search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenachi Amman"

    • மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர்.
    • மீனாட்சி அம்மன் கமல வாகனத்தில் வலம் வருவது வழக்கம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவம் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, குங்குமம் வைத்து அர்ச்சனை செய்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்கு பட்டர்கள் வழங்கினார்கள்.

    ஆடிபூரத்தன்று பல ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கமல (தாமரை பூ) வாகனத்தில் வலம் வருவது வழக்கம். மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்த வாகனம் நாளடைவில் பழுதடைந்தது. எனவே அந்த வாகனத்தில் அம்மன் வலம் வருவதற்கு பதில் வேறு வாகனத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த வக்கீல் ஒருவர் அம்மனுக்கு புதிதாக கமல வாகனம் செய்து கொடுத்தார். அந்த வாகனம் நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்தானிக பட்டர்கள் ஹாலஸ், செந்தில் சிறப்பு பூஜை செய்த பின்பு புதிய வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இரவு வீதி உலாவில் மீனாட்சி அம்மன் அந்த புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் பவனி வந்து காட்சி அளித்தார்.

    • நாளை மூலவர், மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை தொடங்குவர். பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்தாண்டு ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நேற்று தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது

    இதையொட்டி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் நேற்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூரத்தன்று மூலவர், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.

    7-ம் நாளான 26-ந் தேதி இரவில் வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சன்னதில் சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விவசாயம் பெருகவும், நாடு செழிக்கவும் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கத்தேர் போன்றவை நடைபெறாது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • திருவிழா 20-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • 26-ந்தேதி மாற்றும் வைபவம் நடைபெறும்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து விழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான 22-ந் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7-ம் நாளான 26-ந் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
    • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • எல்லாம் வல்ல சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்ஏராளம்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார்.

    கல் யானை கரும்பு சாப்பிடுமா? சித்தர்கள் நினைத்தால் சாப்பிடும். அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் எல்லாம் வல்ல சித்தர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார். அதற்கான சான்றுகள் இன்றும் அந்த ஆலயத்தின் உள்ளே இருக்கின்றன. எல்லாம் வல்ல சித்தர் மதுரை வீதிகளில் சுற்றித்திரிந்த போது முதலில் அவரது சிறப்பை யாரும் உணரவில்லை. ஆனால் அவர் அற்புதங்கள் செய்யத்தொடங்கிய பிறகுதான் அவரை பற்றிய தகவல்கள் மதுரை முழுக்க பரபரப்பாக பேசப்பட்டன. அந்த அளவுக்கு அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒவ்வொன்றும் இருந்தன.

    தன்னை தேடி வரும் வயதானவர்களை திடீரென இளைஞர் ஆக்கி விடுவார். ஆணை பெண்ணாக மாற்றி விடுவார். கல்லை எடுத்து வீசுவார். அவை தங்கங்களாக மாறும். ஊசி முனையில் நின்றபடி நடனமாடுவார். மரணம் அடைந்தவர்களை உயிரோடு எழுப்பி உள்ளார்.

    இப்படி அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த அற்புதங்கள் நிகழ்ந்த காலத்தில் மதுரையில் அபிஷேக பாண்டியன் ஆட்சி நடந்து வந்தது. அவரது காதுகளுக்கும் எல்லாம் வல்ல சித்தர் நடத்திய அற்புதங்கள் எட்டியது.

    அந்த சித்தரை பார்க்க வேண்டும் என்ற ஆசை அபிஷேக பாண்டியனுக்கு ஏற்பட்டது. தனது வீரர்களை அனுப்பி சித்தரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார். காவலாளிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை பார்த்து, "மன்னர் உம்மை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். வாரும்" என்றனர்.

    ஆனால் சித்தரோ அந்த காவலாளிகளை கண்டு கொள்ளவே இல்லை. "உங்கள் மன்னரால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும். அவருக்கு தேவை என்றால் இங்கே வந்து என்னைப்பார்க்க சொல்லுங்கள்" என்றார்.

    வீரர்களும் மன்னரிடம் இதை தெரிவித்தனர். அபிஷேக பாண்டியன் ஆத்திரப்படவில்லை. இறை அருள் பெற்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார். பிறகு அவரே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை சந்தித்தார்.

