search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siddha medicine"

    • தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
    • நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலர் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது. அது குறித்து காண்போம்.

    வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் 'கேலக்டோமேனன்' நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.

    குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.

    விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

    திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே 'திரிபலா' எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    புனர்னவா: மூக்கிரட்டை கீரை என்று அழைக்கப்படும் இது, எடை இழப்புச் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும். இதன் டையூரிடிக் பண்புகள், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாகச் செயல்பட உதவும். பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களை இழக்காமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்கும் நச்சு தண்ணீர் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. மூக்கிரட்டைக் கீரையைத் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    லவங்கப்பட்டை: உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவும் லவங்கப்பட்டை, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் இருக்கும் 'சின்னமால்டிஹைட்' வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. லவங்கப்பட்டையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் பலவிதமான பயன்பாடுகளுக்கு உகந்தது. குறிப்பாக எடைக்குறைப்பு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    • தலைமுடி உதிர்வு டீனியா கேப்பிடஸ் என்னும் பூஞ்சை நோயிலும் வரும்.
    • தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து விடும்.

    தலை முடியில் பூச்சி வெட்டு என்பது 'ஆலோபேசியா ஏரேட்டா' என்ற 'ஆட்டோ இம்யூன்' நோயால் வருகிறது. இந்த நோய் தாக்கினால், தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். தலை முழுவதும் உள்ள முடிகள் உதிர்ந்து மொத்தமாக வழுக்கையுடன் காணப்பட்டால் அதை 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்றும் கூறுவார்கள்.

    இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

    2) திரிபலா சூரணத்தில் சிவனார் அமிர்தம் 200 மி. கி., கந்தக பற்பம் 200 மி. கி., சங்கு பற்பம் 200 மி. கி. காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    தலைமுடி உதிர்வு டீனியா கேப்பிடஸ் என்னும் பூஞ்சை நோயிலும் வரும். தலைமுடி உதிர்தலில் ஆலோபேசியா ஏரேட்டா நோயையும், டீனியா கேப்பிடஸ் பூஞ்சை நோயையும் வேறுபடுத்த வேண்டும். இந்த பூஞ்சை நோய் தாக்கினால் தலையில் அரிப்பு, முடி உதிர்தல், அந்த இடத்தில் வெண்மை அல்லது சிவப்புத் திட்டுகள் காணப்படும், துகள் போன்று வெண்மையுடன் உதிர்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) சீமை அகத்தி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளரும்.

    2) பரங்கிப்பட்டை சூரணத்துடன் கந்தக பற்பம் 200 மி.கி வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) பஞ்ச கற்ப விதி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். பஞ்ச கற்ப விதி என்பது, கடுக்காய் தோல், வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், நெல்லி வற்றல், வெண் மிளகு இவைகளை சம அளவு எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி ஆற வைத்து உருவாக்கும் தைலம். இதை தலையில் நன்றாக பூசி ஒரு மணி நேரம் சென்ற பின்பு குளிக்க வேண்டும். இதனால் புழுவெட்டு, பொடுகு, பூஞ்சை, பேன் இவைகள் தலையில் இருந்து நீங்கி முடி செழித்து வளரும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
    • அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது.

    வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதற்கு 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' என்று பெயர். உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis). இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது. உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

    இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் அவதியுறுவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்க்க வேண்டும்.

    சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) சங்கு புஷ்பம் மலர் 2, இஞ்சிச்சாறு சிறிதளவு, தேன் சிறிதளவு, ஒரு டம்ளர் தண்ணீர். இவைகளைக் காய்ச்சி, காலை, இரவு குடிக்க வேண்டும்.

    2) நன்னாரி மணப்பாகு அல்லது சர்பத் காலை, மாலை 10 மி.லி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

    3) சிறுநாகப்பூ 1 அல்லது 2 எடுத்து அதை வறுத்து, பொடித்து தேன் அல்லது சர்க்கரையுடன் இருவேளை கொடுத்து வந்தால், உள்ளங்கால், உள்ளங்கைகளில் வருகின்ற அதிகவியர்வை குணமாகும்.

    ஹைப்பர் தைராய்டு, ரத்த சர்க்கரை அளவு குறைதல், இதய நோய்களில் வரும் அதி வியர்வையைத் தடுக்க அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது.
    • தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் கோளாறு, பாரம்பரியம் போன்றவை காரணமாக இந்த நோய் வருகின்றது. இந்தப்பிரச்சினை இருந்தால் உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய், முகத்தில் முடி வளர்வது, தலைமுடி உதிர்வது, முகப்பரு, உறக்கமின்மை, மன அழுத்தம், குழந்தையின்மை போன்றவை காணப்படலாம்.

