search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amman temple"

    • ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்த பகுதி இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும் அவர்கள் தொடர்ச்சியாக கத்தி போட்டனர். கத்தி போடும் போது இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இத்துடன் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் பொங்கல் பானையின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வகையில் வாள் தனித்து நிற்கும் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வினோத விசேஷம் நடத்தப்படுவதால் கணக்கம்பாளையம் மட்டுமல்லாது பெருமாநல்லூர் திருப்பூர் காங்கேயம் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த அதிசய வாளினை காண வந்தனர்.

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கவரை செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள்கணக்கில் பல ஊர்களுக்கும் சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் செய்தனர்.

    கனவில் வந்த அம்மன்

    அப்போது ஒரு நாள் அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் சமயபுர மாரியம்மன் இளம் பெண் வடிவத்தில் தோன்றி தனது கைகளுக்கு வளையல் அணிவிக்க கூறினார். பெரியவரும் மகிழ்ந்து அப்பெண்ணின் பொன்நிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். அப்போது வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன.

    இதனால் அவர் செய்வதறியாது திகைத்து "அம்மா உன் அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு வந்தால் வகை, வகையாக வளையல்களை அணிவித்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு அம்மன் வடிவில் இருந்த பெண் சிரித்து மறைந்தாள்.

    அம்மை நோய்

    தெய்வத்தாயை கனவில் கண்ட அந்த பெரியவர் விழித்து எழுந்தபோது அவருடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கி இருந்தது. இதைக்கண்டு அந்த பெரியவர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த சமயபுரம் கோவில் அர்ச்சகர் அந்த பெரியவரிடம் உடைந்த அவரது வளையல்களுக்கு பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் உத்தரவிட்டதாக கூறினார்.

    மேலும் அம்மை நோய் தாக்கியவர்களுக்கு அன்னையின் அருட்பிரசாதமாக திருநீறு வழங்கினார். இந்த திருநீறை தங்கள் உடலில் அவர்கள் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது.

    சமயபுரம் மாரியம்மன்

    அப்போது தனது கனவில் வந்த பெண் சமயபுரம் மாரியம்மன் என்ற உண்மை முதியவருக்கு புலப்பட்டது. இதைக்கேட்ட சக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கும்(சக வியாபாரிகளுக்கும்) அன்னை காட்சி அளிக்க வேண்டும் என கேட்டு சமயபுரம் அன்னையை மனமுருகி வேண்டினர்.

    அப்போது ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தோன்றி பக்தா்களுக்கு காட்சி தந்தார், மாரியம்மன். தங்களது தாய் ஆகாயத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஆகாச மாரி... ஆகாச மாரி..." என போற்றிப் புகழ்ந்து வணங்கி துதித்தனர்.

    வசந்த கால வைபவம்

    இதைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் ஆகாச மாரியம்மனை தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை கேட்ட அம்மன் உங்கள் ஊர் எது? என(தனக்கு தெரிந்தும் தெரியாதது போல) கேட்டார். அப்போது வளையல் வணிகர்கள் தங்கள் ஊர் நறையூர்(நாச்சியார்கோவில்) என கூறினர். உடனே மாரியம்மன் தான் முல்லைக்கும், மல்லிகைக்கும், முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன்" என கூறினார்.

    இதன்படி ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்குப்பின் வரும் வெள்ளிக்கிழமை இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோவிலுக்கு வருகை தந்து வசந்த கால வைபவம் கண்டு, அங்கு தேரோடும் திருவீதியின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு, அலங்கார வல்லியாக காட்சி தருகிறார் சர்வசக்தி ஆகாச மாரியம்மன்.

    ராஜராஜேஸ்வரி அம்மன்

    நிறைமங்கல நாயகியாக குறைதீர்க்கும் தெய்வமாய் அரசாட்சிக் கோலம் கொண்ட அன்னை, தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும், எல்லா பரம்பொருளும் தன்னுள் அடக்கம் எனக் காட்டவும், ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு அலங்காரத்தை ஏற்று காட்சி அளிக்கிறார்.

    அன்னையின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துக்கு வெண்பட்டு சேலை பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அன்று இரவு அன்னையின் அருட்திறம் காட்டும் நீரில் விளக்கு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சனிக்கிழமை ஏக இறைவி ஏகாந்த வைபவமும், ஞாயிறு அன்று பெரிய திருவிழா கண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்களின் பாவங்களை களைந்து, உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளித்து, தீராத வினைகள் தீர்த்து சகல பாக்கியங்களையும் அருளுகிறார்.

