search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kids Care"

    காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
    எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.

    இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.

    இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

    உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.

    குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது. குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். 
    மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
    நாம், கோடையில், வெப்பம் குறைவாக இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறோம். தண்ணீர் நிறைந்த இடங்களில் குளியல்போட்டும், விளையாடியும் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலை நாடுகளில் தண்ணீர் பூங்காக்களுக்கும், பனிப்பிரதேசங்களுக்கும் படையெடுப்பது அங்குள்ள மக்களின் வாடிக்கை. மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். தண்ணீர் விளையாட்டுகள் என்றால் நீச்சல், படகுப்போட்டி, தண்ணீர் ஜிம்னாஸ்டிக், ஐஸ் சிற்பம் போன்றவையல்ல. வீட்டிலேயே எளிதாக விளையாடி மகிழும் வேடிக்கை விளையாட்டுகள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    தண்ணீர் குண்டு

    சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால், அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும்.

    இதேபோல மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர் கையிலும் பலூனை கொடுத்துவிட்டு நீரை துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்று கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ அவர் தோற்றவர் ஆவார். இந்த தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.

    நீர் நிரப்புதல்

    பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர் வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில் அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்பு கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.



    குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு அவர்களை நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம் பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும்.

    ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு விரைவாக செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

    நனையாமல் தப்பித்தல்...

    புல் தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர் துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம்.

    முதலில் நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரை தெளிக்க தயாராக நிற்க வேண்டும்.

    தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில் நனையாமல் ஓடிக்கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில் அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரை தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல் படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.



    தண்ணீர் வாலிபால்

    ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏராளமான பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில் உடையாமல் இருக்கும்.

    குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து துண்டின் நுனி களைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும். துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக் கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.

    பலூன் பிடித்தல்

    நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பெரிய வட்டத்தில் சிறுவர்களை சிறிது இடைவெளியில் நின்று கொள்ளுங்கள். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்யுங்கள். யார் பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர் கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும். இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் ஆவார்.

    இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வு நேர உடைக்கு அல்லது குளியல் உடைக்கு மாறிக் கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால் குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் இந்த விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். குடிநீரில் விளையாடுவதையும், தண்ணீர் அதிகமில்லாத நேரத்தில் தண்ணீரை கொட்டி விளையாடுவதும் அம்மாவுக்கு சங்கடத்தை தரும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது குட்டீஸ். நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்தானே. சமர்த்து குட்டீஸ்... 
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும். மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.

    குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.

    குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை. 
    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.
    குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.

    காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.

    மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.

    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.

    காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.

    டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.

    ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.

    சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.

    மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.

    இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.

    இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.

    இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.

    குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
    கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்கள் மனதில் சுற்றுலா எண்ணமும், விளையாட்டு எண்ணங்களும் அலைமோதும். கோடையின் கொடுமை தெரியாமல் குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. செல்போன் விளையாட்டுகளைவிட சிறந்தவை பாரம்பரிய விளையாட்டுகள். அவை செல்போன் விளையாட்டுகளைப்போல நம்மை சோர்வடைய வைப்பதில்லை. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    தாயம்

    சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.

    கிச்சுக்கிச்சு தாம்பளம்


    கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.

    பச்சைக்குதிரை

    பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.



    பல்லாங்குழி

    பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

    கிட்டிப்புள்

    சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.

    ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்

    தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.

    இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.



    கயிறாட்டம்

    சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.

    ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.

    இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.

    பம்பரம்

    சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.

    அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

    பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

    பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
    குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது; பெற்றோருக்கும் நன்மை தராது.

    தொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து, அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல் உருவாகும்.

    பெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது. எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே இருக்கும்.

    அந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல; தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான் தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை உண்டாகி விடும்.

    இதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

    குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

    குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

    ‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

    குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.
    குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு தாயின் கடமை தான். இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.
    குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.

    தாய் செய்யும் தவறுகள் என்னென்ன?

    * ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச கூடாது.

    * பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம்.

    * குழந்தை ஒரு வயது ஆனதும் ஓடியாடி விளையாடும்போது சில தாய்மார்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. இது தவறு. சிறிது நேரமாவது குழந்தையுடன் ஓடியாடி விளையாடுவதுதான் சரி.

