search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all party meet"

    • இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும் ஈர்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
    • உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு இது சிறந்த வாய்ப்புகளை தருகிறது.

    சர்வதேச அளவில் வலுவான கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.


    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


    கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு. இந்தியா ஏற்றுள்ள பதவி முழு நாட்டிற்கும் சொந்தமானது. இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும் ஈர்ப்பும் நிலவுகிறது. 


    ஜி-20 உச்சி மாநாட்டிற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு அவசியம். நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவத்தை வெளிப்படுத்த இந்த உச்சி மாநாடு உதவும். வழக்கமான பெரிய பெருநகரங்களுக்கு அப்பால் இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளை உலகிற்கு காட்சிபடுத்த முடியும். ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளின் போது ஏராளமான பார்வையாளர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். 


    ஜி-20 கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். 


    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றினர். கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன் ரெட்டி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடி மகிழ்ந்தார்.

    • இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை.
    • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். 


    இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்பதற்காக கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    சென்னை:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதினான். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

    இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.



    இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.

    இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    மேகதாது அணை தொடர்பாக திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அனைத்து கட்சி கூட்டம் 24 மணி நேரத்துக்குள் கூட்டப்பட்ட கூட்டம். ஏற்கனவே ஒத்த கருத்துடைய கட்சிகளை அணுகி இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கலந்து பேசிய நேரத்தில் உடனடியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

    மற்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை? என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

    எனவே மற்ற கட்சிகளை எல்லாம் அழைக்க கூடிய அளவுக்கு நேரம் இல்லாத காரணத்தால் நாங்கள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து பல்வேறு நிலைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொண்டிருக்க கூடிய கட்சிகளோடு சேர்ந்து இந்த கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

    இந்த கூட்டத்தின் துவக்கத்தில், அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்த தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு, அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை செலுத்தி உள்ளோம்.


    இந்த கூட்டத்தின் தீர்மானமாக, மேகதாது விசயத்தில் உடனடியாக தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை மாநில அரசு கூட்டி, ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி திருச்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

    நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில்தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.

    எனவேதான் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    டெல்டா பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து உள்ளோம். அனைத்து கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கே:- சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?

    ப:- அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்போது உங்கள் மூலமாகவும் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    கே:- பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க. போன்ற கட்சிக்கு அழைப்பு விடுப்பீர்களா?

    ப:- வந்தால் வரவேற்கிறோம்.

    (வைகோ குறுக்கிட்டு) மேகதாது விஷயத்தில் கேடு செய்ததே பாரதிய ஜனதா அரசுதான். அவர்களை எப்படி அழைப்பது? என்றார்.   #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான தி.மு.க. அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்தை அறிய முடிவு செய்தது. இதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது.

    கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழகம் சார்பில் கலிபூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் பேசினார்கள்.

    கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் தே.மு. தி.க., பா.ம.க., த.மா.கா., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. #MekedatuDam #DMK #MKStalin
    மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது #DMK #MKStalin #Mekedatudam #AllPartyMeet
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநில அரசு ஏற்கனவே கிருஷ்ணசாகர் அணையைக் கட்டியுள்ளது.

    தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் பகுதியில் மேலும் ஒரு அணை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.5200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    மேகதாதுவில் கடந்த 5 ஆண்டுகளாக அணை கட்டும் முயற்சியை கர்நாடகா மாநில அரசு மேற்கொண்டது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை தொடங்க முடியாமல் கர்நாடக அரசு இருந்து வந்தது.

    இந்த நிலையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடரும் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.


    இந்த நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’ நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Mekedatudam #AllPartyMeet
    சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

    அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.

    இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
    டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் வாக்காளர்களுக்கு தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே மோதல் ஏற்பட்டது. #ParliamentElection #ElectionCommission #DMDK #ADMK
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் கமி‌ஷன் சார்பில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

    7 தேசியக் கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச்செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர்கள் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அதிக பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

    இதையடுத்து வேட்பாளர்கள் செலவை குறைப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யலாமா என்றும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.

    மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் கால செலவு பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தே.மு.தி.க. சார்பில் பங்கேற்ற ஜி.எஸ்.மணி கூறுகையில், ‘‘கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது’’ என்றார்.


    இதற்கு அ.தி.மு.க. சார்பில் பங்கேற்றிருந்த துணை சபாநாயகர் தம்பித்துரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க.வை குறிப்பிட்டு எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக தம்பிதுரைக்கும் ஜி.எஸ். மணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறுக்கிட்டு தே.மு.தி.க. பிரதிநிதி ஜி.எஸ்.மணிக்கு கண்டனம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டை சுமத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரம் தொடர்பான சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் தி.மு.க. பிரதிநிதி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான வகையில் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

    காங்கிரஸ் சார்பில், ‘‘மின்னணு எந்திரத்தை கைவிட்டு விட்டு, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடப்பட்டது.

    மதியம் உணவுக்காக சற்று நேரம் இடைவேளை விடப்பட்டது. அப்போது வெளியில் வந்த தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் யார் பெயரும் விடுபட்டு விடக்கூடாது. அதற்கு ஏற்ப அனைத்து வாக்காளர்களையும் கொண்ட பட்டியல் தயாரிக்கும்படி கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

    ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருக்கக்கூடாது. அப்படிபட்ட வாக்காளர்களை நீக்கும் போது தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு விடக் கூடாது.

    வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ParliamentElection #ElectionCommission #DMDK #ADMK
    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் புதிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என முதலமைச்சருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #Stalin #CauveryIssue
    சென்னை:

    காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

    இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் புதிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என முதலமைச்சருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது; கர்நாடக அரசின் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.

    மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #Stalin #CauveryIssue
    ×