    சித்தரிடம் அவர், "உங்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியுமாமே.... உண்மையா?" என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர், "ஆமாம். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதனால்தான் எனக்கு எல்லாம் வல்லவன் என்று பெயர்" என்றார். இதைக்கேட்டதும் மன்னருக்கு அவரை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    அவர் சித்தரை பார்த்து, "நான் சொல்வதை உங்களால் நிகழ்த்திக்காட்ட முடியுமா?"என்றார். அதற்கு சித்தர், "நானே ஆதியும், அந்தமும் ஆவேன். என்னால் எதையும் செய்ய முடியும்"என்றார். உடனே மன்னர், " என்ன கடவுள் போல பேசுகிறீர்களே.... நீங்கள் என்ன கடவுளா?" என்றார். சித்தர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு என்ன வேண்டும். அதை சொல்லுங்கள்" என்றார். அபிஷேக பாண்டியன் என்ன கேட்பது என்று யோசித்தார். சுற்றும் முற்றும் பார்த்த அவர் கண்களில் கல் யானை சிற்பம் தெரிந்தது. உடனே அவர் சித்தரிடம், "இந்த கல் யானையை கரும்பு சாப்பிட வையுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார்.

    மன்னர் உத்தரவுப்படி கரும்புக்கட்டுகள் கொண்டு வரப்பட்டன. எல்லாம் வல்ல சித்தர் எதுவுமே சொல்லவில்லை. கரும்பு கட்டுகளை வாங்கி அந்த கல் யானை சிற்பம் முன்பு போட்டார். "சாப்பிடு" என்று குரல் கொடுத்தார். அடுத்த வினாடி கல் யானை உயிர் பெற்று நிஜ யானையை போல் மாறி பிளிறியது.அங்கு கிடந்த கரும்புக்கட்டுகளை எடுத்து சுவைத்து சாப்பிட்டு விட்டது. இதைக்கண்ட மன்னர் ஆச்சரியப்பட்டார். எல்லாம் வல்ல சித்தரின் மகிமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இதனால் மனம் இரங்கிய சித்தர், "என் திறமையை பரிசோதித்து பார்த்து விட்டாய்.... உனக்கு ஏதாவது வேண்டுமா கேள்" என்றார். மன்னர் கண்ணீர் மல்க, "இந்த ராஜ்ஜியத்தை வழிநடத்த எனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும்" என்று கேட்டார்.

    எல்லாம் வல்ல சித்தர், "அப்படியே உண்டாகும் போய்வா"என்று அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே அபிஷேக பாண்டியனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விக்கிரமன் என்று பெயரிட்டு அந்த குழந்தையை அவர் வளர்த்தார் என்பது வரலாறாகும்.

    இத்தகைய சிறப்புடைய எல்லாம் வல்ல சித்தர் மதுரையில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சித்தர் ஆய்வு நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் விண்வெளி பயணத்தில் மிகவும் சிறந்து விளங்கினார். பல தடவை சமாதி யோகத்தில் இருந்துள்ளார். இவர் 800 ஆண்டுகள் 28 நாட்கள் வாழ்ந்ததாக சில சித்தர்கள் தங்களது நூல்களில் எழுதி உள்ளனர். போகர் இவரை பற்றி கணித்து சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அதில் எல்லாம் வல்ல சித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய சித்தராக இவரை கருதுகிறார்கள்.

    இவர் ரசவாத வித்தையில் கரைகண்டவராக திகழ்ந்தார். எந்த ஒரு பொருளை அவர் தொட்டு கொடுத்தாலும் அது தங்கமாக மாறும் அதிசயம் நடந்தது. சில சமயங்களில் அவர் சொன்னாலே பொருட்கள் தங்கமாக மாறின. அந்த வகையில் திருப்புவனத்தில் வாழ்ந்த பொன்னனையாள் என்ற தேவதாசி பெண்ணுக்கு அவர் தங்கம் வரவழைத்து கொடுத்தது இன்றும் வரலாற்று பதிவாக உள்ளது.

    சிறந்த சிவ பக்தையான பொன்னனையாள் சிவனடியார்களுக்கு தினமும் உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.ஒருநாள் அவள் சிவனடியார்களுக்கு அன்னதானம் கொடுத்த போது ஒரே ஒரு சிவனடியார் மட்டும் உணவு சாப்பிடாமல் அமைதியாக இருந்தார்.

    அவரிடம் பொன்னனையாள், "ஏன் சுவாமி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? வேறு ஏதாவது உங்களுக்குவேண்டுமா?" என்று கேட்டாள். அதற்கு அவர், "எனக்கு எதுவும் வேண்டாம். உனது முகத்தில் ஏதோ ஒரு கவலை தெரிகிறது. அதை சொன்னால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். உடனே பொன்னனையாள் கண்ணீர் விட்டு அழுதபடி தனது குறையை தெரிவித்தாள்.

