினைத்த அந்த ஆணவமான சிந்தனை, சிவபெருமானுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன?. நந்திக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார் சிவபெருமான். உலகை வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய சடைமுடியில் இருந்து ஒரே ஒரு முடியை மட்டும் எடுத்து, நந்தியின் மீது வைத்து விட்டு கீழே இறங்கிக்கொண்டார், ஈசன்.

    அதுவரை உலகத்தின் பரம்பொருளான சிவபெருமானையே சுமந்து கொண்டிருந்த நந்திக்கு, தன் மேல் இருந்த ஒரே ஒரு முடியை சுமக்க முடியவில்லை. பாரம் தாங்காமல் தள்ளாடினார். ஒரு அடி கூட அவரால் முன் எடுத்து வைக்க முடியவில்லை. தன்னுடைய இந்த இயலாமை அவரை கலங்கடித்தது. இதுவரை அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்த ஆணவம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

    அவர் தன் அருகில் நின்று கொண்டிருந்த சிவபெருமானை கலங்கும் கண்களோடு பார்த்தார். அவரது அந்தப் பார்வை, 'எனக்கு ஏன் இந்த நிலை?' என்பது போல் இருந்தது. இப்போது சிவபெருமான் கூறினார். "நந்தியே.. உன்னுடைய மனதில் இருந்த ஆணவத்தை அழிக்கவும், நானே உலக உயிர்களின் ஆன்மாவாக, உலக உயிர்களின் இயக்கமாக இருக்கிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ளவும்தான் இப்படிச் செய்தேன்.

    நான் உன் மேல் இருக்கும் வரைதான், உன்னால் என்னை சுமக்க முடிந்தது. உன்னில் ஆணவம் குடிவந்ததும், நான் உன்னை விட்டு விலகிவிட்டேன். நான் விலகியதால், உன்னுடைய இயக்கமும் நின்றுபோனது" என்றார். உண்மையைப் புரிந்துகொண்ட நந்தியம்பெருமான், எல்லாம் இறைவனின் செயலால் நடப்பவை என்ற எண்ணத்தை தன் மனதில் ஆழ வேரூன்றிக் கொண்டார்.

    • ‘மனிதர்களை, செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்’ என்பது இறைவனின் வாக்கு.
    • சோதனையில் செல்வத்தின் பக்கம் சாயாதவனுக்கு, அவன் எதிர்பாராத செல்வம் கிடைக்கும்.

    அந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் இருந்தார். அவர் சிறந்த ஆன்மிக வாதியும் ஆவார். அவருக்கென்று யாரும் இல்லை. எனவே அவர் தன்னுடைய சொத்துக்களை எல்லாம், தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அளித்து விட்டு, ஒரு மடாலயம் அமைத்து, அதில் ஆதரவற்றோர் களையும், முதியவர்களையும் தங்கவைத்து தான தர்மங்கள் செய்ய முடிவு செய்திருந்தார். அதே நேரம் பணத்தை விட, இறைவனின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர், அவருக்கு ஒத்தாசையாக வேண்டும் என்று நினைத்தார். அந்த நபரை, தன்னுடைய வேலையாட்களில் இருந்தே தேர்வு செய்ய அவர் முடிவு செய்தார்.

    அதன்படி தன்னுடைய முடிவு எதையும் வெளியில் சொல்லாமல், தன்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டினார். 20-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் அந்த இடத்தில் கூடினர். அவர்கள் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவர்கள் ஒவ்வொரின் முன்பாகவும் ஒரு மேஜை போடப்பட்டது. அதன் மேல் இரண்டு அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றின் மீது 'பணம்' என்றும், மற்றொன்றின் மீது 'ராமாயண புத்தகம்' என்றும் எழுதப்பட்டிருந்தது.

    இப்போது செல்வந்தர் பேசினார். "அன்பானவர்களே.. நீங்கள் எனக்காக இதுவரை உண்மையாக உழைத்துள்ளீர்கள். அதற்கேற்ற சம்பளத்தை விடவும் அதிகமாகவே நான் உங்களுக்கு கொடுத்து வந்துள்ளேன். என்னிடம் உள்ள செல்வம் அனைத்தும் இறைவன் அருளால் கிடைத்தது. அவற்றிற்கு நான் ஆண்டவனிடம் கணக்கு காட்ட வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது.

    உங்கள் முன்பாக இரண்டு பெட்டிகள் இருக்கின்றன. ஒன்றில் பணமும், மற்றொன்றில் இறைவனின் புகழைப்பாடும் ராமாயண புத்தகமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நான் உங்களை குறைவாக மதிப்பிடமாட்டேன். உங்களின் விருப்பமே எனக்கு முக்கியம்" என்றார்.

