search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Recipes"

    • வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
    • சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெந்தய கீரை - 2 கப்

    பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி

    தேங்காய் - கால் கப்

    சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    சின்ன வெங்காயம் -7

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.

    இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.

    அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    பச்சை மிளகாய்  - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய்  - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.

    தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.

    பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

    அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.
    மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். இன்று முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி மாவு - 1 கப்
    முருங்கை கீரை - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    நமது உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,
    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
    பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
    மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த சாதம் - 1 கப்
    தயிர் - முக்கால் கப்
    ப.மிளகாய் - 2
    உப்பு - சுவைக்கு
    நன்கு கனிந்த மாம்பழம் - 1
    சாதம் வடித்த தண்ணீர்  - அரை கப்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    மாம்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு மண் சட்டியில் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் தயிர், உப்பு, ப.மிளகாய், நறுக்கி மாம்பழம் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் சூடான சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
    கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். இன்று கிவி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழம் - 1
    கிவி பழம் - 2
    ஆப்பிள் - 1
    சின்ன வெங்காயம் - 6
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    முந்திரி - 6
    மிளகு தூள் - தேவைக்கு

    செய்முறை :

    கிவி, ஆப்பிள், வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, ஆப்பிள், வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான கிவி ஆப்பிள் வாழைப்பழ சாலட் ரெடி.
    காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    வரகு - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அவல் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 )
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள

    அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
    இஞ்சியை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் நல்லது. சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - 100 கிராம்
    உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    துருவிய தேங்காய் - கால் கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    வெல்லம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

    இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

    அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

    துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

    தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

    சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.
    கோடை வெயில் காலம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. என்றாலும் வெயிலின் தாக்கம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. கோடையில் வெளியில் அலைந்து தொழில் செய்பவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து நோய்களை கொண்டு வந்து விடும்.

    சிலருக்கு வெப்பத்தை தாங்க முடியாமல் ‘ஸ்ட்ரோக்’ வந்துவிடுவது உண்டு. இத்தகைய அபாயத்தில் இருந்து தப்ப பல வழிகள் உள்ளன. இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.

    தேவையான பொருட்கள்

    மாங்காய் - 1
    கருப்பட்டி - சுவைக்கு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    சுக்கு தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை

    மாங்காயை தோலுடன் துருவிக் கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை சிறிது கரைத்து அதில் மாங்காய் துருவல், எலுமிச்சை சாறு, சுக்கு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இது தான் மாங்காய் ஜூஸ்.

    மதியம் வெயிலில் சென்று விட்டு வருபவர்கள் வீட்டுக்கு திரும்பியதும். 30 நிமிடம் கழித்து இதை குடிக்கலாம். உடல் சூடு மாயமாய் மறைந்து விடும். ஆனால்இரவு நேரத்தில் இந்த ஜூசை குடிக்கக் கூடாது.
    டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலம் விரைவில் குணமாக உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    சோயா பீன்ஸ் - அரை கப்
    தக்காளி -1
    சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    பட்டை, பூண்டு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    சோயாபீன்ஸை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சோயா பீன்ஸ், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு உப்பு, பூண்டு, பட்டை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

    அனைத்தும் நன்றாக வெந்தபின் அதனை மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    அடுத்து அதில் போதுமான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறலாம்.

    சப்பாத்தி, தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கூட்டு.
    ×