என் மலர்tooltip icon

    உலகம்

    • பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.
    • டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார்.

    பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

     

    காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.

     

    சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.

    • சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறியதாக இர்பான் கைது செய்யப்பட்டார்.
    • முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

    சமூக ஊடகங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், இந்தாண்டு சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

    இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கதேசத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

    ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள ஹதிகும்ருல்-14 ரோஹிங்கியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரோஹிங்கியா குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பல குடியிருப்புகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலச்சரிவை தொடர்ந்து ஆபத்தான மலைச்சரிவுகளில் வசித்து வருவர்களை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    • வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
    • அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.

    இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.

    சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

    முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.

    • சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

    சோப் மாவட்டத்தின் தனா சர் பகுதியில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் இருந்து மாகாண தலைநகர் குவெட்டாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமேரிக்கா அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார்.
    • அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று ஐன்ஸ்டீன் எண்ணினார்.

    அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

    இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.

    அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார். அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.

    நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.

    இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.

    உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தபோது ரஷிய ராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார். இதற்கு ரஷியா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 இந்தியர்கள் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] இந்தியா திரும்பியுள்ளனர். ரஷியாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷிய ராணுவத்தில் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.மனிதாபிமானமற்ற சூழலில் நாங்கள் இருந்தோம். AK-12, AK-74, கிரெனைடுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள எங்களுக்கு பயிற்சி அளித்தனர். குறைந்த உணவுடன் கடுமையான குளிரில் சுரங்கப்பாதைகளைத் தோண்டினோம். உடல் ரீதியான வலியுடன் மன ரீதியாகவும் எங்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டது.

    எங்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டது. போருக்கிடையில் தாங்கள் எத்தனை நாட்கள் உயிர்பிழைக்கப் போகிறோம் என்று அஞ்சினோம். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் இன்னும் எங்களின் காதுகளுக்கு இரைந்து கொண்டிருக்கிறது. வேலையின்போது நாங்கள் சோர்ந்துவிட்டால் கால்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள், போரில் நண்பர்கள் பலரின் மரணத்திலிருந்தும் தாங்கள் இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

    • இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.
    • நாங்கள் விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார். 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார்.

    இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது "இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். 8 நாட்களில் பூமிக்கு திரும்பிய உடன் சில திட்டங்கள் வைத்திருந்தார். என்னுடைய தாயார் உடன் நேரம் செலவழிவிட வேண்டும் போன்ற திட்டங்கள் இருந்தது. குளிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தது. ஆனால், எல்லாமே தற்போது விண்வெளி நிலையத்தில்தான். அதற்காக நாங்கள் தயாராகிவிட்டோம்.

    நாங்கள் எல்லோரும் அமெரிக்க குடிமகன்கள். அதனால் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான பணி. இதற்கான பணியை நாசா எங்களுக்காக எளிதாக்கியுள்ளது. நாங்கள் விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் அருமையானது" என்றார்.

    • எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான வீடியோ 30 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றது.
    • கருத்து பகுதியில், பலரும் தங்கள் செல்லப் பிராணியின் அன்பைப் பற்றிய பல நினைவுகளைப் பகிர்ந்தனர்.

    நாய்கள் விசுவாசத்திற்கு பெயர்பெற்றவை. அவற்றின் அன்பு நம்மை பல நேரங்களில் நெகிழ வைக்கும். பாசமான ஒருநாய், தனது எஜமானரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை துரத்திச் செல்லும் காட்சியால் சமூக வலைத்தளம் நெகிழ்ந்துள்ளது.

    அந்த நாயின் எஜமானர் நோய்வாய்ப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது, நாய், வெகுதூரம் வரை ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிச் சென்றது. இதை கவனித்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், இறுதியில் ஆம்புலன்சை நிறுத்தி, நாயை உள்ளே அனுமதித்த பின்பே அது அமைதியானது.

    எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 30 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றது. கருத்து பகுதியில், பலரும் தங்கள் செல்லப் பிராணியின் அன்பைப் பற்றிய பல நினைவுகளைப் பகிர்ந்தனர்.

    • சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
    • உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார்.

    கடந்த 1949-ல் 36 ஆண்டுகளாக இருந்த சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடல் உழைப்பு தொழில்களுக்கு 50) என்ற நிலையில் மாற்றமில்லை.

    இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் ஓய்வு பெறும் வயது வரம்பை சீன அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டாம்பூச்சிகளை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
    • விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது.

    கொழும்பு:

    இத்தாலியை சேர்ந்த லூகி பெராரி என்பவர் தனது 28 வயது மகனுடன் இலங்கையை சுற்றி பார்க்க வந்தார். தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபல யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை அவர்கள் கண்ணாடி குடுவைக்குள் அடைத்து வந்து சேகரித்தனர்.

    பின்னர் அவற்றை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வனகாப்பாளர்களால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுகுறித்தான வழக்கு கொழும்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து தந்தை-மகன் இருவருக்கும் சுமார் ரூ.1½ கோடி அபராதமும் (2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டத்தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    • சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் மகாலா நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. ஆண் கைதிகள் மட்டுமின்றி பெண் கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 3 ஆயிரம் பேர் அடைக்க வசதி உள்ள அந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    அளவுக்கு அதிகமானோர் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கே உள்ள கைதிகள் இடையே மோதல் போக்கு, பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயன்றனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் உயிரிழந்தனர். சிறை உடைப்பு முயற்சி குறித்து போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சிறை வன்முறையின்போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஆண் கைதிகள் அத்துமீறி நுழைந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பெண் கைதிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களில் 268 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதில் 17 பேர் 18-க்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர்.

    பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான அதிர்ச்சி்கரமான அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது.

    காங்கோவில் சிறை வன்முறையின்போது 260 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×