    பணியாளில் ஒருவர், "முதலாளி.. நீங்கள் இதுவரை எங்களுக்கு எந்தக் குறையும் வைக்க வில்லை. ஆனாலும் இப்போதைக்கு நோய் பாதிப்பில் தவிக்கும் என் தாய்க்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுகிறது. நான் ராமாயணத்தை மதிக்கிறேன். என்றாலும் தேவை என்பதால் பணத்தை எடுத்துக் கொள்கிறேன்" என்றபடி பணப்பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டார்.

    இரண்டாவது ஒருவர், "ஐயா.. நான் ஓலை குடிசையில் வசிக்கிறேன். என்னுடைய பிள்ளைகளாவது கல் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக இந்த பணத்தை எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.

    இப்படியே ஒவ்வொருவரும் தங்களின் தேவைகளைச் சொல்லி, பணத்தையே எடுத்துக் கொண்டனர்.

    இப்போது ஒரு வாலிபன் மட்டும் எஞ்சியிருந்தான். அங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரை விடவும், அவனது குடும்பமே மிகவும் ஏழ்மையில் இருந்தது. வயதான தாய், தந்தையர், திருமணமாகாத நிலையில் இரண்டு சகோதரிகள் என்று, அவன் கடமையை முடிக்கவும் பணம் தேவையாகவே இருந்தது. அதனால் அவனும் பணப்பெட்டியையே கையில் எடுத்தான்.

    செல்வந்தரின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போனது. பணப்பெட்டியை கையில் வைத்தபடி அந்த இளைஞன் பேசினான். "முதலாளி.. என்னுடைய அம்மா தினமும் அதிகாலையில், என்னையும், என் சகோதரிகளையும் அமரவைத்து, தான் சிறு வயதில் கேட்ட ராமாயணக் கதைகளை எங்களுக்குச் சொல்வார். நாங்கள் அதைக் கேட்டு இன்புறுவோம். ஒரு முறை என் தாய் சொன்ன வாசகம் எனக்கு நினைவிருக்கிறது. 'ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதுதான். நமக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றுபவனாக இறைவன் இருக்கிறான்' என்றார். என் குடும்ப சூழ்நிலைக்கு இப்போது பணம் தேவைதான். என்றாலும் நான் எப்போது கேட்டாலும், நீங்கள் 'இல்லை' என்று சொல்லாமல் பணம் தரப்போகிறீர்கள். எனவே இப்போது எனக்கு பணத்தை விட, ராமாயண புத்தகத்தின் மீதுதான் பற்று எழுகிறது" என்று கூறி, பணப்பெட்டியை கீழே வைத்து விட்டு, ராமாயண புத்தகம் இருந்த பெட்டியை எடுத்தான்.

    பின்னர் புத்தகத்தைப் பார்க்கும் ஆவலில் அந்தப் பெட்டியைத் திறந்தான் வாலிபன். அதில் புத்தகத்தோடு மேலும் இரண்டு கவர்கள் இருந்தன. ஒன்றில் அளவுக்கு அதிகமான பணமும், மற்றொன்றில் செல்வந்தரின் சொத்தில் பாதி எழுதப்பட்ட உயிலும் இருந்தது. அதைக் கண்டு அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்து பணியாளர்களுக்குமே அதிர்ச்சி. ஆனால் செல்வந்தருக்கோ, தனக்கு நம்பிக்கையான ஒரு துணைவன் கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி.

    தன்னை முழுமையாக நம்புபவர்களுக்கு, அவர்கள் நினைக்காத நேரத்தில் தேவைக்கும் அதிகமான செல்வத்தை இறைவன் அருள்வான். அதுதான் அந்த இளைஞனின் விஷயத்தில் நடந்தது. 'மனிதர்களை, செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்' என்பது இறைவனின் வாக்கு. அந்த சோதனையில் செல்வத்தின் பக்கம் சாயாதவனுக்கு, அவன் எதிர்பாராத செல்வம் கிடைக்கும்.

    • மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
    • மகாவிஷ்ணு. கருடனின் மதிநுட்பத்தை எண்ணி மிகவும் பாராட்டினார்.

    ஒரு முறை மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமான கருடனின் மீது அமர்ந்து, இந்த பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்தார். பூமியின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

    "கருடா.. இந்த உலகத்தில் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"

    எல்லாம் அறிந்த இறைவன் ஏதோ ஒரு விளையாட்டை உண்டாக்கும் நோக்கில், தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதாக புரிந்துகொண்ட கருடன், "இந்த உலகத்தில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், இறைவா" என்று பதிலளித்தார்.