    வேறு விழாக்கள் இல்லை

    திருநறையூரில் திருவிழா நாட்களில் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படிகள், அதற்கான பிரத்யேக பிரசாத படையல்கள், கனி வர்க்கங்கள், காணிக்கை சீர்வரிசைகள், பெருமாலை சாத்துபடி, கூட்டு வழிபாடு நடக்கிறது.

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் சாம்பிராணி புகையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, பலவகை காவடிகள் எடுத்து அங்கப்பிரதட்சணம், மாவிளக்கிடல் என பல வகை வழிபாடுகளை செய்கிறார்கள். சமயபுரம் மகா மாரியம்மன் நாச்சியார் கோவிலுக்கு வசந்த விழா காண வரும் நாட்களில் வேறு எந்த விழாவையும் அவ்வூரில் மக்கள் நடத்துவது இல்லை.

    அகல் விளக்கு சுடர்

    விழா நாட்களில் அம்மன் 6 நாட்கள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து வரும் புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடக்கிறது. சமயபுரம் மாரியம்மன் இந்த கோவிலில் குடி கொண்ட அடையாளமாக கோவிலில் பேரகல் விளக்கின் சுடர் 24 மணி நேரமும் காட்சி அளிக்கிறார்.

    பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற நாச்சியார்கோவிலுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆலயத்துக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நடக்கிறது.

    சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுதல்

    27-ந் தேதி(சனிக்கிழமை) வீற்றிருந்த திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார் 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரம், 29-ந் தேதி(திங்கட்கிழமை) சரஸ்வதி அலங்காரமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மதன கோபால அலங்காரமும், 31-ந் தேதி(புதன்கிழமை) மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந் தேதி(வியாழக்கிழமை) ஸ்ரீ சேரசயன அலங்காரம், 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அம்பாள் அந்தம் வரை வளர்ந்தும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் காட்சி அளிக்கிறார்.

    அன்று இரவு அருள் தீபம் ஏற்றுதல் நடக்கிறது. 3-ந் தேதி(சனிக்கிழமை) ஏகாந்த வைபவம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளிக்கிறார். 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை செய்கிறார்கள்.

    5-ந் தேதி(திங்கட்கிழமை) மற்றும் 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருகிறார். நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுகிறார். 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்தை அடைந்து அங்கிருந்து திருவாரூர் மார்க்கத்தில் 10 கி.மீட்டர் தூரம் பயணித்தால் நாச்சியார்கோவிலை அடைந்து ஆகாச மாாியம்மன் கோவிலை அடையலாம். இதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது.

    மணப்பாறை நகரம் வணிக நிலையங்களுக்கும், முறுக்கிற்கும், மாடுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றதோடு மட்டுமின்றி, புனிதமிகு தெய்வத் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர்பெற்றது என்றால் அது மிகையாகாது. மணப்பாறையின் மையப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கொண்டு தம்மை உளத்தூய்மையோடு வணங்குபவரின் பெருந்துயர் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை மாரி.

    புனிதக்கல்

    அடிப்படை வசதிகளேயற்ற பழமையான அக்காலத்தில் மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்பமரமொன்றை சுற்றி மூங்கில் மரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளர்ந்தோங்கி நின்றிருந்தன. அதில் மூங்கில் மரமொன்றை ஒருவர் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரியமுனை வேப்பமரத்தின் அடியைத் தீண்ட, அதில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    எதிர்பாராத இக்காட்சியால் அரிவாளால் வெட்டியவர் அதிர்ந்து போய் அலறியடித்து ஊரைக்கூட்ட, ஊரார் ஒருங்கே திரண்டு அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டுகளித்தனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும், இவ்வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாக குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால் இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார். அதனை ஊரார் ஏற்று மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்தனர்.

