search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kids Care"

    சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
    சிறுவர்-சிறுமியர்களை காலையில் பல் துலக்க வைப்பதே பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மூன்று, நான்கு வயது கடந்த குழந்தைகள் பல் துலக்குவதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். அவர்களுக்கு பெற்றோரே பல் துலக்கிவிடும் நிலையும் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் டூத் பிரஷின் மேல்மட்ட பகுதி முழுவதும் பற்பசையை தடவி கொடுத்துவிடுவார்கள். அப்போதுதான் பற்களை நன்றாக சுத்தம் செய்ய முடியும் என்று நினைப்பார்கள். அது தவறானது.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில்தான் பற்பசையை தடவி கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலும் நான்கில் ஒரு பகுதி அளவுக்குத்தான் பற்பசையை உபயோகிக்க வேண்டும். அதுதான் குழந்தைகளின் பற்களுக்கு ஆரோக்கியமானது.

    அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல் துலக்கு வதற்கு பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இருக்க வேண்டும். மென்மையான பிரஷ்தான் பற்களுக்கு பாதுகாப்பு தரும். கடின பிரஷ்களை பயன்படுத்துவது பற்களின் ஈறுகளுக்கு பங்கம் விளைவித்துவிடும். குழந்தைகள் உபயோகப்படுத்தும் பிரஷ் தலைப்பகுதி ஒன்றரை அங்குலம் அளவில் இருப்பது நல்லது.

    குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் வரையாவது பல் துலக்க வைக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே குழந்தைகளை பல் துலக்க வைத்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் பல் துலக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வில் 38 சதவீத குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பற்பசை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பட்டாணி அளவில்தான் பற்பசையை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
    பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
    குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.

    பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.

    தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.

    குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.

    தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.

    டயாபர் தேர்வு என்பது சின்ன விஷயமாக தோன்றினாலும், உங்கள் குழந்தையை மிக வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் டயாபரையே சார்ந்திருக்கிறது.














    குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன்.

    தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தை ஈரத்திலேயே ஊறி அலர ஆரம்பித்த பிறகுதான் அதை மாற்றுகிறார்கள். இதனால், எப்போதும் குழந்தை ஈரப்பதத்தோடு இருப்பதால் டயாபரில் கலந்துள்ள ரசாயனம் குழந்தையின் தோலில் பட்டு, புண்களை ஏற்படுத்திவிடுகிறது.

    அம்மாவிற்கு சௌகரியம்தான் இருந்தாலும், குழந்தையின் ஆரோக்கியம் முக்கிமாயிற்றே. தனித்துவமான உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள உங்களுக்காக டயாபர் தேர்வு செய்வதில் சில டிப்ஸ்கள் இதோ...

    உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கேற்ற டயாபரை தேர்ந்தெடுக்கும்போது, அது சரியாகப் பொருந்துவதால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தாது. இதனால் உங்கள் குழந்தை சௌகரியமாக உணரும்.

    அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான டயாபரை தேர்ந்தெடுக்கும்போது நனையாமல் இருப்பதும், ஈரப்பதமில்லாததாகவும் இருப்பது முக்கியம்.

    குழந்தை கால்களை அசைக்கும்போது இடுப்பு மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வு ஏற்படும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், சொரசொரப்பான டயாபர்கள் உரசி, அந்த இடங்களில் சிவந்து, தடித்துக் கொண்டு, சிலநேரங்களில் தோலே உரிந்தும் போய்விடும்.

    இதனால் எரிச்சல், வலி உண்டாகும். அதிலும் உங்கள் குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவானது என்றால் நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு உடலோடு பொருந்தக்கூடிய, மெல்லிய பருத்தித் துணியினாலான டயாபர்கள்தான் சிறந்தவை. அவை உராய்வை ஏற்படுத்தாது.

