

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள சிப்ரி பஜார் பகுதியில் ஒரு முதியவர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சிப்ரி பஜாரில் சற்று நெரிசலான ஒரு குறுகிய தெருவில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெள்ளை நிற கார் திரும்புவதைக் காட்டுகிறது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
முதியவர் வலியால் அலறியபோது 70 வயது முதியவரை சில மீட்டர்கள் இழுத்துச் சென்ற SUV டிரைவர் சக்கரங்களுக்கு அடியில் இருப்பது தெரியாமல் வாகனத்தை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் அந்த காரின் சக்கரம் அவர் மீது ஏறி நின்றது.
பின்னர், அந்த நபர் தொடர்ந்து கத்தியதால், சத்தம் கேட்டு மக்கள் SUVயை நோக்கி ஓடி வந்து காருக்கு அடியில் இருந்த முதியவரை மீட்டனர். அதை தொடர்ந்து ஓட்டுநரும் கீழே இறங்கினார். அதிக எடையுள்ள SUVயால் அந்த நபருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அடிப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கு ஆபத்து மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.