search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water shortage"

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது.
    • உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், பொது மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து களக்காடு நகராட்சி சார்பில், சிதம்பர புரம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ள இலவடி அணை அருகே புதிதாக உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது உறை கிணறு அமைக்கும் பணிகள் முடி வடைந்துள்ளது. கிணற்றில் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது.

    அதுபோல உறை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணி களும், மின் இணைப்பு பணி களும் நிறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்து, கிணற்றில் இருந்து நீர் எடுத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இன்னும் உறை கிணறு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உறை கிணறுக்கு வழங்கப் பட்டுள்ள மின் வினியோக குறைபாட்டால் உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    மேலும், உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. வீடுக ளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த உறை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் களக்காடு நகராட்சி பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்கலாம் என்றும், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். எனவே மின் வினியோக குறைபாட்டை சரி செய்து, உறை கிணற்றை பயன் பாட்டுக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.
    • மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    கூடலூர்

    கூடலூர் பகுதியில் மே மாத இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்தது. இந்தநிலையில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமும் மழை பெய்ய வில்லை. தினமும் மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் காய்ந்து கிடந்த வனப்பகுதிகள் பசுமையாக மாறியது. காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், அதன் பின்னர் சாரல் மழையும் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஆனால் பருவமழை தீவிரம் அடைய வில்லை.

    இதனால் கூடலூர் பகுதியில் உள்ள மாயாறு, பார்வுட் ஆறு உள்பட அனைத்து நீர் நிலைகள் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் நீரோடைகள், தண்ணீர் இன்றி வெறுமனே காணப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பருவமழை சரியாக பெய்யாமல் உள்ளதால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் நடவு செய்ய முடியும். மேலும் குறுமிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்காமல் இருக்கும். தற்போது பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்வதால் தேயிலை செடிகளுக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
    • பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மழை குறைவு

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் உள்ள 1,096 குளங்கள் உள்ளன. இதன் மூலமும் விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மழைகுறைவால் இவற்றில் பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.

    வழக்கமாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 814.8 மில்லிமீடடர் இயல்பாக மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக அதாவது 722.32 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்திருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இயல்பைவிட 48.32 சதவீதம் குறைந்துள்ளது.

    38 அடியானது

    இதன்காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, பச்சையாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 882 மில்லியன் கனஅடியாகும். தற்போது அவற்றில் நீரின் இருப்பு 2 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கிவிட்டது.

    பாபநாசம் அணையில் 5,500 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கமுடியும். ஆனால் தற்போது அணையில் 522 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே இருக்கிறது. அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்துவிட்டது. பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மின்னழுத்த குறைபாடு காரணமாக கோத்தகிரி சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் ரூ.10.60 கோடியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து, அந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பிரமாண்டமான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அங்கிருந்து கோத்தகிரி பகுதி வரை பெரிய குழாய்கள் பதித்து 7 பகுதிகளில் நீர் உந்து மோட்டார் அறைகளும் கட்டப்பட்டன. மேலும் கோத்தகிரியில் உள்ள உயரமான பகுதியான சக்திமலைப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தலா 8 லட்சம் லிட்டர் என மொத்தம் 16 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகத்திற்கு தேக்கி வைக்க 2 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

    இதுமட்டுமின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு வசதியாக கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூ.50 லட்சம் செலவில், நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியது.

    ஒவ்வொரு நீர் உந்து அறையிலும் 60 குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டன. இந்த 7 மின் மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே, சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

    இந்தநிலையில் நீர் உந்து அறைகள் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் அங்கு நிலவும் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதடைந்து வந்தன. இதனால் அளக்கரையிலிருந்து கோத்தகிரிக்கு தண்ணீரைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கோத்தகிரி பகுதி மக்களுக்கு அந்த தடுப்பணை நீரை பேரூராட்சி நிர்வாகம் தடையின்றி விநியோகித்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் ஈளாடா தடுப்பணை நீர் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வரும் கோடை காலம் தொடங்குவதற்கு முன், மின்னழுத்த குறைபாடு உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைத்து, தடையின்றி குடிநீரை விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
    மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை ‘குடிநீர் தட்டுப்பாடு’ என்பது தான்.

    ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தேவையான குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியும்.

    மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.

    பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் ஏரிகள் வறண்டு விட்டதால், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறது.

    அதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, விவசாய கிணறுகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து வினியோகிப்பது குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    தமிழகத்தில் அணைகள் வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
    நெல்லை:

    தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக கருதப்படுவது தாமிரபரணி நதியாகும். இது நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதன் நீளம் சுமார் 126 கிலோ மீட்டர். இதற்கிடையில் தாமிர பரணிக்கு பல கிளையாறுகள் வந்து சேர்கின்றன. காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு என பல துணை ஆறுகள் சேர்ந்ததே தாமிரபரணி இந்த துணை ஆறுகளுக்கு பிரதானமாக விளங்குவது இங்குள்ள அணைக்கட்டுகள்.

    பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் இரண்டு மட்டுமே தலா 55 டி.எம்.சி. தண்ணீர் அளவை கொண்டுள்ளது. பாபநாசம் அணை 143 அடியையும், மணிமுத்தாறு அணை 118 அடியையும் கொண்டது. ஆனால் தற்போது பாபநாசத்தின் அணை நீர்மட்டம் 9.20 அடி மட்டுமே உள்ளது. மணிமுத்தாறு அணையில் 66.02 அடியும், சேர்வலாறு அணையில் 47.18 அடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதன் துணை அணைகள் என்று கூறப்படும் சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணை, குண்டாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய துணை அணைகளின் மொத்த கொள்ளளவு வெறும் 3 டி.எம்.சி. மட்டுமே. இந்த 11 அணைகளிலும் தற்போது 1¼ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

    இந்த தாமிரபரணியை நம்பி 4 மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மக்கள் வாழ்கின்றனர். பிரதான அணையான பாபநாசம் அணையில் தற்போது வெறும் 9 அடி மட்டுமே தண்ணீர் கொண்டுள்ளது. அதுவும் சேரும் சகதியுமாகவே உள்ளது. இதனால் அணை முழுவதும் திறந்த பிறகும் வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர்மட்டும் லேசாக வருகிறது. தண்ணீர் அடிமட்டத்திற்கு சென்று விட்டதால் பாபநாசம் நீர்மின்நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. அகஸ்தியர் அருவியில் வழக்கத்தைவிட குறைந்த அளவிலே தண்ணீர் விழுகிறது.

    பாபநாசம் அணை

    எப்போதும் பாபநாசம் கோவில் படித்துறையில் ஆயிரக்கணக்கானவர்கள் குளித்து செல்ல தண்ணீர் வெள்ளமாக போகும். ஆனால் படித்துறை பகுதி தண்ணீரின்றி காணப்படுகிறது. ஆற்றிலும் மிக குறைவாக தண்ணீர் ஓடுவதால் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

    குடிநீருக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையில் தற்போது 66 அடி தண்ணீர் உள்ளதே நெல்லை மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உதவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் தண்ணீரின் தேவை மேலும் அதிகரிக்கும். மணிமுத்தாறு தண்ணீரும் காலியாகிவிட்டால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அபாயம் ஏற்படும்.

    தென்மேற்கு பருவமழை இந்தமாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் முதல் பகுதியில் பெய்தால் மட்டுமே குடிதண்ணீர் பஞ்சம் ஏற்படாமலும், விவசாய பணிகள் தொடங்க சாதகமாகவும் இருக்கும். தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டால் தென்மாவட்ட மக்களின் நிலை பரிதாபமாகிவிடும்.

    குமரி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே அங்கு தண்ணீர் தேக்கப்படவில்லை. தற்போது அணையில் 1.90 அடி தண்ணீரே உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 48 அடியாகும்.

    பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 அடி. இன்று காலை நிலவரப்படி அணையில் 23.40 அடி தண்ணீரே உள்ளது. சிற்றாறு அணைகளின் கொள்ளளவு 18 அடியாகும். சிற்றாறு1-ல் 5.25 அடியும், சிற்றாறு2-ல் 5.34 அடியும் தண்ணீர் உள்ளது.

    மாம்பழத்துறையாறு அணையின் கொள்ளளவு 54.12 அடி. அணையில் இப்போது 42.24 அடி தண்ணீர் உள்ளது. பொய்கை அணையின் கொள்ளளவு 42.65 அடி. இந்த அணையில் இப்போது 9.20 அடி தண்ணீரே உள்ளது.

    அணைகளின் நீர் மட்டம் குறைந்து விட்டதால் குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது.

    குமரி மாவட்டத்தில் பெரும்பாலான நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிநீருக்காக காலிகுடங்களுடன் அலைகிறார்கள்.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் கொள்ளளவு 25 அடியாகும். இங்கு தண்ணீர் மட்டம் குறைந்து இப்போது மைனஸ் 10 அடியாக உள்ளது. இதனால் நாகர்கோவில் நகரில் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கோட்டார், வடிவீஸ்வரம், செட்டிகுளம், பீச் ரோடு, பார்வதிபுரம் பகுதிகளில் ஷிப்டு முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. 2 வாரங்களுக்கு ஒரு முறை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தின் 75 சதவீத குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கிறது. தண்ணீர் இருக்கும் 25 சதவீத குளங்களும் விரைவில் நீர் வற்றும் நிலையில் உள்ளது.

    மதுரை மாநகர் பகுதிக்கு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    இருப்பினும் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து நாள்தோறும் 60 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சப்ளை சரியாக இல்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது.

    இதே போல் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், மேலூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக்குடிநீரையே நம்பி உள்ளனர். வறட்சி மாவட்டமான இங்கு கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    தினமும் ஒரு குடம் தண்ணீருக்காக பெண்கள் பல கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீரும் சரியாக வினியோகிக்கப்படாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    விருதுநகர் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வறட்சி காரணமாக 10 நாட்கள் அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக ஏரிகள் வறண்டு விட்டன. சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்திலும் மழை இல்லாததால் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. ஒரு குடம் ரூ.10 முதல் ரூ.25 வரை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், மானாமதுரை, சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை இல்லாததால் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் கேசரிகுலஅள்ளி, தொப்பையாறு, வாணியாறு, வரட்டாறு, நாகாவதி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 7 அணைகளும் வறண்டு காணப்படுகின்றன.

    அதில் இருந்து எந்த ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் அனைத்து ஏரிகளிலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தவித்து வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீரையும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2 வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    பருவமழை கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது.

    ஏரி-குளங்களில் நீர் மட்டம் குறைந்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருத்தணி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    திருத்தணியை அடுத்த கோதண்டராமபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை குடிநீர் கேட்டு திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் மேட்டுக்காலனி, முஸ்லிம் நகர், புதிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பெரியபாளையம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று காலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற 500 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீர் கேன்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கேன்கள் மூலம் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற கேன்களில் குடிநீர் வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் சோதனை நடத்தி தரமற்ற குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இன்று காலை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமராஜ், சதாசிவம் ஆகியோர் தலைமையில் தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த ஆட்டோ, வேன் உள்ளிட்ட 11 வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் இருந்த 500-க்கும் மேற்பட்ட கேன்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரச்சான்று காலாவதியாகி புதுப்பிக்க படாமலும் சுத்தமற்ற கேன்களில் குடிநீர் கொண்டு செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக 500 கேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது பெரியகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 3 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் பழுதாகியது.

    மேலும் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு தொட்டியும் தற்போது செயல்படவில்லை. இதையடுத்து இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி இந்த கிராம மக்கள் தற்போது குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்பட்டி பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெரியகோட்டை கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    ×