    அதிலும், வெயில் காலங்களில் குழந்தையின் தொடை இடுக்குகளில் வியர்வை அதிகம் சுரந்து உராய்வின் போது கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த பருவத்திற்குமே உராய்வை ஏற்படுத்தாத மென்மையான பருத்தித் துணி சிறந்ததாக இருக்கும்.

    பயணங்களிலும், டே கேரில் விடும்போதும் டிஸ்போசபல் டயாபரை உபயோகிப்பது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது மட்டும் உபயோகிக்கலாம். இருந்தாலும் குழந்தையின் உடல்நலம் கருதி, பெற்றோர்கள் கூடியவரை காட்டன் துணியால் ஆன டயாபரையேஉபயோகிப்பது நல்லது.

    உங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரக்கூடிய சுத்தமான, ஆரோக்கியமான டயாபர்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தரக்கூடிய அனைத்துமே மிகச்சரியானதாக இருக்க வேண்டும்.
    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

    இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள். இதை பல பெற்றோர் உணர்வதில்லை. கண்டித்தால் மட்டுமே பிள்ளைகள் சரியான இலக்கை அடைவார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுக்கும்போது, தங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் ஆசியர்கள் வசம் விஷயத்தை கொண்டு போய் விடுகிறார்கள். இது பிள்ளைகளின் தன்மானத்தை உசுப்பி விட்டு விடுகிறது. இதனால் பெற்றோரை எப்படி பழி வாங்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். இந்த களத்தில் ஓடத்தொடங்கியிருக்கும் தங்கள் வீட்டுக்குழந்தைகள் சரியான இலக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்கும்விதமாக அவ்வப்போது பெற்றோர் மூக்கை நீட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

    இந்த மாதிரியான ஏமாற்றம் பெற்றோருக்கு ஏற்படாதிருக்க அவர்கள் செய்யவேண்டியது என்ன?

    பிள்ளைகளை தட்டிக்கொடுங்கள். அதுவரை சரியாகப் படித்தவர்களை `இந்த வகுப்பிலும் நீ உன்திறமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கொடுங்கள். ஒருபோதும் `இந்த வருஷம் மட்டும் கோட்டை விட்டுட்டா படிப்பு சாம்ராஜ்யமே சரிந்து விடும்’ என்கிற மாதிரி பயமுறுத்தாதீர்கள். ரொம்பவும் கடினப்படுத்தும் பாடத்துக்கு அவசியப்பட்டால் திறமையான ஆசிரியர் வைத்து சிறப்புப்பயிற்சி கொடுங்கள்.

    பிள்ளைகளுக்கு படிப்பு விஷயத்தில் எல்லாமே செய்து விட்டோம். இனி படிப்பது அவர்கள் கடமை என்று எண்ணி நீங்கள் சீரியல் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. முக்கிய பரீட்சை நாட்களிலாவது உங்கள் நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டும். பாடத்தில் பிள்ளைகள் கேட்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் அளவுக்கு நீங்கள் கற்ற கல்வி உதவும் என்றால், அதையும் தயங்காமல் செய்யுங்கள்.

    நம் கல்வி முயற்சியில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் என்று பிள்ளைகள்உணர்ந்தாலே அவர்கள் படிப்பில் இன்னும் அதிக அக்கறையாகி விடுவார்கள். `நம்மை நேசிக்கும் பெற்றோருக்காவது நாம் சிறப்பான வெற்றியை பெற்றாக வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களிடம் நிலைவரப் பெற்று எப்படியாவது சாதிக்கத் தூண்டும். இந்த நிலை நீடிக்கும்போது ஆண்டுத் தேர்வு அவர்களை கல்வியில் சாதித்தவர்களாகவும் வெளிப்படுத்தும்.

    அன்பான அணுகுமுறைக்கு எப்போதுமே பலன் நிச்சயம்.
    பவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த குழந்தைகளின் இளம் சருமத்திற்கு ஏற்றது என்று பல்வேறு விதமான பவுடர்களும், கிரீம்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உள்ளபடியே அவை குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தொடர்பான கேள்விகளும்.. நிபுணர்களின் பதில்களும்..!

