என் மலர்
இந்தியா

அமலாக்கத்துறை சோதனை: தூய்மையானவர், நேர்மையானவர்..! பரமேஷ்வராவுக்கு டி.கே. சிவக்குமார் ஆதரவு
- ரன்யா ராவுக்கு பரமேஷ்வரா 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.
- பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கர்நாடகா நடிகை ரன்யா ராவ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும், போலி பணவர்த்தனை மூலம் இவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சென்றதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் யாரெல்லாம் இவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்.
கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் (Home Minister) பரமேஷ்வராவுக்கு தொடர்புள்ள கல்வி நிறுவனத்தின அறக்கட்டளை ரன்யா ராவுக்கு 40 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை பரமேஷ்வரா தொடர்பான கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பரமேஷ்வராவுக்கு ஆதரவு தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
குடும்ப நிகழ்ச்சி அல்லது திருமண நிகழ்ச்சியின்போது ரன்யா ராவுக்கு பரிசாக 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை பரமேஷ்வரா கொடுத்திருக்கலாம்.
நான் பரமேஷ்வரா உடன் பேசினேன். அவரை இன்று காலை சந்தித்தேன். அவர் 15 முதல் 25 லட்சம் வரை கொடுத்துள்ளார். நாங்கள் பொது வாழ்க்கையில் உள்ளோம். பலர் அறக்கட்டளை நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சி அல்லது திருமணத்தில், பரிசுப்பொருட்கள் கொடுத்திருக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் ரன்யா ராவை கடத்தல் போன்ற சட்டவிரோத விசயத்தில் ஈடுபட பரமேஷ்வரா ஊக்குவிக்கிறாரா?. ரன்யா ராவ் ஏதாவது தவறு செய்திருந்தால், சட்டப்படி அவள் தண்டிக்கப்படட்டும்.
பரமேஸ்வராவைப் பொறுத்தவரை, அவர் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன், அவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர், நாங்கள் அவரைப் பற்றி பெருமைப்படுகிறோம், அவர் ஒரு பெரிய தலைவர்.
அவர் எட்டு வருடங்கள் கட்சித் தலைவராக இருந்தார். மாநிலத்திற்கு நிறைய சேவை செய்துள்ளார். 1989 முதல் என்னுடன் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார். அவர் ஒரு சுத்தமான, நேர்மையான மனிதர்... திருமணத்திற்கு ஏதாவது பரிசு கொடுத்திருக்கலாம், அவ்வளவுதான். அவர் பதில் சொல்வார்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.






