என் மலர்
இந்தியா

கண்புரை ஆபரேஷனில் குளறுபடி: 9 பேருக்கு கண் அகற்றப்பட்டது- மேலும் 9 பேர் பார்வை இழந்தனர்
- கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
- அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது. பலர் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் ஆபரேஷன் செய்து கொண்டனர்.
ஆபரேஷனுக்கு பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மறுநாள் அவர்களில் பலருக்கு ஆபரேஷன் செய்த கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களது கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மற்றும் லக்னோ. வாரணாசி ஆகிய ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக, 9 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. மேலும் 9 பேருக்கு பார்வை பறிபோனது. ஒரு நோயாளி மட்டும் பார்வையை திரும்பப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் மீனா தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
விசாரணை அறிக்கை அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் ஜா கூறினார்.






