என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ஒரே நாளில் 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
கடந்த ஜனவரி மாதம் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ஜன.9ம் தேதியில் மட்டும் 3.81 லட்சம் பேர் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2026 ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்
சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 93,28,937 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 09.01.2026 அன்று 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2026, ஜனவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 46,52,834 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 43,107 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,32,996 பயணிகள் (Single journey Paper QR /Token 19,60,685; Online QR – 1,26,665; Static QR 2,27,737; Whatsapp - 4,55,401; Paytm 3,35,852; ONDC – 10,38,782; PhonePe – 2,76,216; CMRL Mobile App 60,240; Chennai One App – 1,43,620; Event QR - 7,798) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
- மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.
அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது
- உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளி இடைநிற்றல் அளவு அதிகரித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது திமுக அரசு. வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம்.
- அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய்,
"தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்." என தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
"விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.
அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
- உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.
ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.
- முதல்வரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார்.
- தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.
த.வெ.க. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3-வது ஆண்டு தொடங்கிய நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அபோது திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுக மற்றும் அதன் கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து பேசுகையில் "2 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் நடவடிக்கையால் தூக்கம் வரவில்லை என்று கூறினார்.
என்றைக்காவது ஒருநாள் நன்றாக தூங்கினார் என்றால், அவரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார். (Stalin would ask the people to vote for 'whistle' (TVK election symbol) when he was asked in the midst of his deep slumbe). தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.
அப்படி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில்தான் த.வெ.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. இங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது" என்றார்.
இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல் அடிக்கும் தொனியில் பதில் அளித்துள்ளார்.
டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பதிலில் "விஜயால்தான் ஜிடிபி-யில் தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது. விஜயால்தான் எல்லோரும் கல்வி பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மக்களுக்காக அவர் ஏராளமாக செய்திருக்கிறார். விஜய் நிம்மதியாக தூங்கும்போது, மக்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் கேட்பார் என நினைக்கிறார். என்னவொரு யோசனை" எனக் கிண்டல் அடிக்கும் வகையில் கூறியுள்ளார்.
- எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சந்தித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்
- கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார் கமலேஷ்.
- மகள் எக்ஷிதா ஏஞ்சல் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கமலேஷின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேஷும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
இதற்கிடையே கமலேஷ் உயிர்மாய்ப்பு தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகததால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.
இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாகதான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ் மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம்.
- மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு.
3500 ஆண்டுகள் பழமையான என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகத்தான், மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்தது.
இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே. பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உரையாற்றியதாவது:-
மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகாச்சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில், மொழிகளுக்கான எழுத்தகளை கொண்டவை 200ஐ கூட தாண்டவில்லை. அவற்றில் 120 - 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது. அதிலும், 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைபடுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.
இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக்கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ் தான் என நிரூபணமாகியுள்ளது. ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டுமே இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். மரத்தை சகோதரியாக பார்த்தது தமிழ் இலக்கணம், ஆனால் இப்போது மனிதர்கள் மரமாக செல்கிறார்கள்.
உலகத்தின் எல்லா மூலைமூடுக்குகளிலும் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் பதற்றம் நிறைந்த சூழலை மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள்.
அதில் ஒவ்வொரு அறக்ககூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழனின் வளர்ச்சியை மனதில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். இந்த மொழியை பேசுவதும் பாதுகாப்பதும் நாம் அனைவரின் கடமை.
மகனுடம் பராசக்தி படத்துக்கு போனேன். படத்தை பார்த்த பிறகு மொழி போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றபோது ரொம்ப அவமானப்பட்டேன். அதை சொல்லிக்கொடுக்காமல் என் கடமையிலிருந்து தவறியதாக என்னை கருதிக்கொண்டேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். ஏனென்றால் எங்கள் பள்ளிபருவத்தில் போராட்டத்தின் அதிர்வுகள் இருந்தது.
அப்போதெல்லாம், பள்ளிகளில் இரண்டாவது மொழி தமிழ் என்பது இயல்பு, திரைப்படங்களில் கூட தமிழ் வசனங்கள் தெறிக்கும், "கொங்குதேர் வாழ்க்கை" என்ற குறுந்தொகை பாடலை நான் கற்றேன், அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் "ஊமைப் பெண்ணல்லவோ" பாடலில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும், வல்லின, மெல்லின, இடையினத்தை திரைப்பாடல்கள் மூலம் கற்றுக்கொடுத்தன.
கம்யூனிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களை அறிந்தக்கொள்ள "மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் " தமிழ்ப்பாடல்கள் உதவின.
காலங்கள் மாறின காட்சிகள் மாறின. மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என காலகட்டம் வந்தபோது, தமிழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் என மாறினார்கள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இன்று தெரிகிறது.
மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதில்லை, மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம். மதிப்பெண் முக்கியமாக போனதால் பள்ளிப்பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதனால் மாணவர்களின் exposure குறைந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதனால் தமிழ் எல்லாவற்றிலும் ஓரடி பின்னே வைத்துள்ளது
இதற்காக நாம் அடுத்த வேள்வி நடத்த வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு. ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது என எங்கள் எல்லவோருக்கும் தெரியும்.
தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை மாறாக விரும்பி படிக்கிறான். என் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன்.
நான் தமிழன் என தலைநிமிர்ந்து சொல். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது உன் குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் இந்த தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறவாதீர்கள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.
கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது.
- கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கொட்டாரம் சந்திப்பில் நிறைவு பெற்றுஉள்ளது. இனி நமது கட்சிக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான்.
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.
தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்." என அவர் தெரிவித்தார்.






