search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal Temple"

    • சுவாமி கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.
    • 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது.

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது. பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    மேலும் கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள்பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை 'ஓவிய மண்டபம்' என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மண்டல தரிசனம்

    மாங்கல்ய பாக்கியம் மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    • இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
    • கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார்.

    தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இதுதவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார், இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    புகழ்பெற்ற இசை தூண்கள்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்தின் பின்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார், சவுந்தரவல்லி தாயார். சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு தனது வேண்டுதல்களை சவுந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால் அவர் மூலமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார். இதுதவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

    பொக்கிஷ காவலர் சொர்ண ஆகர்ஷண பைரவர்

    சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர்.

    ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர்

    கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி, தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை அடையும்.

    தும்பிக்கை ஆழ்வார்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    • ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டு கள் பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலா கும். வைணவ - சைவ சமய வழிபாட்டிற்கு முன்னு தாரணமாக விளங்கும் இந்த கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில், சிவபெருமான் கருநெல்லிநாதர் சுவாமியாக அருள் பாலிக்கும் சிவன் கோவிலும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும். மேலும் மலை உச்சியில் முருகப்பெருமான் கோவிலும் அமைந்துள்ளது.

    இத்தனை சிறப்பு மிக்க இந்த கோவிலில், ஆனி பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் சுவாமி க்கும், ஸ்ரீசெங்க மலத்தாயார் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க ஆனி பிரமோற்சவ திருவிழா கொடி யேற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங் காரத்தில் எழுந்த ருளிய ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
    • 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.

    இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.

    மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள்)

    உற்சவர்: வைத்திய வீரராகவர்,

    தாயார்: கனகவல்லி

    தீர்த்தம்: ஹிருதாபநாசினி

    ஆகமம்: பாஞ்சராத்ரம்

    விமானம்: விஜயகோடி விமானம்

    புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். ஒரு நாள் (தை மாதம்) தனது பூஜைகளை முடித்துவிட்டு மாவை சுவாமிக்கு நைவேத்யம் செய்தார். அதில் ஒரு பங்கை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கை தான் உண்பதற்காக வைத்திருந்தார். (பொதுவாக அதிதிக்கு உணவளித்துவிட்டுதான் அவர் உண்பது வழக்கம்) அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். உடனே ஒரு பங்கைக் கொடுத்தார். முதியவர் தனக்கு இன்னும் பசி தீரவில்லை என்று கூற, மற்றொரு பங்கையும் அவருக்கே கொடுத்துவிடுகிறார் முனிவர்.

    அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு அடுத்த நாள் முதல் ஒரு வருடம் மீண்டும் தவத்தில் ஆழ்கிறார். ஒரு வருடம் கழித்து இதே போல் பூஜைகளை முடித்துவிட்டு மாவை, சுவாமிக்கு நைவேத்யம் செய்கிறார். ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பங்கை, தான் உண்பதற்காக வைத்திருந்தார். யாரேனும் அதிதி வருகிறார்களா என்று பார்த்தார். அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். இவரும் மகிழ்ச்சியாக அந்த மாவைக் கொடுத்தார். முதியவர் உணவை உண்டுவிட்டு படுத்து உறங்க வேண்டி "எவ்வுள்" என்று கேட்டார்.

    முனிவரும் தான் படுத்து உறங்கும் இடத்தைக் காட்டி, அவ்விடத்தில் படுத்து உறங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். அடுத்த கணமே முதியவர் வடிவத்தில் வந்த திருமால் சயன கோலத்தில் காட்சி அளித்தார். முனிவருக்கு எல்லையில்லா ஆனந்தம். பெருமாளும் முனிவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். முனிவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் இத்தலத்துக்கு எவ்வுள் என்றும், இத்தல பெருமாளுக்கு எவ்வுட்கிடந்தான் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

    தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் வசுமதி என்ற பெயரில் அவதரித்தார். வசுமதியும் திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்போது ஒரு நாள் வீரநாராயணன் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்ற பெருமாள் வசுமதியை மணமுடித்தார். இந்த திருமணத்துக்குப் பிறகுதான் பெருமாளின் பெயர் மாறிற்று. அதுவரை கிங்கிருஹேசன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.

    இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்தடுக்கு ராஜகோபுரம் உள்ள இத்தலம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல விமானம் விஜயகோடி என்றும் வனம் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். லட்சுமி நரசிம்மர், சக்கரத் தாழ்வார் சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் காணப்படும்.