    இதற்கான உணவு மற்றும் சித்த மருத்துவத் தீர்வுகள் வருமாறு:

    உணவுகள்: சோயா பீன்ஸ், எள்ளுருண்டை, வெந்தயக்களி, உளுந்தங்களி, 'பிளாக்ஸ் சீட்' எனப்படும் அலிசி விதைகளை தினசரி உணவில் எடுக்க வேண்டும்.

    மருந்துகள்:

    1) சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இந்த மூன்று மருந்துகளையும், சம அளவில் எடுத்து பொடித்து பனை வெல்லத்தில் சேர்த்து மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

    2) அசோக மரப்பட்டை, கழற்சிக்காய் இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு மிளகு சேர்த்து பொடித்து காலை, இரவு வெந்நீர் அல்லது தேனில் மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

    3) கற்றாழை ஜெல்லுடன் இஞ்சி சேர்த்து மோரில் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.

    4) தினமும் பகல் வேளையில் வெண்பூசணி சாறு குடிக்கலாம்.

    5) பப்பாளிப் பழச்சாறு இரவு வேளைகளில் குடிக் கலாம்.

    6) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் பொடித்து காலை 2 கிராம், இரவு 2 கிராம் வீதம் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்.

    7) மலைவேம்பு இலைச் சாறு 5 மி.லி. வீதம் வாரம் ஒரு முறை அதிகாலையில் குடித்து வரலாம்.

    8) கழற்சிக் கொட்டை 1, மிளகு 3 இவைகளை பொடித்து பசுமோரில் கலந்து குடிக்க வேண்டும்.

    9) குமரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

    10) சதாவேரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

    தினமும் நடைப் பயிற்சி, கருப்பை, இடுப்பு தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன அழுத்தம், சோர்வு, கவலை குறைய பிராணாயாமம், தியானம், இறை பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
    • தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் ஏற்படும் காரணத்தை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது.

    இந்த நோய்களை குணமாக்கும் சித்த மருந்துகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலா ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.

    3) நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

    உணவுகள்: துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம். கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம் இரு முறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.
    • உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    குளிர்காலத்தில் உடலின் முக்குற்றங்களுள், பித்தம் அதிகரித்து இருப்பதால் இயல்பாகவே உடலின் வலு சற்று குறைந்திருக்கும். இக்காலங்களில் உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ரைனோ வைரஸ், ஃப்ளூ காய்ச்சல் (இன்புளூயன்சா) போன்றவை அதிகமாகப் பரவும். இவை ஒருவரிடம் இருந்து அவர்களின் தும்மல், இருமல் மூலம் மற்றவருக்கு வேகமாக பரவும். ஆகவே, இக்காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

    சாதாரண சளி, இருமலுக்கு:

    1) ஆடாதோடை இலை - 2, கற்பூரவள்ளி இலை - 2, துளசி இலை - 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து அவற்றைபிழிந்து சாறு எடுத்து தேனுடன் சூடுபடுத்தி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, இருமல் மூலமாக வெளியேறும்.

    2) தூதுவளை, மிளகு ரசம் வைத்து மதிய உணவை சாப்பிட வேண்டும்.

    3) சிற்றரத்தை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 10 கிராம் அளவில் எடுக்கவும், கொத்தமல்லி 50 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு டீ ஸ்பூன் பொடியை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை நீங்கும். நல்ல பசியைத் தரும்.

    4) நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் இவைகளும் சிறப்புடையது.

    சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் இரண்டு மாத்திரைகளை வாயிலிட்டு மென்று சாப்பிட வேண்டும். துளசி மாத்திரை 1-2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நிலவேம்பு குடிநீர் 30 முதல் 60 மி.லி. வீதம் தினம் ஒருவேளைக் குடிக்கலாம். இது வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. இரவு தூங்கும் முன்பு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு இவைகளை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும். ஆடாதோடை மணப்பாகு 5 மி.லி. காலை, இரவு இருவேளை குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும்.
    • வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.

    3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.

    4) ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.

    5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.

    சிலர் தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின் விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    கால் எரிச்சல் நீங்க

    நீரிழிவு நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,

    1) திரிபலா சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம் அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும். நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்.
    • பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    'பைப்ரோஅடினோமா' எனப்படும் தசைக்கட்டிகள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிறது. முக்கியமாக 20 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் அளவு கூடுகிறது. ஆனால் இந்த வகை கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். இருப்பினும் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு இது புற்றுக்கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது.

    ஆகவே அவ்வப்போது இதனை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சித்த மருத்துவ தத்துவத்தின் படி, வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபமும் வாதமும் சீர் கேடடைந்து கபவாதம் என்ற நிலை உருவாகி இத்தகைய கட்டிகளை மார்பகத்தில் உண்டாக்குவதாக கூறுகின்றது.

