search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papanasam Dam"

    • மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்யவில்லை. எனினும் 2 நாட்களாக பெய்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 102.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து116.53 அடியாகவும் உள்ளது.

    மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்த வண்ணனம் உள்ளது. இதனால் அங்குள்ள ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அணைகளை பொறுத்த வரை குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது. கடனா அணை 60.30 அடியாகவும், ராமநதி அணை 76 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 93.25 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கார் பருவ சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
    • தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.

    84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.

    அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.

    • மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டரும் மழை பெய்தது. மழையால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 850 கனஅடியாக இருந்து வருகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.10 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.08 அடியாக உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 3.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை வரை 62 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 41 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அம்பையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசியில் ஒரு மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷண நிலை நிலவி வருவதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.
    • ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த ஒரே வாரத்தில் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் பெய்தது. மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுகிறது.

    எனினும் ஏற்கனவே பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 69.80 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.

    களக்காடு தலையணையில் ஓடிய காட்டாற்று வெள்ளம் குறைந்துவிட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். மாஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல 10 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    • களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.4 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும் இருக்கிறது. இந்த அணைகள் நீர்மட்டங்கள் தலா 1/2 அடி உயர்ந்துள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளதால், விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததினால் இன்று தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், திரவியம் நகர் உள்ளிட்ட இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 0.5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 77.20 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலத்தை பொறுத்தவரை மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.

    • மாவட்டத்தில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
    • அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பருவமழையால் அதனை ஒட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாபநாசம் அணையின் நீர்மட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இந்த அணையின் மூலமாகத்தான் நெல்லை மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்தாலே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 100.10 அடியாக உள்ளது. இந்த ஆண்டில் முதன் முறையாக அணை நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ள நிலையில் 2 மாவட்டங்களிலும் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் இறங்கி உள்ளனர்.

    அதே நேரத்தில் அரசும் பிசான பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துள்ளதால் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர 118 கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை 68 அடியாக உள்ள நிலையில், அதில் இருந்தும் பெருங்கால் பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்மூலம் சுமார் 2,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. அந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 852 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 335 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் களக்காட்டில் காட்டாற்று வெள்ளம் குறையவில்லை. இதனால் தலையணையில் வெள்ளம் அதிக அளவில் செல்வதன் காரணமாக இன்று 2-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ராமநதி, கடனா நதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று கருப்பாநதி அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதி கால்வாய்களில் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.

    ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் நேற்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் 107.50 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 78.25 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 75.80 அடியாகவும் உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    நீர் திறப்பு

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று பாபநாசம அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்தனர்.

    விவசாய நிலங்கள்

    இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் , கன்னடியான் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலகால்வாய், கீழக்கால்வாய், தெற்கு, வடக்கு பிரதான கால்வாய்கள் ஆகிய கால்வாய்கள் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

    பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது . விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.
    • மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 1108 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 99.10 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவதால் இன்று மாலைக்குள் 100 அடியை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 113.45 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 67.50 அடியாக உள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 54 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 46 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 23 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு 62 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தனர்.

    அதே நேரத்தில் ஓரமாக நின்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பையில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் மேற்படிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. அந்த அணைப்பகுதியில் 31 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியே எட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்று பாவுதல், தொழி அடித்தல், நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மாஞ்சோலை

    இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் முழுவதிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பு

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சி, நாலுமுக்கு பகுதி களில் தலா 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. சில நாட்களாக அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 88.45 அடி நீர் இருப்பு உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 1,127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1304 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது.
    • ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,895 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசத்தில் 22 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 20 அடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 95.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 107.15 அடி நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது. கொடு முடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 34 அடியை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் வெறும் 6.75 அடியாகவே உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 41 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 37 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 33 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் நீர்மட்டம் நேற்று 113.75 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி அதிகரித்து 117 அடியை எட்டியுள்ளது.

    ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 45 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
    • கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் விளைவாக பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடி உயர்ந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 94.40 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.17 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,909 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாக உள்ளது. அணைக்கு 340 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 3.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 1.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த அணை முழுகொள்ளளவான 36 அடியை எட்டி 2 வாரங்களுக்கும் மேலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படு கிறது. குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 116 அடியை எட்டியது. அந்த அணை நிரம்ப இன்னும் 16 அடி நீரே தேவைப்படுகிறது.

    கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது. ராமநதி நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 64 அடியாக உள்ளது. கருப்பாநதியில் 44.62 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது.

    குற்றாலம் அருவி பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு கடந்த 2 நாட்களாக 6 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுமார் 15 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று 89 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்தால் மேலும் சுமார் 4 அடி உயர்ந்து இன்று 92.75 அடியை எட்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    அணை பகுதிகளில் அதிகபட்சமாக சேர்வாறில் 6 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 0.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.

    புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் கன்னிமாரா தோப்பு ஓடையில் தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை முதல் வந்தனர்.

    ஆனால் தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாஞ்சோலை வனப்பகுதியை பொறுத்தவரை காக்காச்சியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கில் 19 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 31.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 113.75 அடியை எட்டியுள்ளது. ராமநதி நீர்மட்டம் 63 அடியாகவும், கடனா அணையில் 55 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டமும் அலைமோதி வருகிறது.

    ×