என் மலர்
நீங்கள் தேடியது "Papanasam Dam"
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. நகர், புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது, மலைப்பகுதிகளிலும் தொடரும் மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்த வண்ணம் இருப்பதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1,847 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியை கடந்து நீர்வரத்து இருக்கிறது. இதனால் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து பாபநாசம் அணை 101.80 அடியாக உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டமும் 4 அடி உயர்ந்து 115.48 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர்மழையால் இன்று 2 மடங்கு உயர்ந்து 1598 கனடியாக உயர்ந்துள்ளது. இன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 32 மில்லிமீட்டரும், களக்காட்டில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
கனமழை பெய்து வருவதால் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேலும் மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து எஸ்டேட்டில் 14 ½சென்டிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 13 ½ சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 10.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 8.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்த நிலையில், இன்று 2 அடி உயர்ந்து 118.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.20 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 115.68 அடியை எட்டியுள்ளது.
இந்த அணைகளுக்கு நேற்று வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 3936 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகர பகுதியில் பாளையில் 4.40 மில்லிமீட்டரும், நெல்லையில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அங்கு 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
தற்போது 60 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை நிரம்பி வழிந்து வருவதால் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேறி வருவதால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. இந்த 2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 68.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும் உள்ளது.
- 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தினால் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில் 2 நாட்களாக பிற்பகலில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாகவும், ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலை முதலே சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் நேற்று மாலையில் இருந்து பரவலாக தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,328 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இன்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது. அங்கு 21 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 49.65 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை ஏதும் இல்லாததால் நீர் வரத்து இல்லை.
புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சேரன்மகாதேவி, முக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியதால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது.
மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அடவிநயினார், குண்டாறு, கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் கோவில் அணையில் 52 மில்லிமீட்டரும், குண்டாறில் 44 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 23.50 மில்லிமீட்டரும் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
- பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களாக குறைந்து விட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் லேசான சாரல் பெய்கிறது. எனினும் இதுவரை பெய்த மழையால் பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர்.
அணை பகுதிகளை பொறுத்தவரை தொடர்மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.
அந்த அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்றும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 85 அடி வரை நீர் இருப்பு இருந்தாலே விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்துவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
- மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 2000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,029 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.
நேற்று 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 96.70 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 807 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று மேலும் 8 அடி உயர்ந்து 108.07 அடியானது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 90.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 70 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து 801 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தை பொறுத்தவரை கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. அம்பையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. ராதாபுரம் தாலுகாவில் பலத்தமழை பெய்தது. இன்று காலையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகர பகுதியில் நேற்று பெய்த மழையினால் ஒருசில இடங்களில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது. அவற்றை தற்காலிகமாக சீரமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
அங்குள்ள மெயினருவி, பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை தூரத்தில் நின்றபடி ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ள தால் அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.
குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
- பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
மழை குறைவு
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் உள்ள 1,096 குளங்கள் உள்ளன. இதன் மூலமும் விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மழைகுறைவால் இவற்றில் பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.
வழக்கமாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 814.8 மில்லிமீடடர் இயல்பாக மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக அதாவது 722.32 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்திருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இயல்பைவிட 48.32 சதவீதம் குறைந்துள்ளது.
38 அடியானது
இதன்காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, பச்சையாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 882 மில்லியன் கனஅடியாகும். தற்போது அவற்றில் நீரின் இருப்பு 2 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கிவிட்டது.
பாபநாசம் அணையில் 5,500 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கமுடியும். ஆனால் தற்போது அணையில் 522 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே இருக்கிறது. அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்துவிட்டது. பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
சிங்கை:
தென்தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தன்பொருநை என்று அழைக்கப்படும் இந்த நதியானது பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
இந்த நதியின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதன் குறுக்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.
143 அடி உயரத்துடன் 5500 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு 1943-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் தாமிரபரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதற்கிடையே அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை. இனி தென்மேற்கு பருவமழை ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தான் இருக்கும்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இயல்பான மழை அளவை விட பாதி அளவிற்கும் கீழாகவே மழை பெய்துள்ளது.
மார்ச் 1 முதல் இன்று வரையில் நெல்லை மாவட்டம் சராசரியாக வெறும் 30 மில்லிமீட்டர் அளவிலான மழையையே பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அளவுக்கு குறைவு தான்.
இனி 2 மாதத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அணையின் நீர்மட்டமும் ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது.
- தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.
சிங்கை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.
தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.
ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.
- அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
நெல்லை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.
இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு குற்றால அருவிகளுக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில நேரங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49.2 மில்லிமீட்டரும், அடவி நயினார் பகுதியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
இதேபோல் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, சிவகிரி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்கனவே 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.
நேற்று 66 அடியாக இருந்து அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 5 அடி உயர்ந்து 71 அடியாகவும், நேற்று 50 அடியாக இருந்த ராமநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று 54 அடியாகவும், 45 அடியாக இருந்த கடனாநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 49 அடியாகவும், 32 அடியாக இருந்த கருப்பாநதி நீர்மட்டம் ஒரு அடியாக உயர்ந்து இன்று 33 அடியாகவும் உள்ளது.
இன்று அதிகாலை முதலே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், கொண்டாநகரம், சுத்தமல்லி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
மாநகரில் இன்று காலை பெய்த சாரல் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்து சென்றனர்.
மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 53.50 அடியாக இருந்தது.
இன்று மேலும் 6 அடி உயர்ந்து 59.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 3,299.375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 438.50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர் மட்டம் நேற்று 90 அடியாக இருந்த நிலையில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது.
+2
- பாபநாசம் அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
- இன்று முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சிங்கை:
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
மொத்தம் 143 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது குறைந்தபட்சம் 60 அடி வரை அணையில் நீர்மட்டம் இருந்தால் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யாவிட்டாலும், ஓரளவு பெய்த மழையின் காரணமாக இன்றைய நிலவரப்படி 70.90 அடியாக உள்ளது.
இதையடுத்து அணையில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் மற்றும் நதியுண்ணி கால்வாய்களில் நீரானது இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நீரானது இன்று தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கார் சாகுபடி, குடிநீர் தேவைக்கென மொத்தம் 3015 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பொதுப்ப ணித்துறை செயற்பொ றியாளர் மாரியப்பன், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து அவர்கள், வி.கே. புரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் நகராட்சி சேர்மன் பிரபாகர பாண்டியன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி. ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், அருண் தவசு பாண்டியன், உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், ஜெயகணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






