search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education fees"

    அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டில் கல்வி கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறுகையில், ‘‘எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் கல்வி கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு கல்வி கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ளது’’ என்றார்.



    கட்டண உயர்வுக்கு பிறகும் கூட தற்போதுள்ள கட்டணம் மற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை விடவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைவிடவும் குறைவாகத்தான் உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய கட்டணத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுய உதவி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் மற்ற பல்வேறு படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. இதே போல பாதுகாப்பு மற்றும் ஆய்வகத்தில் பல்வேறு வசதிகளை செய்தல் போன்றவற்றாலும் செலவுகள் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய நிதியை 2012-2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்திவிட்டது.

    தற்போது உயர்க்கல்வித்துறை உதவியுடன் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி நெல்லை, கோவை, மதுரை மண்டலங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
     
    இவ்வாறு அவர்கள் கூறினர். #AnnaUniversity
    புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #GajaCyclone
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தர் நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.


    இதேபோன்று காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றுகள் கொடுத்து பேராசிரியர் பணியிடங்களில் உள்ளோர் மற்றும் இதர பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போலி சான்றுகள் கொடுத்து ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KPAnbazhagan

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும், ‘கஜா’ புயல் தாக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் ரூ.48 கோடி கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பாரிவேந்தர் அறிவித்துள்ளார். #gajacyclone #parivendhar
    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் அளவுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார்.

    இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதாகவும், அவர்கள் எந்த கட்டணமும் இன்றி தங்களின் படிப்பை தொடரலாம் எனவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

    மேற்கண்ட 4 மாவட்டங்களிலிருந்து 650 மாணவர்கள் படிப்பதாகவும், அவர்களுக்கான நான்காண்டு கல்விக் கட்டணம் சுமார் ரூ.48 கோடி ஆகும். கல்வி கட்டண ரத்து செய்யப்பட்டிருப்பதின் மூலம், அவர்களது பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ‘தானே’ புயலின்போதும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 350 மாணவர்களுக்கான ரூ.7.5 கோடி கல்வி கட்டணத்தை பாரிவேந்தர் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரிவேந்தரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகுந்த மனிதநேயமிக்கதாகும். அந்த வகையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்’, எனவும் பாரிவேந்தரிடம், கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #gajacyclone #parivendhar #gajaeffected
    கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Ministersengottaiyan #Plus2Result
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 6754 மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 1907 ஆகும்.

    மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டமாக விருதுநகர் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் 2602 பேர் தேர்வு எழுதியதில் 2110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமும், இணைய தளம் மூலமும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளஸ்-2 தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் துவண்டு விட தேவையில்லை. ஜூன் 25-ந்தேதியே அவர்கள் உடனடி தேர்வு எழுதலாம்.

    பாடத் திட்டங்களை பொறுத்தவரை சில கேள்விகள் கஷ்டமாக இருப்பதாக மாணவர்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சி மூலம் அறிய முடிந்தது.

    இந்த அரசின் பாடத் திட்டங்கள் ஒன்றுபோல்தான் உள்ளன. மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை சந்திக்க வேண்டி உள்ளதால் பரீட்சையில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு மாணவர்களின் நலனுக்கேற்ப உருவாக் கப்படும்.

    ரேங்க் முறை கடந்த ஆண்டு முதல் நீக்கப்பட்டதால் பெற்றோர்கள் இந்த அரசை பாராட்டியுள்ளனர்.

    தனியார் பள்ளிகள் ஒவ்வொரு வகுப்பிற்கான கல்வி கட்டணத்தை பெயர் பலகையில் பட்டியலிட்டு வைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்ச்சி விகிதத்தில் முதல் மாணவர், 2-ம் மாணவர் என்று பள்ளிகள் விளம்பர படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இதையும் மீறி பள்ளிகள் விளம்பரப்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வட மாவட்டங்களில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம்குறைவதாக பலர் ஆதங்கப்படுகின்றனர். பல ஆசிரியர்கள் சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றதால் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.

    இந்த குறையை போக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர்களை இந்த அரசு நியமித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த குறை ஏற்படாது.

    இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக உள்ளது.



    அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் குறைவாக உள்ளது உண்மைதான். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செப்டம்பர் இறுதி வரை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    ஏழை மாணவர்களை தனியார் பள்ளியில் படிக்க நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், இங்கு மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

    பொதுமக்களில் பலர் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்த்தால் ஆங்கில அறிவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கின்றனர். அரசு இதை கவனமுடன் பரிசீலிக்கிறது. இதே தரத்தில் அரசு பள்ளிகளிலும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஏழை மாணவர்களை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இவ்வாறு மாணவர்களை சேர்க்காத 12 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.#Ministersengottaiyan #Plus2Result
    ×