என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.
    • மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினரும், வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அவரது தாயாரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.

    தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கினார். அதன் பின், பறக்கும்படை அதிகாரிகள் கார் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். வாகன சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர்.
    • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    கேள்வி: ஒரு இடம் கூட கொடுக்காத போதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?

    பதில்: இந்த பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால் 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    கேள்வி: சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று கூறும் உங்கள் கூட்டணி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?

    பதில்: எங்கள் கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நிச்சயமாக இதைவிட அதிகமாக தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அடுத்த முறை அதை எங்கள் கூட்டணி கட்சிகள் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கேள்வி: பா.ஜனதாவுடனான உறவை அ.தி.மு.க. துண்டித்துள்ளதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    பதில்: நிச்சயமாக பிரியாது. காரணம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போது அன்றைய முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆட்சி மாறிய பிறகு கூட தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்து விட்டது அ.தி.மு.க.

    அது மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் இங்கு வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை கொரோனாவை பரப்பினார்கள் என்பதற்காக சிறையில் அடைத்தது அ.தி.மு.க.அரசு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகளை போட்டது அ.தி.மு.க.அரசு. இப்படியாக பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்று அ.தி.மு.க. சொல்வது தேர்தல், அரசியல் தந்திரமாகும். ஆகவே நிச்சயமாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரியாது. சிறுபான்மை மக்களின் நலனை காக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணியாகும். ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.


    கேள்வி:- பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி பிரசாரம் மேற்கொள்வது ஏன்?

    பதில்:-தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பெரிய அலை வீசுகிறது. மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண தொகைகளை தருவதற்கு எல்லாம் அவருக்கு மனம் வரவில்லை.இப்போது தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க .வை ஒரு இடத்திலாவது வெல்ல வைக்க முடியுமா என்பதற்கு அவர் பலமுறை வருகிறார். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

    கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-நிச்சயமாக எழுச்சி பெற வாய்ப்பு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெல்வது கடினம்.

    கேள்வி:- இந்தியா முழுவதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக இல்லையே?

    பதில்:- நிச்சயமாக அது ஒரு தவறான கருத்து. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வலுவாக இருக்கிறது. இன்றைக்கு வரக் கூடிய பல்வேறு செய்திகள் வட இந்தியாவிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான ஒரு அலை வீசுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வட இந்தியாவிலும் சிறப்பான வெற்றியை பெறும்.

    கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?

    பதில்:-மிக சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையாகும். பலதரப்பட்ட மக்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்சம் தரப்படும், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ. 1 லட்சம் தரப்படும் உள்ளிட்ட மிகவும் அற்புதமான அறிவிப்புகள். இதே போல மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகை எல்லாம் வழங்கப்படும். இப்படியான சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த தேர்தலின் கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து இருக்கிறது.

    பா.ஜனதா கடந்த 2 தேர்தல்களில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்கள். இது பற்றி கேட்ட போது தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தேர்தலுக்காக சொல்லப்பட்டது என்றனர்.

    கேள்வி:-ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளாரே?

    பதில்:-ஒருமுறை தான் வந்தார். ஆனால் அந்த ஒரு முறையில் அவர் நடந்து கொண்ட விதம் குறிப்பாக கோவையில் வாகனத்தில் போகும் போது இறங்கி இனிப்பு கடைக்கு சென்று இனிப்பை வாங்கி அதற்குரிய தொகையை கொடுத்து விட்டு தேர்தல் பரப்புரை மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என்று சொல்லி அவரிடம் அந்த சுவீட்டை கொடுத்த அந்த காட்சி மூலமாக தமிழக மக்களுடைய உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார் ராகுல்காந்தி. நிச்சயமாக அவருடைய நடத்தை, பேச்சு தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இருக்கிறது. ராகுல்காந்தி மிக சிறப்பான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்.

    கேள்வி:-2019 தேர்தலுக்கும், தற்போதைய தேர்தலுக்கும் என்ன மாற்றம் இருக்கிறது?

    பதில்:-2019 தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. தனியாகவும், பா.ஜ.க. தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் 3 முனைகளில் பிரிகிறது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. மிக எளிதாக 40 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு கள நிலவரம் என்ன சொல்கிறது?

    பதில்:-நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது. எனக்கும் உற்சாகமான வரவேற்பை மக்கள் தருகிறார்கள். மக்களின் ஆதரவு அலை இந்தியா கூட்டணி பக்கம் வீசுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த பரப்புரை அமைந்துள்ளது.

    இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

    • ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது.
    • நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள். தப்பித் தவறி மோடிக்கு வாக்களித்தால் இனி ரம்ஜான் கொண்டாட முடியாது. அடுத்த தலைமுறையினர் தேர்தலை பார்க்கவே முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களித்து இன்னொரு ஹிட்லரை உருவாக்கிட வேண்டாம்.

