search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parameshwara"

    • மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.
    • பா.ஜனதா மோசமான ஆட்சியை நடத்தியதால் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

    பெங்களூரு :

    மூத்த மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    5 முக்கியமான உத்தரவாத வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிகளை அமல்படுத்த முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இது பா.ஜனதாவினருக்கும் தெரியும்.

    ஆட்சி நிர்வாகத்தை நடத்திய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. ஒரு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாதா?. அடுத்த வாரம் 2-வது மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்குறுதிகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் தான் அமல்படுத்த வேண்டும். இதை எதிர்க்கட்சிகளால் செயல்படுத்த முடியுமா?.

    நாங்கள் பொறுப்புடன் பேசுகிறோம். பா.ஜனதா மோசமான ஆட்சியை நடத்தியதால் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பா.ஜனதா பாடம் கற்கவில்லை. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டுமா?.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    மந்திரி பிரியங்க் கார்கே கூறும்போது, "முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்துள்ளோம். 15 நாட்களில் முழுமையான அரசை அமைத்துள்ளோம். ஆனால் பா.ஜனதாவால் இன்னும் தனது தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    • நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.
    • காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது கா்நாடக சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பது குறித்து கடிதம் கொடுத்தார். பதவி ஏற்பு விழா நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கவர்னரை சந்தித்த பிறகு பரமேஸ்வர் கூறுகையில், "புதிய முதல்-மந்திரியை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி மேலிடம் ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கூறியுள்ளது. இது சரியல்ல. நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.

    குறைந்தபட்சம் துணை முதல்-மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி பதவியை அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவசியம். நான் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்துவேன்" என்றார்.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி.
    • முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

    நாளை (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியான பின்பு, அதுபற்றி எங்கள் தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். துமகூரு மாவட்டத்திலும், கொரட்டகெரே தொகுதிகளிலும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

    அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடத்தி முதல்-மந்திரி யார்? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். காங்கிரஸ் மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்.

    கட்சி தலைமை கூறிய பின்பு முதல்-மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், அனல் பறக்கும் வார்த்தைகளால் சாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

    கொரட்டகெரே தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார். அவர் கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பிரசாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ்வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார்.

    பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கிரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் வேட்பாளர் பரமேஸ்வர் மீது திட்டமிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

    பைரேனஹள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஏற்கனவே, பரமேஸ்வர் கடந்த 19-ந்தேதி கொட்டகெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங்கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் 2-வது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பரமேஸ்வர் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி பரமேஸ்வராவிடம் நான் கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். #Parameshwara #Siddaramaiah
    உப்பள்ளி :

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலீஸ் துறை பற்றி எனக்கும், பரமேஸ்வருக்கும் வாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் அவரிடம் போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம்.

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து என்னுடைய கருத்தை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் தெரிவித்தேன். யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாதவாறு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் துறை பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்தார். இதற்காக வேணுகோபால் டெல்லி சென்றுள்ளார்.



    மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களால் 24 மணி நேரத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் உமேஷ் கத்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்று எதுவும் நடக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும். எப்படியாவது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி அமைத்தே எதிர்கொண்டோம். அதே போல் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும்.

    தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கும்போது, தொகுதிகள் ஒதுக்கீடு உள்பட அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parameshwara #Siddaramaiah
    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல் மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். #GParameshwara #Lankeshkilling
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

    கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சனாதன் சன்ஸ்த்தா என்னும் இந்துத்துவ அமைப்பின் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று கருதியதால் கவுரி லங்கேஷை கொல்ல முயன்றதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்தார்.



    பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara  #Lankeshkilling
    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் பெங்களூருவில் விவசாய கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கலந்து கொண்டு பேசியதாவது:-

    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம். இந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.

    பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு புதிதாக 184 வகையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்தில் நானும் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். முந்தைய காலங்களில் உணவு தானியங்களை நமது நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் இன்று நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறோம். இன்னும் ஏராளமான சாதனைகள் செய்ய வேண்டியது உள்ளன. இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை மேற்கொண்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த வகையில் பங்களிப்பை அளிக்க முடியும்.

