என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
    • 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது

    நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.

    அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.

    இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

    7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  

    • வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
    • பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது.

    இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.



    • பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
    • அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.

    • ரவீந்திர குமார்,பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் ரகசியங்களை பகிர்ந்தார்.
    • ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

    இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.

    ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.

    படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.

    தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

    அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

    தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
    • 22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது பட்ஜெட்டை தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    தொடர்ந்து பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் கருத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள்.

    22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை. 24-ந்தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி 24-ந்தேதி நீர்வளத்துறை, இயற்கை, வளங்கள், 25-ந்தேதி நகராட்சி நிர்வாகம், 26-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.

    27-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை. 28-ந்தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல்.

    ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2-ந்தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4-ந்தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை.

    7-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8-ந்தேதி கூட்டுறவு, உணவு, 9-ந்தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15-ந்தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை.

    16-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17-ந்தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை. 21-ந்தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, 22-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23-ந்தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து.

    24-ந்தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25-ந்தேதி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

    28-ந்தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30-ந்தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்-அமைச்சரின் பதிலுரை நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபை கூட்டம் 30 நாட்கள் நடக்க உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாகும். 31-ந்தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது.

    • வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது.
    • பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

    கொல்கத்தா:

    பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.

    9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

    பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

    முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடுதழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

    நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

    சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

     

    மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.

    போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

     

    பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அபவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.

    • நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.

    நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:

    போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும்.

    போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.

    • ஐ.பி.எல். தொடரில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    இஸ்லாமாபாத்:

    இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பிறகே வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    எனவே எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

    நீங்கள் (இந்தியா) உங்களது வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவிக்காவிட்டால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏன் அதே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.
    • வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன் என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், வடகொரிய அதிபர் குறித்து அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன்.

    வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன்.

    வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.

    இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    ×