    சமத்துவம் பெருக சமூக நீதி மண்ணில் இருக்க ஜாதி மதங்களை கடந்து மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நெல்லையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என்றார். ஜெயலலிதாவின் இலக்கு மோடியா, லேடியா என்பதுதான். மோடியை தமிழகத்தில் இருந்து அகற்றுவதுதான் இலக்காக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஜி.எஸ்.டி. என்பது வரி இல்லை. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைத்துள்ளது. இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

    ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது. மக்கள் மீது வரியை சுமத்தும் மத்திய அரசு வங்கி கடன்களில் வராக்கடன் என ரூ.66 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் கோடியை அதானி, அம்பானி மற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

    நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும். மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் தனி நபர் வருமானத்தில் 121-வது இடத்தில் உள்ளது. இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.

    ஈரோடு:

    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ந்தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.

    ஈரோடு பாராளுமன்ற முன்னாள் எம்.பி. கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார்.

    இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர்.

    ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் வாங்கிய பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.

    பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்.

    கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது. இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர்.

    திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பி.எம். மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை.

    சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும்

    ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40/40வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார்.

    2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள்.

    ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர்.

    மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள்.

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அ.தி.மு.க.வை விரட்டி அடித்தது போல இந்த முறை அ.தி.மு.க. எஜமானர்கள் பா.ஜ.க. விரட்டி அடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.
    • விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உட்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன் நுன்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லவும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131-ன் படி காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்திய 72 மணி நேரத்தில் (3 நாட்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவரப்படுத்தப்படும்.


    அதேப்போல் 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிர படுத்தப்படும். ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது. கூட்டம் கூட கூடாது.

    மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சி-விஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கை குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3001 பேரில் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டி வழங்கப்பட்டது. அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்கு பதிவு செய்துள்ளனர். முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் இப்படி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் வழி காட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.

    தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2500 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும். அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.

    அப்போதும் முகவர்கள் வரவில்லை எனில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே மாதிரி வாக்குப்பதிவை நடத்துவார். 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு என மாதிரி வாக்கு பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்கு சாவடியில் அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொலைபேசி இன்டர்நெட் வசதி தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கிடைக்காத வாக்கு சாவடிகளுக்கு வனத்துறையினர் மைக் மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கத்திரி மலை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல மண் சாலைகளை உள்ளன இருப்பினும் கூடுதல் வசதி அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடன் இருந்தார்.

    • பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    • திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை புதுச்சேரியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையம் வந்த ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்திற்கு காலை 11.00 மணிக்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிக்கு சென்றார்.

    ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஜே.பி.நட்டா ஈடுபட்டார். அவரது வருகையை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த பிரசாரத்தை முன்னிட்டு அவரது வாகனம் பேருந்து நிலையம், வெள்ளி விழா தோரணவாயில் வழியாக காந்தி சிலை வரை சுமார் 3 கி.மீ. தூரம் சென்றது. அவர் செல்லும் வழியில் இரு புறங்களிலும் பா.ஜ.க.வினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

    பின்னர் காந்தி சிலை அருகே வாகனத்தில் இருந்த படியே ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மிகவும் தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு பிரசாரம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. அவரது குரல் டெல்லியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் அவரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் வாக்களிப்பீர்களா?

    நடைபெறும் இந்த தேர்தல் வெறும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2047-ல் பாரதம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக, வலிமை பெற்ற பாரதமாக மாறுவதற்கான ஒரு தேர்தலாகும். எனவே 400 சீட்டுக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில், ஏழைகள் வளம் பெற அதிகமான திட்டங்களை அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.

    ரேசன் கடைகள் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்து வழங்கப்படும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் மூலம் 25 கோடி ஏழைகள் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கும், ஏராளமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    தி.மு.க. என்பது, அநீதி, ஊழல், கட்டப்பஞ்சாயத்து தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை குவித்துள்ளனர். ஜூன் 4-ந்தேதி அன்று அமையும் ஆட்சி இவர்களை சிறைக்கு அனுப்பும் அல்லது ஆட்சியை விட்டு வெளியே அனுப்பும். ஆகவே பா.ஜ.க. வெற்றி பெற பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

    • அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தி.மு.க.வை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போது தி.மு.க.வினர் அதனை கடுமையாக கேலி செய்து விமர்சனம் செய்தனர். எங்களை பானிபூரி வாலாக்கள் என்றனர். ஆனால் தமிழக மக்கள் காசிக்கு வந்து தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தி.மு.க.வினர் விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உணர்ந்தார்கள்.

    காசி உண்மையிலேயே வளர்ச்சியடைந்து விட்டதாக பெருமிதத்துடன் பேச தொடங்கினார்கள். இதனால் தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு அளவுக்கு அதிகமான வெறுப்பு வளர்ந்து இருக்கிறது.

