என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புத்தகத்தை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி:  5 வரிகளுக்கே பயந்த மோடி அரசு - எம்.பி. சு.வெங்கடேசன்
    X

    புத்தகத்தை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி: 5 வரிகளுக்கே பயந்த மோடி அரசு - எம்.பி. சு.வெங்கடேசன்

    • ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
    • உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

    "வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

    கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

    தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

    எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

    ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×