    * வீட்டில் சண்டை போன்றதை பார்க்கும் குழந்தைகள் மனதால் வெகுவாக பாதிக்கின்றனர். இதைத் தாயும் தந்தையும் சேர்ந்தே தவிர்க்க வேண்டும்.

    * பிடிவாதம் செய்யும் குழந்தைகளை அடிப்பது தவறு. பிடிவாதமாக உள்ள குழந்தைக்கு முதல் முறையில் விட்டுக் கொடுத்து பின் பிடிவாதம் செய்ய கூடாது எனச் சொல்லலாம்.

    * கிள்ளுவது, கொட்டுவது, அடிப்பது, கடுஞ்சொற்களில் திட்டுவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்துவிட்டால் பாசத்தால் கண்டிக்காமல் இருப்பது பெரும் தவறு. சில நிமிடங்கள் பேசாமல் இருந்து, பின் குழந்தையை கண்டித்து மெதுவாக புரிய வைத்துவிட வேண்டும்.

    * தன் குழந்தை மற்ற குழந்தைகளை அடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடித்து விளையாடினால் உடனே தடுத்து கண்டிப்பதும் அவசியம்.

    * டிவியை பேட்டால் அடிப்பது, ரிமோட்டை தூக்கி போடுவது போன்றவற்றை குழந்தைகள் செய்தால் அதன் மதிப்பு, அதன் முக்கியத்துவம், அந்தப் பொருளின் விலை போன்றவற்றை சொல்லி இச்செயல்களை தடுக்க புரிதல் ஏற்படுத்தி விடலாம்.

    * குழந்தை உண்ணும் தின்பண்டங்களைத் தன் குழந்தைக்கு என வைத்துக்கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் குழந்தையையே கொடுக்குமாறு சொல்லி அறிவுறுத்த வேண்டும்.

    * பொய் சொல்வதைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர் அதிகமாக உள்ளனர். ஆரம்பத்திலே பொய் சொல்ல கூடாது. பொய் சொன்னால் பிறர் கேலிக்கு ஆளாக வேண்டி இருக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

    * குழந்தைகள் தவறாக, மரியாதைக் குறைவாக பேசும்போது பார்த்து ரசிக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சிரித்தால், அது குழந்தைகளின் மனதில் பதிந்து வெளியிடங்களிலும் அதையே செய்யும்.

    * குழந்தை கேட்டவுடன் வெளி உணவுகளை வாங்கி தருவது தவறு. அதே உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடலாம் எனச் சொல்லி புரிய வைக்கலாம். மேலும், வயிறுக்கு கெடுதி என்றும் சொல்லுங்கள்.

    * குழந்தைக்கு தேவையில்லாமல் காசு கொடுப்பதைத் தவிருங்கள். காசை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டலாம். அந்தப் பணத்தை குழந்தைக்கான உடை, மற்ற முடியாத குழந்தைகளுக்கு நோட், பேனா வாங்கி தருவது மிக சிறப்பு. இதெல்லாம் குழந்தையை நல்வழிப்படுத்தும்.

    * நேரமின்மை காரணத்தால் பெற்றோர் குழந்தைகளிடம், பொறுமையாக இருப்பது இல்லை. பொறுமை இல்லாத பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் அதிக இடைவெளி விழும்.

    * குழந்தை செய்யும் ரசிக்கும்படியான குறும்புகளை ரசிப்பதும் தவறை கண்டிப்பதும் சமபங்காக இருத்தல் நல்லது. ஆனால், தற்போது இது குறைந்து வருகிறது.

    * பிற குழந்தையை ஒப்பிட்டு பாடுவது, ஆடுவது, படிப்பது போல தன் குழந்தை இல்லை என வருத்தப்படுவதும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. இதைத் தவிர்க்கவும்.

    * குழந்தையை அடிக்கடி பாராட்டுவதில்லை. இதனால் குழந்தைகள் சோர்வடையும். முடிந்த அளவு குழந்தையை பாராட்டுங்கள்.

    * குழந்தையிடம் நட்பாகவும் கண்டிப்பாகவும் இருந்தால் நல்ல குழந்தையை வளர்த்து எடுக்க முடியும்.

