என் மலர்
இந்தியா
- பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
- ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்
முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.
- ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.
இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் 'தாய் கிழவி வாரா' என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து ராதிகாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன. இது தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.
தேர்தல் நேரங்களில் கட்சிகள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ் போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வாசகங்களும் இடம்பெற்றன. பாஜக தலைவர் எஸ்.ஜி. சூர்யா, சோனியா காந்தியை "அசல் தாய் கிழவி" (Original Thai Kelavi) என்று விமர்சித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன. இதில் யார் OG என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
- அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
- மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.
ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.
இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
- வடகிழக்கு டெல்லியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
- ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சலீம் பிஸ்டல் என்பவரிடம் துப்பாக்கிகள் வாங்கியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த சர்வதேச குற்ற கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி, 'மேடம் சேகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வடகிழக்கு டெல்லியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேஹா, வெளிப்பார்வைக்கு சாதாரண பெண்ணாக வாழ்ந்து மறைமுகமாக தாதாவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை நிர்வகித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேஹாவுடன் அவரது கூட்டாளியான மஃபூஸ் என்கிற பாபி கபுதர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாபி கபுதர், பாகிஸ்தானின் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'சலீம் பிஸ்டல்' என்று அழைக்கப்படுபவரிடம் என்பவரிடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்கி வந்துள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடத்திய பல முக்கியக் குற்றங்களுக்குப் பாபி கபுதர் வழங்கிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பஞ்சாபி பாடகர் சிந்து மூஸேவாலா கொலை, திஷா பதானி வீடு அருகே துப்பாக்கிச் சூடு, இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2024 இல் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் இந்த சர்வதேச நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய்:
31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளார் லாரன்ஸ்.
2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.
ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார்.
- ஷேக் அகமது கிராந்தியை திருமணம் செய்து கொண்டார்.
- மனைவி டி.வி.யில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலத்தில் உள்ள பெடவட்லபுடியைச் சேர்ந்தவர் ஷேக் அகமது (வயது 26). ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கிராந்தியின் முதல் கணவர் வழக்கு ஒன்றில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஷேக் அகமது கிராந்தியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மங்களகிரியில் உள்ள டிட்கோ குடியிருப்பு பி-16 பிளாக்கில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு, ரம்ஜான் நோன்பு நோற்றிருந்த அகமது வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி டி.வி.யில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
சத்தத்தை குறைக்கும்படி அகமது கூறினார். இதனைக் கேட்டதும் கிராந்தி கோபத்தில் தனது கணவரை கத்தியால் குத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
பலத்த காயமடைந்த அகமதுவை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படியெல்லாம் நடக்கிறது என ஜாக்கிரதையாக இருக்கம் வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
- மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- 2010இல் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்.
- அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
2018 இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ஒரு கொலை வழக்கு குற்றவாளி பாஜக தேசிய தலைவராக இருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்த கருத்துக்களுக்காக ராகுல் மீது உ.பி.யின் சூல்தான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ராகுல் தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த ஜூலை 2024 இல் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனது முதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் நேரில் பதிவு செய்திருந்தார். வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது ராகுல் ஆஜராக தவறிய நிலையில் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டின் படி தற்போது ஆஜராகி உள்ளார்.
2010 இல் சோரபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும்.
- கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.
திருவனந்தபுரம்:
கேரள மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.
கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை பெற்ற பிறகு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களது அடையாள அட்டை ரத்து செய்யப்படும். அடையாள அட்டை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அந்தந்த தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ளளது.
அரசு சேவைகளில், பல்வேறு துறைகளில் தேவைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் அடையாள ஆவணங்களுடன் கேரளீயன் அடையாள அட்டையையும் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும்.
- சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமாகும்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறுகட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சண்டிகாரில் செயல்பட்டு வரும் டெரிமினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரெயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் என்ற பகுதியில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.
- தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
- வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.
மும்பை:
ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.
அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.
தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.
பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
- அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது. பலர் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் ஆபரேஷன் செய்து கொண்டனர்.
ஆபரேஷனுக்கு பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மறுநாள் அவர்களில் பலருக்கு ஆபரேஷன் செய்த கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களது கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மற்றும் லக்னோ. வாரணாசி ஆகிய ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக, 9 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. மேலும் 9 பேருக்கு பார்வை பறிபோனது. ஒரு நோயாளி மட்டும் பார்வையை திரும்பப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் மீனா தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
விசாரணை அறிக்கை அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் ஜா கூறினார்.






