என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElecltions2019

    சென்னை:

    தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் அவருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பெசன்ட் நகர் பகுதியில் வேட்பாளர் ஜெயவர்தன் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அவருக்கு அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தின்போது வேட்பாளர் ஜெயவர்த்தன் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஆதரவு திரட்டினார்.

    பிரசாரத்தின்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் தெளிவாக உள்ளதால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி புறக்கணிக்கப்படுவது உறுதி. தி.மு.க. வேட்பாளர் ஊழல் பணத்தை பட்டுவாடா செய்து ஜெயித்து விடலாம் என்று கனவு காணுகிறார். அவரது கனவு பகல் கனவாகபோவது உறுதி என்று கூறினார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், ராஜேந்திர பாபு, கண்ணன், வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், இமாம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க. வடிவேல், தே.மு.தி.க. பிரபாகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ரமேஷ், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். #LokSabhaElecltions2019

    திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் 5 சவரன் வரை நகைகளை வைத்து பெற்ற கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #MKStalin #AgriGoldLoan
    திருப்பூர்:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்தார். மேலும், திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காக, பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    ‘கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இந்த வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும்’ என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.



    விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #MKStalin #AgriGoldLoan
    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் க.வைதியநாதன் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், கோளப்பன்சேரி, வயலாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElecltions2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் க.வைதியநாதன் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், கோளப்பன்சேரி, வயலாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பூந்தமல்லி தொகுதியில் இளம் தலைமுறையினரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித் அகமத், டி.பத்ம நாபன், வயலை நடராஜன், இரா.சங்கர், சத்தியமூர்த்தி, ஜி.தமிழ்வாணன் , ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElecltions2019

    பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை காரில் எடுத்து சென்றார்களா? என போலீசார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElecltions2019
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்தில் இருந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒரு தகவல் வந்தது.

    அதில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி செல்லும் காரில் ரூ.5கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக கொண்டு செல்வதாகவும், துரிதமாக மடக்கி பிடித்து பறிமுதல் செய்யவும் என உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன், டி.எஸ்.பி.க்கள் ரவீந்திரன், தேவராஜ், இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிருதிவிராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் அந்தோணிசாமி ஆகியோர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனிடையே போலீசாருக்கு தகவல் கிடைத்த கார், பெரம்பலூர் அரியலூர் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே ஹைவே பேட்ரோல் போலீஸ் மூலம் பேரளி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன் காரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, குன்னம் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரில் சோதனை செய்யப்பட்டது. இதில் நூதனமாக காரின் நான்கு கதவுகளின் உள்ளே மறைத்து வைத்தும், ஹேண்ட் பேக்குகளில் கட்டு கட்டாக வைத்தும் எடுத்து வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.2.10கோடி ரொக்கப்பணம் ரூ.2ஆயிரம் மற்றும் ரூ.500 கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.


    காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் எங்கு கொண்டு சென்றனர், எதற்காக அதிக பணத்தை எடுத்து சென்றனர்? வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த பணம் திருச்சியில் இருந்து காரில் கொண்டு செல்லும் போதே, அதனை அறிந்த மர்மநபர்கள் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி போலீசாரிடம் சிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElecltions2019
    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #AmitShah
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் கேரள தேர்தல் களம் தலைகீழானது. வயநாட்டில் போட்டியிடுவதாக இருந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

    ராகுலுக்கு எதிராக யாரை களம் இறக்கலாம் என்று ஆலோசனைகள் நடந்தது. பா.ஜனதா கட்சி ஏற்கனவே அறிவித்த வேட்பாளருக்கு பதில், துஷார் வெள்ளாப்பள்ளியை களம் இறக்கப்போவதாக அறிவித்தது. கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை மாற்றுவதற்கு பதில் அங்கு முக்கிய தலைவர்களை அனுப்பி பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தது.

    வயநாடு தொகுதிக்கு தேசிய அரங்கில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் ஏற்பட்டது. இந்த தொகுதியை கைப்பற்றி விட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக பா.ஜனதா கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டுகிறது.

    கேரளாவில் பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை வந்து சென்று விட்டார். கோழிக்கோட்டிலும் பா.ஜனதா பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இப்போது வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதால் அவர், மீண்டும் கேரளா வர உள்ளதாக பா.ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் வயநாடு தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.