    பிரபலமான நிறுவனத்தின் ‘பேபி சோப்’ பயன்படுத்தியும், குழந்தையின் சருமம் வறண்டு போகிறதே ஏன்?

    பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது. அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.

    பிறந்த குழந்தையை தினமும் சுடுநீரில் குளிப்பாட்டலாமா?

    குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாகக்கொண்ட குழந்தைகளை இரண்டு, இரண்டரை கிலோ எடை வரும் வரை பெரும்பாலும் குளிப்பாட்டுவதில்லை. உடல்சூட்டை பராமரிக்க அவ்வாறு செய்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குளிப்பாட்டும்போது சளித்தொந்தரவும், காய்ச்சலும் ஏற்படலாம். அதிக சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. இளம் சுடுநீரில்தான் குளிப்பாட்டவேண்டும். பால்குடிக்கும் குழந்தைகளின் கழுத்து இடுக்கில் பால் வடிந்து அழுக்கு படிந்திருக்கும். அதனால் அடிக்கடி கழுத்துப் பகுதியை துடைத்து சுத்தம்செய்யவேண்டும்.

    குழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?

    ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.

    நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

    எப்போதிருந்து குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பூசலாம்?

    இரண்டு வயது வரை அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளின் சருமத்தை ஜொலிக்கவைக்க என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதற்கான கிரீம்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது அவர்கள் பாரம்பரியம், கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவு போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டது. சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ போன்றவை உதவும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது விஞ்ஞானரீதியாக நிரூபணமாகவில்லை. அதுபோல் கடலை மாவு, சிறுபயறு மாவு போன்றவைகளை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லதல்ல. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு அவை ஏற்றதல்ல.

    குழந்தைகளின் பிஞ்சு முடிகளுக்கு ஷாம்பு தேவையா?

    குழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

    குழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.

    குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக ‘டயாபர்’ பயன்படுத்தலாமா?

    அதிக நேரம் டயாபர் பயன்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும். திட்டுகளும், பருக்களும் தோன்றும். அதற்கான கிரீமை பயன்படுத்தி குணப்படுத்தவேண்டும். உள்ளே காட்டன் துணி வைக்கப்பட்டிருக்கும் டயாபர் கடைகளில் கிடைக்கும். தேவைப்படும்போது மட்டும் அதனை பயன்படுத்துங்கள். அதிக தூர பயணம் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட நேரத்தில் பழையதை மாற்றிவிட்டு புதியதை இணைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்து குழந்தை மலஜலம் கழித்திருந்தால் உடனே டயாபரை அப்புறப்படுத்திவிடுவது அவசியம். பின்பு தண்ணீரால் மென்மையாக தேய்த்துக்கழுவி, ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு துடைத்துவிட்டு புதிய டயாபரை இணைக்கவேண்டும். 
    குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
    பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

    காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.

    பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.



    அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.

    சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
    உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

    குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
    குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
    குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

    சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள்தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும். படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.

    அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உரிய நேரத்தில் தூங்கச்செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்திக்கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

     உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும். எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

    ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அவனை வெற்றியாளனாக உயர்த்தும். 
    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
    இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.

    தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

    நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.

    இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.



    இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.

    ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

    அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
    குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது தாயின் கடமை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
    குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.

    0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.

    6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.

    8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். 
    இந்தக் காலத்து பெற்றோர் தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்து விடுகிறார்கள்.
    அப்பா - அம்மா இருவரும் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்க… விவரம் புரியாத குழந்தை அம்மாவைத் தேடி, தவழ்ந்து போய் காலைப் பிடிக்கும். உடனே,  குழந்தையைத் தூக்கி, வாக்கரில் உட்காரவைத்து விடுகிறார்கள், இந்தக் காலத்துப் பெண்கள். தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என இப்படிச் செய்யும் பெற்றோர்கள், குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்து விடுகிறார்கள்.