    இவ்வாறு பரமேஸ்வரா பேசினார். #Parameshwara
    பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகரில் சிலர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குப்பை குவிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் குப்பைகளை வீசினால், அபராதமாக ரூ.500 விதிக்க மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும். பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை பிடிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். குப்பைகளை அகற்றும் பணி தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 29 லட்சம் வீடுகளும், 5 லட்சம் வணிக நிறுவன கட்டிடங்களும் உள்ளன. நகரில் தினமும் மொத்தம் 5,700 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் வீடுகளில் இருந்து 4,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை அகற்ற 4,213 ஆட்டோ டிப்பர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றன. 566 குப்பை சேகரிக்கும் லாரிகள், 8 தானியங்கி தூய்மை எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    நகரில் 18 ஆயிரத்து 500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 11 இடங்களில் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பையை சேகரிக்கும் லாரிகளுக்கு ஜி.பி..எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை பொருத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    புதிய குப்பை லாரிகள் மற்றும் ஆட்டோக்களை வாங்கும்போது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களே நிர்வகிக்கும் அம்சம் சேர்க்கப்படும். புதிதாக தூய்மைபடுத்தும் எந்திரங்களை வாங்க டெண்டர் விடப்படும். இப்போது பெல்லஹள்ளியில் உள்ள குப்பை கிடங்கு மூடப்படும். அதற்கு பதிலாக தொட்டபள்ளாபுராவில் குப்பை கிடங்கு நவீனபடுத்தப்படும்.

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும். பிடதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும். குப்பையை பிரச்சினையை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara #Modi
    பெங்களூரு :

    பெங்களூருவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

    இந்த 4½ ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல.



    இந்த 4½ ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவி யார், யாருக்கு வழங்கப்படும் என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றாலே பிரச்சினைகள் வருவது சகஜம் தான். ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara #Modi
    மாநில எல்லை பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு பண பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று தென்மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பரமேஸ்வரா கூறினார். #Parameshwara #Congress
    பெங்களூரு :

    பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தென் மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டி.ஜி.பி. நீலமணி ராஜூ, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டை கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியான பரமேஸ்வரா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது:-

    தென் மாநிலங்களை சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெறுவது மிகவும் அவசியமானதாகும். இந்த மாநாடு தென்மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை குறைக்க பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் போலீசார் தினம், தினம் புதிய சவால்களை சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற புதிய சவால்களை இந்த மாநாட்டில் நடைபெறும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் எதிர்கொள்ள முடியும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாநிலத்தின் எல்லை பகுதிகளில் இருந்து தான் முறைகேடாக பண பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு பண பரிமாற்றம் நடைபெறுகிறதா? என்பதை ஒவ்வொரு மாநில போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டியது அவசியமாகும். சமூக வலைதளங்கள் மற்றும் வேறு வழிகளில் இளைஞர்களை தூண்டிவிட்டு பயங்கரவாத செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட வைப்பதை தடுப்பது போலீசாருக்கு இருக்கும் மற்றொரு மிகப் பெரிய சவாலாகும். இத்தகைய சவால்களை போலீசார் திறமையாக கையாள வேண்டும். அந்த சவால்களை திறமையாக சமாளித்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.


    பெங்களூருவில் நடந்த தென்மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். அருகில் டி.ஜி.பி.க்கள் நீலமணிராஜு (கர்நாடகம்), டி.கே.ராஜேந்திரன்(தமிழ்நாடு), லோகநாத் பெகெரா(கேரளா) மற்றும் பலர் உள்ளனர்.

    இந்த மாநாட்டின் மூலம் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால், சிறப்பான முறையில் பணியாற்ற முடியும். சட்டவிரோத செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநிலங்களுக்கு இடையே உதவிகள் செய்வது அவசியமானதாகும். தற்போது நமது நாட்டில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவது அதிகமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக போலீஸ் துறையிலும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் எங்கு ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை கண்டறிவதும் தேவையான ஒன்றாகும். இந்த மாநாடு 5 மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், அவற்றை தடுக்கவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    பின்னர் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு பெங்களூருவில் முதல் முறையாக நடந்துள்ளது. போலீஸ் துறையை மேம்படுத்துவது, குற்றங்களை குறைப்பது, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்களின் மாநாட்டை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும், அதனை சமாளிப்பது குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மாநாடு பயன் உள்ளதாக இருக்கும்“ என்றார். 
    ×