    அந்த ஆத்திரமும் வெறுப்பும் தான் மக்களை பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் ஈர்த்துள்ளது.

    அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர். தனது ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார்.

    அவர் நினைத்திருந்தால் தி.மு.க.வில் போய் ஐக்கியமாகி இருக்கலாம். அங்கு அண்ணாமலைக்கு பெயரும், பதவியும் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்காகத்தான் வந்தார். பா.ஜனதா கட்சியை நம்பினார்.

    சனாதன எதிர்ப்பு பற்றிய கேள்வியை தான் வேறு விதமாக அணுக நினைக்கிறேன். இந்த கேள்வியை காங்கிரசிடம் தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் ஏன் கையறு நிலையில் உள்ளது.

    சனாதனத்துக்கு எதிரான கட்சியுடன் கை கோர்க்க வேண்டிய அவசியம். காங்கிரசுக்கு ஏன் வந்தது. சனாதன வெறுப்புணர்வில் தான் தி.மு.க. உருவெடுத்தது.

    அதனால் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க தான் பொறுத்தமானதாக இருக்கும். காங்கிரஸ் தனது பூர்வீக குணத்தை இழந்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது. கிராமத்துக்கும், தனி நபர்களுக்கும் ராமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி தேசத்தை பிரித்து பார்க்க முடியும். இருந்தாலும் சில வேற்றுமைகள் தமிழகத்தில் இருக்கின்றன.

    பஞ்சாப்பை போல நாகலாந்து கிடையாது. காஷ்மீரை போல குஜராத் கிடையாது. அந்த வேற்றுமைதான் நமது பலம். அதனை நாம் கொண்டாட வேண்டும்.

    உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. அந்தந்த மாநிலங்களுக்கே உரித்தான உடையை தான் உடுத்தினாலும் அவர்கள் என்னை குறை கூறுகிறார்கள்.

    தமிழ் மொழியை நாங்கள் போற்றுகிறோம். வணங்குகிறோம். அவரவர் தாய் மொழியை நிச்சயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு வரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவெடுக்க விரும்புகிறார்கள்.

    கடிதம் எழுதும்போதும், கையெழுத்திடும் போதும் தாய் மொழியிலேயே எழுதுங்கள். அதனை பெருமையாக நினையுங்கள். அதுதான் உண்மையான மொழிபற்றாகும். உலகிலேயே மிகப்பழமையான மொழி தமிழ் மொழியாகும்.

    எனவேதான் அதன் சிறப்பை உலகறிய செய்து வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார்.
    • பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி இருந்துவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் எதிரெதிராக இருந்து மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் வயநாடு, திருவனந்தபுரம், அட்டிங்கல், பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, ஆலத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார். பின்பு அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று மீண்டும் தொடங்கினார்.

    அவர் நேற்று வயநாட்டில் ரோடு-ஷோ சென்றது மட்டுமின்றி, கோழிக்கோடு கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். ராகுல் காந்தி கேரளாவில் தொடர்ந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 090 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
    • 2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி இருக்க கூடிய ஒரு நபர் நரேந்திர மோடி மட்டுமே. பிரதமருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. பலம் இருக்கிறது.

    அந்த பொறுப்பில் இருந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். இத்தனை பிரதமர்கள் இருந்தாலும் மோடிக்கு என்று தனித்தன்மை இருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறும். தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பு செய்துள்ளோம்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவரையும் மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு என்று எண்ணற்ற மாபெரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளது. வருடா வருடம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு உள்ளது.

    கடந்த 10 ஆண்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.

    பிரதமர் மோடி மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களின் வாழ்வை உயர்த்தி உள்ளார். நாடு நன்றாக இருப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    சிலர் பிரதமர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தலைவரின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.

    நாளையுடன் பிரசாரம் முடிய போகிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் இந்தியா கூட்டணி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க என்னோடு வாருங்கள் என்று அழைக்கிறார். உங்களிடம் இருந்தும், உங்கள் குடும்பத்திடம் இருந்தும் மக்களை காக்க தான் நாங்கள் வீதியில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்தில் 21 இடங்களில் தான் தி.மு.க போட்டியிடுகிறது. 21 இடத்தில் நிற்கும் தி.மு.க. 543 பாராளுமன்ற தொகுதி உள்ள நாட்டில் எதனை போய் காப்பாற்ற போகிறார்கள்.

    மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.

    ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி உலகம் 3-வது உலக போரை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும், அதனுடைய தாக்கம் இந்தியாவில் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் என்பது உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது.

    2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார். உலக தலைவனை இந்தியாவில் இருந்து நாம் அனுப்ப உள்ளோம். உலக பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா இருக்கும். நமது வளர்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×