என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பாபி கட்டாரியா போன்ற புரோக்கர்கள் மூலம் வேலை வாய்ப்புக்காக பெண்கள் உட்பட சுமார் 150 இந்தியர்கள் மனித கடத்தல் மூலம் அந்த நிறுவனத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
    • அங்கிருந்து தப்பித்து இந்திய தூதரகத்துக்கு சென்று மீண்டும் இந்தியா வந்து கட்டாரியா மீது போலீசில் புகார் கொடுத்தோம் என்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பல்வந்த் கட்டாரியா என்ற பாபி கட்டாரியா. இவர் யூடியூப் சேனல் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்.

    இந்த நிலையில் பாபி கட்டாரியா மீது அருண் குமார், மணீஷ் தோமர் ஆகிய 2 வாலிபர்கள் போலீசில் புகார் செய்தனர். தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாபி கட்டாரியாவின் யூடியூப் சேனலில் வெளிநாட்டில் வேலை செய்வது குறித்த விளம்பரத்தைப் பார்த்து அவரை அணுகினோம். அவர் கேட்ட பணத்தை கொடுத்தோம். பின்னர் லாவோஸ் நாட்டுக்கு செல்ல டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். நாங்கள் லாவோஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, அபி என்பவர் எங்களை சந்தித்தார். அவர் தன்னை பாபி கட்டாரியாவின் நண்பர் என்றும் மற்றும் ஒருவர் பாகிஸ்தான் முகவர் என்றும் கூறினார்.

    பின்னர் நாங்கள் ஒரு சீன நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு எங்களை கடுமையாக தாக்கி, பாஸ்போர்ட்டை பறித்தனர். அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக இணைய மோசடி செய்ய வேண்டி கட்டாயப்படுத்தினர்.

    அந்த வேலை செய்யாவிட்டால், இந்தியாவுக்குத் திரும்ப முடியாது என்றும், இங்கேயே கொல்லப்படுவோம் என்றும் மிரட்டினர். பாபி கட்டாரியா போன்ற புரோக்கர்கள் மூலம் வேலை வாய்ப்புக்காக பெண்கள் உட்பட சுமார் 150 இந்தியர்கள் மனித கடத்தல் மூலம் அந்த நிறுவனத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    நாங்கள் அங்கிருந்து தப்பித்து இந்திய தூதரகத்துக்கு சென்று மீண்டும் இந்தியா வந்து கட்டாரியா மீது போலீசில் புகார் கொடுத்தோம் என்றனர். இதையடுத்து பாபி கட்டாரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி களம் இறங்கி இருக்கிறார். கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதன் பிறகு 2 தடவை அங்கு வாகன பேரணி நடத்தி பிரசாரம் செய்தார்.

    மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மீண்டும் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.

    என்றாலும் வாரணாசியில் பிரதமர் மோடி எளிதாக வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

    2014-ம் ஆண்டு முதல் முதலாக அவர் வாரணாசியில் களம் இறங்கிய போது 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை தோற்கடித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவை 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த தடவை 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வாரணாசி தொகுதி முழுக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஓசையின்றி பா.ஜ.க. தீவிர பிரசாரம் செய்து வருகிறது.


    தற்போது பிரசாரம் ஓய்வதற்கு 3 நாட்களே இருப்பதால் அங்கு பா.ஜ.க. வின் நட்சத்திர பேச்சாளர்கள் செல்ல தொடங்கி உள்ளனர். நேற்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் சென்றனர்.

    இன்று மாலை மத்திய மந்திரி அமித் ஷா வாரணாசி செல்ல இருக்கிறார். நாளை பா.ஜ.க. தலைவர் நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் வாரணாசியில் களம் இறங்க உள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி தேர்தல் திருவிழாவை பிரதிபலிக்கும் வகையில் கோலாகலமாக மாறி உள்ளது.

    வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளையும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அடுத்து வரும் கடைசி 2 நாட்களில் வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    வாரணாசி தொகுதியை பிரதமர் மோடி சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கும் நிலையில் வளர்ச்சி திட்டப் பணிகளை மக்களுக்கு தெரிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    • பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
    • ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர். நல்ல நோக்கங்கள், கொள்கைகள் காரணமாக 3-வது முறையாக பா.ஜ.க-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது. அத்தகைய பிரதமர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? தனது பதவியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கும் ஒரு பிரதமரால் நாட்டை நடத்த முடியுமா?

    எனவே வலிமையான நாட்டை உருவாக்க வலிமையான பிரதமரை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வகுப்புவாத குணம் கொண்டவர்கள். மிகவும் சாதிவெறி உள்ளவர்கள் என்பதை அறிவார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். எந்த அறிவாளியும் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் கட்சியில் முதலீடு செய்யமாட்டார்.

    சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசு வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக மாபியாக்களை எதிர்நோக்கியிருந்தது.

    ஆனால் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்காக தங்கள் வாக்குகளை யாரும் வீணாக்க விரும்பவில்லை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அர்ப்பணித்துள்ளன. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து உழைக்கிறேன் என தெரிவித்தார்.

    • மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

    ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.

    அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
    • தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள சிப்ரி பஜார் பகுதியில் ஒரு முதியவர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் சிப்ரி பஜாரில் சற்று நெரிசலான ஒரு குறுகிய தெருவில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெள்ளை நிற கார் திரும்புவதைக் காட்டுகிறது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.

