என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    • கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி.

    தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதில், கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா?உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்!

    தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட 9-ஆம் சுற்று ஏலத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழகத்தில் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளபில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

    ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல.

    இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
    • மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு பூத்துக்கு ஒரு பெண், ஒரு ஆண் என தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாட்டை 5 மண்டலங்களாக பிரித்து நடத்த விஜய் தீவிரம் காட்டினார்.

    முதல் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.

    முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய் அங்கிருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற

    • பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை.
    • கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும், சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் கடந்த ஆண்டில் பருவமழை அணைக்கு முழுமையாக கைகொடுத்து உதவியது. இதனால் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் 50 அடிக்கு கீழாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்குதலே இதற்கு காரணமாகும். ஆனால் இதே நிலை நீடித்தால் அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு செல்வதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 48.17 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழையும் இல்லாமல் உள்ளதோடு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் அதன் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
    • கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தபோதிலும் கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

    மேலும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். நேற்று பகல் பொழுதில் திடீரென சாரல் மழை பெய்ததது. அதனைத் தொடர்ந்து அப்சர்வேட்டரி, அண்ணாசாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இருந்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மழையில் நனைந்தபடியே ஏரிச்சாலையை சுற்றி வந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதே போல் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி, முயல்பண்ணை, ஆடு ஆராய்ச்சி நிலையம், பூம்பாறை, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மகிழ்ந்தனர்.

    கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை ஐரோப்பா நாடுகள் போன்று உள்ளதால் பல்வேறு காலங்களில் அங்கிருந்து இடம் பெயரும் பறவைகள் அடிக்கடி கொடைக்கானலுக்கு வருகிறது. அதன்படி தாய்லாந்து, பாங்காங் மற்றும் மலை பிரேதேசங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் என்ற வெளிநாட்டு பறவை நட்சத்திர ஏரிப்பகுதியில் உலா வந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் அதனை கண்டு ரசித்தனர்.

    தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர். 

    • மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    இதனால் பஸ்நிலையம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். 

    • கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளா
    • மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் செயல்படும் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக நிறைய கடன்கள் வாங்கினார்.

    கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளார். மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த அவிநாசி போலீசார் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் டெய்லர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
    • தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?

    தெலுங்கர்கள் குறித்து தொடர்ந்து சீமான் அநாகரிகமாக பேசி வருவதாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் தெலுங்கு முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    * விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.

    * சீமான் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் தான்.

    * அநாகரிகமாக பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    * தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?

    என்று தெரிவித்தார். 

    • பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும், சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று காலையில் இருந்தே திருச்செந்தூரில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்த வசதிக்காக போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே தற்காலிக வாகன நிறுத்தம் அமைத்திருந்தனர். மேலும் குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    • நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.
    • ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது.

    மதுரை:

    மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் அனைவரும் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். விரைவில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு உள்ளேன். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானை ஏனைய உலக நாடுகள் தனிமைப்படுத்தி எந்த தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைக்கு மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான் தான், அதனை தூண்டி விடுவது சீனா.

    செல்போனில் நல்ல கருத்துகளை பார்க்கவேண்டும். ஆனால் சினிமா மோகத்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.

    காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். அதில் பாகிஸ்தான் இருக்குமா? என்று தெரியவில்லை. ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை சரியான பதிலடி கொடுப்பார்கள். நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்பர் ஒன் ஆக பிரதமராக மோடி உள்ளார்.

    பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடறிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு தான் ஆதரவாக நிற்கிறது. பயங்கரவாதிகளை வளர்ப்பது பாகிஸ்தானில் தான், அவர்களை தூண்டி விடுவது சீனா தான்.

    தீவிரவாதத்திற்கு எதிராக சிந்து நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். யார் கூறினாலும் சரி, அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது. மனிதாபிமானத்தின் படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. அவர்கள் இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள்.

    சுதந்திர போராட்ட வீரர் வீர சாவாகர் குறித்து தவறாக பேசக்கூடாது. ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது. ஈழத் தமிழர்களை அவர்களது தந்தை ஆட்சியில் தான் கொலை செய்தார்கள். வாஜ்பாய் ஆட்சியின்போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும்.
    • தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேருவோருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் தகுதி காண் பருவமாகக் கருதப்பட்டும். இந்த காலத்தில் அவர்களின் நடத்தைக் குறித்து அவர்கள் வாழும் மாநிலங்களின் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால் உரிய காலத்தில் அந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கையை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஆட்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும். அதில் செய்யப்படும் தாமதத்தால் பணியாளர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் களைய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
    • நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்து மாண்பாளராக உயர்ந்தவர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் என சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்து மாண்பாளராக உயர்ந்தவர். எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாத 'வெள்ளுடை வேந்தர்' எனப் பெயரும் பெற்றவர்.

    இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.
    • மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும்.

    தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    தூத்துக்குடியை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. விருதுநகர், மதுரை மாவட்டத்திலும் மழை எதிர்பார்க்கலாம்.

    சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, கோதையாறு, சிவகிரி, புளியங்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி-மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.

    ×