    வேண்டிச்செல்லும் காரியங்கள்

    அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது. சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட மாரியம்மனுக்கு காட்டும் புனித தீபாராதனைகள் முதலில் அப்புனித கல்லிற்கு காட்டப்பெறுதலை இன்றும் காணலாம். இவ்வேப்பிலை மாரியினை கண்ணபுரத்தாளாம் சமயபுர மாரியின் அருமை சகோதரி என இறைநெஞ்சங்கள் கூறி மகிழும் தனித்தன்மை வாய்ந்ததாம். மேலும் இம்மாரியை கைகொடுக்கும் மாரி என்றும், கைவிடாத மாரி என்றும், கண்கண்ட மாரி என்றும் அம்மை முத்துக்களை அகற்றிக்காக்கும் முத்துமாரி என்றும், கண் அளிக்கும் மாரி என்றும் போற்றிப் பாராட்டுதலை யாவரும் அறியலாம்.

    இத்தெய்வத் திருமகளை வணங்கி வேண்டிச் செல்லும் காரியங்கள் யாவும் எளிதில் கைகூடுதலை இந்த ஆலயத்திற்கு அலைகடலெனப் பெருகும் இறையன்பர்களின் எண்ணிக்கையை கொண்டே எளிதில் உணரலாம். பெருந்திரளான பெண்களின் கூட்டம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பெருகி வருதலை பலரும் அறிவர்.

    கும்பாபிஷேக விழா

    இக்கோவில் 1979-ம் ஆண்டில் கொடிய தீ விபத்திற்குள்ளானது.

    இதையடுத்து மணவை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி டாக்டர் வி.என்.லெட்சுமிநாராயணனின் சீரிய தலைமையின் கீழ் ஒரு திருப்பணி குழுவை அமைத்து, நன்கொடை திரட்டி புதுமை பொலிவோடு அழகுகொஞ்சும் கோவில் கட்டி கடந்த 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க இத்திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாக கருதிய இம் மாநகரத்து ஆன்மிக சான்றோர்கள் திருப்பணி குழுவினர், தமிழக அரசின் மேன்மையான ஒத்துழைப்போடும் பொருளுதவியோடும் மிகச்சிறப்புற அழகுமிகு 3 நிலை ராஜகோபுரத்தை அற்புதமாக கட்டி கடந்த 14.3.1994 அன்று கும்பாபிஷேக விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கருவறை முதல் கடைசி வெளிப்பிரகாரம் வரை முழுவதுமாக கருங்கற்களால் கட்டப்பட்டது.
    • இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.

    வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ''இரசை'' என்று பெயரிட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ''இரசை'' நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.

    பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.

    அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் 'மாரி' அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.

    சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்' என்று அழைக்கப்பட்டது. நாடி வரும் பக்தர்களின் குறையை தீர்ப்பதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    கோவில் நடை திறப்பு

    நத்தம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

    கருங்கற்களால் கலைக்கோவில்

    புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில், கருவறை முதல் கடைசி வெளிப்பிரகாரம் வரை முழுவதுமாக கருங்கற்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் 22 கல் தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

    கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்

    நத்தம் மாரியம்மன் நித்தம் அருள்பாலிக்கும் முத்திரை பதிக்கும் தெய்வமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதன்படி இந்த மாசி பெருந்திருவிழாவில் தம்பதிகள் பலர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    நோய்களை தீர்க்கும் மூலிகை தீர்த்தம்

    நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன.

    அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் 'அம்மை' தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

    • பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது.
    • செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    இந்த கோவில் உருவான வரலாறு குறித்த விவரம் வருமாறு:-

    ஆதிபராசக்தியின் பக்தரான கோவில் தலைமை பூசாரி, பல ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூர் கோவில் தரிசனம் முடிந்து திரும்பும் வழியில், முக ஐஸ்வர்யத்துடன் ஒரு மூதாட்டியும், ஒரு இளம்பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். அவர்களை சந்தித்த அவருக்கு பெண்கள் பூஜை ரகசியங்களை சொல்லி கொடுத்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் தனி அறையில் அமர்ந்து தமிழில் உருக்கமாக பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.

    அப்போது தான் குடி இருக்க தனியாக இடம் வேண்டும் என வேண்டினார். அடுத்த நாள் அவர் தந்தையின் கனவில் தோன்றிய தேவி, ஆதிபராசக்தியின் அருள் பக்தரிடம் நிறைந்து உள்ளது எனவும், ஆதலால் பக்தரின் வேண்டுதலை ஏற்று இப்போது வசிக்கும் இடத்திலேயே ஒரு சிறிய கோவில் கட்டி கொடுக்கவும் என்று கூறி கனவில் இருந்து மறைந்தார்.

