search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people suffer"

    • ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    குண்டடம் :

    காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

    இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. #Rain #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்தது. இதையொட்டி பலத்த காற்று வீசியது.

    இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் இடிந்து பலர் பலியாகினர். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் முகாம்களில் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மீண்டும் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. இதில் இருந்து அவர்கள் மீள இன்றும் பல நாட்களாகும் அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை-திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.



    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மழையால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வன விலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உரு குலைந்து போய் விட்டது. அங்கு வசித்து மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓட்டு வீடு மறியல் மற்றும் குடிசை வீடுகளில் பெரும்பாலான மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் வீடு புயல் மற்றும் மழையால் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது. பாதுகாப்பு முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ-மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமா? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்னும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. எங்களுக்கு இயற்கை மறுவாழ்வு வழங்கவிடுமா? விடாதா? என்று வேதனை அடைந்துள்ளனர். மழை நிற்காதவரை மீட்பு பணிகள் முழுமை பெறாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இயற்கையின் கையில் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நன்னிலம்- 197.3
    திருவாரூர்- 173.7
    நீடாமங்களம்- 152.8
    கும்பகோணம்- 147.3
    குடவாசல்- 136.2
    மன்னார்குடி- 114.2
    மதுக்கூர்-102.4
    நெய்வாசல்- 98.8
    திருத்துறைப்பூண்டி- 71.2
    மயிலாடுதுறை- 67.9
    மஞ்சலாறு- 61.2
    சீர்காழி- 45.6
    தஞ்சாவூர்- 45.5
    ஒரத்தநாடு- 44.8
    கொள்ளிடம்- 21.6 #Rain #DeltaDistricts
    சேலத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிககள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் கீழ் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் பயன்பாட்டில் உள்ளன.

    பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏ.டி.எம். மற்றும் டெப்பாசிட் எந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது முற்றிலும் குறைந்தது. தேவையான நேரங்களில் தேவைக்கு தகுந்தவாறு ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்து வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.ம்.களில் பணம் இருப்பதில்லை. இதனால் பணத்தை தேடி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம். அலையும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணம் டெப்பாசிட் செய்யும் எந்திரங்களும் பெரும்பலானான நாட்களில் அவுட் ஆப் சர்வீஸ் என்றே காட்டுகிறது. வங்கிகளுக்கு சென்று பணத்தை டெப்பாசிட் செய்ய சென்றால் மிஷினில் பணத்தை டெப்பாசிட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் மிஷின் பழுதால் அவசர தேவைக்கு கூட பணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறுகிறார்கள். இது குறித்து சம்பந்தபட்ட வங்கியில் சொன்னாலும் முறையான பதில் இல்லை.

    இதற்கிடையே நேற்று முதல் சேலம் மாநகரில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லை.இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.களாக ஏறி இறங்கினர். இன்று காலையும் கண்ணில்பட்ட எந்த ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

    இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற பொது மக்கள் பணம் இல்லாத இந்த ஏ.டி.எம். சென்டர்களை மூட வேண்டியது தானே. பணம் இல்லாத ஏ.டி.எம்.களுக்கு காவலாளி ஒரு கேடா? என்று புலம்பியபடியே சென்றனர்.

    இது குறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கும் ஒப்பந்தம் தனியாரிடம் விடப்பட்டுள்ளது. அவர்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வந்து பணம் வைப்பார்கள். ஏ.டி.எம்.கள் காலியானது தொடர்பாக வங்கியில் இருந்து அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை. மேலும் பெரும்பாலான வங்கிகளில் அனைத்து புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட வில்லை. ஏ.டி.எம். எந்திரங்கள் குறைந்த அளவு பணம் வைக்கும் வகையில் உள்ளது.

    பழைய எந்திரங்களாக இருப்பதால் அந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதாகிறது.பழைய எந்திரங்களை மாற்றி விட்டு அதிக அளவில் பணம் வைக்கும் வகையில் நவீன எந்திரங்களை வைத்தால் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது-

    செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வங்கிகள் இயங்காது என்று வதந்தி பரவியதால் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பணத்தை பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் எடுத்து சென்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதாலும் பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கவில்லை.

    இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பணம் முற்றிலும் காலியாகி விட்டது. இன்று காலை முதல் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பப்படும். அதன் பிறகு பொதுமக்கள் தேவைக்கு தகுந்தவாறு பணம் எடுத்து கொள்ளலாம் என்றார்.


    ×