என் மலர்
இந்தியா

பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொல்கத்தாவில் அதிர்ச்சி
- தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
- வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர்.
மேற்கு வங்காளத்தில் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் தனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான ரீஜண்ட் பார்க்கில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்தின் பின் தலைமறைவான சந்தன் மாலிக் மற்றும் தீப் என்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சந்தன் மாலிக் சில மாதங்கள் முன் அறிமுகமாகி உள்ளார். சந்தன் மாலிக் தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சந்தன் தீப்பையும் அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினான். இருவருடன் அப்பெண் நட்பு பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாளை கொண்டாடலாம் என்று கூறி அப்பெண், தீப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூவரும் அங்கேயே இரவு உணவு சாப்பிட்டனர். அதன் பிறகு, வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர். பிறகு, இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு, நடந்ததை பெற்றோரிடம் அப்பெண் தெரிவித்தார். பின்னர் காவல் நிலையத்தில் பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.






