என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
    • விபத்தில் காயமடைந்தவர்கள் இளைஞர்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரைகாட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் தினேஷ் (வயது 20). வேலூர் ரங்காபுரம் ஏகாம்பர தெருவை சேர்ந்த அல்லாபக்சா மகன் ஷாஜகான் (26). ஆற்காடு காந்திநகரை சேர்ந்த தமிழரசன் மகன் பாலமுருகன் (19).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாவில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை நாவல்பூர் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.

    இதில் பைக்கில் வந்த தினேஷ், ஷாஜகான், பாலமுருகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான், பாலமுருகன் ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஷாஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பாலமுருகனும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான 3 வாலிபர்கள் விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.
    • நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம் உரிமைக்குரலின் உதயம்!

    இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

    நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! என்று பதிவிட்டுள்ளார். 



    • தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது. அதிலும் டெல்டா, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 22-ந்தேதி (நாளை மறுநாள்) இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    இதனையடுத்து, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24-ந்தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 22-ந்தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? என்பது 26-ந்தேதிக்கு பிறகு தான் சொல்ல முடியும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.

    • ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
    • ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.

    ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.

    இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
    • மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.

    தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது.

    சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று விடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது பகிரப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.

    முதல் மாநாடு கடந்த ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியிலும், 2-வது மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் ஓசூரிலும் நடைபெற்றது.

    தூத்துக்குடியில் நடந்த முதல் மாநாட்டில் ரூ.32 ஆயிரத்து 554 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓசூரில் நடந்த 2-வது மாநாட்டில் ரூ.24 ஆயிரத்து 307 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது.

    இந்த நிலையில் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடக்க உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.

    கோவையில் நடைபெறும் 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    கோவையில் நடைபெறும் இந்த மாநாடானது மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விதமாக நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது,"தொழில் நகரமாக கோவை மாறி உள்ளது. உலகளாவிய திறன் மையமாக இருப்பதால் புதிதாக தொழில் தொடங்க ஏராளமானோர் கோவைக்கு வருகிறார்கள்.

    இதன்மூலம் உள்ளூர் திறமையாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்காக உதவி வருகிறோம். அந்த வகையில் கோவையில் 3-வது தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது" என்றார்.

    இந்த மாநாடு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பகுதிக்கு செல்கிறார். அங்கு ரூ.214.25 கோடி மதிப்பில் 45 ஏக்கரில் உருவாகியுள்ள செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

    • கோவையில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது.
    • பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர்," தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறத்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் அவர்களே!

    நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.

    இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.

    "இந்தியை திணிக்க மாட்டோம்" என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும்.
    • தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட மாநகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முடியும் எனவும், தமிழக நகரங்களான கோவை மற்றும் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என ஒன்றிய பாஜக அரசு மறுத்திருக்கிறது.

    பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும். ஏனெனில் கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை மற்றும் இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகள் சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள வேறு பல நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுவது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போடுவது என தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியாகவே மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு அறிவிப்பும் உள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்பிரச்னையை அணுகுவதை கைவிட்டு, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகர மக்களின் தேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோவைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் இபிஎஸ் விரிவான கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
    • ஜிஎஸ்டி 2.0 மற்றும் ஜிஎஸ்டி குறைப்புக்கான கோரிக்கைகள் வைத்தார்.

    கோவை வந்த பிரதமரிடம் 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசகாமி கோரிக்கை வைத்தார். அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (நவ.19) கோவைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் விரிவான கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

    தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் மற்றும் ஆர்வலர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025" இல் பங்கேற்க கோவை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அன்புடன் வரவேற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), விவசாய சமூகம் மற்றும் கோவை மாவட்ட மக்கள் சார்பாக, எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்கள் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி உள்ளது.

    இந்த உணர்வில், பின்வரும் விஷயங்களில் உங்கள் அன்பான பரிசீலனை மற்றும் நடவடிக்கையை நான் மனதாரக் கேட்டுக்கொள்கிறேன்:

    1. இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு

    இயற்கை விவசாயத்தில், விவசாய உற்பத்தித்திறன் பொதுவாக ரசாயன அடிப்படையிலான முறைகள் மூலம் அடையப்படுவதை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது, அதே நேரத்தில் விளைபொருட்களுக்கான சந்தை விலைகள் மிகக் குறைவாகவோ அல்லது வித்தியாசமாகவோ இல்லை. எனவே, இயற்கை விவசாயத்திற்கான அத்தியாவசிய உள்ளீடுகளை - மண்புழுக்கள், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் - அதிக மானிய விலையில் வழங்குமாறு மத்திய அரசை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    2. பயிர் வாரியான இயற்கை வேளாண்மை ஊக்கத்தொகைகள்

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேங்காய் மற்றும் தக்காளி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம், டெல்டா மாவட்டங்களில் நெல், திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை, பல மாவட்டங்களில் கரும்பு போன்ற ஒவ்வொரு முதன்மை பயிரும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டும், மேலும் இந்தப் பயிர்களின் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தனிப்பயனாக்கப்பட்ட மானியங்கள் நீட்டிக்கப்பட வேண்டும். கூடுதலாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பயிர்களை நேரடியாக சந்தைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு வழிகள் மூலம் உற்பத்தி, இயற்கை விவசாயத்தை வளர்ப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை மானியங்களை வழங்குதல்.