    "இந்த ஊரில் உள்ள சிவபெருமான் பூவனநாதருக்கு தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த அளவுக்கு என்னிடம் பொருள் வசதி இல்லை.அதை நினைத்துதான் கவலையில் இருக்கிறேன்" என்றாள்.

    அதைக்கேட்ட அவர், " நீ வைத்திருக்கும் பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வா" என்றார். அதன்படி பொன்னனையாள் எல்லா பாத்திரங்களையும் அவர் முன்பு கொண்டு வந்து வைத்தாள். அந்த பாத்திரங்கள் மீது திருநீறு அள்ளி வீசிய அவர், "இந்த பாத்திரங்களையெல்லாம் இன்று இரவு தீயில் போட்டுவிடு. அவை உனக்கு தங்கமாக மாறி கிடைக்கும்" என்றார்.

    அவர் சொன்னது போலவே அன்றிரவு பொன்னனையாள் பித்தளை பாத்திரங்களை தீயில் அள்ளிப்போட்டாள். அவை அனைத்தும் தங்கமாக மாறியது. அந்த தங்கத்தை சிற்பியிடம் கொடுத்து அழகான சிலை வடித்தாள். அதன்பிறகுதான் தனக்கு உதவி செய்த சிவனடியாரை தேடி கண்டுபிடித்து பேச வேண்டும் என்ற உணர்வு பொன்னனையாளுக்கு எழுந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருப்பேன் என்று அவர் சொன்னது பொன்னனையாளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தாள். கோவிலுக்குள் கடம்பமரத்தடியில் சித்தர் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் தனக்கு தங்கம் தந்து அற்புதங்கள் நிகழ்த்தியது எல்லாம் வல்ல சித்தர் என்ற உண்மை பொன்னனையாளுக்கு தெரிய வந்தது.

    கண்ணீர் மல்க அவள் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கினாள். "உங்களது உதவியால்தான் தங்கத்தில் ஈசனுக்கு சிலை செய்ய முடிந்தது. உண்மையில் நீங்கள் யார்?என்றுபல்வேறு கேள்விகளை எழுப்பினாள்.

    ஆனால் எல்லாம் வல்ல சித்தர் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தார். பொன்னனையாள் விடவில்லை. "எனக்கு நீங்கள் உண்மையை சொல்லியே தீர வேண்டும்" என்று நச்சரித்தாள். உடனே சித்தர், "என்னை சொக்கநாதா என்பார்கள். சிலர் சுந்தரேசா என்கிறார்கள். சிலர் எல்லாம் வல்லவர் என்கிறார்கள். எனக்கு இப்படி ஏராளமான பெயர்கள் இருக்கிறது. உனக்கு எந்த பெயரில் அழைக்க விருப்பமோ அந்த பெயரில் அழைக்கலாம்" என்றார்.

    பிறகு அப்படியே தியான கோலத்தில் அமர்ந்தார். நீண்ட நேரமாக அவரது தியானம் நீடித்தது. பொன்னனையாள் பொறுமை இழந்து, "சுவாமி நான் விடைபெற வேண்டும். உத்தரவு தாருங்கள்"என்றாள். ஆனால் எல்லாம் வல்ல சித்தர் தியானத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.

    அவர் அருகில் சென்ற போதுதான் எல்லாம் வல்ல சித்தர் கல்சிலையாக மாறி இருப்பது தெரிய வந்தது. இறைவனே சித்தராக மாறி இவ்வளவு நாளும் அருள் புரிந்ததாக மதுரை மக்கள் கொண்டாடினார்கள். அவர் வாழ்ந்த அந்த இடத்திலேயே அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டது.

    தற்போது அந்த இடம் மதுரை ஆலயத்தின் கருவறை அருகே உள்ள தனி சன்னதியாக உள்ளது. அந்த சன்னதி கருவறையில் எல்லாம் வல்ல சித்தரின் தியான கோல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை ஆலயத்தில் இருக்கும் ஈசனை சுந்தரேசர் என்று சொல்வது போல இந்த சித்தரை சுந்தரானந்தர் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலா னவர்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றே சொல்கிறார்கள். இவருக்கு தினமும் பூஜை நடத்தப்படுகிறது.

