என் மலர்tooltip icon

    செய்திகள்

    • காற்றுமாசை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துகிறது இந்தியா
    • உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன

    பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படும் உலகளாவிய காற்று தர தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன எனவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

    சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனத்தின் உலக காற்று தர தரவரிசை, WHO -ன் உலகளாவிய காற்று தர தரவுத்தளம், யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து வெளியிடும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் The Lancet வார இதழின் உலகளாவிய நோய் சுமை (GBD) போன்ற உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் நிலை குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் இந்த பதிலை அளித்துள்ளது சுற்றுசூழல் அமைச்சகம். 

    இந்தியா, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே 12 மாசுபடுத்திகளுக்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரநிலைகளை நிறுவியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

    மேலும் எந்தவொரு உலகளாவிய அமைப்பும் நாடுகளை தரவரிசைப்படுத்துதல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றும், இந்தியா தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், 131 நகரங்களில் காற்று மாசை கட்டுபடுத்தி, நகரங்களை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துவதாகவும் தெரிவித்தார். 

    • முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
    • தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது.

    சென்னை:

    முன்னாள் ஒன்றிய உள்துறை மந்திரியும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர், மக்களவைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர்.

    தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2nd Gen கியா செல்டோஸ் 2026 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் - HTE, HTK, HTX, GT-Line மற்றும் X-Line வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஜனவரி 2-ந்தேதி விலை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் சமீபத்திய கியாவின் டைகர் நோஸ் கிரில் மற்றும் முற்றிலும் புதிய பம்பருடன் முற்றிலும் புதிய முகத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில் பக்கவாட்டில் பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் மற்றும் கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் EV மாடலில் உள்ளதை போலவே புதிய ஏரோ-ஓரியண்டட் சக்கரங்கள் உள்ளன. பின்புறம் கனெக்டெட் செங்குத்தான டெயில் லைட்களைப் பெறுகிறது. இது காருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய கியா செல்டோஸ் உள்புறத்தில் புதிய சென்டர் கன்சோல், பிரமாண்டமான 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், புதிய 3-ஸ்போக் கியா ஸ்டீயரிங் வீல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.36 மீட்டரிலிருந்து 4.46 மீட்டராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீல்பேஸ் 2,690 மிமீ ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாடலை விட 80 மிமீ அதிகம் ஆகும்.

    இத்துடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் சவுண்ட் சிஸ்டம், லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், HUD, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், சரவுண்ட் லைட்கள், ஃபுல்-எல்இடி லைட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன்படி 113bhp பவர், 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் யூனிட். 158bhp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் GDi யூனிட் உள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு MT வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டில் கியாவின் 1.5 லிட்டர் யூனிட் 118bhp பவர் மற்றும் 260Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் விலை விவரங்களை கியா நிறுவனம் வருகிற ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. மேலும் இதன் விலை ரூ. 12 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட் , எம்ஜி ஆஸ்டர் , மாருதி விக்டோரிஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹை-ரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃவோக்ஸ்வாகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.

    சென்னையில் பிரபல டி.வி. நடிகை தற்கொலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்தார்.

    சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

    பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.

    ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
    • 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.

    சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.

    அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    • குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது. இவ்வாறு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    இளநீர்விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீர் டிசம்பர் 8-ந்தேதி முதல் ரூ.23 ஆகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், இளநீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வாரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • முப்பெரும் விழா கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
    • சிறப்பு பாடல் வீடியோ வெளியீடு

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    "உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 


    • எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
    • உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    தெற்கு உக்ரைனில் ஓடேசா பகுதியில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

    ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    • இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
    • விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.

    'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் அடுத்த படமான "மெஜந்தா"வின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த நிறத்திற்குப் பின்னால் அவள் ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இருக்கிறது. விரைவில் டீசர் வெளியாகும் என கூறியுள்ளார்.


     

    • ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    • 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.

    இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.

    பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.

    முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன. 

    • தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.
    • மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

    பின்னர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டு பீகாரிலேயே பா.ஜ.க. அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 47 லட்சம் பேரும் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களா என்றால் இல்லை. ஒருவர் கூட அப்படி இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

    இந்த நாட்டின் மக்களின் வாக்குரிமை பறிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை அமைந்துள்ளது. அவர்களுடைய நோக்கம் என்னவென்று விளங்கவில்லை. எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த 1 கோடி பேர் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக் கூடிய அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட மக்களவையில் பதிவு செய்திருக்கிறோம்.

    ஆனால் ஆளுங்கட்சி அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது. குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையும் பறிக்கக்கூடிய ஆபத்தான அரசியல் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாடு எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கவலை மேலோங்கி உள்ளது.

    பீகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா மக்களவையிலேயே உரத்து பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி அது.

    மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. எனவே வாக்கு திருட்டு என்பதை மட்டுமே மூலதனமாக வைத்து எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். குடிமக்களின் கடமையாகும் என்றார். 

    • இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
    • திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

    இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

    அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.

    அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.

    ×