என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.
இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு
1. திரு. A. சையத் முகமது காசிம்
2. திரு.K.புதியவன்
3. திரு. V.சாமிநாதன் Ex MLA
4. திரு. K.A.U.அசனா Ex. MLA
5. திரு. பெரியசாமி Ex.MLA
6. திரு. VJ.சந்திரன் Ril, 10,
7. திரு. AG.வலந்தன
8. திரு. R. நிரேஷ் குமார்
9. திரு. V.ராமு
10. திரு. N.மணிபாலன்
11. திரு. V.பிரதீபன்
12. திரு.S.பிரபு
13. திரு. 5.ராஜசேகர்
14. திரு. N.சந்திரசேகரன்
15. திருமதி. M.K.சத்யா
16. திரு. K.செந்தில் குமார்
17. திரு. N.வசந்தராஜா
18. திரு. M.சரவணன்
19. திரு. A.சந்திரபாலன்
20. திரு. B.யூசப்
21. திரு. P.வேல்முருகன்
22. திரு. N.விஜி
23. திரு. T.சுகுமார்
24. திரு. K.பாரதிதாசன்
25. திரு.S.பிரான்சிஸ்
26. திரு. 1.கிளார் பேட்ரிக்
27. திரு. M.மணிகண்டன்
28. திரு. G.குமரவேல்
29. திரு. B.பாலாசுதாகர்
30. திரு. M.பிரிஜேஷ்
எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" என்று தெரிவித்துள்ளார்.
- நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள்
- நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்.
நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை 20 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும், நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
- விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசினார்
த.வெ.க தலைவர் விஜய் மற்றும் திரிஷாவை ஒப்பிட்டு அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "நடிகை திரிஷா குறித்த கருத்துக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், "நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். அந்த இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் துணை நிற்பார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க அவரால் மட்டுமே முடியும்.
வெற்று முழக்கங்களை மட்டும் எழுப்பாமல் இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் பேசியது கேரளா காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
- லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக இருக்கணும்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.89 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
மேலும், அதன் அருகாமையில் ரூ.4.69 கோடி செலவில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையம் மற்றும் நகராட்சி கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரத்திற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஊர் எது என்று கேட்டால், அது நிச்சயமாக இந்த லால்குடிதான். இன்னும் சொல்லப்போனால், தமிழுக்காக கலைஞர் கண்ட கழகத்திற்கு மூன்று அமைச்சர்களைத் தந்த பெருமைக்குரிய ஊர் இந்த லால்குடி.
பேரறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும், மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
அதேபோல், இப்போது இருக்கக்கூடிய நம்முடைய கழகத் தலைவர், முதலமைச்சருக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர்தான் நம்முடைய நேரு. அவரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். அன்பிலாருடைய பாரம்பரியத்தைச் சேர்ந்த அமைச்சர், எனக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.
இன்றைக்கு நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என இரண்டு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களைத் தந்திருப்பதும் இந்த லால்குடி தொகுதிதான்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விடியல் பயணத் திட்டமாக இருக்கட்டும், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பத்து லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் உள்ளன.
இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற திட்டம்தான் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்'. இந்தத் திட்டத்தில் இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் நம்முடைய முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் முதலமைச்சர் என்ன சொன்னார்? நான் கொடுக்கிற 1000 ரூபாயை நீங்க நிப்பாட்டப் பார்க்கிறீங்களா, இனிமேல் நான் 5000 கொடுக்கிறேன் என்று சொன்னார்.
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குச் சேர்த்து 3000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
அதுமட்டுமில்ல, மீண்டும் நம்முடைய கழக ஆட்சி அமைந்தவுடனே மகளிர் உரிமைத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்தி மாதம் 2000 ரூபாயாகக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசுக்கு நீங்க அத்தனை பேரும் உறுதுணையாக இருக்கணும். இந்தப் புதிய பேருந்து நிலையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள், இதைச் சுத்தமாகப் பராமரிக்க நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்?"
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?
அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்? அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு செல்கிறேன்" என்று தெரிவித்தார்
- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
- இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது
மதுரையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே" என சிரித்துக் கொண்டே பேசினார்.
இதற்கு தவெக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. தவெக பரப்புரை செயலாள் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு"நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.
ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.
அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 50 கருங்கல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு அவசர, அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
- தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சேலம், இராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 50 கருங்கல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு அவசர, அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை எனும் நிலையில், 50 குவாரிகளுக்கு குத்தகை வழங்குவதிலிருந்தே திமுக அரசு கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உரிமம் பெற்று 1845 கருங்கல் குவாரிகள், சட்டவிரோதமாக 2000-க்கும் மேற்பட்ட குவாரிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குவாரிகள் அனைத்திலுமே விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தான் கூடுதலாக 50 குவாரிகளுக்கு உரிமம் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த குவாரிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்குவதற்கான ஏல ஒப்பந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். முடிந்தவரை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே குத்தகை வழங்குவதற்கான நடைமுறைகளை முடிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதில் எந்த வியப்பும் இல்லை.
ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் எந்த அரசும் இவ்வளவுக் கொள்ளை அடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு திமுக அரசு கடைசி நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் என்றால், அது ஆற்று மணல் கொள்ளையும், இயற்கை வளக் கொள்ளையும் தான். இந்தக் கொள்ளைகளில் ஆண்டு மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. மக்கள் நலனிலும், நேர்மையான நிர்வாகத்திலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், இயற்கைவளக் கொள்ளைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை திமுக செய்யவில்லை.
மாறாக, கனிமவளக் கொள்ளையர்களின் கனிமக் கொள்ளைக்கு துணை போகும் வகையில் பாவ மன்னிப்பு வழங்கும் திட்டத்தை திமுக அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதிகபட்சமாக 24 மாதங்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் போதுமானது. இதை விட மோசமாக எந்த அரசாலும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போகவே முடியாது.
இன்னொரு பக்கம் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கனிமக் கொள்ளைகளை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப் பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களை ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினரே கொடூரமாகத் தாக்குகிறார். அது குறித்த காணொலி ஆதாரம் வெளிவந்த பிறகும் கூட அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படவில்லை. பா.ம.க.வும் பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு தான் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது பெயரளவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அதை விட கடுமையான பிரிவுகளில், கனிமக் கொள்ளையை படம் பிடித்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக கனிமக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசு, இப்போது கனிமக் கொள்ளையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் 50 புதிய கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் பெரும்பாலானவை தனியார் பட்டா நிலங்களில் அமைந்திருக்கும் நிலையில், இப்போது உரிமம் வழங்கப்படும் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் பலநூறு கோடி கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவது, அரசுத் துறைகளில் பணம் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இப்போதே ஒப்பந்தம் வழங்குவது, அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்வது போன்றவற்றில் திமுக ஈடுபட்டிருப்பதற்கு அண்மைக்காலங்களில் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அந்த முயற்சிகளில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஏலம் ஆகும்.
ஆளில்லாத வீட்டில் கிடைத்தவரை சுருட்டுவதைப் போலத் தான் திமுக அரசு கடைசி நேர ஊழல்களிலும், கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிமக் கொள்ளை திமுக அரசை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
- தமிழக முதலமைச்சர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி இளங்கோ, மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்யராஜன், கல்லூரி முதல்வர் சரோஜா உட்பட பல அரசு அதிகாரிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த X தளப்பதிவில் அவர், "புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
- எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 மற்றும் 1960 களில் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக் கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
இவர் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அவருக்கு 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்தி நாதன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.






