search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KRS Dam"

    • தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
    • முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம்.

    தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #KRSDam
    மாண்டியா:

    கர்நாடகம்-தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை திகழ்கிறது. இந்த அணை மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும்.

    இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லை. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.



    நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 102.23 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ராமநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்திற்கும் என மொத்தம் வினாடிக்கு 3,600 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 113 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

    இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கே.ஆர்.எஸ். அணை நீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு (2018) ஏப்ரல் 11-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 87.69 அடியாக இருந்தது. ஆனால் தற்போது 102.23 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட தற்போது மழை பொழிவு குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் இருப்பு வைக்கலாம். தற்போது அணையில் 20.24 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KRSDam

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #Cauvery #KRSDam #KabiniDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் உடுப்பி, குடகு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகள் கடந்த 2 மாதத்தில் 2 முறை முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. குடகு, வயநாடு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 530 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 69,583 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர் கபிலா ஆற்றில் செல்கிறது. இதனால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காவிரி மூலமாகவும், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா மூலமாகவும் திரிவேணி சங்கமம் பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 113 கனஅடி நீர் காவிரியில் சென்றது. நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 2.04 லட்சம் கனஅடிநீர் தமிழகத்துக்கு சென்றது.



    குடகு மாவட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மடிகேரி தாலுகாவில் கிராமங்களை ஒட்டிய மலைப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரம், பாறாங்கற்கள், மண் ஆகியவை குடியிருப்புகளில் விழுந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மக்கந்தூர் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதால் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இன்றி பரிதவித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. தொடர் மழை, பனிப்பொழிவு, மண்சரிவு காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பலர் தங்களது குடும்பத்தினரை காணவில்லை என்று கூறினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குடகுக்கு நேற்று வந்தனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்வாரில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 70 பேரும், மங்களூருவில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 80 பேரும் குடகு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Cauvery #KRSDam #KabiniDam

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #KRSDam #KabiniDam #Cauvery
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் கடந்த 19-ந்தேதி இரவு முழுகொள்ளளவை எட்டின. இதைதொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் (முழுகொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 123.33 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 49,893 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 42,524 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,282.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 28,022 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அதேவேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 27,033 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 68,277 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  #KRSDam #KabiniDam #Cauvery
    ×