என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.

    சென்னை:

    'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.

    இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

    தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.

    துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.

    • இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
    • ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

    நியூயார்க்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.

    2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
    • வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர்.

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி 29, 2024 அன்றுகாசாவில் இருந்து தப்பிச் செல்லும்போது, ஹிந்தும் அவளது குடும்பத்தினரும் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது.

    துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காரில் ஹிந்த் மட்டுமே உயிருடன் இருந்தாள். கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.

    ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலின் குண்டுகளால் துளைக்கப்பட்டு ஹிந்த் ரஜப் கொல்லப்பட்ட கார்

    'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' ஆவணப்படத்தில் ஹிந்த் மீட்பு அமைப்பினரிடம் போனில் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது.

    விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் பென் ஹனியா, "இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை அழிக்கவோ முடியாது. ஆனால் அவளது கதை படத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது" என்று தெரிவித்தார்.

    வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற படமும் இதுவே ஆகும்.   

    • அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
    • உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.

    கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.

    அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.

    அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

    மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.  

    • தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
    • வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர்.

    மேற்கு வங்காளத்தில் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் தனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான ரீஜண்ட் பார்க்கில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

    சம்பவத்தின் பின் தலைமறைவான சந்தன் மாலிக் மற்றும் தீப் என்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சந்தன் மாலிக் சில மாதங்கள் முன் அறிமுகமாகி உள்ளார். சந்தன் மாலிக் தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சந்தன் தீப்பையும் அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினான். இருவருடன் அப்பெண் நட்பு பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாளை கொண்டாடலாம் என்று கூறி அப்பெண், தீப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூவரும் அங்கேயே இரவு உணவு சாப்பிட்டனர். அதன் பிறகு, வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர். பிறகு, இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு, நடந்ததை பெற்றோரிடம் அப்பெண் தெரிவித்தார். பின்னர் காவல் நிலையத்தில் பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.  

    • வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
    • இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    வங்காளத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று கோஷ் முன்னர் சட்டமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டி அவரின் பெயரை குறிப்பிடாமல் அப்துர் ரஹீம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்று அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.

    எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன். இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் வங்காளிகள் உங்களை சும்மா விடமாட்டோம். உங்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி எரிப்போம்" என்று தெரிவித்தார்.

    இந்த மிரட்டலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    • Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
    • இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.

    82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை இளம் இந்திய இயக்குனர் அனுபர்ணா ராய் வென்று வரலாறு படைத்துள்ளார்.

    அவரது 'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' திரைப்படம் இந்த விருதை வென்றது. வெனிஸ் திரைப்பட விழாவின் Orizzonti பிரிவு போட்டியில் அனுபர்ணா சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.

    Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.

    'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' என்பது மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

    வாழ்வாதாரம், தனிமை மற்றும் உறவுகள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு அனுபர்ணா இந்தப் படத்தைத் எடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.

    Orizzonti பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே படம் இதுவாகும். மேலும் அவ்விருதை வெல்லும் முதல் இந்திய படமாகவும் இது அமைந்துள்ளது. 

    • தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார்.
    • அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் தேதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர் ரெயிலில் பயணம் செய்டுக்கொண்டிருந்தார்.

    ரெயிலில் இரினாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார். கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரினா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கொலை செய்த நபர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தப்பினார். டிகார்லோஸ் என்ற அந்த நபரை அடையாளம் கண்ட போலீஸ் அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் கொலை செய்தததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர்.
    • இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.

    இந்திய நேரப்படி, நேற்று (செப்டம்பர் 7) இரவு 9:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடைந்த நிலையில், 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறி சந்திர கிரகணம் முழுமையாக முடிவடைந்தது. 

    இது 2022 க்குப் பிறகு மிக நீண்ட கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

    உலகின் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சந்திரகிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். இந்தியாவில் சில பகுதிகளில் மழையின் காரணமாக கிரகணம் புலப்படவில்லை. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. 

    இரவு 11:01 மணிக்கு, பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைத்தது, இதன் காரணமாக சந்திரனின் நிறம் சிவப்பு நிறமாக மாறியது. சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலவை 'Blood Moon' என்று அழைக்கின்றனர். 

    கிரகணம் படிப்படியாக முடிவடைந்து நிலவு அதன் உண்மை நிறத்திற்கு மாறத் தொடங்கியது. 

    இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.   

    • ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
    • ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

    புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.  

    • அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
    • கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

    இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

    மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.

    நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். 

    • பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
    • 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.

    பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.

    கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 

    ×