    பக்தர்கள் வருகை

    பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அந்த பக்தர் பூசாரியாக ஆதிபராசக்திக்கு பூஜை வழிபாடுகளை நிறைவேற்றினார். பூஜைகளை முறைப்படி கற்றிராத அந்த பூசாரி நாளடைவில், முற்றும் தெரிந்த பூசாரியை போல் ஆதிபராசக்தியின் அருளால் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வருகிறார். இந்த கோவில்தான் மாங்குளம் ஸ்ரீபராசக்தி தேவி கோவிலாக அறியப்படுகிறது. ஆதி பராசக்தியின் அருட் செயலை கேள்விப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வர தொடங்கினர்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஆதிபராசக்தியின் பக்தனான தலைமை பூசாரி, பிரச்சினைகளுக்கு பரிகார மார்க்கங்களை சொல்லி கொடுக்க தொடங்கினார். அவர்களின் துன்பங்களுக்கு பூசாரி பல்வேறு பரிகாரங்களை பரிந்துரை செய்து வருகிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் தேவியை தரிசிக்க கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஸ்ரீ ஆதிபராசக்தி தேவியையும், ஸ்ரீ பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இக்கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பானவையாகும்.

    ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    • தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.
    • மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

    மதுரையை ஆண்டு வந்த மலயத்துவச பாண்டியனும் அவரது மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். பல்வேறு யாகங்களை செய்தனர். பிறகு பிரம்மன் உபதேசித்ததன்பேரில் புத்திரகாமேட்டி யாகம் மேற்கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு அருளும் பொருட்டு இவ்வுலகையே ஈன்ற அன்னையான உமாதேவியார் அந்த யாக குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாக தோன்றினார். குழந்தை உருக்கண்டு பேரானந்தம் பெற்ற அரசனும், அரசியும் அக்குழந்தையின் உருவிலே இருக்கும் மாற்றம் கண்டு மனம் வருந்தினர். அப்போது சிவபெருமான் அசரீரியாக "மன்னா மனம் வருந்தாதே இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறப்பு பெறுமாறு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடு. தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும்போது மிகுதியாக உள்ள ஒரு தனம் மறைந்துவிடும்" என கூறினார்.

    அரசனும் மன அமைதி பெற்றான். (ஒருவன் பிறக்கின்றபோது பரஞானம், அபர ஞானம், தன் முனைப்புஎன்ற ஆணவம் ஆகிய 3 தனங்களோடு பிறக்கின்றான். தடாதகைக்கு இறைவனை பார்த்தவுடன் 3-வது தனம் மறைந்ததை போல மனிதன் இறைவனை நினைப்பதால் ஆணவம் என்ற 3-வது தனம் மறையும் என்பது தத்துவம்) தடாதகை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக வளர்ந்தாள். பாண்டிய நாட்டின் அரசியானாள். செங்கோல் வழுவாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தினாள்.

    பாண்டிய நாடு பெருவளம் பெற்று பொன்னாடாக பொலிவு பெற்றது. தடாதகை தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்து சென்று வென்றாள். பிறகு பெரும்படையுடன் சென்று கயிலையம்பதியை அடைந்து போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப்படைகளும், நந்திதேவரின் படைகளும் தோல்வியை தழுவின.

    இதனை அறிந்த இறைவன் போர்க்கோலத்துடன் அங்கே எழுந்தருளினார். அப்பெருமானை தன்னெதிரே கண்டதும் தடாதகை பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியில் நாணி தலைக்குனிந்தாள். அவரது 3-வது தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன், நீ மதுரைக்கு செல். இன்றைக்கு 8-ம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று கூறினார். அதன்படியே தடாதகை மதுரையை அடைந்து மகளிர் அட்டமங்கலத்தோடு எதிர்கொள்ள அரண்மனைக்குள் புகுந்தாள்.

    இறைவனுக்கும், தடாதகைக்குமான திருமண நாள் குறித்து பல நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. வீதிகளும், மாளிகைகளும் அலங்கரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும், திருமாலும் வந்திருந்தனர். மேலும் பல நாட்டு மன்னர்களும் திரண்டு வந்திருந்தனர்.

