search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்தது - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்தது - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    • பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
    • பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மழை குறைவு

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் உள்ள 1,096 குளங்கள் உள்ளன. இதன் மூலமும் விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மழைகுறைவால் இவற்றில் பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.

    வழக்கமாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 814.8 மில்லிமீடடர் இயல்பாக மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக அதாவது 722.32 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்திருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இயல்பைவிட 48.32 சதவீதம் குறைந்துள்ளது.

    38 அடியானது

    இதன்காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, பச்சையாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 882 மில்லியன் கனஅடியாகும். தற்போது அவற்றில் நீரின் இருப்பு 2 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கிவிட்டது.

    பாபநாசம் அணையில் 5,500 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கமுடியும். ஆனால் தற்போது அணையில் 522 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே இருக்கிறது. அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்துவிட்டது. பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×