    முதியவர் வலியால் அலறியபோது 70 வயது முதியவரை சில மீட்டர்கள் இழுத்துச் சென்ற SUV டிரைவர் சக்கரங்களுக்கு அடியில் இருப்பது தெரியாமல் வாகனத்தை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் அந்த காரின் சக்கரம் அவர் மீது ஏறி நின்றது.

    பின்னர், அந்த நபர் தொடர்ந்து கத்தியதால், சத்தம் கேட்டு மக்கள் SUVயை நோக்கி ஓடி வந்து காருக்கு அடியில் இருந்த முதியவரை மீட்டனர். அதை தொடர்ந்து ஓட்டுநரும் கீழே இறங்கினார். அதிக எடையுள்ள SUVயால் அந்த நபருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அடிப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கு ஆபத்து மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது.
    • போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய நிலையில், காரில் செல்லும் நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து ஓட்டும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங் பரிகார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் இருசக்கர வாகனம் ஓட்டவில்லை. தனது ஆடி காரில் சென்ற நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. மாறாக தேர்தல் முடிந்த பிறகு இந்த பிரச்சனை குறித்து பரிசீலிப்பதாக கூறி உள்ளனர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த பகதூர்சிங் தற்போது காரில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் எனது காரை ஓட்டியதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதனால் நான் என் காரை ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் அபராதம் விதித்தால் என்ன செய்வது? என கூறி உள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது.
    • 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    மோடிக்கு 400-க்கும் அதிகமான இடங்களை வழங்கி, மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அவர்கள் மனதில் உருவாக்கிவிட்டனர். உத்தர பிரதேசத்தில் நாங்கள் 80 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இது என்னுடைய நம்பிக்கை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது. அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. மக்கள் தற்போது சமாஜ்வாடி கட்சியை சமாப்த் (samapt- முடிந்தது) கட்சி (முடிந்து போன கட்சி) என சொல்கிறா்ரகள். 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.
    • காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது.

    மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. ஏறக்குறைய 440 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்பட்டுவிட்டது. இந்த முறை காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது என்பதை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.

    லாலு பிரசாத் யாதவ் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். உத்தவ் தாக்கரே அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். சரத் பவார் அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். ஸ்டாலின் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார்.

    மம்தா அவரது மருமகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா காந்தி அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். தனது குடும்பத்தினருக்காக வேலை செய்யும் ஒருவரால் நாட்டிற்காக பணி புரிய முடியாது.

    பாகிஸ்தான் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களுடையது எனச் சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அணுகுண்டை பார்த்து பயப்படமாட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதை திரும்பப் பெறுவோம்.

    மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், விடுமுறை சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு செல்ல ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் டிக்கெட் புக் செய்துள்ளனர். ராகுல் காந்தி இத்தாலி, தாய்லாந்து, பாங்காங் புறப்படுவார். நரேந்திர மோடி 23 வருடங்களாக விடுமுறை எடுத்தது கிடையாது. தீபாவளியை விடுமுறையைக் கூட எல்லையில் உள்ள வீரர்களுடன் செலவிட்டார்.

    இந்த தேர்தல் ராமர் கோவிலை கட்டியவர்களுக்கும், ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும் இடையிலானது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • ஒரு பூத்தில் 375 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
    • மற்றொரு பூத்தில் 441 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆறு மாநிலங்களில் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.57 சதவீத வாக்குகள் பதிவானது.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவை தொகுதியில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மெராயுனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சவுல்டாவில் உள்ள 277-வது பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பூத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் 375 வாக்காளர்கள் பெயர் இடம் பிடித்திருந்தது. இதில் 198 ஆண் வாக்காளர்கள் ஆவார்கள். 177 பெண் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களை அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

    அதேபோல் நகால் கிராமம் பாம்ஹோராவில் உள்ள 355-வது பூத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் ஆண் வாக்காளர்கள் 235 பேர், பெண் வாக்காளர்கள் 206 பேர் என 441 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் புத்னி நராஹட் கிராமத்தில் உள்ள ஒரு பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. ஆனால் தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம் என குழப்பம் நீடித்து வருகிறது.

    100 சதவீதம் வாக்குகள் பதிவாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கிராமத்தச் சேர்ந்த பல இளைஞர்கள் வெளியூரில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்பி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார். இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.

    அப்போது கட்டிலில் அமர்ந்திருந்த மாமியார் எழுந்து வந்து மருமகளின் கன்னத்தில் அறைகிறார். பிறகு, நாத்தனார் மீண்டும் பெண்ணை தாக்கி அவளது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

    பின்னர், பெண்ணை வெளியே தள்ளி மாமியார் மற்றும் நாத்தனார் அறையை பூட்டியுள்ளனர். அப்போது தரையில் கிடந்த பெண் தனது மாமனாரிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

    அவளைக் கொல்லுங்கள், முழு பலத்துடன் கொல்லுங்கள் என்று அவரது கணவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் சகோதரர் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சகோதரியை அவரது கணவர் கேசவ் குப்தா அவரது மாமியார், மாமனார் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.

    அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.

    • பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.
    • தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    லக்னோ:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஓட்டுப்பதிவின் போது, இந்த தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை அவரே எடுத்துள்ளார்.

    வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.

    இதேப்போல அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    வீடியோ வைரலானதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேச தேர்தல் ஆணையர் கூறுகையில், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அலுவலர் பிரதீத்திரிபாதி நயா காவ்ன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசார ணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராஜல்சிங் என தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (தேர்தல் தொடர்பான குற்றம்), 419 (நபர் மூலம் ஏமாற்றியதற்கான தண்டனை) மற்றும் 128, 132, 136 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    ×