search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parameshwara"

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பேட்டியளித்துள்ளார். #ministerParmeswara #Congress
    பெங்களூரு :

    கர்நாடகா துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அடித்தட்டு சமுதாயத்தினருக்கு உரிய நீதியை வழங்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டதிருத்த மசோதா விரைவில் அமல்படுத்தப்படும்.

    இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் இன்னும் அமலுக்கு வராததால், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உள்பட அனைவருக்குமே வருத்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (நேற்று) பிரியங்க் கார்கே என்னை வந்து சந்தித்து பேசினார். இந்த சட்டம் கர்நாடகத்தில் இன்றோ (அதாவது நேற்று) அல்லது நாளையோ (இன்று) அமலுக்கு வரும்.

    பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலத்தில் சாலைகளில் குழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்த விஷயத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான இடங்களில் சாலை குழிகளை மூடிவிட்டோம். நேற்று திடீரென மழை பெய்த காரணத்தால், சாலைகளில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளன.



    குழிகளை எண்ணி மூடுவது என்பது சாத்தியம் இல்லை. சாலைகளில் குழிகள் ஏற்படும்போது, அதை மூடுகிறோம்.

    பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகார தாகம் உள்ளது. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் அக்கட்சியினர் அமைதியாக இருக்காமல் ஏதாவது சிக்கலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதாவினர் அந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. சில எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு சென்றனர். அதை வேறு ரீதியில் மக்களிடையே எடுத்துக்கூறி குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் சுதாகர் மற்றும் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு அதிருப்தி இருப்பது உண்மை தான். அவர்களின் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அதை நாங்கள் சரிசெய்வோம். மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரியாக வேண்டும் என்று ஆசை இருப்பது சகஜமானது. இதை தவறு என்ன சொல்ல முடியாது.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    இதைதொடர்ந்து அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சமாக தொகுதி நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சத்துடன் பார்ப்பதாக சொல்வது பொய். எனக்கு தெரிந்தவரையில் அவர் அனைவரையும் சரிசமமாக பார்த்து நிதி ஒதுக்கீட்டை செய்கிறார்‘ என்றார். #ministerParmeswara #Congress
    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி அரசை குலைப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக துணை முதல்வர் பரமேஸ்வரா குற்றம்சாட்டியுள்ளார். #Parameshwara #KarnatakaCongress
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனினும் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும், சில எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப்போவதாகவும், இதன் காரணமாக கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்றும் செய்திகள் வெளியாகின.



    இந்நிலையில், துணை முதல்வர் பரமேஸ்வரா இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. உறுப்பினர்களிடையே சில காரணங்களால் அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மட்டும்தான். கூட்டணி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    அரசுக்கும், அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்படும். சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி ஊடக தகவல்களின் அடிப்டையில் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவையில் காங்கிரசுக்கு வழங்கவேண்டிய 6 இடங்கள் குறித்து கேட்டதற்கு, சித்தராமையா வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் இறுதி செய்யப்படும் என்றார் பரமேஸ்வரா. #Parameshwara #KarnatakaCongress

    நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaCMRace #Congress #Parameshwara
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சொகுசு விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமையும் பட்சத்தில், பரமேஸ்வராவிற்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #KarnatakaCMRace #Congress #Parameshwara
    ×