    ஆச்சரியம் அடைவதுபோல் புருவத்தை உயர்த்திய மகாவிஷ்ணு, "என்ன சொல்கிறாய் கருடா?. இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில், மூன்று வகையான மனிதர்கள் தான் இருக்கிறார்களா?" என்றார்.

    "இறைவா.. எல்லாம் அறிந்த நீங்கள்.. என் மூலம் இந்த உலகுக்கு எதையோ சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதற்கு என்னால் பதில் கூறாமல் இருக்க முடியாது.. அதனால் சொல்கிறேன்.. இந்த உலகில் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் வாழும் மனிதர்கள் ஒரு வகை. பசுவும் அதன் கன்றும் போல் வாழும் மனிதர்கள் மற்றொரு வகை. கணவன்- மனைவி போல் வாழும் மனிதர்கள் இன்னொரு வகை. இப்படி மூன்று வித மனிதர்கள்தான் இருக்கிறார்கள்" என்றார், கருடன்.

    "இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி.. விரிவான விளக்கம் வேண்டும் கருடா.." என்றார் மகாவிஷ்ணு..

    கருடனும் சொல்லத் தொடங்கினார். "இறைவா.. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையானது, தன் குஞ்சுகளுக்காக பகலில் இரை தேடிச்செல்லும். அந்த தாய் பறவை வருவதற்குள், சில குஞ்சுகள் பாம்புக்கு இரையாகிவிடும். இரவு கூடு திரும்பும் தாய் பறவை, தான் இழந்து விட்ட குஞ்சுகளுக்காக வருதப்படாது. மாறாக, கூட்டில் இருக்கும் மற்ற குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும். அந்த குஞ்சுகளுக்கும் கூட, தன் பசிதான் தெரியுமே தவிர, தாயின் வேதனை புரியாது. அதைப் பற்றிய சிந்தனை அவற்றிக்கு வராது. வளர்ந்ததும் குஞ்சுகள் பறக்க முயற்சிக்கும். அவற்றில் மரத்தில் இருந்து கீழே விழும் சில மடிந்து போகும். மற்றவை உயிர்வாழும்.

    இந்த வகை மனிதர்கள், வறுமையுடன் போரிடுவார்கள். கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த போராடுவார்கள். எனவே இவர்களுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை இருப்பதில்லை. இரை தேடும் பறவையைப் போல எந்திரமயமான வாழ்க்கை இருக்கும்.

    மாட்டு தொழுவத்தில் பசுவும், கன்றும் வேறுவேறு இடத்தில் கட்டப்பட்டிருக்கும். பசுவைப் பார்த்து கன்றும், கன்றைப் பார்த்து பசுவும் சத்தம் போடும். தாயிடம் பால் குடித்தால் தன்னுடைய பசி அடங்கிவிடும் என்பது கன்றிற்கு தெரியும். ஆனால் அதை, அதன் கழுத்தின் கட்டியிருக்கும் கயிறு அங்கிருந்து நகர விடாமல் தடுக்கும்.

    இரண்டாம் வகை மனிதர்கள், இந்த பசு, கன்றைப் போன்றவர்கள். அவர்களுக்கு கடவுள் சிந்தனை இருக்கும். அவரை அடைந்தால், நம்முடைய வாழ்வு சுகமாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் குடும்பம், பாசம், பந்தம், ஆசை போன்ற கயிற்றில் சிக்கிக்கொண்டு, இறைவனை அடைய முடியாமல் தவிப்பார்கள்.

    இதற்கு முன்பு யார் என்றே தெரிந்திராத ஒரு பெண்ணை, திருமணம் செய்து கொண்ட கணவன், ஒரு வித கூச்சத்தால் அவளுடைய முகம் பார்த்து பேசாமல் ஒதுங்கிச் செல்வான். புதியதாக வந்த மனைவியும் அப்படித்தான். ஆனால் மனைவி தன்னுடைய கணவரை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரிப்பாள். பிடித்ததை சமைப்பாள். அவனுக்காகவே பிறந்தவள் நான் என்பதை, கணவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். நாளடைவில் மனைவியின் அன்பில் கணவன் கரைவான். அவளைவிட்டு பிரிய அவனுக்கு மனம் இருக்காது.

    மூன்றாம் வகை மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். அவர்கள் கடவுள் சிந்தனனயிலேயே காலத்தை கழிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களை சோதித்த கடவுள், பின்னர் அவர்களை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வார். அதன்பின் அவர்களை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது" என்று கூறி முடித்தார் கருடன்.

    அதைக் கேட்டு அகமகிழ்ந்த மகாவிஷ்ணு. கருடனின் மதிநுட்பத்தை எண்ணி மிகவும் பாராட்டினார்.

    ×