    3. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்துதல்

    கூடுதலாக, மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அறிவித்து, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக நான் மீண்டும் வலியுறுத்திய கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு தமிழக மக்கள் சார்பாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    4. ஜிஎஸ்டி 2.0 மற்றும் ஜிஎஸ்டி குறைப்புக்கான கோரிக்கைகள்

    பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி 2.0 என்ற தலைப்பில் ஒரு முக்கிய வரி சீர்திருத்த முயற்சியை அறிவித்துள்ளார், இதன் கீழ் செப்டம்பர் 22, 2025 அன்று திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தம் பரவலான பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதம் ஆகக் குறைப்பது இந்தியாவின் விவசாயத் துறையின் நவீனமயமாக்கலில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.

    இதேபோல், விவசாய மற்றும் வீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் செட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பட்டியலில் பம்ப் செட்களைச் சேர்ப்பதன் மூலம். இந்த நடவடிக்கை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெரிதும் பயனளிக்கும், ஏனெனில் அங்கு பம்ப் செட் உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாகும், இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    பொறியியல் வேலைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் சமீபத்தில் 18 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது தொழில்துறை பங்குதாரர்களிடையே கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பணி மூலதனத் தேவைகள் கணிசமாக உயர்ந்து, அவற்றை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன. எனவே, நீண்டகால கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும் என்று நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய குறைப்பு MSME துறைக்கு முக்கிய நிவாரணத்தையும் ஆதரவையும் வழங்கும்.

    5. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைத்தல்

    மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கான ஜிஎஸ்டி தற்போது 18 சதவீதம் ஆக உள்ளது. இந்த விகிதத்தை 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும். அதேபோல், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் மற்றும் கவர்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி விகிதத்தையும் 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும், மேலும் இந்த மூலப்பொருட்களிலிருந்து பெறப்பட்ட முடிக்கப்பட்ட காகித அடிப்படையிலான பொருட்கள் அதே குறைந்த விகிதத்தில் ஈர்க்கப்பட வேண்டும்.

    6. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம்

    உள்கட்டமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரை, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்துள்ளது, மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலம் ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    7. கோயம்புத்தூர்-ராமேஸ்வரம் ரெயில் பாதையை மீட்டமைக்கவும்

    கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் திண்டுக்கல் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரெயில் பாதை முன்பு மீட்டர்-கேஜ் பாதையாக இயங்கி வந்தது. ஏனெனில் அகலப்பாதை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இன்னும் இயக்கப்படவில்லை. இந்த முக்கியமான பாதையில் ரெயில் செயல்பாடுகளை விரைவில் மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கோவை மக்கள் சார்பாக, அகலப்பாதை மாற்றம் முடிந்தவுடன், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    8. கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே இரவு நேர ரெயில்கள்

    தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோவை, ஜவுளித் தொழில், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கான மையமாக உள்ளது. கூடுதலாக, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்து தொழில்முனைவோர், மாணவர்கள், ஐடி வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் வணிகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக கர்நாடகாவின் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்கள். வார இறுதி நாட்களில் பெங்களூருக்கும் கோவைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், தற்போதைய ரெயில் சேவைகள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன, மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்யும் இரவு நேர ரெயில்கள் இல்லை. கேரளாவிலிருந்து சில இரவு நேர ரெயில்கள் பெங்களூருக்கு செல்லும் வழியில் கோவை வழியாக சென்றாலும், அவற்றில் அரிதாகவே போதுமான இருக்கைகள் உள்ளன.

    எனவே, அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்யவும், பிராந்தியத்தின் தொடர்ச்சியான தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே புதிய இரவு நேர ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதை நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். முன்மொழியப்பட்ட அட்டவணையில், கோயம்புத்தூர் நிலையத்திலிருந்து 22:00 மணி முதல் 22:30 மணி வரை புறப்படும் ரெயில், அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும், இதனால் பயணிகள் காலையில் தங்கள் அலுவலகங்களை சரியான நேரத்தில் அடைய முடியும்.

    சமர்ப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் பிரதிநிதித்துவம்: ஜவுளி மற்றும் பின்னல் துறைக்கான நிவாரண நடவடிக்கைகள்

    அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதியில், குறிப்பாக அதிக உழைப்பு மற்றும் மூலதனம் தேவைப்படும் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு ஏற்படும் எதிர்பாராத சவால்களைச் சமாளிக்க ஒரு நிவாரணப் பொதியை சமீபத்தில் அறிவித்ததற்காக இந்தியப் பிரதமருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

    சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்

    கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×