    * அதிக நாடகங்களைப் பார்ப்பதை அவசியம் தவிருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் குழந்தை கவனிக்கின்றது என மறக்க வேண்டாம்.

    * நன்மை செய்தால் நல்ல விளைவு, தீமை செய்தால் தண்டனை கிடைக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

    * ஆண் குழந்தைக்கு இரண்டு முட்டை, பெண் குழந்தைக்கு ஒரு முட்டை தருவது என வேறுபாடு காண்பிக்க கூடாது.

    * ஆண் குழந்தைதான் நடனம், விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெண்கள் அல்ல என பெண் குழந்தைகளைத் தடுப்பது சரியான வளர்ப்பு முறை அல்ல.

    * அன்பு கலந்த கண்டிப்பு, நியாயமான கோபம், தேவையானவற்றுக்கு பாராட்டு என சரியான முறைகளை கையாளுங்கள்.

    * அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான அர்த்தங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து நல்ல குழந்தையாக மாற்றுங்கள்.
    தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

    குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

    என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?

    குழந்தையை குளிப்பாட்டுவது
    தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
    பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
    நாப்கின் மாற்றுவது.
    குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
    குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

    இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும். குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும்.



    குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை.

    தந்தை செய்ய வேண்டியவை

    குழந்தையுடன் விளையாடுதல்
    நல்லது சொல்லிக் கொடுத்தல்
    குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
    குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
    மரியாதை சொல்லி தருவது
    குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
    மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
    குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
    குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
    குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
    நல்ல தரமான கதைகளை சொல்வது

    தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேசபெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இந்தப் பதிவில் இதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

    நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.

    குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.

    முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி.



    மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.

    குழந்தைகளுக்கு ஏதாவது வார்த்தை சொல்லி தரும்போது அதன் படத்தை காண்பித்து சொல்லி தரலாம். நாய், பூனை படம் காண்பித்து அதன் பின் அந்த வார்த்தை சொல்லி தரலாம். குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    படங்கள், வார்த்தை, சத்தம், ரைம்ஸ், பாடல்கள்… இதெல்லாம் பேசுவதற்கான பயிற்சிகள்தான்.

    மம்மு, புவா போன்ற மழலை வார்த்தைகளை சொல்லலாம். சாப்பாடு, சாதம், ரசம், குழம்பு, பிஸ்கெட் என நேரடியாக வார்த்தைகளை சொல்லுங்கள்.

    குழந்தைகளுக்கு பாட்டுபாடி காண்பிக்கலாம். ரைம்ஸ் சிடி போடலாம். குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்.

    அதிகமாக வெட்கப்படும் குழந்தைகளின் வெட்கத்தைப் போக்க பெற்றோர் நிறைய பழக வேண்டும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கலாம். பின்னர் பேச பயிற்சி தரலாம்.

    குழந்தைகளை பெரியவர்கள், மற்ற குழந்தைகள் போன்ற அனைவரிடமும் பழகினால்தான் பேச்சு விரைவில் வரும்.

    அதிகமாக நாம் குழந்தையிடம் நேரம் செலவழிக்கவில்லை எனில் குழந்தை பேச தாமதமாகும்.

    உறவு முறைகளின் பெயர்கள், உங்களது பெயர், விலங்குகள் பெயர் போன்றவற்றை சொல்லி தரலாம்.

    கதைகளை சொல்லுங்கள். புதுப்புது வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கதை சொல்லுவது அற்புதமான பயிற்சி.
    பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும்.
    பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. ‘ஹாய், டாடி’, ‘மம்மி, பைபை’ என்ற அளவில் பேச்சும் உறவும் சுருங்கிவிட்டது. பொருளாதாரரீதியாக குடும்பத்தை சமாளிக்க கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் குழந்தைகளுக்கு.

    7 கிலோ புத்தக பையை சுமந்து பள்ளிக்கு சென்று திரும்பும் மழலைகள் வீட்டுக்கு வரும் போது கதவு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து மனதளவில் வாடித்தான் போவார்கள். வீடு வரும் குழந்தைகளை, ‘வா... செல்லம்..’ என்று அன்போடு அழைக்கவும், பள்ளிக்கு சென்று மாலையில் அழைத்து வரவும் கூட பெரும்பாலான வீடுகளில் யாரும் கிடையாது. சீருடைகளை களைந்து உடைமாற்றிய பின்னர் காலையில் அம்மா வைத்துவிட்டுப்போன எதையாவது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சாப்பிவிட்டு டியூஷனுக்கு புறப்பட்டு சென்றுவிட வேண்டிய நிலைதான் இந்த பிள்ளைகளுக்கு.

