தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது- அண்ணாமலை

தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது- அண்ணாமலை
Published on

தூத்துக்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று மாலை பா.ஜ.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழக எம்.பி.க்கள் மும்மொழி கொள்கையில் தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதை சுட்டிக்காட்டவே பாராளுமன்றத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். ஆனால் தமிழக மக்களை அவர் பேசியதாக கூறுகின்றனர்.

முதலமைச்சரை குற்றம் சாட்டினால் அது தமிழக மக்களை குற்றம் சாட்டியதாக ஆகுமா?.

தமிழகத்தில் 4479 மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 16 லட்சம் பேர் இந்தி பயில்கிறார்கள். தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. விரைவில் 30 லட்சம் மாணவர்கள் இந்தி கற்பதாக ஒப்புக்கொள்வார்கள்.

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதற்கு பதில் வேறு ஏதோ கற்பிக்கப்படுகிறது. தமிழக கல்வித்துறை திவாலாகி விட்டது.

தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் தி.மு.க.விற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

டாஸ்மாக் மதுபான முறைகேட்டை மறைக்கவே தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஓவர் பெர்மாமன்ஸ்' செய்து வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.

கனிமொழி எம்.பி.யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் எங்கு கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தெரியுமா? கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?

அமைச்சர் பி.டி.ஆர். மும்மொழி கொள்கைளை அறிவற்றவர்கள்தான் பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அவரது மகன் மும்மொழி கற்பதால் பி.டி.ஆருக்கு அறிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை நடத்திக்கொண்டே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பேரம் நடத்தியது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com