    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதால் அங்கு சர்வதேச மற்றும்தேசிய ஊடகங்கள் குவிந்துள்ளன. ராகுல்காந்தியின் பிரசாரத்தை படம் எடுக்கவும், தொகுதி நிலவரத்தை பதிவு செய்யவும், வயநாடு வாக்காளர்களின் கருத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஊடகங்கள் வயநாட்டில் முகாமிட்டுள்ளன.

    அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். தொகுதி எங்கும் தேசிய கட்சிகளின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு தொகுதியே களை கட்டி உள்ளது.  #LokSabhaElections2019 #PMModi #AmitShah

    திருப்பூரில் உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100% வெல்லும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,   மக்களவை தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து  பேசியதாவது:

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் குறித்து எனக்கு தெரிந்ததை விட, கழக தலைவர் நன்கு அறிந்தவர். நான் கேட்டும் தர மறுக்கும் தலைவர், சுப்பராயன் கேட்ட திட்டங்களை மறுத்ததே இல்லை. அந்த அளவிற்கு நெருங்கிய நண்பராவார்.



    திருப்பூரிலே இப்போது கூடியிருக்கும் கூட்டம், பிரசார பொது கூட்டம் போல் அல்லாமல் மாநாடு போல் உள்ளது. சுப்பராயனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.  இந்த திருப்பூர் அரசியல் மாற்றங்கள் பல கண்ட ஊர் ஆகும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெறும். பெரியாருடன் அண்ணாவை இணைத்த ஊர் இந்த திருப்பூர் தான்.

    தமிழன் தன்மானத்தோடு வாழ வித்திட்டது இந்த ஊர் தான். பனியனுக்கு உள்நாட்டு உற்பத்தி வரியை  ரத்து செய்தவர் தலைவர் கலைஞர். ஆனால் தன்னாட்சி அமைப்புகளை மோடி தற்போது மிரட்டி வருகிறார். கலைஞர் இருந்திருந்தால் இங்கு சுப்பராயனுக்காக வந்திருப்பார். அவர் இல்லாததால் அவரது மகனான நான் வந்து வாக்கு சேகரிக்கிறேன். மத்திய மாநில ஆட்சிகளின் அக்கிரமங்களை ஒழிக்க வேண்டும். இந்த பாராளுமன்ற தேர்தலோடு இணைத்து 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    நியாயமாக 21 தொகுதிகளுக்கும் நடத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது இல்லை. ஆனால் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.  சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என முறையிட்டோம். உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தேதி அறிவிக்க உத்தரவிட்டது, ஆனால் இன்னும் தேதி அறிவிக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே இடைத்தேர்தல் நடத்தவில்லை. மேலும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் திடீரென சோதனை செய்தது கூட தேர்தலில் திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காகதான். எனக்கு இன்னும் சந்தேகம் என்னவென்றால், அவர்களே எங்கோ இருந்து எடுத்து கொண்டு வந்து, பணத்தை வைத்து விட்டு துரைமுருகன் தான் காரணம் என சொல்கிறார்களோ  என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019  
    கோடிக்கணக்கில் செலவழிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாநிலங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் செய்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானது. இந்த தேர்வு மூலம் சாதாரண மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிக அளவு ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்று உள்ளனர். கோடிக்கணக்கில் செலவழிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி.



    வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது என்கிறார்கள். கணக்கில் காட்டப்படாத பணத்தை, மக்களை விலைக்கு வாங்க வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தால் அது தவறா?

    தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற அமைப்பு அவர்கள் என் வீட்டில் கூட சோதனை நடத்தட்டும். அங்கிருந்து பணத்தை எடுத்துச் சென்றார்கள். என் வீட்டில் பணத்தை வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். நான் தேர்தல் செலவுக்குகூட பணம் இல்லாமல் இருக்கிறேன்.

    வடநாட்டில் எங்கும் காங்கிரசால் வெற்றிபெற முடியாது. அதுபோல தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று தேடிய இடங்களில் எல்லாம் வெற்றிபெற முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் கேரளாவின் வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் தங்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்களை எதிர்த்து அங்கு காங்கிரஸ் களம் இறங்குகிறது. ராகுல்காந்தியை தோற்கடிப்போம் என்று பினராயி விஜயன் கூறி உள்ளார். அதை நாம் நம்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan

    எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் வீடுகளில் பணத்தை வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    வருமான வரித்துறை அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின்படி சோதனை செய்தால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் இருக்கிறது.

    தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சி பணம் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தும் தோல்வி அடைந்தனர். ஆனால் டோக்கன் என்று கூறுவார்கள்.

    டோக்கன் கொடுக்கிறோம் என்று பொய்யான தகவலை சொன்னார்களே தவிர, உண்மையில் அந்த தேர்தலின்போது பணம் கொடுத்தவர்கள் ஆளுங்கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனையெல்லாம் தாண்டி ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

    குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது தேர்தல் நடந்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் வேட்பாளர் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக தகவல்கள் வருகிறது.

    துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் இருந்துதான் பணம் எடுத்ததாக சொல்கிறார்கள். இந்த இடங்கள் எல்லாம் துரைமுருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்கள் தானே. எல்லா இடத்திலும் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள்.

    பணம் பிடிபட்ட பிறகு எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள். நீலகிரி தொகுதியில் கூட பண மூட்டையுடன் ஒருவர் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் தி.மு.க. போட்டியிடுகிறது. ஓட்டுக்கு ரூ.500-1000 கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை தாண்டி பணம் கொடுக்க ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதனால் இந்த வருமான வரிச் சோதனையை தேர்தலை நிறுத்துவதற்கான சதியாக நான் பார்க்கவில்லை. துரை முருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில்தான் பணம் பிடிபட்டிருக்கிறது.

    அரசை காப்பாற்றிக் கொள்ள இதுபோன்ற திட்டங்களை நிச்சயம் தீட்டுவார்கள். இதனைத் தாண்டியும் திட்டம் தீட்டுவார்கள். தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி அடையும் என்று தெரியும்.

    உளவுத்துறை முதற் கொண்டு அவர்கள் கையில் இருப்பதால் மற்ற வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இவர்களே பணத்தை வைத்து எடுக்க வைத்து தேர்தலை நிறுத்த முயற்சி செய்வார்கள். குறிப்பாக எங்கள் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வருமான வரித் துறையை அனுப்பி பணத்தை எடுக்கலாம்.

    அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ய மத்திய- மாநில ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

    அரசு துறைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுப்பதற்காக முயற்சி நடக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் வாகனத்தில் சோதனை நடத்தினார்கள். அதுபோல இரண்டாம் நாள் பிரசாரம் முடித்து விட்டு இரவு காஞ்சிபுரத்தில் நான் தங்கியிருந்த ஓட்டலில் சோதனை நடத்தினார்கள்.

    எங்கள் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உளவுத் துறை மூலம் பணம் வைத்து அதனை எடுப்பதற்கான முயற்சிகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தகவல் வருகிறது. தேர்தலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆளுங்கட்சி எடுக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ. கடல் கடந்து ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து 2 பேர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர். #LokSabhaElections2019
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒரு ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ. கடல் கடந்து ஒரு லட்சம் செலவு செய்து 2 பேர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்கள நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (வயது 46), அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் (43). இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதேபோல் இன்னும் சில நாட்களில் சுமார் 50 பேர் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வருகை தருகிறார்கள். இதில் முகமது பாரூக் தனது முதல் ஓட்டை 1991-ல் பதிவு செய்தார். பிறகு 1995-ல் வெளிநாடு சென்ற பிறகு ஒவ்வொரு பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்கும் சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    முகமது பாரூக்

    தற்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வாக்களித்த மறுநாளே அவர் மலேசியா செல்கிறார்.

    என் தந்தை வெளிநாட்டில் இருக்கும்போது ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வீட்டுக்கு தகவல் கொடுப்பார். தவறாமல் வாக்களிக்க வருவார். நான் 1991-ல் என் முதல் வாக்கை பதிவு செய்தேன். 1995-ல் பிழைப்புக்காக மலேசியா சென்றாலும் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஊருக்கு வந்து ஓட்டுப் போட்டுவிட்டு போவேன்.

    இது ஜனநாயக கடமை. நான் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு வந்து செல்லும் போதெல்லாம் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். ஒரு மாத சம்பளம் இழப்பு, 35 ஆயிரம் டிக்கெட் செலவு. இப்படி ஒரு லட்சம் வரை செலவு செய்து போய் ஒரு ஓட்டு போடணுமா என்பார்கள்.

    நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் நம் உரிமை அது. ஒருமுறை ஓட்டுப் போடவில்லை என்றால் பட்டியலில் பெயரை நீக்கிவிடுவார்கள். அப்புறம் நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் தான் பஞ்சாயத்து தேர்தல் வரை அத்தனை தேர்தலுக்கும் ஓட்டுப்போடுறேன். எனக்கு ஒரு லட்சம் செலவை விட ஒரு ஓட்டு முக்கியம்.

    முன்பெல்லாம் தேர்தலுக்கு நான் ஊருக்கு வரும் போது கிராமங்களில் கொடி, தோரணங்கள், வீட்டு சுவர்களில் சின்னங்கள் இருக்கும். வீதிக்கு வீதி விளம்பர வாகனங்கள் வந்து செல்லும். அதையெல்லாம் பார்க்கும் போது திருவிழா போல இருக்கும். ஆனால் தற்போது தேர்தலுக்கான அறிகுறியே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார். #ITRaid #duraimurugan #Loksabhaelections2019
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

    இந்த நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு, அவரது கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க. பிரமுகர் சிமெண்டு குடோனில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.11½ கோடி பணம் சிக்கியது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வருமான வரித்துறையினர் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காரர் வீட்டில் சிக்கிய பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.



    இந்த சோதனை மூலம் எனது மகனுக்கும், மற்ற தி.மு.க. வேட்பாளர்களுக்கும் நல்லது நடந்து உள்ளது. இந்த விவகாரம் கட்சி தொண்டர்களை இன்னும் கடுமையாக பணியாற்ற காட்டி விட்டுள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சியினருக்கு பாடம் புகட்டப்படும்.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்து சோதனை நடத்துவது என்பது இதற்கு முன்பு எப்போதுமே நடக்காதது என்று இது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது.

    ஆளுங்கட்சி சட்ட அமைப்புகளை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்தும் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதன்மூலம் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை ஒரு காலத்திலும் நடந்தது கிடையாது. நரேந்திரமோடி- எடப்பாடி பழனிசாமி அரசுகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

    சில எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார்கள். இதன்மூலம் எங்கள் வெற்றிகளை தடுத்து விட முடியாது.

    எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர் இதே சோதனையை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களிடம் நடத்தவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்த விளையாட்டு நடக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்த சோதனை மக்கள் மத்தியில் எங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஓட்டாக மாறும். எங்கள் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.

    தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இப்போது இல்லை. தி.மு.க. தனது தலைவர் கருணாநிதியை இழந்தாலும் அந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார். அவர் சிறப்பாக செயல்படுகிறார். தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரசாரம் செய்கிறார்.

    ஆனால் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் இல்லை. கட்சியில் பணியாற்ற தொண்டர்கள் இல்லை. இதுதேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.

    நடக்கும் 18 சட்டசபை இடைத்தேர்தலில் 15-ல் இருந்து 16 இடங்களை தி.மு.க. கைப்பற்றும். எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும்.

    மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவை சாதாரண மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. அவர்கள் மோடி அரசை தூக்கி எறிவதற்கு தயாராகி விட்டார்கள். அதேபோல் தமிழக அரசும் எல்லா வகையிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. எனவே மக்கள் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ITRaid #duraimurugan #Loksabhaelections2019
    தேனி பாராளுமன்ற தொகுதியில் மகனை வெற்றி பெற வைக்க ஓ.பன்னீர்செல்வம் ரூ.1000 கோடி வரை வாரி இறைத்து வருகிறார் என அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #ThangaTamilSelvan #OPS

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அரசியல் பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். எங்களை பார்த்து சுயேட்சை வேட்பாளர் என்கிறார். தேர்தல் முடிவில் இதற்கு தக்க பதிலடி தருவோம்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனதுமகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1000 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பணம் பாதாளம் வரை பாய உள்ளது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டுகளை மட்டும் எங்களுக்கு போடுங்கள்.


    இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு புதிதாக வழங்கிய சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். எனவே எங்களுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் மற்ற வேட்பாளர்களை மிரட்டி வருகின்றனர். இந்த தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க.வே அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ThangaTamilSelvan #OPS

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    சென்னை:

    இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலை, 7 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று அவர்கள் ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.



    இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், பாபு முருகவேல், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்பி,  இளங்கோ, தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    ×