    அதே போல, “எங்க பப்பு, தவழவே இல்லை தெரியுமா? குப்புற விழுந்ததுக்கப் புறம், நேரடியாக உக்காந்துடுச்சு!’ என்று பெருமையாகப் பேசுவார்கள் சில பெற்றோர்கள். அதுவும் பெருமைக்குரிய விஷயம் அல்ல; கவலைக்குரிய விஷயம். தவழ்தல் என்பது, குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல்.
    குழந்தை அதைச் செய்யாமல், அடுத்தக் கட்டத்துக்குப் போவது சரியானது அல்ல. தவழ்தலைத் தடுத்தால், பின்னாளில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனில் குறைபாடு ஏற்படும்.
     
    தவழ்தல் என்னும் செயல், குழந்தையின் இடது மற்றும் வலது மூளைப் பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிப்பதன் அறிகுறி. இந்தக் கால கட்டத்தில், குழந்தைகள் எழுந்து நடந்து, வீடு முழுவதும் ஓடி, ஏறி, இறங்கி எனத் துறு துறுவென இருக்கும் நிலை. மூளையின் இட வலப்பகுதிகளின் ஒருங்கிணைப்பு என்பது, குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று.

    அப்போது தான், குழந்தை எந்த வேலையையுமே நன்கு செய்ய முடியும். படிப்பு என்பது இடது பக்க மூளையின் வேலை. மற்ற படைப்புத் திறன் எல்லாம் வலது பக்க மூளையின் வேலை. எனவே, இரண்டும் ஒருங்கிணைந்து வேலை செய்வதைப் பொறுத்து தான், குழந்தையின் மற்ற வளர்ச்சிகள் இருக்கும்.



    எனவே, குழந்தைகள் தவழும் பருவத்தில், அவசியம் அவற்றைத் தவழ விட வேண்டும். தவழும் பருவத்தில் அதைத் தடுத்து, குழந்தையைத் தூக்கி வாக்கரில் போடுவதால், மூளையின் தூண்டுதலை நாம் தடை செய்கிறோம்.  கல்வியில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள், தவழ்வதைத் தவற விட்டவர்களாக இருக்கலாம். பெற்றோர்களுக்கு இது ஓர் அவசியமான ஆலோசனை.

    செயல்திறன் குறைந்த குழந்தை (Clumsy child) தவழாமல் வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் `க்ளம்ஸி சைல்ட்’ எனப்படும் செயல்திறன் குறைந்த குழந்தைகளாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

    உறுப்புகளின் வளர்ச்சியை ‘உள்ளிருந்து வெளி வரை’ என்றும் செயல்பாடுகளின் மேம்பாட்டை ‘தலை முதல் கால் வரை’ என்றும் நாங்கள் குறிப்பிடுவோம்.
    உள்ளுறுப்புகள் அம்மாவின் வயிற்றுக்குள் குழந்தை இருக்கும் போதே முழுமையான வளர்ச்சி அடைந்து விடும்.

    வெளியே வந்தபிறகு, கை, கால், போன்ற மற்ற உறுப்புகள், பெரியவர்களுக்கு இருப்பது போன்ற தோற்றத்தில் வளர ஆரம்பிக்கும்.

    முதல் 3 மாதங்களில் தலை நிற்பது, 5 மாதங்களுக்குள் குப்புறக் கவிழ்வது, பிறகு உட்கார்வது, முட்டி போட்டு தவழ்வது (நாலு கால் தவழ்தல்), அதன் பின்னர் எழுந்து நிற்பது, நடப்பது, ஓடுவது என்று சாதாரணமான குழந்தைக்கு தலை முதல் கால் வரை வளர்ச்சிகளும் சாதாரணமாக இருக்கும்.

    ஒன்று முதல் 3 வயது வரை குழந்தை மிக துறு துறுப்பாக ஓடி ஆடுவது என்று இருக்க வேண்டும்.
    ×