    ஆக கபவாதத்தை சீர் செய்யும் மருந்துகளையும், கட்டிகளை கரைக்கும் மூலிகைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள நோய் நிலையில் முன்னேற்றம் வரும். இவை சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம். ஆக, பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. கட்டிகளை கரைக்கும் சித்த மருத்துவ மூலிகைகளாகிய அமுக்கராக் கிழங்கு, மஞ்சள், சேராங்கொட்டை, கொடிவேலி, கழற்சிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை நாடுவது நல்லது.

    இதில் அமுக்கராக் கிழங்கு கட்டிகளை கரைப்பதோடு மட்டுமின்றி, அது சார்பாக பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கி நன்மை பயக்கும். சேராங்கொட்டை எனும் கொடிய நஞ்சுடைய பாலினை கொண்ட மூலிகையின் நஞ்சினை போக்கி மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. இது சேரும் மருந்துகள் தசைக்கட்டி மட்டுமல்லாது புற்றுக்கட்டிகளிலும் நல்ல பலன் தருவதாக உள்ளது. மஞ்சள் எனும் மாமருந்து தசைகட்டிக்கும் நல்ல பலன் தரும். தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும். இன்னும் பல தாது கலப்பு மருந்துகள் மார்பக தசைக்கட்டிகளில் உதவக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவ மூலிகை கடைசரக்கான வெந்தயம் பால் சுரப்பிகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மார்பக அழற்சி எனும் வீக்கநிலையில் வெந்தயத்தை பயன்படுத்த பித்தம் குறைந்து வீக்கம் தணியும். அதற்கு வெந்தயத்தை அரைத்து பற்றாக்கி மார்பகத்தின் மீது போடலாம்.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மார்பகம் சார்ந்த குறிகுணங்களான, சுற்றி நெறிக்கட்டிகள் காணுதல், மார்பகத்தின் வடிவம் மற்றும் பருமன் மாறுபட்டு காணுதல், வழக்கத்திற்கு மாறான கசிவு, மார்பகத்தின் மேல் ரத்த நாளங்கள் விரிந்து காணுதல், மார்பகம் கடினமாக தோன்றுதல் ஆகிய குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து தோன்றினால் பெண்கள் எந்த வித தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான பரிசோதனை முறைகள் மூலம் மார்பகம் சார்ந்த நோய்களை முன்னதாகவே கணிக்க முடியும். சித்த மருத்துவம் மூலம் தீர்வு தந்து நலமான வாழ்வை நோக்கி நகர முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும்.
    • சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன கலிதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    சித்த மருத்துவ மருந்துகளில் விதைகளை முறைப்படி சுத்தி செய்து சூரணமாக்கி (துணை மருந்துகளும் உள்ளடக்கியது) ஆண்மை சம்பந்தபட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும்.

    நத்தை சூரி சூரணத்தையும், அமுக்கரா சூரணத்தையும் இருவேளையும் தளா ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர விந்து கெட்டிப்படும்.

    நத்தை சூரி விதையை பொன்வறுவலாக வறுத்து 400 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்டவைத்து அதனுடன் ஒரு டம்ளர் சுத்த பசும்பால் விட்டு இருவேளை குடித்து வர உடலில் தங்கியுள்ள உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

    நத்தை சூரி சூரணத்தை தொடந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து தளர்ந்த தசைகள் இறுகும். புறா நத்தை சூரி விதைகளை விரும்பி உண்ணுவதனாலயே புறாவின் தசைகள் இறுக்கமாக உள்ளது.

    நத்தை சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச்சூரியின் விதையை பொடித்து, தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் போக்கும்.

    பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும்.

    இதன் வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. உடலைத் தேற்றவும், விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.

    • இது பொதுவான நோய்களில் ஒன்றாகும்.
    • தினமும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை இருப்பதாக வேலூர் சித்த மருத்துவ டாக்டர் திவ்யா கூறினார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் சித்த மருத்துவர் டாக்டர் எம். திவ்யா சைனசைடிஸ் நோய்க்கான அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து கூறியதாவது:-

    சைனசைடிஸ்

    இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சைனசைடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவான நோய்களில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் இதனை பீனிசம், நீர் கோவை, மூக்கடைப்பு நோய் போன்ற பெயர்களால் குறிப்பிடுவர். நமது முகம் மற்றும் தலைப்பகுதிகளில், மூக்கின் இரு பக்கம், நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளில் குழிகள் போன்ற காற்றறைகள் உள்ளன. இவையே 'சைனஸ்' எனப்படும். இவற்றில் குளிர்ந்த காற்று, தூசி போன்றவற்றால் நீர்த்தேக்கம் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதில் நோய் தொற்று, அழற்சி, வீக்கம், தும்மல் போன்ற குறி குணங்கள் ஏற்பட்டு சைனசைடிஸ் என்ற நோய் நிலையை அடையும்.