    பங்குனி உத்திர பெருநாளில் திருமணத்திற்குரிய நல்லவேளையில் இறைவன் தடாதகையை மணந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன் பின்பு முருகனின் அவதாரமாக வந்து தோன்றியஉக்கிரகுமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு மீனாட்சி-சுந்தரேசுவரராக இறைவடிவாயினர் என்பது இத்தல வரலாறு. (மீனை ஒத்த கண்களை உடைய தடாதகை பிராட்டியே மீனாட்சியம்மை என்ற பெயருடன் கோவில் கொண்டு விளங்குகின்றாள்.)

    தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர்.மீனாட்சி என்பது மீன் போன்ற அழகிய கண்களை உடையவர் என்று பொருள்படும். மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயேகுஞ்சு பொறிக்கும். அதுபோல உலகத்து மக்களுக்கு தன் அருள் பார்வையால் மீனாட்சி நலம் தருபவள் என புராணங்கள் போற்றுகின்றன.

    மீன்களின் கண்கள் இமை இல்லாமல் இரவு பகலும் விழித்து கொண்டிருப்பதுபோல, தேவியும் கண்ணை இமைக்காமல் உயிர்களை காத்து வருகிறார் என்று ஹீராஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கருவறையில் மீனாட்சி அம்மன் இரு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியுடன் செண்டு ஏந்தியபடி காட்சி தருகிறார். கருணை பொழியும் கண்களுடன் அகிலம் எல்லாம் அருள்பாலிக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும். இவரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன்கூடிய வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறதா? என்ற பேச்சு வழக்கில் உள்ளது. அந்த அளவுக்கு மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

    மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.

    மிகப்பெரிய கோவிலாக கருதப்படும் இந்த கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோவில் 17 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது. கோவிலின் மொத்த நீளம் 847 அடி. அகலம் 792 அடி ஆகும்.

    ஆடி வீதியில் அமைந்துள்ள பிரகார சுவர்கிழக்கு மேற்காக 830 அடியிலும், வடக்கு கிழக்காக 730 அடியிலும் அமையப்பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரைக்கு அழகு சேர்ப்பது அதன் கோபுரங்களும், அதில் உள்ள கலாசார சிற்பங்களும்தான்.மொத்தம் 12 கோபுரங்கள், தங்கத்திலானகோபுரங்கள் 2 என 14 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஏற்றாற்போல் 4 பிரமாண்ட வெளிப்புற கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன.

    இவை அனைத்தும் 9 நிலைகள் கொண்டவை ஆகும். இந்த 4 கோபுரங்களும் ராஜகோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் "மீனாட்சி சுந்தரேசுவரர்" கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்ப வனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்ததாக கருதப்படுகிறது.

    • 160 அடி உயரம் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்.
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள் தான். இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

    வெளிகோபுரங்கள்

    கோவிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாயில்களும் உயர்ந்த உறுதியான கதவுகளை கொண்டுள்ளது.

    இந்த கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உப பீடம், அதிஷ்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அழகுற அமைந்துள்ளன. கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி செங்கல், சாந்து இவற்றால் ஆனது. மேல்நிலைகளில் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வெளிகோபுரங்கள் நான்கும் அவை அமைந்துள்ள திசைகளை கொண்ட கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.

    கிழக்கு கோபுரம்

    சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப்பெற்றுள்ளது. 4 கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானதாகும். இதற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    இது கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், கி.பி. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது 153 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் நீளம்111 அடி அகலம் 65 அடி. கிழக்கு கோபுரம் 1011 சுதைகளுடன் 9 நிலைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு கோபுரம்

    விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1559-ல் இந்த கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. 4 கோபுரங்களிலும் இந்த கோபுரம் உயரமானது.இந்த கோபுரத்தின் உயரம் 160 அடி, அடி தளத்தின் நீளம் 108 அடி, அகலம் 57 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இதில் புராண கதைகளை விளக்கும் 1511 சுதை சிற்பங்கள் உள்ளன. கட்டுமானத்தின்போது இவை அமைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டது என்ற செய்தியை கி.பி.1798-ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.