    இரவு எட்டு மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பும்போது அப்பாவும், அம்மாவும் வந்து சேருவார்கள். இரவு உணவை தயார் செய்வதற்காக தாய் கிச்சனுக்கு சென்றுவிட தந்தையோ மிச்சமுள்ள அலுவலக வேலைகளை பார்க்கவோ சோர்வில் தூங்கவோ தயாராகி விடுவார். பெற்றோர் இருந்தும் தனிமையில் வீழ்கின்றனர் சிறார்கள். அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் டிவியும், அதன் ரிமோட்டும்தான். அவர்கள் மனம்போன போக்கிற்கு சற்று நேரம் பார்த்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டு தூங்க செல்ல வேண்டியதுதான். பள்ளியில் நடந்த நிகழ்வுகளையோ, நண்பர்களுடனான உரையாடல்களையோ, பாடம் குறித்த சந்தேகத்தையோ தீர்த்து வைக்க வீட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது.

    மைதானத்துக்கு சென்று விளையாடுவது அறவே நின்று விட்டது; இந்த நிலையில் தான் தற்போதைய குடும்பங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. எதற்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாத கட்டாயத்தில் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளோடு குதூகலமாக இருப்பது என்பது கூட சில பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும் வார விடுமுறை நாட்களில் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர் நம்முடன் ஒரு நாள் கூட இருக்க மறுக்கிறார்களே என குழந்தைகளுக்கும், நம்மை புரிந்துகொள்ளவில்லையே என குழந்தைகள் மீது பெற்றோருக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. முடிந்தவரை இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். எப்படியாவது ஒரு நாளைக்கு சில நிமிடங்களையாவது குழந்தைகளுடன் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளின் எண்ணவோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

    பெற்றோர் குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட துவங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களது கவனம் சிதறும் அபாயம் உள்ளது. மேலும் சில வீடுகளில் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு குழந்தைகள் சரியாக மதிப்பளிக்காத நிலையும் உருவாகி வருகிறது. எனவே இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அமைதியான மனப்பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள்.
    பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட தீவிரமிக்க ஒரு தொற்றுதான் டிப்தீரியா. வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    Corynebacterium diphtheriae என்ற பாக்டீரியா காரணமாக தொண்டை அடைப்பான் உண்டாகிறது. இக்கிருமிகள், தொண்டை, மூக்கு பகுதிகளுக்கும் பரவி சளிச்சவ்வை பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளானவரின் இருமல், தும்மல் மற்றும் பேசுதல் மூலமாகக் கிருமி வெளியேறி காற்றின் மூலமாக மற்றவருக்கும் பரவுகிறது.

    தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில் சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுடன் டிப்தீரியா ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறியாக நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். தொண்டையின் அடிப்பகுதியிலும் சில சமயங்களில் மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒரு மேற்படலம் உருவாகும். குழந்தைகளின் கழுத்து வீங்கலாம். சுவாசம் துர்நாற்றமடிக்கும். உடல் பலவீனமும் சுவாசிப்பதில் சிரமமும் இருக்கும்.

    குழந்தைக்குத் தொண்டை அடைப்பான் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். தொண்டை அடைப்பானுக்குப் பிரத்யேகமான மருந்துகள் இருக்கின்றன. டிப்தீரியா மற்றவர்களுக்கு தொற்றாத வண்ணம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனியறையில் படுக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கச் சொல்லலாம். ஆவி பிடிக்கச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.

    தொண்டை அடைப்பானை ஆரம்பநிலையில் தடுப்பூசி கொண்டு எளிதில் தடுத்துவிடலாம். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    தேவைப்பட்டால் தடுப்பு மருந்துகளும் கொடுக்கலாம்.சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் தொற்று, பக்கவாதம், இதயத்தசைகள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் தன்மை கொண்டது டிப்தீரியா. எனவே, ஆரம்ப நிலையில் சரி செய்வதே பாதுகாப்பானது!
    ×