    காரணிகள்

    பண்பான பித்தத்தில் சேத்துமம் கூடி பரிசித்தால் பீனிசமும்' என்ற சதகநாடியின் படி உடலில் பித்தம் முற்றும் மிகுந்துள்ளபோது கபத்தை பெருக்கக் கூடிய செயல்களால் பிறந்த கபபித்த நோயை பீனிசம் ஆகும். உடற்சூடு அதிகரித்துள்ள போது குளிர் காற்றில் ஈடுபடுதல், குளிர்ந்த பானம் அருந்துதல், வெயிலில் அலைந்து வந்த மறுகணம் குளிரூட்டப்பட்ட அறையில் இருத்தல். புகை, தீங்கு விளைவிக்கும் வாயு, தூசி போன்றவற்றை நுகர்தல், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளல்.

    குறிகுணங்கள்

    தும்மல், மூக்குநீர்பாய்தல், மூக்கடைப்பு, தலைவலி மூக்கில் இருந்து சளி, சீழ் போன்றவை வெளியாதல், கண் சிவந்து நீர் வடிதல், தலைபாரம், மூக்கின் துளை சிவந்து காணல், முகம் மற்றும் காது முதலானவை நோதல்.

    வெளி மருத்துவ முறைகள்

    தும்பை, நொச்சி, வேப்பிலை, எலுமிச்சை முதலியவற்றின் இலைகள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு நீராவி பிடித்தல்.

    மூக்கடைப்பிற்கு ஓம பொட்டணமிடல். மூலிகை எண்ணெய் குளியல். தைலங்களை கொண்டு நசியமிடல் வர்ம சிகிச்சை முறை மேற்கொள்ளல்.

    மூக்கடைப்பு மற்றும் அழற்சிக்கு மூலிகையாலான வர்த்தி கொண்டு புகையிடல்.

    அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    சைனசைடிஸ் நோயிலிருந்து தற்கால தற்காத்துக் கொள்ள அதிக உடல் சூட்டை குறைக்கும் படியான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிப்பதற்கான காரணங்களானவை; நேரம் தவறி உண்ணுதல், இரவு வெகு நேரம் கண்விழித்தல். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கரிசாலை, மணத்தக்காளி கீரை, கத்தரிபிஞ்சு முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, வரப்பு நண்டு முதலியவற்றை உணவில் சேர்த்தல் வேண்டும். தினமும் மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்) மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும். வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைமுழுகுதல் வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளான தூதுவளை, மிளகு, புதினா, துளசி, சுக்கு, மஞ்சள் முதலியவற்றை தினசரி சேர்த்தல் வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

    வீட்டு வைத்திய முறை

    மிளகு பாவனம், தூதுவளை ரசம், நண்டு ரசம் முதலியவற்றை அருந்த வேண்டும். இலவங்கப்பட்டை தூள் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்துதல் வேண்டும். மஞ்சள் தூளில் துளசி இலைச்சாறு, தும்பை பூச்சாறு, கற்பூரவல்லி இலைச்சாறு முதலிய சாறுகளை இட்டு நெற்றி மற்றும் மூக்கின் இரு பக்கங்களில் பற்றிடல் வேண்டும்.

    சைனசைடிஸ் நோய்க்கான தக்க சித்த மருத்துவ உள் மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொண்டு நலம் பெற்று வாழ்வோம்.

    • மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.
    • மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம்.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

    வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம். மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.

    இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டு.

    தொப்புள் அருகில் வலியில்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' என்ற குடல் இறக்கம் நோயில் தான் பெரும்பாலும் காணப்படும். தொப்புள் பகுதியில் உள்ள வயிற்று தசை சுவரின் வலு குறைவதால் தொப்புள் வழியாக குடல் இறங்கிவிடும்.

    வயிற்றுக்குள் ஏற்படும் வாயுவின் அழுத்தம், உடல் பருமன், வயிற்று தசைகளில் அதிகமான கொழுப்பு படிவது, நாள்பட்ட இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது, அதிக பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற காரணங்களால் குடலுக்கு முன் உள்ள தசை வலுவிழந்து விடுவதால் குடல் இறக்கம் ஏற்படுகிறது.

    இதற்கான சித்தமருத்துவம்:

    1) மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதாக மலம் கழிய சித்த மருத்துவத்தில் மூலக் குடார நெய் - இரவு 5 முதல் 10 மி.லி. எடுக்க வேண்டும்.

    2) வயிற்றில் உள்ள வாயுவின் அழுத்தத்தை குறைக்க குன்ம குடோரி மெழுகு 250 முதல் 500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்,

    3) வாயுவைப் பெருக்கும் உணவு வகைகளான கிழங்குகள், மொச்சை இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். நாட்பட்ட இருமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்ய வேண்டும். வீக்கம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தால் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×