    மேற்கு கோபுரம்

    கி.பி.1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் இதனை கட்டினான். கி.பி.1323-ல் கட்டி முடிக்கப்பெற்றது. 9 நிலைகளை கொண்டது.இதன் உயரம் 154.6 அடி. அடிதளம் நீளம் 101 அடி, அகலம் 63.6 அடி.இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுரவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வடக்கு கோபுரம்

    இந்த கோபுரத்தின் கட்டுமான பணியை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-72) தொடங்கினார். இதனை கி.பி.1878-ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார். 9 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 152 அடி. அடி தளத்தின் நீளம் 111.6 அடி. அகலம் 66.6 அடி. இந்த கோபுர வாயிலின் மேற்கு பக்கம் முனியாண்டி கோவில் உள்ளது. இது ஒரு நாட்டுப்புற காவல் தெய்வமாகும்.

    இந்த கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்ப நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் பல திருப்பணிகளை செய்துள்ளார். சுந்தரேசுவரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதன் அருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், 2-ம் பிரகார சுற்று மண்டபம், அம்மன் கோவில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இந்த மன்னர் கட்டியது ஆகும். இவரது ஆட்சி காலத்தில் தான் அரியநாத முதலியார் கி.பி.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார்.

    ராய கோபுரம்

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் நான்குப்புற கோபுரங்கள் தவிர இத்துடன் தொடர்புடைய கோபுரம் புதுமண்டபத்திற்கு கிழக்கே ஒன்றுண்டு. இந்த கோபுரம் திருமலைநாயக்கரால் கி.பி.17-ம் நூற்றாண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன் அடித்தளம் 174 அடி நீளமும், 117 அடி அகலமும் கொண்டது. மற்றைய 4 கோபுரங்களின் அடித்தளங்களோடு ஒப்பிடும்போது இந்த கோபுரத்தின் அடித்தளம் மிக நீளமாகவும் அகலமாகவும் உள்ளது.

    இந்த கோபுரம் ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ சில காரணங்களால் இந்த கோபுரம் முதல் தளத்துடன் நின்று விட்டது. முதல் தளத்தின் உயரம் 57 அடியாகும். இதுகட்டி முடிக்கப்பட்டிருந்தால் ஏனைய 4 கோபுரங்களை விட உயர்ந்த கோபுரமாக திகழ்ந்திருக்கும்.

    வெளிகோபுரங்கள் தவிர சுவாமி கோவிலில் 5 சிறிய கோபுரங்களும், அம்மன் கோவிலில் 3 சிறிய கோபுரங்களும் அம்மனுக்கும், சுவாமிக்கும் தனித்தனியாக 2 தங்க விமானங்களும் உள்ளன.

    160 அடி உயரம் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களை தாங்குகின்றன.

    இத் திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பட்டு முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தை சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும்.

    இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப்பெற்று 1964-ம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570-ம் ஆண்டில் கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப்பட்டது.

    • முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
    • சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பெரியக்கோட்டகுப்பம் கெங்கை அம்மன் , அங்காள பரமேஸ்வரி , முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது.

    அம்மனுக்கு 2-ம் கால பூஜையாக காலை 6 மணி அளவில் விசேஷ ஹோமம் மற்றும் கலச புறப்பாடு அலங்கரித்து ஆலய கலச கோபுரத்தில் காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், அருணாச்சலம் தலைமையில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி, ஆணையர் மங்கையர்கரசன் முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி யில் தொடர்ந்து சாமிக்கு சந்தன அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை கடந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்கு மரன், நாகமுத்து, சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    • கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, குதிரை வாகனம் இருக்கின்றன.

    சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இந்த பச்சைவாழி அம்மன் கோவில் இருக்கிறது இக்கோவிலின் பிரதான தெய்வமான அம்மன் பச்சைவாழியம்மன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தல புராணங்களின்படி பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், அதில் வசித்த மக்களையும் காப்பதற்கு அம்மன் ஒரு பச்சை பச்சை மரத்தில் குடி அமர்ந்தாள். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவர் கனவில் வந்து அம்மன் உரைக்க, விடிந்ததும் அப்பெரியவர் ஊர் மக்களிடம் இந்த கனவை பற்றி கூறிய போது அனைவரும் மெய்சிலிர்த்தனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பச்சைவாழி அம்மனுக்கு இங்கு கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

    பழமையான இக்கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, கொடிமரம் மற்றும் குதிரை வாகனம் இருக்கின்றன. கடலூர், பண்ருட்டி, எழுமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சுப காரியத்திற்கு முன்பாக இக்கோவிலுக்கு வந்து அம்மனிடம் உத்தரவைக் கேட்டு அக்காரியத்தை மேற்கொள்கின்றனர். அம்மன் விக்கிரத்தின் தோளின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து, செய்யப்போகும் காரியம் குறித்து மனதில் வேண்டிக்கொள்வார்கள். பழம் கீழே விழுந்தால் அக்காரியம் வெற்றி பெரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.