    தை பிரம்மோற்சவம், சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை அமாவாசை, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

    இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும். என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும் வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.

    3 அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. தடைபட்ட திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, அனைத்து கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்களையும் பெற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார். உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும் வழக்கம்.

    நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.

    அமைவிடம்: சென்னையில் இருந்து 47 கிமீ தூரத்தில் உள்ளது.

    • இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
    • இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    தல வரலாறு

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார். பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர்.

    பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள்.

    அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். அவர், லட்சுமி தேவியிடம் "ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?" என்று கேட்டார். லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

    வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள். உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

    அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர். பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள். இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.

    இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர்.

    இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார்.

    அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

    அமைவிடம் :

    எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.

    • இந்த கோவிலில் பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
    • கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார்.

    இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.

    கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல, விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை 'கடல் திருப்பதி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.

    கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி கோவிலில் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, புஷ்கரணி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரியில் எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதி கோவிலிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபோக திருப்பதி லட்டு கன்னியாகுமரியிலும் கிடைக்குமா? முடி காணிக்கை வசதி செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தரிசன நேரம், பூஜை விவரம்

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும்.

    நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும்.

    தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.


    புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது. சத்தியலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து பிரம்மா, ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துவது பிரமோற்சவம். எந்த கடவுளுக்கும் இல்லாத வகையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. அங்குள்ள கோவிலில் தினமும் காலை, மாலையில் உற்சவர் மலையப்பசாமி வலம் வருவார். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    அமைவிடம்

    கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.

    குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    • சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
    • கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களில் ஆத்தூரில் அமைந்துள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இந்த ஊர் `முன்னர் ஆற்று ஊர்' என்ற அழைக்கப்பட்டு பின்னர் மருவி `ஆத்தூர்' என்று வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    பிற்கால பல்லவ மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். பல கோவில்களை நிர்மாணித்தவர். சிதிலமடைந்த பல கோவில்களுக்கு திருப்பணிகள் பல செய்த பெருமை உடையவர்.

    கோப்பெருஞ்சிங்கன் காஞ்சிக்கு அருகே நடைபெற்ற ஒரு போரில் வெற்றி வாகை சூடி பின்னர் வரதராஜப் பெருமாளை வழிபட்டார். கோவிலில் வரதராஜப் பெருமாள் தரிசனம் கொடுத்தார். அப்போது கோப்பெருங்சிங்கனின் மனதில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. இதே எண்ணத்துடன் காஞ்சியில் இருந்து புறப்பட்டு பாலாறு ஓரமாகத் தன் தலைநகரை நோக்கி பயணப்பட்டார்.

    வழியில் நதிபுரம் என்ற ஆத்தூரில் தனது படைகளுடன் தங்குகிறார். தனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கோப்பெருங்சிங்கனின் கனவில் வரதராஜர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். பக்திப்பரவசத்துடன் பெருமாளே என்று விழித்துக் கொள்ளுகிறார் மன்னர். உடனே ஆத்தூரில் கல்யாணக் கோலத்தில் வரதராஜருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் ஆத்தூர் என்ற ஊரில் கல்யாண வரதராஜர் கோவில் உருவான வரலாறு இதுதான். சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.

    ராஜகோபுரமின்றி காணப்படும் இத்தலத்திற்குள் நுழைந்தால் விளக்குத்தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. இத்தலத்தின் மூலவர் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். துவாரபாலகர்கள் அமைந்திருக்கும் இடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் காட்சி தருகிறார்கள். அர்த்த மண்டபத்தில் தேசிகர், உடையவர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் முதலானோர் சிலா ரூபங்களில் எழுந்தருளியுள்ளார்கள். அருகில் விகனச மகரிஷியின் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே உள்ள அந்தராளத்தில் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நர்த்தனக்கண்ணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    கருவறையில் வரதராஜப் பெருமாள் கல்யாண வரதராஜராக ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இடது திருக்கரம் ஊருஹஸ்தமாகவும், கீழ் வலது திருக்கரம் அபயஹஸ்தமாகவும் அமைய பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    சுற்றுப்பிரகாரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த சன்னிதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். மற்றொரு புறத்தில் ஒரு தனி சன்னிதியில் ஆண்டாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தெருவில் சற்று தள்ளி ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் இத்தலத்தில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது. இந்த ஆகம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விகனச மகரிஷி. இவருக்கு இத்தலத்தில் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி முதலான பல உற்சவங்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனி மாதத்தில் கருட சேவை உற்சவமும் விகனசமகரிஷிக்கு ஆடிமாதம் திருவோண நட்சத்திரத்தில் உற்சவமும் நடைபெறுகின்றன.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பட்டாச்சார்யாரின் வீடு அருகிலேயே உள்ளது.

    செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தூர் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • தீபாரதனை காட்டப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

    5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

    8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை. வாழ்த்தினர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை ஒன்றியம் பாளை வடக்கு வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் நொச்சி குளம் பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடா சலபதி பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு தனது பிறந்த நாளை கேக்வெட்டி அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுட னும், ஊர் பொது மக்களுடனும் கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் குளோரிந்தாள், பாளை மேற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், சீனிவாசன், ஆனந்தி சந்திரசேகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், நொச்சிகுளம் கிருஷ்ணாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துக்கென்னடி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை வாழ்த்தினர்.

    • தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
    • பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேடவாக்கம் அருகே மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலையில் உள்ள பொன்மார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத தியாக வினோத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

    இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கோவிலை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன.

    பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த கோவில் 60 அடி நீளம், 35 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. கோவில் விமானம் உள்ள பகுதி மட்டும் 22 அடி நீளம், 14 அடி அகலத்தில் உள்ளது. ஐந்தரை அடியில் பெருமாள் சிலையும், ஐந்தேகால் அடி யில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த கோவிலின் எதிரே கருடன் சன்னதி உள்ளது. கோவில் விமானத்தில் பெருமாளின் அவதாரங்கள் உள்பட 108 சிலைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்த கோவிலின் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்து மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

    தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பொன்மார் கிராமம் ஒரு காலத்தில் தியாக வினோதநல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பெயரிலேயே இந்த ஊர் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஊரில் உள்ள ஒருவர் தனது கனவில் கோவில் தோன்றியதாக கூறினார். இதையடுத்து இந்த கோவில் பற்றிய தகவல்களை ஊர் மக்கள் திரட்டினர். இந்த கோவிலில் சிலைகள் எதுவும் இல்லை. இங்குள்ள கருடன் உருவத்தை வைத்து இது பெருமாள் கோவிலாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அங்கு கிடைத்த வரலாற்று குறிப்புகளையும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூறிய தகவல்களையும் வைத்து தியாக வினோத பெருமாள் கோவில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் பெருமாள் பிரயோக சக்கரத்துடன் அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக பெருமாள் கோவிலில் இருக்கும் சக்கரத்தை போல் இல்லாமல் இது நேராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அமைந்துள்ளது, வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
    ராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர். இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.

    ராமானுஜரின் அவதார தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்போது, பூந்தமல்லி வரதராஜர் ஆலயத்தில் இருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டு செல்லப்படும். அதே போல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடை பெறுகையில், அங்கிருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டுவரப்படும்.

    புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகிறார்கள். இந்த அன்னைக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, புஷ்ப யாகம் நடக்கிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும். திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார்.

    அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லிவிட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ , தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.

    பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவம் அமைத்து மலர்களை தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப்பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
    இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது

    வீரநாராயணர் கோவில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.

    போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோவில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.

    சன்னதிகள்

    வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.

    வீரநாராயணர் வெகு கம்பீரமாக காட்சி தருகிறார். கண்களிலும் வீரம் தெறிக்கிறது. நான்கு கரம் கொண்டவராக, தாமரை ஒன்றின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எட்டடி உயரம் அந்தச் சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த சாளக்கிராமத்தைச் சுற்றிலும் கருடன், காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் காட்சியளிக்கின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் மார்ச் 28 அன்று ஏழு வாசல்களையும் கடந்து பெருமாளின்மீது சூரியக் கதிர்கள் படும். அது ஓர் அற்புதக் காட்சி.

    ஏழடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் காட்சி தருகிறார் யோக நரசிம்மர். கையில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். இரு புறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இங்கும் காட்சியளிக்கின்றனர். முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள அரை வளைவுப் பகுதியை சிற்பக் கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரைச் சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.

    இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது.

    இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.

    கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.

    இந்த ஆலயத்துக்கு மூன்று விமானங்கள்; அதாவது மூன்று கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஒருவித திருமாலின் வடிவம். கூரைப்பகுதி சாய்வாகக் கட்டப்பட்டிருக்கிறது. யானைகளின்மீது ஹொய்சாளர்களுக்குத் தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே என்று பல யானை உருவங்கள் காட்சிதருகின்றன.

    பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது. அங்கு ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும் காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமும் உள்ள பளபளவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
    ×