    இவருக்கென்று அபிஷேகங்கள் செய்யப் படுவதில்லை. அதற்கு பதில் தைலகாப்பு செய்யப்படுகிறது. ரேவதி நட்சத்திர நாட்களில் நிறைய பேர் வந்து இவரை வழிபட்டு செல்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் சித்தரை பற்றி தெரிந்தவர்கள் இவரது சன்னதி அருகே நீண்ட நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இவர் தனது உயிரை பிரித்துக்கொண்ட போது பொன்னனையாள் கதறி அழுது புலம்பினாள். அப்போது அசரீரி ஒன்று கேட்டது. அதில், "நான் இந்த இடத்திலேயே அமர்ந்து இருப்பேன். எனக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு செய்தால் நினைத்ததை நடத்தி தருவேன்" என்று குரல் எழுந்தது.

    அதன்படியே பொன்னனையாள் பூக்களால் பந்தல் போட்டு எல்லாம் வல்ல சித்தரை வழிபட்டாள். அன்று முதல் இங்கு சித்தரை பூக்களால் கூடாரம் அமைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. 500 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் பூக்கூடாரம் அமைத்து இந்த சித்தரை வழிபடலாம்.

    எல்லாம் வல்ல சித்தர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். இதனால் சித்தருக்கும் சித்தர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இதனால் எல்லாம் வல்ல சித்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உரிய வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் இந்த சன்னதியில் சென்று வழிபட்டால் உரிய பலன்களை பெற முடியும்.

    மதுரைக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தும் எல்லாம் வல்ல சித்தரை வழிபடலாம். சுந்தரானந்தர் படத்தை வீட்டில் வைத்து ஐந்துமுகவிளக்கேற்றி அவர் தொடர்பான போற்றிகளை சொன்னாலே போதும். குறிப்பாக, "ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!!"என்ற மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி வழிபடுவது நல்லது.

    வியாழக்கிழமைகளில் எல்லாம் வல்ல சித்தரை வழிபடுவது மிகவும் சிறப்பானது. மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் சித்தர் அருளை எளிதாக பெறலாம்.

    எல்லாம் வல்ல சித்தரை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமை அகன்று வளமான வாழ்வு கிடைக்கும். குரு பக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இதன்மூலம் முக்தி பாதைக்கும் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் எல்லாம் வல்ல சித்தரையும் வழிபாடு செய்து விட்டு வாருங்கள்.

    • மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களைஏவினான்.
    • இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் குடிகொண்டுள்ள மதுரைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களைஏவினான். அதனை தடுக்க சிவபெருமான் தன் சடையில் இருந்து விடுத்த 4 மேகங்கள் 4 மாடங்களாக கூடி மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது.

    இதேபோல் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.

    இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல்,சொக்கநாதர் என்றும் அழைக்கிறார்கள்.

    அம்பாள் மீனாட்சி தடாதகை பிராட்டி, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண் குமாரி, குமரிதுறையவள், கோமகள், பாண்டிபிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலை திருவழுதிதிருமகள் எனபல நாமங்களால் அழைக்கப்படுகிறார்.

    • மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள்.
    • கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

    மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை கேட்டு வணங்கினாலும் அதை அருளுவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க கூடியவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர்.மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த கோவிலுக்கு வந்துமீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும். சுவாமி பிரகாரத்தில் ஓம் என்னும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருக்கும். மன அமைதி, நிம்மதி வேண்டுவோர்கள் கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

    சுவாமிக்குபால், எண்ணெய், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்யலாம். தவம் செய்தல், விரதம் இருத்தல், தியானத்தில் ஈடுபடுதல், வேள்வி புரிதல்,தானதர்மங்கள் அளித்தல் போன்ற பல்வேறு நிலையில் சுவாமிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

    அம்பாளை பொருத்தவரை பட்டு புடவை சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் வேண்டுதல்களைபக்தர்கள் பூர்த்தி செய்கின்றனர். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்தும் யாகம் செய்தும் வழிபடலாம். கோவிலுக்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    • வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.

    எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதம் தோறும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த திருவிழா புதுமண்டபத்தில் நடக்கும். குறிப்பாக இந்த ஆண்டு, புதுமண்டபத்தில் இருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வெகு விமரிசையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல், புது மண்டபம் வண்ண வண்ண மலர்களாலும், பழங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வைகாசி வசந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடன் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டு அம்மன் சன்னதி, கீழ ஆவணி மூல வீதி வழியாக புதுமண்டபத்திற்குள் எழுந்தருளினர்.

    அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர், சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. கடைகள் இன்றி... கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த விழாவில் புதுமண்டபத்தில் தண்ணீர் இன்றி, ஏராளமான கடைகளுக்கு இடையே சாமி உலா வரும். இந்த நிலையில் இந்தாண்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பழங்காலத்தில் நடைபெற்றது போல மண்டபத்தைச் சுற்றி அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, உலா நடந்து மைய மண்டபத்தில் சாமி-அம்மன் எழுந்தருளினர்.கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் புதுமண்டபத்தில் அமர்ந்து சாமியை தரிசிக்க முடிந்தது.