    பச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடி மாதங்களில் வரும் ஆடி வெள்ளி ஆடி அமாவாசை தினங்கள் அம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    கோவில் அமைவிடம்

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது.

    கோவில் நடை திறப்பு

    காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில்

    எழுமேடு

    கடலூர் மாவட்டம் – 607104

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)

    தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

    தல விருட்சம்: முல்லைக்கொடி

    தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)

    முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.

    இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள். அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள்.

    முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இவ்வாறு பூவுலகத்தில் முதல் 'கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன். இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

    முல்லை வன நாதர் :

    முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வனநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

    சோமாஸ்கந்தர் :

    இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப்பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது. கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், 'ஷீரகுண்டம்' (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.

    குழந்தைச் செல்வம் :

    உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.

    மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

    இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

    அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

    நன்றிக் கடன் :

    பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது. சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு. அமைவிடம் :

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    • இந்த கோவிலில் வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    • இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோவில்கள் வரிசையில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக செம்பனார்கோவில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.

    மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் செம்பனார்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உப்புச்சந்தை என்ற கீழையூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் ஊரின் பெயரை கொண்டு உப்புச்சந்தை மாாியம்மன் என அழைக்கப்படுகிறார். மழையின்றி உலகம் இல்லை. மாரி இல்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஊர்தோறும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மேலப்பாதி கிராமத்துக்கும், கீழையூர் கிராமத்துக்கும் இடையே இக்கோவில் உள்ளது.

    தற்போது கோவில் உள்ள இந்த பகுதி முற்காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்தது. இங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்புகார் கடற்கரை உள்ளது. பூம்புகார் பகுதியில் உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்புகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து இந்த இடத்தில் குவித்து ஏலம் விடுவது வழக்கம். உப்பு ஏலம் தொடா்ந்து இந்த பகுதியில் நடந்ததால் இந்த ஊர் உப்புச்சந்தை என்று அழைக்கப்படுகிறது.

    தலவரலாறு

    பழங்காலத்தில் மன்னர்கள் பூம்புகார் கடற்கரைக்கு சென்று தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வது வழக்கம். இவ்வாறு மன்னர்கள் செல்லும்போது சேவர்களும் உடன் செல்வர். இந்த ்நிலையில் தஞ்சை மன்னரிடம் பணிபுரிந்த ஒருவர் தனது குடும்பத்துடன் பூம்புகார் சென்று விட்டு திரும்பி வரும்போது, கீழையூர் என்ற பகுதியில் அவரது பெண் குழந்தை இறந்து விட்டது.

    உடனே அந்த இடத்தில் இறந்த சிறுமியை அடக்கம் செய்துவிட்டு திரும்பி விட்டனர். சிறுமி அடக்கம் செய்த இடத்தில் அதாவது தற்போது மாரியம்மன் கோவில் முன்பு உள்ள இடத்தில் அப்பகுதி சிறுமிகள் தினமும் விளையாடுவது வழக்கம்.

    கூழ் கேட்ட சிறுமி

    அந்த சிறுமிகளுடன் புதிதாக ஒரு சிறுமி தினமும் விளையாடி விட்டு மாலை நேரத்தில் மறைந்து விடுவாள் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை பற்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகள் ஊருக்குள் சென்று கூறினர். இந்நிலையில் ஒரு நாள், உப்புச்சந்தைக்கு அருகில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்துக்கு அந்த சிறுமி வீடு, வீடாக சென்று பால் கேட்டாள். அவளுக்கு யாரும் பால் கொடுக்க மறுத்து விட்டனர்.

    ஒரு வீட்டிற்கு சென்று சிறுமி கூழ் கேட்டிருக்கிறார். உடனே அந்த வீட்டுப் பெண் சிறுமிக்கு கூழ் கொண்டு வந்து கொடுத்து உள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளாள்.

