என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
    • மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

    சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

    இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

    கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.

    நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.

    நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.

    நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.

    எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

    அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். 19 வயதான மகன் அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது கதவை திறந்து தம்மை அழைத்தது யார் என்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அழகர்சாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.

    இதில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அர்விந்த் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது.
    • காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் காய்ச்சல் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு மழை தொடங்கியதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    வழக்கமாக மழைக்காலம் முடிந்து பருவநிலை மாறிய பிறகு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்து விடும். ஆனால் இந்தமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் 7 மாதங்களை கடந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் சென்னையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    சென்னையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் தொற்றுக்களுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டமாக கூடுதல் ஆகிய காரணங்களாலும், வானிலை மாற்றம் காரணமாகவும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

    காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். அவர்களுக்கு பரிசோதித்து பார்க்கும் போது 60 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.

    பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்புளூயன்ஸா ஏ வைரஸ் மற்றும் குறிப்பாக அதன் துணை வைரஸ்களான எச்1 என்1, எச்3 என்2, ஆர்.எஸ்.வி. மற்றும் அடினோ வைரஸ் போன்ற வைரஸ்கள் கலவையாக காணப்படுகின்றன.

    பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டாலும், சிலருக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் உடல்வலி ஏற்படுகிறது. இணை நோய்கள் உள்ள வயதான நோயாளிகளுக்கு பாதிப்புகள் அதிகரிக்கலாம்.

    இருமல், தும்மல் அல்லது பேசும்போது சுவாச துளிகள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே பொதுமக்கள் அதிக கூட்டமான பகுதிக்கு சென்றால் அவசியமாக முக கவசம் அணிவது நல்லது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 18-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது.
    • கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?

    தூத்துக்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று மாலை பா.ஜ.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழக எம்.பி.க்கள் மும்மொழி கொள்கையில் தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதை சுட்டிக்காட்டவே பாராளுமன்றத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். ஆனால் தமிழக மக்களை அவர் பேசியதாக கூறுகின்றனர்.

    முதலமைச்சரை குற்றம் சாட்டினால் அது தமிழக மக்களை குற்றம் சாட்டியதாக ஆகுமா?.

    தமிழகத்தில் 4479 மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 16 லட்சம் பேர் இந்தி பயில்கிறார்கள். தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. விரைவில் 30 லட்சம் மாணவர்கள் இந்தி கற்பதாக ஒப்புக்கொள்வார்கள்.

    தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதற்கு பதில் வேறு ஏதோ கற்பிக்கப்படுகிறது. தமிழக கல்வித்துறை திவாலாகி விட்டது.

    தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் தி.மு.க.விற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    டாஸ்மாக் மதுபான முறைகேட்டை மறைக்கவே தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஓவர் பெர்மாமன்ஸ்' செய்து வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.

    கனிமொழி எம்.பி.யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் எங்கு கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தெரியுமா? கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?

    அமைச்சர் பி.டி.ஆர். மும்மொழி கொள்கைளை அறிவற்றவர்கள்தான் பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அவரது மகன் மும்மொழி கற்பதால் பி.டி.ஆருக்கு அறிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை நடத்திக்கொண்டே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பேரம் நடத்தியது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. கொலை திட்டத்தை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ரவுடி வசூல்ராஜா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா 2 கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகராறில் கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் கூறியதாக தெரிகிறது.

    ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க ரவுடிகளிடையே தொடர்ந்து மோதல் மற்றும் கொலைகள் அரங்கேறி வந்தன. எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது வசூல் ராஜாவால் தீர்த்து கட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் திட்டமிட்டு இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அவை தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.

      இப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பயமுறுத்தும் சம்பவம் நாகர்கோவில் பள்ளி விளையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

      நாகர்கோவில் பள்ளி விளை குடோனின் எதிர்புறம் உள்ளது பால்பண்ணை தெரு. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்கள் பணிகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தபோது அவர்களுக்கு போட்டியாக காட்டு மிளா அங்கு வந்தது. அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

      காட்டில் ஜாலியாக திரிந்த மிளா, இங்கு மக்களை கண்டதும் மிரள தொடங்கியது. ஆபத்து என கருதி அந்த மிளா சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதற்கிடையில் மிளாவின் நடவடிக்கையை கண்டு, பயந்து போன மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      சாலையில் ஓடிய மிளா அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் படிக்கட்டில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அந்த வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் மிளா இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது.

      இதற்கிடையில் மிளா ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மிளாவை பார்த்து அச்சத்தில் இருந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மிளாவை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

      இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மிளா நின்ற வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கயிற்றை வீசி மிளாவை பிடிக்க முயன்றனர். வீசப்பட்ட கயிறு மிளாவின் கழுத்தில் விழுந்தாலும், அதனை லாவகமாக மிளா கழற்றி விட்டு விட்டது.

      இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையில் மிளாவும் அங்கிருந்து நகர்ந்து சாலைக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து அது ஓட்டம் எடுக்க, தங்களை முட்டி தாக்கி விடுமோ என்ற பயத்தில் மக்களும் அலறி யடித்து ஓட அந்த பகுதி பதட்டத்திற்குள்ளானது. சாலையில் ஓடிய மிளா, அங்குள்ள மத்திய அரிசி கிட்டங்கியின் முன்பு சென்று ஓய்வெடுத்தது.

      அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வலையை வீசி மிளாவை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது வலையில் சிக்காமல் மிளா போக்கு காட்டியது. இருப்பினும் முயற்சியை கைவிடாத தீயணைப்பு வீரர்கள், சுற்றி வளைத்து வலைக்குள் மிளாவை சிக்க வைத்தனர். பின்னர் அதனை வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

      அவர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிளாவை விட்டனர். இந்த மிளா ஆலம்பாறை மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்திய மிளா பிடிபட்டதும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

      குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மிளாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தோட்ட பயிர்களை மிளா தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொற்றையடி, தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோட்ட பயிர்களை மிளா சேதப்படுத்தி வருகிறது. மிளாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும்.
      • நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

      மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

      இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

      • நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
      • செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

      நெல்லை:

      நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

      அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

      நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

      செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

      தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

      வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

      • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
      • வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

      மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      * தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.

      * மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      * பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.

      * 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.

      * 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.

      * கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?

      * வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?

      * தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.

      * கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.

      * வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.

      * வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

      * இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
      • திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

      சுவாமிமலை:

      தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி கோவில் அமைந்துள்ளது.

      பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

      விழா நாட்களில் தினமும் பெருமாள்-தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது.

      முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.

      மேலும், வீதிகள் தோறும் திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேரானது 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

      • திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
      • திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

      சென்னை:

      பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

      டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் வெளியாகிவரும் நிலையில் அவற்றை முழுமையாக மறைத்து விட்டு, திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறை சோதனையில் தெரிய வந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும்.

      தமிழகக் காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      ×