    இந்த வைகாசி வசந்த உற்சவமானது வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. முதலாம் நாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும்.
    மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தை சுற்றி நீர் நிரப்பும் பணி நடந்தது. வசந்த உற்சவ விழா இன்று தொடங்குகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலைநாயக்கர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். இந்த விழா நடக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்று முற்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    விழா நாட்களை தவிர மற்ற காலங்களில் இந்த மண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, அங்கு பூஜை பொருள் கடைகள், துணிக்கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் செயல்பட்டு வந்தன. வணிக மண்டபமாக மாறியதால் அதன் சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது. எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை பக்தர்கள் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தன. இதையடுத்து கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டன.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று மண்டபத்தை சுற்றிலும் நீர் நிரப்பி, பாரம்பரிய வழக்கப்படி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

    அதன்படி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு 4 சித்திரை வீதிகளிலும் சுவாமி-அம்மன் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே புதுமண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    விழாவுக்காக மண்டபத்தை சுற்றிலும் சோதனை முறையில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. எனவே தண்ணீர் நிற்கும் பாதைகளை சரி செய்து அங்கு நேற்று மதியம் முதல் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரப்பப்படுவதால் அந்த தண்ணீர் அங்கு சரிவர நிற்கவில்லை. எனவே அதற்கான காரணங்களை கண்டறிந்து என்ஜினீயர்கள் மூலம் அதனை சீரமைக்கும் பணியை செய்ய உள்ளனர். மேலும் மண்டபம் முழுவதும் தோரணங்கள் கட்டியும், வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுற காட்சி அளிக்கிறது. இனி வரும் காலத்தில் வசந்த உற்சவ திருவிழா சிறப்பான முறையில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தில் வருகிற 3-ந் தேதி வசந்த உற்சவத்தையொட்டி பல நூற்றாண்டுக்கு பின்பு மண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே கீழசித்திரை வீதியில் அமைந்துள்ளது புதுமண்டபம். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் கோடை காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக முற்றிலும் கற்களால் இந்த மண்டபத்தை கட்டினார். எனவே இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் வசந்த மண்டப மேடை அழகுற அமைந்துள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தின்போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். அதுதவிர கோடை காலத்தின்போது வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்ற அமைப்பும் உள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைத்துள்ளனர். மேலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவமும் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்.

    திருவிழா நாட்களை தவிர பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இங்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தன. மேலும் அந்த மண்டபத்தில் திருமலை நாயக்கர் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 28 அற்புத சிலைகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவில் நிர்வாகமும், தொல்லியல், சுற்றுலா துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை எல்லோரும் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தது.

    அதன்படி அங்குள்ள கடைகள் அனைத்தையும் அங்கிருந்து காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் கடைக்காரர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டி அவர்களுக்கு கொடுக்க அரசு முன் வந்தது.

    குன்னத்தூர் சத்திரத்தில் 191 கடைகள் கட்டப்பட்டு, அதில் 169 கடைகள் புதுமண்டபத்தில் இருந்த கடைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்த பெரும்பாலான கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் பாத்திரக்கடை, புத்தக்கடை என 32 கடைக்காரர்கள் மட்டும் இன்னும் தங்களுக்கு ஒதுக்கிய இடத்திற்கு செல்லாமல் புதுமண்டபத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். அந்த கடைகளையும் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மாலை நேரத்தில் இங்கு வந்து, மண்டபத்தின் உள்ளே 3 முறை வலம் வந்து மேடையில் எழுந்தருள்வர். பல்லாண்டுக்கு முன்பு இந்த விழாவின் போது மண்டபத்தின் நான்குபுறமும் தண்ணீரால் நிரப்பப்படுவது போல் தற்போது தண்ணீரை நிரப்பி திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அது தவிர தண்ணீரை நிரப்புவதற்காகவும், தண்ணீர் தடையின்றி நான்கு புறமும் அகழியில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வசந்த உற்சவ விழா பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பழைய முறைப்படி நடைபெற உள்ளதால் பக்தர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உகந்த இத்துதியை பாராயணம் செய்தால் சகல மங்களங்களும் பெருகும்.
    பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
    காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
    பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
    ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய

    (மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

    பொதுப்பொருள்:

    பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
    ×