    தரையில் கொட்டிய பால்

    கூழையும், தண்ணீரையும் குடித்து அந்த சிறுமி அந்த பெண்ணை பார்த்து படுக்க இடம் கொடு என்று கேட்க, வீட்டிற்கு பின்புறம் சென்று படுத்துக்கொள் என்று கூறுகிறார். அந்த சிறுமியும் கொல்லைப்புறத்துக்கு சென்று படுத்துக் கொள்கிறாள். அந்த நேரத்தில் சிறுமிக்கு பால் தர மறுத்த வீடுகளில் பானை உடைந்து பால் தரையில் கொட்டுகிறது.

    அனைவரும் பயந்துபோய், சிறுமிக்கு கூழ் கொடுத்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியை காணவில்லை. அதற்கு மாறாக சிறுமி படுத்திருந்த இடம் புற்றாக மாறியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்தது அம்மன் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் தவறை மன்னிக்குமாறு அம்மனிடம் வேண்டினர்.

    ராஜகோபுரம்

    இதற்கிடையில் திருச்சம்பள்ளியில் ஒரு செல்வந்தரிடம் எனக்கு இருக்க ஒரு கொட்டகை கட்டித்தர வேண்டும் என அசரீரியாக சிறுமி வடிவில் இருந்த அம்மன் கேட்க அதன்படியே திருச்சம்பள்ளியில் கொட்டகை கட்டி தரப்பட்டது.

    முதலில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் சுரங்கத்திற்குள் இருந்தது. நாளடைவில் சிறிய கொட்டகை அமைத்து, சுரங்கத்தில் இருந்து வெளியே அம்மனை கொண்டு வந்தனர். பின்னர் திருப்பணிகள் நடந்து தற்போது 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக மாரியம்மன் கோவில் காட்சி அளிக்கிறது.

    முக்கிய விழாக்கள்

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று பால்குடம், காவடி விழா, ஆடி மற்றும் தை மாதத்தில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை, வைகாசி மாதம் 9 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. மாணவ, மாணவிகள், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வு நாளில் உப்புச் சந்தை மாரியம்மன் மற்றும்(சீதளாபரமேஸ்வரி) சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்ட பிறகே தேர்வு எழுத செல்வர். மேலும் நோய் தீர்க்கும் தலமாக உள்ள இந்த கோவிலில் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நோய்கள் நீங்க வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    நடை திறப்பு

    கோவிலில் நுழைந்த உடன் இடது புறத்தில் விநாயகர், வலது புறத்தில் முருகன் காட்சி அளிக்கிறார்கள். கோவிலுக்குள் பேச்சியம்மன், மதுரை வீரன், கோவிலின் பின் பக்கம் சரஸ்வதி ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இந்த கோவிலில் தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும். இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    பகல் நேரத்தில் நடை திறந்து இருப்பது வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எந்த நேரத்திலும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால் பகல் நேரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் 12 கி.மீ்ட்டர் பயணித்து கீழையூருக்கு சென்று உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலை அடையலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலுக்கு வர விரும்புபவர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    • குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அமைந்துள்ள, முத்துமாரியம்மன் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மூலவர்: முத்துமாரியம்மன்

    உற்சவர்: பூவாடைக்காரி

    தல விருட்சம்: வேம்பு

    தீர்த்தம்: ஆகாச ஊரணி, தளுப்புசுனை, பழுதுபடாசுனை.

    * ஈரேழு உலகங்களுக்கும் பயணிக்கும் வல்லமை பெற்றவர் நாரத முனிவர். இவர் இத்தலம் வந்து தங்கியதால் இது 'நாரதர் மலை' என்று வழங்கப்பட்டு, நாளடைவில் 'நார்த்தாமலை' என்றானது.

    * மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உலக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஆகிய ஒன்பது மலைக்குன்றுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, நார்த்தாமலை.

    * ராமாயண காலத்தில் நடந்த ராம- ராவணப் போரின் போது, மேகநாதனின் அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றார். அதில் இருந்து விழுந்த சிறிய துண்டுதான் இந்த நார்த்தாமலை என்கிறது தல வரலாறு.

    * திருவண்ணாமலையில் வாழ்ந்த ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த ஆலயத்தை விரிவுபடுத்தி மண்டபங்கள் எழுப்பினார்.

    * இத்தல அம்மன் சிலை, நார்த்தாமலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கீழக்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

    * முத்துமாரியம்மன் சன்னிதியின் வடபுற சுவரில், கல்லால் ஆன முருகன் எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மிகவும் விசேஷத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    * அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    * குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    * புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்.

    ×